என் மலர்
நீங்கள் தேடியது "அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்"
- திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்க வேண்டும், மேலும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளை போல மே மாதம் முழுவதும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியப்படி திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
- நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- இன்று 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
தமிழகத்தின் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் 2023ம் ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் 15 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு 30 நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்த நிலையில் தற்போது 15 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு 30 நாட்கள் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
நேற்று மாலை கடுமையான மழை பெய்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், குடைகளை பிடித்தும் தங்களது சேலையால் தலையை மூடியும் கடும் வெயிலிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்.
- கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மதுரை:
அங்கன்வாடி குழந்தைகளுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் நேற்று திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராஜேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட செயலாளர் வரதலட்சுமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் தெய்வராஜ், செயலாளர் லெனின், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அமுதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்களிடம், அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு மழை பெய்தது.
அதனையும் பொருட்படுத்தாமல் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு முழுவதும் அங்கேயே அமர்ந்திருந்த அவர்கள், இன்று காலை வரை விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்க்க வேண்டும், பள்ளி-கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது போன்று சிறிய குழந்தைகளுக்கும் கோடை வெயிலை சமாளிக்கவும், தொற்று நோய் பரவலை தடுக்கவும் மே மாதம் முழுவதும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகையிட்டு தொடர்ந்து போராடி வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
- போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டு
- போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணி மேகலை தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் லதா, பொருளாளர் உமாராணி, இணைச் செயலாளர்கள் சாந்தி, உமாராணி, பிரவீனா, பரமேஸ்வரி உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் அங்கன்வாடி காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் அரசு ஊழியர்களுக்கு போல் வழங்கிட வேண்டும், தற்போது தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் நலன்களை கருதி கோடை காலமான மே மாதத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது போன்று அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
போராட்டத்தையொட்டி 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.






