என் மலர்
நீங்கள் தேடியது "Rameshwaram Ramanathaswamy Temple"
- ராமேசுவரம் கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
- ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர்.
அகில இந்திய புண்ணியத்தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிலிங்கத்தில் ஒன்றாகவும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகின்றது. அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் ஒரு முக்கிய புண்ணிய தலமாகவே ராமேசுவரம் கோவில் இருந்து வருகின்றது.
இவ்வளவு பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் சுமார் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். அதுபோல் இந்த கோவிலில் ராமநாதபுரம் சீமையை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பங்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அது மட்டுமல்லாமல் கோவில் உருவான காலத்தில் கோவிலின் ஆகம விதிமுறைகள், வரலாறு, பட்டயங்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்கள் ஓலை சுவடிகளிலே எழுதி வைக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு ராமேசுவரம் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் கோவிலின் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் மூன்றாம் பிரகாரத்தில் ஆவண அறையிலுள்ள ஓலைச்சுவடிகளை சரிபார்க்கும் பணியானது கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஆவண அறையில் இருந்து 308 பழமையான ஓலை சுவடிகளை கண்டெடுத்தனர். இந்த ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து துணி ஒன்றில் அடுக்கி வைத்து கட்டி ஆவண அறையில் உள்ள பீரோ ஒன்றில் மீண்டும் பாதுகாத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் 308 ஓலைச்சுவடிகள் சரிபார்க்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் கோவிலில் கணக்கு வழக்குகள் அனைத்தும் தற்போது கம்ப்யூட்டரிலும், இதற்கு முன் நோட்டுகளிலும் எழுதி அது பராமரிக்கப்பட்டு வருகிறது. இதே போல் பழைய காலங்களில் ஓலைச்சுவடிகளில் தான் கோவிலின் அனைத்து கணக்கு வழக்குகள், நிலங்கள் மற்றும் வருவாய்கள், கோவில் திருவிழாக்கள், வரலாறுகள் போன்ற அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கலாம். ஆகவே ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள் அனைத்தையும் சரியாக படித்து அதனை அனைவருக்கும் புரியும்படி மக்களின் பார்வைக்கு வைக்க இந்து சமய அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அந்த ஓலை சுவடிகளில் எழுதப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள தகவல்களை பக்தர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் ராமேசுவரம் கோவிலின் சிறப்பு இன்னும் அதிகமாகும். அதனால் உடனடியாக ராமேசுவரம் கோவிலில் உள்ள அனைத்து விதமான ஓலைச்சுவடிகளையும் பக்தர்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ராமேசுவரத்தைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிக்குமார் கூறும் போது, ராமேசுவரம் கோவிலில் பழமையான 308 ஓலைச்சுவடிகள் ஆவண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றுள்ள எழுத்துக்களை இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்களைக் கொண்டு சரி பார்த்து படித்து ஓலைச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள தகவல்களை பக்தர்களுக்கும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். அதுபோல் இந்த ஓலைச்சுவடிகளை பக்தர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமேசுவரம் கோவிலில் ஆவண அறையில் பாதுகாக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகளை அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்றும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
- 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலில் மிக முக்கியமானது என்றால் தீர்த்த கிணறுகள்தான். தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரக்கூடிய பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடிய பின்னர்தான் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் உள்ள ஒவ்வொரு தீர்த்த கிணற்றில் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 22 தீர்த்த கிணறுகளில் 6-வது தீர்த்தமாக உள்ள சேதுமாதவ தீர்த்த தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அதற்காக தெப்பக்குளத்தில் தண்ணீருக்குள் ராட்சத மோட்டார் வைத்து குழாய் வழியாக கடலில் கலக்கும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கோவிலின் சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் தாமரை செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதாலும், சகதிகள் அதிகம் உள்ளதாலும் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் இந்த தீர்த்தம் தூர்வாரப்படுகிறது என்றார்.
இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கூறும்போது, பொதுவாக கோவிலில் உள்ள தெப்பக்குளமாக இருந்தாலும் கண்மாய், ஊருணிகளாக இருந்தாலும் மழை சீசன் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் தூர்வாரப்படும். அப்படி தூர்வாரும் பட்சத்தில் மழை சீசனில் பெய்யும் தண்ணீரால் அந்த தெப்பக்குளம், ஊருணி, கண்மாயில் தண்ணீர் வரத்து இன்னும் அதிகமாக இருக்கும்.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு பருவமழை சீசனில் பெய்த மழையால் ராமேசுவரம் கோவிலில் உள்ள சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் ஓரளவு தண்ணீருடன் காட்சி அளிக்கிறது. தற்போது இந்த சேது மாதவ தீர்த்த தெப்பக்குளத்தில் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி தூர்வாரும் பணி நடக்கிறது. தூர்வாரும் பணி சிறப்பானதாக இருந்தாலும் அது செய்வதற்கான நேரம் இது கிடையாது.
ஆகவே சரியான திட்டமிடல் இல்லாமல் இதுபோன்று பணிகள் நடைபெறுவதை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.
இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
- கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர்.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 9-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது. அதற்காக கோவிலில் இருந்து நேற்று காலை சுவாமி பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
விநாயகர், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும் சுவாமி-அம்பாள் தேரை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், நகரசபை தலைவர் நாசர்கான், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு தொடங்கிய சுவாமி-அம்பாள் தேரை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவாய நம, சிவாய நம என பக்தி கோஷத்துடன் இழுத்து வந்தனர்.
கிழக்கு வாசல் இருந்து புறப்பட்ட தேரானது தெற்கு, மேற்கு, வடக்கு ரதவீதி சாலை வழியாக பகல் 12.20 மணிக்கு மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் தேருக்கு முன்பாக தங்க முகப்பட்டை அணிந்து கம்பீரமாக கோவில் யானை ராமலட்சுமி வலம் வந்தது பக்தர்களை பரவசமடைய வைத்தது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் திட்டக்குடியில் உள்ள கோடிலிங்க ரவி சாஸ்திரி மண்டகப்படிக்கு எழுந்தருளினர். தொடர்ந்து அங்கு இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மீண்டும் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைந்தனர். திருவிழாவின் 10-வது நாள் மற்றும் மாசி அமாவாசையை முன்னிட்டு இன்று பகல் 12 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்த வாரி வழங்கும் நிகழ்ச்சிக்கு எழுந்தருளுகின்றனர்.
- பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
- 19-ந்தேதி சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.
திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.
திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை
ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.
- சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து மண்டபத்தில் எழுந்தருளினர்
- கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள். 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
விழாவின் 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடை பெற்றது. தொடர்ந்து பிரியா விடையுடன், ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
காலை 6 மணிக்கு சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பாடானார்கள். முக்கிய வீதிகள் வழியாக சென்ற சுவாமி-அம்பாள் காலை 9 மணியளவில் கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 10 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடாகி கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.
இன்று காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி-அம்பாள் புறப்பாடான பின் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தீர்த்த கிணறுகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர்.
- மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.
முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்..
9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வருகிற 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.
- 4-ம்தேதி பிள்ளையார் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டின் தைப்பூச தெப்பத் திருவிழா வருகிற 5-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) லெட்சுமண தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. தெப்ப திருவிழாவை முன்னிட்டு 5-ம் தேதி ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெற்று தொடர்ந்து கால பூஜைகள் நடைபெறும்.
பின்னர் காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி லெட்சுமண தீர்த்தத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் 11 முறை சுவாமி- அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் மீண்டும் சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் அங்கிருந்து புறப்பாடாகி இரவு 10 மணிக்கு கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
இதைதொடர்ந்து அர்த்தசாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்ற கோவில் நடையானது சாத்தப்படுகிறது. தெப்ப திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 5-ம் தேதி காலை 10 மணியிலிருந்து இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் தீர்த்தமாடவோ தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். அதுபோல் 4-ம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பிள்ளையார் தெப்ப உற்சவமும் தீர்த்த தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக கோவிலின் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் பாதையும் மூடப்பட்டதால் பக்தர்கள் பல்வேறு சன்னதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தை கண்டித்தும், பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை அகற்றவும், உள்ளூர் பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தியும் ராமேசுவரத்தில் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் வருகின்ற 31-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராமேசுவரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன், நகராட்சி சேர்மன் நாசர்கான், துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி தலைமையில் மக்கள் பாதுகாப்பு பேரவை அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ராமேசுவரம் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், தாசில்தார்கள் உமா மகேஸ்வரி, அப்துல் ஜபார், கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நல்லுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆண்டாண்டு காலமாக ராமேசுவரம் கோவிலில் உள்ளூர் பக்தர்கள் விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள வாசல் வழியாகவே சென்று கட்டணம் செலுத்தாமல் தரிசனம் செய்து வருகிறோம். தற்போது பல்வேறு இடங்களில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழக்கமான பாதையும் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதையடுத்து காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வருவாய் கோட்டாட்சியர் கோபு, துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்ஜெயன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகளை பார்வையிட்டனர்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் கோபு கூறியதாவது, ராமேசுவரம் கோவிலில் உள்ள உள்ளூர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோவிலின் பிரகாரங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் அகற்றப்படும். அது போல் உள்ளூர் பக்தர்கள் வழக்கமான விஸ்வநாதர் சன்னதி அருகே உள்ள பாதை வழியாகவே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கோவிலில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல் தரிசனம் செய்ய வசதியாக கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார். இதனால் வருகின்ற 31-ந் தேதி நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும் தற்காலிகமாக கைவிடுவதாக மக்கள் பாதுகாப்பு பேரவையினர் தெரிவித்தனர்.
- தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தை மறைத்து வைத்துள்ளனர்.
- பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாகவும் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும் காசிக்கு நிகராகவும் கருதப்படுவது ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே பக்தர்கள் பல சன்னதிகளுக்கு சென்று நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாத அளவிற்கு கோவிலின் பிரகாரங்களில் பல இடங்களில் தடுப்பு கம்பிகள் வைத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தற்போது பக்தர்கள் கிழக்கு வாசல் சாமி சன்னதி வழியாக செல்ல கோவில் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரூ.100 மற்றும் ரூ.200 சிறப்பு தரிசன டிக்கெட்டில் செல்லும் பக்தர்கள் மட்டுமே கிழக்கு வாசலின் சாமி சன்னதி வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இலவச தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் சாமி சன்னதி வழியாக அனுமதிக்கப்படாமல் அம்மன் சன்னதி வாசல் வழியாக தடுப்பு கம்பிகள் அமைத்து அதன் வழியாக வரிசையில் செல்கிறார்கள். இதனால் கூடுதல் நேரம் கோவிலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மூன்றாம் பிரகாரம், அம்மன் சன்னதி பிரகாரம், சாமி சன்னதி பிரகாரம் வரை அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் வழியாக முதல் பிரகாரம் சென்று அதன் பின்னர் இலவச தரிசன பாதையில் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
பொதுவாக ஆகம விதிமுறைபடி சிவன் கோவிலில் முதலில் சாமியை தரிசனம் செய்து விட்டு தான் பக்தர்கள் அம்பாளை தரிசிக்க வேண்டும். அதன்பிறகு அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே வெளியே வரவேண்டும் என்பது ஆகம விதிமுறை.
ஆனால் ராமேசுவரம் கோவிலிலோ ஆகம விதிமுறைகளை மீறி பக்தர்களை சாமி சன்னதி வாசல் வழியாக அனுமதிக்காமல் அம்பாள் சன்னதி வாசல் வழியாகவே கோவில் நிர்வாகம் அனுமதித்து வருவதோடு மட்டுமல்லாமல் மூன்றாம் பிரகாரத்தின் குறுக்கே மைய பகுதி மற்றும் அம்மன் சன்னதி உள்பகுதி வாசல் அருகே என கோவிலின் உள்ளே பல இடங்களில் தடுப்பு கம்பிகளை அமைத்து பிரகாரத்தையும் மறைத்து வைத்துள்ளனர்.
இது மட்டுமில்லாமல் பக்தர்கள் காசி விஸ்வநாதர், முருகன் சன்னதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளுக்கும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் நிம்மதியாக தரிசனம் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் மற்றும் மூன்றாம் பிரகாரத்தையும் சுற்றிவர முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். கோவில் நிர்வாகத்தினரின் இந்த செயல் பக்தர்களை வேதனைக்குள்ளாக்கிறது. எனவே தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.