என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலைமறியல்- 100 பேர் கைது
- திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்க வேண்டும், மேலும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளை போல மே மாதம் முழுவதும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியப்படி திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.






