என் மலர்tooltip icon

    கோவில்கள்

    • திருமணத்தடை அகலும்.
    • ஏவல், பில்லி, சூனியம் விலகும்.

    திருவனந்தபுரம் அருகே தொழுவன்கோடு என்ற இடத்தில் சாமுண்டிதேவி கோவில் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் அன்னை, மக்களுக்கு அருள்வழங்கி காத்து வருகிறார். இந்த தலத்தில் அந்தணர் அல்லாதவர்களும், அம்மனுக்கு பூஜை செய்யும் சிறப்பு மிக்க வழக்கம் உள்ளது. அன்னை சாமுண்டிதேவியானவர் பொன்னிற தகடுகளால் பொதியப்பட்ட கருவறைக்குள் வீற்றிருந்து, வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி வருகிறார்.

    தல வரலாறு :

    தொழுவன்கோடு ஆலய வரலாறு பற்றி கூறும் முன்பு, அதோடு தொடர்புடைய பண்டைய கால திருவிதாங்கூர் மன்னர் குடும்ப வரலாற்றையும் குறிப்பிட வேண்டியதாக உள்ளது. அபூர்வ சக்திமிக்க சாமுண்டி தேவி ஆலயம் தோன்றிய முக்கிய காரணமாக திகழ்ந்தவர், மன்னர் மார்த்தாண்டவர்மா. அவர் வீர பராக்கிரமசாலியாகவும், திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரிந்து வரும் பத்மநாப சுவாமியின் பரம பக்தனாகவும் இருந்ததும், திருவிதாங்கூர் நாட்டை விரிவுபடுத்தி வலிமை மிக்கதாக மாற்றியமைத்தவர்.

    ஆதி காலம் முதல் திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில், மருமக்கள் தாயகம் என்னும் வழக்கம் நிலை கொண்டிருந்தது. ஒரு மன்னர் ஆட்சி காலத்தின் பின்னர், மன்னரின் தங்கை மகன்தான் (மருமகன்) ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த நிலையில் மார்த்தாண்டவர்மா ஆட்சிக்கு வரும் முன், அவரின் தாய்மாமன் ராமவர்மா மன்னராக இருந்தார்.

    ஒரு முறை மன்னர் ராமவர்மா, சுசீந்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்தைக் காணச் சென்றார். அப்போது கோவிலில் அழகே உருவான அபிராமி என்றப் பெண்ணைச் சந்தித்தார். அவள் மீது மையல் கொண்ட மன்னர், அவளைத் திருமணம் செய்ய நினைத்து, தனது மனதைத் திறந்து அபிராமியிடம் சொன்னார்.

    அபிராமி ஓர் நிபந்தனையை முன்வைத்தாள். 'திருமணம் செய்திட எனக்கு சம்மதமே. ஆனால் என் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்குதான் அரசு உரிமை வழங்க வேண்டும். மக்கள் தாயத்தை நிலை நிறுத்த வேண்டும்' என்றாள்.

    பரம்பரை வழக்கமான மருமக்கள் தாயக வழக்கத்தை மாற்றுவது கடினம். உரிமை மருமகனுக்கு என்ற வழக்கத்தை மீற முடியாது. வேறு எதுவாயினும் கேள்' என்றார் மன்னர் ராமவர்மா.

    ஆனால் அபிராமி ஒத்துக்கொள்ளவில்லை. 'மன்னா! எந்த நாட்டிலும் தந்தையின் சொத்துக்கு உரிமை பிள்ளை செல்வங்களுக்கல்லவா? வரலாறுகளிலும் புராணங்களிலும் அதுவே கூறப்பட்டிருக்கின்றன. தங்களுடைய நாட்டில் மட்டும் இதென்ன வழக்கம்?' எனக்கூறி மருமக்கள் தாயகத்தை அபிராமி புறக்கணித்தாள். தன் கருத்தில் பிடிவாதமாக நின்றாள்.

    மன்னரும் வேறு வழியின்றி, அவள் மீது கொண்ட மையல் காரணமாக நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மணம் முடித்து வாழ்ந்து வந்தனர். ராமவர்மா- அபிராமி தம்பதியருக்கு பப்பு தம்பி, ராமன்தம்பி, உம்மணி தங்கை என்ற மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தனர். அதே போல் ராமவர்மாவின் சகோதரி உமா தம்பதியருக்கு மார்த்தாண்டவர்மா பிறந்து வளர்ந்து வந்தார்.

    மருமக்கள் தாயகம் நிலை நாட்ட மன்னர் குடும்பத்தினர் முயன்றனர். மக்கள் தாயகத்தை நிலை நாட்ட அபிராமியும், அவரது குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டவர்மா, தனது முறைப்பெண் உம்மணி தங்கையுடன் காதல் கொண்டிருந்தார். இதனை அவளது சகோதரர்கள் கண்டித்தனர். அவர்களின் காதலை பல வழிகளில் தடுத்தனர்.

    மக்கள் தாயகத்தை நிலை நாட்டும் பிரிவில் எட்டு வீட்டுப் பிள்ளைகள் என ஒரு குழு தீவிரமாக ஒத்துழைத்தது. எட்டு வீட்டு பிள்ளைகளில் வீரபராக்கிரமசாலியாகவும், சதி திட்டங்கள் வகுப்பதில் வல்லவராகவும் இருந்த கழக்கூட்டத்து பிள்ளை என்பவர் குறிப்பிடத்தக்கவர். ஒரு முறை மார்த்தாண்டவர்மா படைவீரர்கள், கழக்கூட்டத்தப் பிள்ளையைப் பிடிக்க முயன்றனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு காட்டில் சென்று மறைந்தார். மார்த்தாண்டவர்மா படையினரும் அவரை காட்டுக்குள் விரட்டிச் சென்றனர். பிள்ளையைக் காணவில்லை. அங்கு ஒரு பெரிய நாகப்பாம்பு படமெடுத்து, படைவீரர்களை தடுத்து நின்றது. இதனால் படைவீரர்கள் திரும்பி வந்து விட்டனர்.

    மற்றொரு முறை விரட்டி வரும் படைவீரர்களுக்கு பயந்து, மேனம் குளம் என்ற இடத்தில் உள்ள மீன குடிசைக்குள் புகுந்தார் கழக்கூட்டத்துப் பிள்ளை. வீரர்களும் அந்த குடிசைக்குள் புகுந்தனர். ஆனால் கழக்கூட்டத்துப் பிள்ளை அங்கு இல்லை. இதனால் படைவீரர்கள் குடிசையை உடைத்தெறிந்தனர். யாரும் இல்லாத வீட்டுக்குள் இருந்து வயதான மீனவப் பெண் ஒருத்தி, தலையில் கூடையை சுமந்தபடி வெளிப்பட்டாள். இதனைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்த மார்த்தாண்டவர்மா, தன் பக்கம் துணைபுரியும் ராமைய்யன் என்பவரிடம் இதற்கு காரணம் கேட்டார்.

    அவரோ, 'கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் (சண்டை பயிற்சி வழங்கும் இடம்) ஓர் அரிய சக்தியாக ஆதிபராசக்தி குடியிருக்கிறாள். கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் பயிற்சி ஆசானாக 'பணிக்கர்' என்னும் திறமைசாலி இருக்கிறார். அங்கே சாமுண்டி வடிவில் அன்னை புவனேஸ்வரியும் அமர்ந்திருக்கிறாள். தேவியையும், குருவான பணிக்கரையும் அங்கிருந்து வேறிடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில் கழக்கூட்டத்துப் பிள்ளையை வெற்றிபெற முடியாது' என்றார்.

    இதனைக் கேட்ட மார்த்தாண்டவர்மா, அரண்மனை ஜோதிடரை வரவழைத்து ஜோதிடம் கணித்துப் பார்க்கச் சொன்னார்.

    'குருவையும், அம்மனையும் அங்கிருந்து அகற்ற, பத்மநாப சுவாமியின் அருளைத் தேடுங்கள்' என்றார் ஜோதிடர்.

    அதன்படி மார்த்தாண்டவர்மா பத்மநாப சுவாமி கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டினார்.

    மும்மூர்த்திகள் தரிசனம் :

    வழிபடுவோரை கைவிடாத பரந்தாமன், மார்த்தாண்டவர்மாவை காத்திட முன்வந்தார். தன் செயலுக்கு பிரம்மதேவனையும், சிவபெருமானையும் துணைக்கு சேர்த்துக்கொண்டார். மூவரும் இரவு நேரத்தில் பணிக்கர் நித்திரையில் இருக்கும் போது, சாமுண்டியைச் சந்தித்தனர். 'தேவி இந்த வேணாட்டிற்காகவும், பக்தர்களின் நலன் காக்கவும் வேண்டி, இந்த களரியை விட்டு வேறிடம் சென்று குடியிருக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.

    அன்னையும், 'நல்லது. தங்கள் சித்தப்படியே ஆகட்டும். ஆனால் எனது அருள்வடிவம், இனி எங்கே பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ, அங்கு மும்மூர்த்திகளான நீங்கள் மூவரும் முன்னிலை வகிக்க வேண்டும். மேலும் பிரதிஷ்டை வருடாந்திர தினத்தில் மூவரும் வருகை தந்து அருள்பாலிக்க வேண்டும்' என்றாள்.

    அதற்கு திருமூர்த்திகளும் ஒப்புதல் தெரிவித்து மறைந்தனர். இதையடுத்து சாமுண்டி தேவியான, புவனேஸ்வரி தனது பரம பக்தரான குரு பணிக்கருடன், கழக்கூட்டத்துப் பிள்ளையிடம் கூட தெரிவிக்காமல் அங்கிருந்து பயணமானாள். தேவியின் உபதேசப்படி, பணிக்கர் மேடு பள்ளங்களையும், நீர்நிலைகளையும் கடந்து, சாமுண்டி சிலையுடன் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தார். மும்மூர்த்திகளும் அசரீரியாக குறிப்பிட்ட இடத்தில், சாமுண்டியை குடியிருத்தினார். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தொழுதபடி நிற்கும் இந்தக் காடு, காலப்போக்கில் தொழுவன்காடு என்று மாறி புனித தலமாக உருவெடுத்தது.

    பணிக்கர் வழக்கப்படி சாமுண்டி தேவியை பூஜித்து வந்தார். பொழுது புலரும் நேரத்தை காட்டிலிருந்த ஒரு கோழி உணர்த்தியது. அதனையே தேவிக்கு சமர்ப்பித்தார் பணிக்கர். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. பக்தர்கள் அன்னைக்கு கோழியை சமர்ப்பித்து வேண்டுதல் செய்கின்றனர்.

    கழக்கூட்டத்துப் பிள்ளையின் களரியில் இருந்து சாமுண்டிதேவி மாற்றிடம் சென்றதும், மார்த்தாண்டவர்மா எட்டு வீட்டு பிள்ளைகளையும் வென்று சிறந்த ஆட்சியை தொடர்ந்தார். தொழுவன்காடு என்பது தொழுவன்கோடு என்றானது. அந்த இடத்தில் இருந்து அன்னையானவள், மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    இந்த ஆலயத்தில் உள்ள அன்னையை மனமுருக வேண்டினால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் தீரும். ஏவல், பில்லி, சூனியம் விலகும். திருமணத்தடை அகலும். இந்த ஆலயத்தில் திருவிழாக்காலங்களின் போது 'ஔடத கஞ்சி' வழங்கப்படுகிறது. இது நோய் தீர்க்கும் பிரசாதமாக உள்ளது.

    இந்த ஆலயத் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவில், இறுதிநாளான 12-ந் தேதி பொங்கல் விழா நடக்கிறது. அதிகாலை 5 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடைதிறந்திருக்கும்.

    நவக்கிரக சன்னிதி :

    தொழுவன்கோடு சாமுண்டி தேவி ஆலயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், கணபதி, கந்தர்வன், அனுமன், நாகராஜா, நாகயட்னி, துர்க்காதேவி ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. தேவியின் கருவறைக்கு அருகில் கருங்காளி தேவிக்கு தனிக் கோவில் இருக்கிறது. கணபதி மற்றும் நாகராஜா சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனவை என்பது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் உள்ள நவக்கிரக சிலைகள் பெரிய உருவத்தில் தங்கள் வாகனங்களுடன் இருப்பதைக் காணலாம். இங்கு வந்து சனி தோஷத்திற்காக வழிபட்டு நிவாரணம் பெற்றுச் செல்பவர்கள் ஏராளம்.

    அமைவிடம் :

    திருவனந்தபுரம் கிழங்கு கோட்டையில் இருந்து வடகிழக்காக 7 கிலோமீட்டர் பயணித்தால் தொழுவன்கோடு சாமுண்டி தேவி கோவிலை அடையலாம்.

    • மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது
    • ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார்.

    மூலவர் - சுப்பிரமணிய சுவாமி/தண்டாயுதபாணி/மருதாசலமூர்த்தி (மருதப்பா)

    அம்மன்/தாயார் - வள்ளி, தெய்வயானை

    தல விருட்சம் - மருதமரம்

    தீர்த்தம் - மருத தீர்த்தம்

    பழமை சுமார் - 800 ஆண்டுகள்

    ஆறுபடை வீடுகளை கொண்டு குன்றதோரும் குமரக்கடவுள் எழுந்தருளி இருக்கிறார். இதில் கோவையை அடுத்த மருதமலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

    இந்த கோவில் கோவை நகரில் இருந்து வடமேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில், தரை மட்டத்தில் இருந்து 500 அடி உயரத்தில் மலையில் அமைந்து உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்த மருதமலை கோவிலின் 3 புறங்களிலும் மயில் தோகை போல விரிந்து மலை காட்சி அளிக்கிறது. இதனால் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருள்பாலிப்பது போன்ற காட்சி மனக்கண் முன் தோன்றுவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

    மருதமரங்கள் அதிகமாக காணப்படுவதால் இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் மருத மால் வரை, மருத வரை, மருத வேற்பு, மருதக் குன்று, மருதலோங்கல், கமற் பிறங்கு, மருதாச்சலம், வேள் வரை, என்றெல்லாம் பேரூர் புராணத்தில் கூறப்படுகிறது.

    மருதமலை ஆண்டவன் என்று அழைக்கப்படுவதற்கு காரணம் மருத மரங்கள் நிறைந்த மலைக்கு தலைவன் என்பதாகும். மருத மலையான், மருதப்பன், மருதாச்சல மூர்த்தி போன்ற பெயர்களாலும் இந்த மருதமலையில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் அழைக்கப்படுகிறார்.

    புதியதாக அமைக்கப்பட்ட பாதை இராஜகோபுரத்தின் வழியே நேராக தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்கிறது. இராஜகோபுர நுழைவாயிலைத் தாண்டினால் கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு, அடுத்து உலோகக் கொடிமரம், மயில்வாகனம், முன்மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் சன்னிதி, அர்த்தமண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறத்திலும் விநாயகரும் (இடப்புறம்) வீரபத்திரரும் (வலப்புறம்), கருவறையில் தண்டத்துடன் காட்சிதரும் தண்டாயுதபாணி என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வலம்புரி விநாயகரின் முன்னுள்ள மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் குறிப்பிடத்தக்கவை.

    இது தனிப்பட்ட முருகன் கோயிலாக இருந்தாலும் இங்கு முருகன், சோமாஸ்கந்தனாக வெளிமண்டபத்தில் வலப்புறம் பட்டீசுவரர், இடப்புறம் மரகதாம்பிகை சன்னிதிகளுடன் உள்ளார். மரகதாம்பிகை சன்னிதிக்கு எதிராக வெளி மண்டபத்தில் நவகிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளது. மற்றும் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர் ஆகியோருக்கும் வெளிமண்டபச் சுவற்றில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

    மலையின் அடிவாரத்திலிருந்து நடைப்பயணமாகச் செல்லும் போது, பாதையின் தொடக்கத்தில் தான்தோன்றி விநாயகர் சன்னிதியும், சற்று மேலே சென்றால் இடும்பன் சன்னிதியும் அமைந்துள்ளன. மலையின் மீது சென்றதும் அங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் இறுதிப் படிக்கட்டுகள் ஆதிமூலஸ்தானத்திற்கு நேரெதிராக உள்ளன. இப்பாதைவழிச் செல்பவர்கள் ஆதி மூலஸ்தானத்தில் சுயம்புவாக உள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையையும் அதற்கடுத்து, பஞ்சமுக விநாயகரையும் வழிபட்டபின் தண்டாயுதபாணி சன்னிதிக்குச் செல்லலாம்.

    மருதமலையில் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பிரதிஷ்டை செய்த லிங்கம்

    கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் பழனி அருகே உள்ள இடும்பன் மலையில் அமர்ந்து இடும்பன் சுவாமிகளை வழிபட்டு வருவார். இவர், கோவையில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் உள்ள இடும்பன் சுவாமி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். இப்படி வழிபாடு செய்ய வரும் போது தான் மருதமலையில் உள்ள இடும்பன் கோவிலின் பின்புறம், இடும்பனை சுற்றி வரும் பிரகாரத்தில் மருதமரத்தார் மருந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்தார்.

    இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நோய்களை தீர்த்து அனைத்து நலங்களையும், வளங்களையும் வழங்குவதற்காக இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக பக்தர்களிடம் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தெரிவித்துள்ளார். தற்போது மருதமலையில் இவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த லிங்கத்தை பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.

    தினமும் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு செய்யலாம். மருதமலைக்கு வரும் பக்தர்கள் முதலில் அங்குள்ள தான் தோன்றி விநாயகர், இடும்பன் சுவாமிகள், மருந்தீஸ்வரர் லிங்கத்தை தரிசித்து விட்டு தான் முருகப்பெருமான், பாம்பாட்டி சித்தரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதன் மூலம் மருந்தீஸ்வரர் லிங்கம் பக்தர்களின் மனங்களில் பக்தியை சித்தியாக்கி பரவசம் கொள்ள செய்வதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை, பவுர்ணமி தினங்களில் மருதமரத்தார் மருந்தீஸ்வரர் லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், பேராவூரணியில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் அமைந்துள்ளது புராதனவனேஸ்வரர் கோவில்.

    கி.பி 7-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர் கால கட்டிட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் முன்மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை போன்றவை உள்ளன. இக்கோவிலில் திருச்சுற்று மாளிகை காணப்படுவது கூடுதல் சிறப்பு. முன்மண்டபத்தில் இரு சிற்பங்கள் அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறது.

    கல்வெட்டு செய்திகள்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் பாண்டியர், சோழர், நாயக்கர் கால கல்வெட்டுகளும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் காலத்தால் முதன்மையானது பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனின் கல்வெட்டு ஆகும். இதன் காலம் கி.பி.878 ஆகும். இக்கல்வெட்டு வரிகள் மிகவும் சேதமடைந்துள்ளது. இருப்பினும் மன்னன் பெயரும், ஊரின் பெயரும் தெளிவாக உள்ளது. இதில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என காணப்படுகிறது.

    அடுத்ததாக முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 936 ஆகும். இதுவும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதில் இறைவனை திருச்சிற்றேமத்து மகாதேவர் என குறிப்பிடப்பட்டு உள்ளது. பராந்தக சோழனின் மற்றொரு கல்வெட்டில் நக்கநாச்சி என்பவர், தன் மகளின் சார்பாக கோவிலுக்கு 95 ஆடுகளை தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது.

    நிலம் கொடை

    முதலாம் ராஜராஜனின் கல்வெட்டும் இக்கோவிலில் காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 995. இக்கல்வெட்டு இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் தானம் வழங்கப்பட்டது பற்றி கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு வாழ்வூரை சேர்ந்த பூடி உத்தமன் இறைவனுக்கு திருஅமுது படைக்க நிலம் கொடையளித்த செய்தியை காட்டுகிறது.

    முதலாம் ராஜேந்திரன் காலத்து கல்வெட்டு ஒன்றும் கோவிலில் உள்ளது. இதன் காலம் கி.பி.1016 ஆகும். இதில் கோவிலில் அந்தி விளக்கு ஏற்பாடு செய்த செய்தி காணப்படுகிறது.

    முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு காணப்படுகிறது. இதன் காலம் கி.பி. 1216. இதில் புராதனவனேஸ்வரருக்கு தேவதானமாக 100 பணத்திற்கு சாமந்த மழவராயன் என்பவன் நிலம் விற்ற செய்தி காணப்படுகிறது.

    மூன்றாம் ராஜராஜன் கல்வெட்டில், திருச்சிற்றேமம் குளத்துக்கு நீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க நிலம் வழங்கிய செய்தியும், மற்றொரு கல்வெட்டில் இறைவிக்கு அமுது படைக்க நிலம் வழங்கிய செய்தியும் உள்ளது. இதில் நிலம் வழங்கிய நபர், மலை மண்டலத்து குலமுக்கிலை சேர்ந்த குதிரை வியாபாரி குலோத்துங்க சோழன் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1253 ஆகும்.

    மற்றொரு கல்வெட்டில் நெடுவாசலை சேர்ந்த உடையான் அறங்காவலர்(என்ற) குதிரை ஆண்டார் என்பவர் நிலம் தானம் வழங்கிய செய்தி காணப்படுகிறது. இக்கோவிலின் ஒரு தூண் கல்வெட்டில் அந்த தூண் தானம் வழங்கியவா் மிட்டான் ராமன், மடையால் புரையூர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாடல் பெற்ற தலம்

    திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் சிற்றேமம் உடைய என பாடியுள்ளார். இது இத்தலமான திருச்சிற்றம்பலத்தையே குறிக்கும். ஆனால், இப்பதிகத்துக்கு உடைய கோவில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ள சித்தாமூரில் அமைந்துள்ள பொன்வைத்தநாதர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இக்கோவிலில் உள்ள சோழர் கால கல்வெட்டில் அவ்வூரின் பெயர் சிற்றாய்மூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அவ்வூரின் பெயர் திருச்சிற்றேமம் இல்லை என்பது உறுதியாகிறது.

    மேலும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ஊரின் பெயர் திருச்சிற்றேமம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகம் இக்கோவிலையே குறிக்கிறது என்றும் இத்தலம் பாடல் பெற்ற தலம் என்பதும் உறுதியாகிறது.

    திருமண தடை நீக்கும்

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் பூ விழுங்கி விநாயகர் மிகவும் சிறப்பு உடையவர். இங்கு பிரதோஷ வழிபாடு, சிவராத்திரி, வைகாசி விசாக 12 நாள் திருவிழா, மாசி மகம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்கள் சிறப்பான முறையில் நடைபெறுகிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது இஷ்ட தெய்வமாக பெரியநாயகி அம்மனையும், புராதனவனேஸ்வரையும் வணங்கி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் இக்கோவிலில் நடைபெறுகிறது. இதுவே ஒரு கோவிலின் சிறப்பை அனைவருக்கும் பறைசாற்றும். திருமணத்தடை நீக்கும் தலமாகவும் திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

    குடமுழுக்கு

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரா் கோவில் தமிழக இந்து சமய அறநிலைய துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2001-ம் ஆண்டு இந்த கோவிலில் குடமுழுக்கு நடந்தது. அதன் பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை. கோவிலில் இருந்த திருத்தேர் சேதம் அடைந்ததை தொடர்ந்து கிராம மக்களின் பங்குத்தொகை மற்றும் அரசு வழங்கிய நிதி உதவியுடன் சேர்த்து தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தேர் இன்னும் வெள்ளோட்டம் விடப்படாமல் கடந்த 6 வருடங்களாக அப்படியே நிலைத்தடத்தில் உள்ளது. மேலும் கோவிலில் உள்ள சுதை சிற்பங்கள் சேதமடைந்து வருவதுடன், கோவிலின் வர்ண பூச்சுகளும் பொலிவிழந்து காணப்படுகிறது. கோவிலின் கொடிமரம் சாய்ந்து 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நாள் வரை வேறு கொடிமரம் நடப்படவில்லை.

    திருப்பணிகள்

    இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த சில வருடங்களாக வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெறவில்லை. மேலும் பக்தர்களின் வசதிக்காக திருக்குளக்கரையில் பக்தர்கள் உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. தமிழக அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்த நிதி போதுமானதாக இல்லாததால், அதனை உயர்த்தி வழங்கி திருப்பணி வேலைகளை தொடங்கி முடித்து குடமுழுக்கு விழாவையும், திருத்தேர் வெள்ளோட்டமும் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து 15 கி.மீ்ட்டர் தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலத்தை அடைந்து புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். அல்லது சென்னையில் இருந்து ரெயில் அல்லது பஸ் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

    • மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது.
    • கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    மூலவர் வேதகிரீசுவரர் (மலைமேல்), பக்தவசலேசுவரர் (தாழக்கோவில்)

    அம்மன் சொக்கநாயகி (மலைமேல்), திரிபுரசுந்தரி (தாழக்கோவில்)

    தல மரம் வாழை மரம் (கதலி)

    தீர்த்தம் சங்குத் தீர்த்தம்

    புராண பெயர் கழுகுன்றம், திருக்கழுகுன்றம்

    ஊர் திருக்கழுக்குன்றம்

    மாவட்டம் காஞ்சிபுரம்

    வேதமே மலையாய் இருப்பதால் இத்திருத்தலம் "வேதகிரி" எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோவிலும், ஊருக்குள் ஒரு கோவிலும் உள்ளது. இவை முறையே திருமலைக் கோவில், தாழக்கோவில் என்றழைக்கப்படுகின்றன.

    மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீசுவரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேசுவரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் "அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது".

    மலை சுமார் 4 கி.மி. சுற்றளவு கொண்டது. 500 அடி உயரம் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலைமீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீசுவரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர்.

    கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து உணவு பெற்றுச் செல்கின்றன.

    திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் கன்னி ராசிக்கான பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    கோவில் அமைப்பு

    தாழக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இவற்றில் ஏழு நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு நான்கு கால் மண்டபம் உள்ளது, வலதுபுறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. நான்கு கால் மண்டபத்தையடுத்து இரண்டாவது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

    இரண்டாவது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும்போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்ட ஆத்மநாதர் சந்நிதி உள்ளது; பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தல விநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேசுவரர், அருணாசலேசுவரர் முதலிய சந்நிதிகள் தனித்தனிக் கோவில்களாக அமைந்துள்ளன. ஆறுமுகப் பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்தில் உள்ளது.

    அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம்வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீசுவரர் சந்நிதி. அதையடுத்து நடராச சபை. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலதுபுறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள் சென்று, உள் சுற்றில் வலம் வரும்போது சூரியன் சந்நிதியும் அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத் திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோரவீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

    சங்கு தீர்த்தம்

    கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன. "மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும்" சொல்லப்படுகிறது. இரண்டு நீராழி மண்டபங்களும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இந்திரன் வணங்கும் தலம்

    மலைமேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற்போல் கோவில் விமானத்தில் ஒரு துவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

    வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின்போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். வலம்வரும் வழியில் மருந்து மலைச்சாரல் "சஞ்சீவி" காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை சங்கு தீர்த்தத்தில் நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகைக் காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை திருமலை வலம் வந்து வேதகிரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

    பிரார்த்தனை: இத்தலத்து சிவபெருமானை வணங்கினால் முக்தி கிடைக்கும். தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர்.

    குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சித்தபிரமை பிடித்தவர்கள் 48 நாட்கள்(ஒரு மண்டலம்)சங்குதீர்த்தத்தில் மூழ்கி விட்டுஇத்தலத்தில் வழிபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையாக குணமடையும் அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது. தீராத வியாதிகள் தீருகிறது.

    குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வழிபட்டு பலனடைகின்றனர். இத்தலத்தில் பக்தர்களின் எல்லாவித வேண்டுதல்களும், திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.

    ஆஸ்துமா ரத்தகொதிப்பு இருதய நோய் உள்ளவர்கள் காலையும் மாலையும் சஞ்சீவிக் காற்று வீசும் இம்மலை ஏறி வந்து ஈசனை வழிபட்டால் அத்தகைய நோய்களிலிருந்து குணமடைகின்றனர் என்பது கண் கண்ட உண்மை.

    நேர்த்திக்கடன்: சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் தரலாம். வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

    கோவில் திறக்கும் நேரம்

    மலைக்கோவில் தினந்தோறும் காலை 09:00 மணி முதல் பகல் 12:00 மணி வரையிலும் மாலையில் 04:30 மணி முதல் 07:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில்,

    திருக்கழுக்குன்றம்,

    திருக்கழுக்குன்றம் – 603109,

    செங்கல்பட்டு மாவட்டம்.

    • நாளை இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனி நடக்கிறது.
    • 83 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டது.

    எனது பக்தர்கள் அனைவரும் என் குழந்தைகள், நான் உங்கள் தந்தை, நீங்கள் வணங்கும் தெய்வம் எதுவோ அதையே எப்போதும் வணங்குங்கள். விரைவில் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார். இது பல லட்சம் பக்தர்கள் நம்பிக்கையோடு வணங்கும் ஷீரடி சாயிபாபாவின் ஆசீர்வாத வார்த்தைகள்.

    ஷீரடி சாயிபாபா

    மனித குலம் பல யுகங்களை கடந்து, கடைசியாக கலியுகத்தில் வந்து நிற்கிறது. இந்த கலியுகம் நலமாக வாழ நாமசங்கீர்த்தனமே சிறந்தது என்று யோகிகளும், முனிவர்களும் கூறினர். அந்த வரிசையில் மனிதராய் அவதரித்து, அன்பால் அனைத்து உயிர்களையும் தன் பால் ஈர்த்து, கலியுகத்தின் கருணை கடவுளாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் ஷீரடி சாயிபாபா.

    கல்லை கரைத்தது, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றியது, விஷத்தை நீக்கியது என்று சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

    முழு உருவ சிலை

    அவ்வளவு மகிமை பொருந்திய ஷீரடி சாயிபாபாவுக்கு, தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் 83 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள ஷீரடி சாயிபாபா கோவிலுக்கு ஸ்ரீ நாகசாயி மந்திர் என்று பெயர் சூட்டப்பட்டது. இக்கோவிலுக்குள் நுழைந்ததுமே நமது மனதில் உள்ள இறுக்கம் விலகி சென்று விடுகிறது. அதன் உச்சமாக முழு உருவ பளிங்கு சிலையில் காட்சி தரும் பாபாவை கண்டவுடன், நம் மனம் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைப்பதையும் உணர முடிகிறது.

    முதல் கும்பாபிஷேகம்

    கோவையில் கடந்த 1943-ம் ஆண்டு ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த நிர்வாகத்தின் கீழ் ஸ்ரீ நாகசாயி மந்திர் (சாயிபாபா கோவில்) உள்ளது. உலகோர் அனைவரும் பாபாவை அறிய வேண்டும். அவரது அருளை பெற வேண்டும் என்பதை குறிக்கோளுடன், பூஜ்ய ஸ்ரீ பி.வி.நரசிம்ம சுவாமிஜி மற்றும் சி.வரதராஜா அய்யா இணைந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாயிபக்தி இயக்க அமைப்பையும், சாயிபாபா மிஷனையும் 1939-ம் ஆண்டு தொடங்கினர். தென்னிந்தியாவின் முதல் ஷீரடி சாயிபாபா கோவில், ஸ்ரீ நாகசாயி மந்திர் ஆகும். இக்கோவிலில் முதல் கும்பாபிஷேகம் 10-10-1946 அன்று நடைபெற்றது.

    தங்கரத பவனி

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலின் கோபுரம் ஷீரடி சாயிபாபா சமாதி அடைந்த பின்பு, அவருக்காக முதன் முதலாக கட்டப்பட்ட கோபுரம் ஆகும். ஸ்ரீ நாகசாயி மூலவர் சிலையானது உலகிலேயே 2-வது பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்டது. 1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி வியாழக்கிழமை சாயிபாபா படத்திற்கு முன் 3 அடி முதல் 4 அடி நீளம் உள்ள நாகரூபத்தில் சாயிபாபா 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து காட்சி அளித்தார்.

    ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. கடந்த 28-ந் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு ஸ்ரீ நாகசாயி உற்சவ மூர்த்தி வீதி உலாவும், நாளை (வியாழக்கிழமை) இரவு 7.45 மணிக்கு தங்கரத பவனியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் என்.சர்வோத்தமன், அறங்காவலர்கள் ஜி.தியாகராஜன், எஸ்.சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வரலாற்று சின்னம்

    இதுகுறித்து ஸ்ரீ நாகசாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத்தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் கூறும்போது, அறக்கட்டளையின் கீழ் சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி), சாயிதீப் திருமண மண்டபம், இலவச ஹோமியோபதி கிளினிக் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவித்தொகை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாயிபாபா வித்யாலயம் நடுநிலை பள்ளி 1946-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று வரை கட்டணமில்லா தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ நாகசாயி மந்திர் கோவில் கோவை மாநகரத்தின் வரலாற்று சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் தரிசனத்திற்கு தினமும் உள்ளூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர் என்றார்.

    • இந்த ஆலயத்தில் 5-ந்தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தென் பொதிகை மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது, தோரணமலை. தேனினும் இனிய தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் கண்டு வியந்தமலை இது. யானை படுத்து இருப்பதுபோல் காட்சி தருவதன் காரணமாக, இந்த மலை முதலில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்டது. அதுவே மருவி தற்போது 'தோரணமலை' என்று வழங்கப்படுகிறது.

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலையின் உச்சியில் உள்ள குகையில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். சிவன்-பார்வதி திருமணம் கயிலாய மலையில் நடந்தபோது, அந்த திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்று அனைவரும் கயிலாய மலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகம் சமநிலையை அடைவதற்காக அகத்தியரை, தென் பகுதிக்கு அனுப்பினார் சிவபெருமான்.

    அப்படி அகத்தியர் வந்தபோது, அவரைக் கவர்ந்த இடம் இந்த தோரணமலை. இங்கு அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ, மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 'மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான், ஒருவன் முழு மருத்துவனாக முடியும்' என்று கருதிய அகத்தியர், அதற்காக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்களை வகுத்துள்ளார்.

    அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின்படி பாடத்திட்டங்களை வகுத்தார். பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது. தொடர்ந்து கணிதம், மருத்துவ ஆய்வு வகைகள், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாகடம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், ரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், ரணவாகடம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்த பின்னர், தோரணமலை பகுதியில் அகத்தியர் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சிக் கூடத்தில் பயில சித்தர்கள் பலர் வந்தனர். அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.

    இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி (பழனி), கொல்லிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும். இந்த பாடசாலையில் 6 ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.

    அகத்தியரும், அவரது சீடர் தேரையரும் தோரணமலையில் இருந்த போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர்.

    அவர்கள் இருவரும் வழிபட்ட முருகப்பெருமான்தான், இன்றும் தோரணமலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தோரணமலை முருகன் கோவில், ஆரம்பத்தில் சுற்றுவட்டார பகுதிக்கு மட்டும் அறிந்த ஆலயமாக இருந்தது. 1970-ம் ஆண்டு ஆதிநாராயணன் என்பவர் தோரணமலை கோவில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்ற பின்னர், தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. பக்தர்களின் வருகைக்குப் பிறகு, இந்த ஆலயத்தில் தினமும் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. மலையேறிச் செல்வதற்கான பாதைகள், படிகள் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே மலை வழியில் பக்தர்கள் அமர்ந்து செல்ல, அகத்தியர், தேரையர், அருணகிரிநாதர் ஆகியோர் பெயர்களில் மண்டபங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கோவிலில் தினமும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம், முருகப்பெருமான்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

    அகத்தியர், தேரையர், சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது நம்பிக்கை. முருகன் அருகில் பத்திரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். முருகன் சன்னிதி அருகே ஒரு சுனை உள்ளது. இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். தோரணமலை அடிவாரத்தில் வல்லப விநாயகர், குரு பகவான், பாலமுருகன், நவக்கிரகங்கள், சப்த கன்னியர்கள், கன்னிமாரியம்மன் சன்னிதிகளும் உள்ளன. இந்த ஆலயத்தில் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது.

    -புலவனூரான்

    • இக்கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
    • இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

    நவக்கிரக நாயகர்களின் வரிசையில் ஐந்தாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஒன்பதாவதாகவும் விளங்கும் கோவில் "ஆழ்வார்திருநகரி". இது குருவின் அம்சமாக விளங்குகிறது.

    மூலவர் பெயர் : ஆதிநாத பெருமாள் (நின்ற கோலம்)

    உற்சவர் பெயர் : ஸ்ரீ தேவி, பூ தேவி, நீளா தேவி சகிதம் பொலிந்துநின்றபிரான்.

    தாயார்கள் : ஆதிநாதநாயகி, திருகுருகூர்நாயகி

    விமானம் : கோவிந்த விமானம்

    தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம்.

    கோவில் விருட்சம் : உறங்காபுளிய மரம்.

    சிறப்பு சன்னதி : நம்மாழ்வார், ஞானப்பிரான், உறங்கா புளியமரம், மதில் மேல் கருடன்.

    மற்ற சிறப்புக்கள் : கல்நாதஸ்வரம், சங்கு மண்டபம்.

    கோவில் வரலாறு:

    முற்காலத்தில் படைக்கும் தொழிலை செய்து வந்த நான்முகனாகிய பிரம்மன், மகாவிஷ்ணுவை குறித்து தவம் செய்ய சிறந்த இடத்தை பூஉலகத்தில் தேடினார். அதற்குரிய இடத்தை கூறும்படி மகாவிஷ்ணுவிடமே வேண்டினார். அதற்கு மகாவிஷ்ணுவும், நான்முகனாகிய உன்னை நான் படைக்கும் முன்பே பூஉலகில் தாமிரபரணி ஆற்றின்கரையில் யாம் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளோம், அந்த இடமே உம் தவத்திற்கு ஏற்ற இடம் என்று கூறி புன்முறுவல் புரிந்தார்.

    பிரம்மனும் பூஉலகம் அடைந்து தாமிரபரணி ஆற்றின்கரையில் உள்ள தற்போதைய ஆழ்வார்திரு நகரி பகுதிக்கு வந்து மகாவிஷ்ணுவை குறித்து கடுந்தவம் புரிந்தார். அந்த தவத்திற்கு இறங்கி மகாவிஷ்ணு பிரம்மனுக்கு காட்சியளித்து, குருவாக இருந்து படைப்பு தொழி லுக்குரிய வேத மந்திரங்களையும் உபதேசித்து அருளினார். இவ்வாறு பிரம்மன் இங்கு தவமியற்றுவதற்கு முன்பே சுயம்பு மூர்த்தமாய் பெருமாள் எழுந்தருளியிருந்ததால் இத்தலத்திற்கு 'ஆதிபுரி' என்றும் இப்பெருமாளுக்கு 'ஆதிநாதர்' என்றும் பெயர் வந்தது. குருவாக இருந்து உபதேசித்ததால் "திருகுருகூர்" என்றும் சிறப்பிக்கப்படுகிறது.

    முற்காலத்தில் ஒரு வேதபாடசாலையில் அந்தண குலத்தில் பிறந்த மந்தன் என்பவன் மாணவனாக பயின்று வந்தான். அவன் அதிக திமிர் பிடித்தவன் என்பதால் வேதங்கள் கற்பதில் ஆர்வம் காட்டாமல், வேதம் பயின்ற பிற மாணவர்களையும், வேதம் கற்பித்த ஆசிரியர்களையும் நிந்தனை செய்து வந்தான். இதனால் வெகுண்ட வேதபாடசாலையின் குருமுனிவர், மந்தனே நீ வேதம் கற்கும் பாடசாலையில் இருந்தும் வேதங்களை கற்காததோடு, மற்றவர்களையும் இழிவாக பேசிய காரணத்தால் நீ அடுத்தபிறவியில் புலையனாக பிறக்கக்கடவாய் என சாபமிட்டு விடுகிறார்.

    அப்போதும் சிறிதும் வருந்தாத, தாந்தன் வேதங்களை கற்பதால் மட்டும் இறைவனை அடைந்துவிட முடியாது, அவருக்கு தொண்டு செய்வதன் மூலமும் இறைவனை அடையலாம் எனக்கூறி அந்த வேதபாடசாலையை விட்டு நீங்கி, அங்கிருந்த விஷ்ணு கோவிலை அடைந்து அக்கோவிலை சுத்தப்படுத்தி, செப்பனிட்டு, தொண்டுகள் பல செய்து வாழ்வை கழித்தான்.

    மறுபிறவியில் குருவின் சாபத்தால் தாந்தன் என்னும் பெயரில் புலையனாக பிறப்பெடுத்தான். முற்பிறவியில் விஷ்ணு கோவிலுக்கு தொண்டுகள் செய்த காரணத்தால் புலையனாக பிறந்தாலும் நல்ல ஒழுக்க சீலனாகவும், சிறந்த பக்திமானாகவும் விளங்கினான் தாந்தன். அவன் இந்த ஆதிபுரிக்கு வந்த போது, ஆதிநாத பெருமாளை தரிசிக்க செல்கையில், புலையன் என்பதால் உள்ளே செல்ல அந்தணர்களால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் வருந்திய தாந்தன் ஆதிநாதரை வழிபடும் பொருட்டு வேள்வி ஒன்றை செய்ய எண்ணி வேள்விச்சாலை அமைத்தான். அங்கும் அந்தணர்கள் வந்து அவனுக்கு இடையூறு செய்தனர். இதனால் வருந்திய தாந்தன் பெருமாளிடம் முறையிட, பெருமாள் அவனுக்கு இடையூறு செய்த அந்தணர்களின் கண்கள் பார்வையிழந்து போகும்படி செய்கிறார்.

    அப்போது வானில் ஓரு குரல் தாந்தன் என் பக்தன் அவனுக்கு இடையூறு செய்பவர்கள் என் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று அசரீரியாக ஒலித்தது. இதனால் மனம்திருந்திய அந்தணர்கள் தாந்தனிடம் சென்று மன்னிப்பு கேட்க, அந்தணர்கள் இழந்த பார்வையை மீண்டும் பெற்றனர். அப்போது பெருமாள் அவர்களுக்கு காட்சியளித்து, முன்ஜென்ம சாபத்தினை போக்கி தாந்தனுக்கு முக்தி அளித்தார்.

    இந்த வரலாற்றை விளக்கும் வண்ணம் இக்கோவில் படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தாந்தன் ஆதிநாதரை வழி பட்ட இடம் அப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு சாதி ஏற்றத்தாழ்வுகள் என்பது இறைவனுக்கு இல்லை என்பதை உணர்த்துகிறது.

    நம்மாழ்வார் வரலாறு:

    முற்காலத்தில் கரிமாற பாண்டியன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு உடையநங்கை என்னும் பெண்ணோடு திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் ஆதிநாதர் மீது அளவற்ற பக்தி செலுத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைபேறு இல்லை. எனவே குழந்தை பேறு வேண்டி இவர்கள் ஆதிநாதரை வழிபட்டு வந்தனர்.

    இவர்களின் வேண்டுதலுக்கு பலனாக வைகாசி மாத விசாக நட்சத்திர தினத்தில் கடக லக்னத்தில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சடகோபன் என்னும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.

    அந்த குழந்தை மற்ற குழந்தைகளை போல உண்ணாமல், உறங்காமல், இமைக்காமல், தும்மாமல், அழாமல், அசையாமல் அப்படியே இருந்தது. இதனால் வருந்திய பெற்றோர் அக்குழந்தையை ஆதிநாதர் சன்னதியில் கிடத்தி கண்ணீர்மல்க வேண்டினர். அப்போது அதுவரை அசைவில்லாமல் கிடத்தப்பட்ட குழந்தையானது தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரத்தினடியில் சென்று அமர்ந்துகொண்டது.

    அக்காட்சியை கண்ட பெற்றோர்கள் இது பெருமாளின் திருவிளையாடலே என்பதை உணர்ந்து அக்குழந்தையை தொந்தரவு செய்யாமல் பெருமாள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுச்சென்றார்கள். அதன்பின் 16 ஆண்டுகள் அக்குழந்தை அப்புளியமரத்தினடியில் அமர்ந்தபடியே யோக நிஷ்டையில் இருந்தது. 16 ஆண்டுகள் கழித்து கண்விழித்த அந்த குழந்தையே நம்மாழ்வார். நம்மாழ்வார் கண்விழித்ததும் வேதத்தின் சாரத்தையெல்லாம் பிழிந்து திருவாய்மொழியாக அருளினார்.

    பின்னர் திருக்கோளூரில் இருந்த மதுரகவியாழ்வார் இங்கு வந்து நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்று பணிவிடைகள் செய்து வந்தார். மதுரகவியாழ்வார் வயதில் மூத்தவராய் இருந்தும் 16 வயது பாலகனான நம்மாழ்வாரை குருவாக ஏற்றதோடு அல்லாமல் நம்மாழ்வார் மீது தனி பாசுரங்களே பாடியுள்ளார். அவற்றுள் கண்ணி நுன் சிறுதாம்பு என்று துவங்கும் பாடல் பிரசித்தி பெற்றது ஆகும்.

    மதுரகவியாழ்வார் இக்குருகூர் வந்து முதன்முதலாக யோக நிஷ்டையில் இருந்த நம்மாழ்வார் மீது சிறு கல் எறிந்து எழுப்பினார். எழுந்த நம்மாழ்வாரிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்" என்ற கேள்வியை மதுரகவியாழ்வார் கேட்க, அதற்கு அக் குழந்தை நம்மாழ்வாரோ "அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்ற உயர்ந்த அத்வைதத்தை பதிலாக உரைத்தார். இதனால் மகிழ்ந்த மதுரகவியாழ்வார் ஆகா இவர் அல்லவா என் உண்மையான குரு என்று கூறி நம்மாழ்வாரை தன் குருவாக ஏற்றார்.

    நம்மாழ்வார் இங்கு புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் யோக நிலையில் இருந்து பின் கண்விழித்து பல திருவாய்மொழி பாடல்களை அருளியுள்ளார். அவர் பல கோவில்களுக்கு எழுந்தருளி தன் பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு இங்கு ஆதிநாதப்பெருமாள் தனக்கு நிகரான அந்தஸ்து அழித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வாருக்கு பெருமாளை விட ஒரு படி மேலாகவே சிறப்பளிக்கப்படுகிறது.

    நம்மாழ்வார் சன்னதி

    பெருமாளின் அம்சமாகவே பிறந்த நம்மாழ்வாருக்கு இங்கு, ஆதிநாதர் தனக்கு நிகரான அந்தஸ்து அளித்து சிறப்பித்துள்ளார். எனவே இங்கு நம்மாழ்வார் தனி விமானம், தனி கொடிமரம் கொண்டு தெற்கு நோக்கிய தனி சன்னதியில் காட்சித்தருகிறார். இவருக்கு வருடத்தில் இரண்டு முறை மாசி மாதம் மற்றும் வைகாசி மாதம் கொடியேற்றமாகி திருவிழா நடைபெறும்.

    இங்கு பிறந்த நம்மாழ்வார் 16 வயது வரை இங்கிருந்த புளியமரத்தடியில் யோக நிஷ்டையில் இருந்து, வைணவ கோவில்கள் பலவற்றுக்கும் மங்களாசாசனம் செய்து, இறுதியில் மோட்சமடைந்த பின் அவரின் உடலானது இப்புளியமரத்தின் அடியிலேயே வைக்கப்பட்டு தனிக்கோவில் எழுப்பப்பட்டதாக கூறுகிறார்கள்.

    உறங்காபுளி மரம்

    பெருமாள் அம்சமாக நம்மாழ்வார் இப்பூவுலகில் அவதரிக்கும் முன்பே ஆதிசேஷனின் அம்சமாக இங்கு புளியமரம் அவதரித்ததாம். இம்மரம் சுமார் 5000 ஆண்டுகளை தாண்டி இன்றும் இத்தலத்தில் உறங்காபுளியாக நிலைப்பெற்றுள்ளது. இம்மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்று கூறப்படுகிறது.

    பொதுவாக புளியமரத்தின் இலைகள் மாலை 6.00 மணிக்கு பின் மூடி ஒன்றாகிவிடும். ஆனால் இந்த மரத்தின் இலைகள் எப்போதும் மூடாது என்பதால் உறங்காபுளி என்று சிறப்பிக்கப்படுகிறது.

    கல் நாதஸ்வரம்

    இந்த கோவிலில் கல்லில் செதுக்கப்பட்ட நாதஸ்வரம் ஒன்று உள்ளது. இந்த அற்புத நாதஸ்வரத்தை தயார் செய்யவதே தனிக் கலை ஆகும். இந்த கல் நாதஸ்வரத்தை செதுக்க பல நுட்பங்களை கையாண்டுள்ளனர் கலைஞர்கள். இதற்கென சிறப்பு வாய்ந்த கருங்கல்லை தேர்ந்தெடுத்து செதுக்கும் போது அது உடையாமல் இருக்க அந்த கருங்கல்லை பலவகையான மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றில் மூழ்க வைத்து, பக்குவப்படுத்தியே செதுக்கியுள்ளார்கள். இதனால் தான் இந்த நாதஸ்வரம் தற்போதும் நேர்த்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    கோவில் சிறப்புக்கள்

    இங்கு கருவறையில் நின்று அருள்பாலிக்கும் பெருமாளின் பாதங்கள் பூமிக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுகிறது. இங்குள்ள நம்மாழ்வார் திருமேனி மதுரகவியாழ்வாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

    நம்மாழ்வார் இத்தலத்தின் மீது பதினொரு திருவாய்மொழி பாசுரங்கள் (3106 முதல் 3116வரை) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    இங்கு கருவறைக்கு எதிரிலுள்ள கருடன் மற்ற கோவில்களை போல கரம் கூப்பிய நிலையில் இல்லாமல், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபய-வரதம் காட்டியும் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது சிறப்பு.

    நவதிருப்பதிகளின் ஒன்பது பெருமாள்களும் வருடத்திற்கு ஒருமுறை இந்த ஆழ்வார்திருநகரிக்கு எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சிகொடுப்பார்கள். நவதிருப்பதி கோவில்களில் இந்த ஆழ்வார்திருநகரி தவிர வேறெந்த கோவில்களிலும் நம்மாழ்வாருக்கு உற்சவ திருமேனி கிடையாது.

    திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இங்குதான் அரையர் சேவை பிரசித்தமாக நடைபெறும். நம்மாழ்வார் பல கோவில்களின் பெருமாள் மீது பாசுரங்கள் பாடியிருக்க, இங்கு அவரின் சிஷ்யரான மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை போற்றி அவர் மீதே பாசுரங்கள் பாடியுள்ளார்.

    இங்கு தனக்கு நிகரான அந்தஸ்த்தை பெருமாள், நம்மாழ்வாருக்கு வழங்கியிருந்தாலும், பெருமாளுக்கு ஒருபடி மேலாகவே இவர் சிறப்பிக்கப்படுகிறார். இங்குள்ள பெருமாளின் கருவறை விமானத்தை காட்டிலும், நம்மாழ்வாரின் கருவறை விமானமே அளவில் சற்று பெரியதாகும்.

    இங்கு வேடன் ஒருவனும், வேழம் ஒன்றும், இங்கு வாழ்ந்த நாய் ஒன்றும் இத்தல மகிமையால் முக்தி பெற்றுள்ளது.

    இங்கு பிரம்மன், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், சங்கன், தாந்தன், இந்திரன், பல ரிஷிகள் ஆகியோர் பெருமாளின் தரிசனம் கண்டுள்ளார்கள்.

    இங்கு நடைபெறும் திருஅத்யன உற்சவத்தில் நம்மாழ்வார் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு பெருமாளே நேரில் சென்று காட்சியளித்து, நம்மாழ்வாரின் திருமுடி மீது தன் திருவடி வைத்து சேவை சாதிப்பார். இதற்கு திருமுடி சேவை என்று பெயர்.

    காசிப முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் இத்தலத்தில் ஆதிநாத பெருமாளை வணங்கி விமோசனம் பெற்றார்.

    இங்கு மற்ற கோவில்களை போல இராமானுஜருக்கு காவி உடை சாத்தப்படாமல், வெள்ளை உடையே சாத்தப்படுகிறது.

    இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நம்மாழ்வாருக்கு மாறன், சடகோபன், பராங்குசன், பராங்குசநாயகி, வகுளாபரணன், குருகைப்பிரான், குருகூர்நம்பி, தொண்டர் பிரான், திருநாவீறு உடைய பிரான், உதயபாஸ்கரர், குழந்தைமுனி, ஞானத்தமிழ்க்கடல், மெய்ஞ்ஞானகவி, வரோக பண்டிதன் ஆகிய பெயர்களும் வழங்கப்படுகிறது.

    கம்பர் தான் எழுதிய ராமாயணத்தை அரங்கேற்றம் செய்யும் முன்னர், இங்கு வந்து சடகோபன் என்று அழைக்கப்படும் நம்மாழ்வாரை வணங்கி அவர் மீது சடகோப அந்தாதி என்னும் பாடலை பாடி வணங்கி உள்ளார்.

    தமிழ் தாத்தா என்று சிறப்பித்து கூறப்படும் உ. வே. சுவாமிநாத அய்யர் பத்துபாட்டு என்னும் ஓலைச்சுவடிகளை தேடி அலைந்த போது, இத்தலம் வந்து நம்மாழ்வாரை வேண்டிட, அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் அந்த ஓலைச்சுவடி கிடைக்கப் பெற்றதாம்.

    இத்தலத்தில் தான் ராமானுஜரின் பிறப்பிற்கு முன்பே அவருக்கு தனிக் கோவில் எழுப்பப்பட்டது.

    • இக்கோயில் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது.
    • பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் புன்னைநகரில் சீனிவாசப்பெருமாள் தன் தேவியருடன் திருவருட்பாலிக்கிறார். சிவ-விஷ்ணு ஒருமைப்பாடு காணும் இத்தலத்தில் பெருமாளுக்கும், சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் அமைந்துள்ளது. வடநாட்டு பாணி மற்றும் தென்னிந்திய அமைப்பில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு, முன்னே நிற்கும் பக்தர்கள் மீது பிரதிபலிப்பது பெருமாளிடமிருந்து நேரடியாகவே ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது. இத்தலம் அந்நாளில் புன்னை மரங்கள் சூழ, பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலம் புன்னையடி என வழங்கப்பட்டது.

    ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் தல விருட்சம் புன்னை மரம் என்பதும், அனைத்து பெருமாள் கோயில்களிலும் பிரம்மோற்சம் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தரிசனம் தருவார் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

    இக்கோயில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சந்நதிகளில் அருள்பாலிக்கின்றனர். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசி கரைப்பகுதியில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

    ராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிராகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என ஆகம வரிசைப்படி கோயில் அமைந்துள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி முதல் தரிசனம் தருகிறார். ஆன்மிக கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவ மண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.

    கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருள்கிறார். இங்கே பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளன. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார்.

    அடுத்தடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார், ராஜகோபாலர், வள்ளி-தெய்வானை சமேத தணிகை முருகன் ஆகியோரை தனித்தனியே தரிசிக்கலாம். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப் பெருமாளின் மூல ஸ்தானத்தின் வெளிப்பிராகாரத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயர் என தரிசனம் பெறலாம்.

    மகாமண்டபத்தில் பெருமாளை வணங்கியபடி கருடாழ்வார் நிற்கிறார். அடுத்துள்ள ஆதி நாராயணர் -சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாராயணர் நின்ற கோலத்தில் கொலுவிருக்கிறார். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் இருவரும் தனிச் சந்நதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

    கோயில் பிராகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் திகழ்கிறார்கள். மூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் திருமஞ்சனம் நடக்கிறது.

    இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும், சனி முதலான கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் இத்தல பெருமாளின் ஏகாந்த சேவையை தரிசிக்கலாம்.

    திருநெல்வேலி-திருச்செந்தூர் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ. தூரம் கடந்தால் புன்னை நகரை அடையலாம்.

    • இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும்.
    • மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும்.

    காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் தஞ்சை மாவட்டத்தில் திரும்பும் திசையெல்லாம் கோவில்கள் அமைந்து மக்களை காத்து வருவது அனைவரும் அறிந்ததே.

    காவிரி கரையோர கிராமங்களில் எண்ணற்ற சைவ கோவில்கள் உள்ளன. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மக்கள் தங்களின் மனச்சுமைகளை இறக்கி வைத்து ஆறுதல் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு வடக்கு பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் விஷ்ணம்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ளது திருக்கானூர் கரும்பீஸ்வரர் திருக்கோவில்.

    மணல் மூடிய ஆலயம்

    திருக்கானூர் என்ற மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.

    இக்கோவிலின் உள்ளே நுழைந்த உடன் வடபுறத்தில் தெற்கு நோக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் இறைவன் கரும்பீஸ்வரர். அம்மன் சவுந்தரநாயகி அம்பாள்.

    மூலஸ்தானத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனுக்கு கரும்பீஸ்வரர், செம்மேனிநாதர் தேஜோமயர், இஷுவனேஸ்வரர், செம்பேனியப்பர், முளைநாதர் ஆகிய பெயர்களும் உள்ளன. இக்கோவிலின் தீர்த்தம் கொள்ளிடம் மற்றும் வேத தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் வில்வ மரம்.

    கோவிலின் அருகில் உள்ள கொள்ளிடம் நதி பெருக்கெடுத்து ஓடியதால் இந்த கோவிலை மணல்மூடி மக்கள் கண்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்தநிலையில், மாடு மேய்க்கும் சிறுவர்கள் காலில் கோவில் கலசம் தென்பட்டதை தொடர்ந்து இந்த இடத்தை தோண்டி பார்க்க கோவில் முழுமையும் வெளியே கொண்டு வரப்பட்டது.

    தோஷம் நீக்கிய தலம்

    இக்கூற்று உண்மை என்பது போல் தற்போது கோவிலின் மதில் சுவரை சுற்றி மணல்மேடு காணப்படுகிறது. இக்கோவில் இருந்த பகுதிக்கு பனிமதி மங்கலம், கரிகாற்சோழர் சதுர்வேதி மங்கலம் என வேறு பெயர்கள் இருந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

    இக்கோவில் பரசுராமனின் தோஷம் நீக்கிய தலம் ஆகும். அம்மன் சிவ தியானம் செய்ய பூவுலகில் இத்தலத்தை தேர்வு செய்து சிவதியானத்தில் ஆழ்ந்தார். சிவதியானத்தில் இருந்த அம்பாளுக்கு இறைவன் ஒளி வடிவாக காட்சியளித்தார். இதனால் இத்தல இறைவனுக்கு தேஜோமயர், செம்மேனியப்பர், என்றும் அம்பாளுக்கு சிவயோக நாயகி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

    சூரிய ஒளிக்கதிர்கள்

    விஷ்ணம்பேட்டை, திருக்கானூர், மணல்மேடு என அழைக்கப்படும் இக்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. தல மகிமையாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1, 2, 3-ந் தேதிகளில் சூரிய உதயத்தில், சூரியனின் ஒளி மூலஸ்தான இறைவன் மீது படும் வகையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த 3 நாட்களிலும் காலை உதய நேரத்தில் சூரிய கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரியபகவான் சிவனை பூஜிக்கும் விழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாத மூல நட்சத்திரத்தில் சந்தனக்காப்பு, தை மாத பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் சிறப்பாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி நாளில் 1008 திருவிளக்கு பூஜை நடக்கும்.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர் வருகை தந்து வழிபட்டனர் என்பது அவர்கள் எழுதிய பாடல்கள் வாயிலாக தெரிய வருகிறது.

    உடல் நலம் பெறும்

    பண்டைய சோழ மன்னன் கரிகாலன் ஊர் இந்த கோவில் அமைந்துள்ள ஊர் என்றும், யானை மாலையிட்டு கரிகாற் சோழனை அழைத்துச் சென்றது இந்த ஊரில் இருந்துதான் என்றும் ஒரு செவிவழி செய்தி இந்த ஊரை பற்றி தெரிவிக்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு முதலாம் ராஜேந்திர சோழன் நிலங்களை வழங்கி உள்ளதாகவும் கல்வெட்டு செய்தி கூறுகிறது.

    இத்தலத்தில் உள்ள சிவனையும், அம்பாளையும் வணங்கினால் உடல்நலக்குறைவு நீங்கி திருமணத்தடை அகலும் என்றும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் வளமான வாழ்க்கையை கரும்பீஸ்வரர் அருள்வார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் தல விருட்சம் வில்வ மரத்தின் இலைகளால் செம்மேனி நாதருக்கு அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி சிவகவசம் பாராயணம் செய்தால் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கி நல்வாழ்வு பெறுவார்கள் என்றும், சவுந்தரநாயகி அம்பாளுக்கு புத்தாடை அணிவித்து, செவ்வரளி மாலை சாற்றி தீபமிட்டு அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கி, திருமணம் கைகூடும் என்றும், செம்மேனியப்பருக்கும், அம்பாளுக்கும் எருக்கமாலை அணிவித்து பால், தயிர், நெய், தேன், பன்னீர் அபிஷேகம் செய்ய சந்தானபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    சப்தமி நாளில் இக்கோவிலில் மூலவரையும், அம்பாளையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீ்ங்கும் என இன்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

    குடமுழுக்கு

    இக்கோவிலின் நடை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும். கடந்த 2019-ம் ஆண்டு திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முற்றிலும் கிராம சூழலில் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இ்ந்த சிவாலயம் காவிரி டெல்டாவில் அமைந்துள்ள முக்கிய சிவாலயமாக திகழ்கிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருக்கானூர் கரும்பீஸ்வரர் கோவிலுக்கு தென் மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் முதலில் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் திருக்காட்டுப்பள்ளி காவிரி பாலத்தை கடந்து சென்றால் கோவிலை அடையலாம்.

    • பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது.
    • கருவறையின் மேல் விமானம் கிடையாது.

    'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர் நமது முன்னோர்கள். அதனால்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ, குறுநில மன்னர்கள் திரும்பிய பக்கம் அனைத்திலும் கோவில்களை அமைத்தனர்.

    குமரி மாவட்டம் தோவாளை தாலுகா நாகர்கோவிலில் இருந்து வடக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் பூதப்பாண்டியில் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தாடகை மலை அடிவாரத்தில் பழையாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

    பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது. அதாவது கி.பி.25 முதல் கி.பி.50-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் பசுபொன் பாண்டியன். இவர் தனது தந்தை பூதப்பாண்டியன் பெயரால் இந்த ஊரை நிறுவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் சுமார் 13 கல்வெட்டுகளை தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை பதிவு செய்துள்ளது. இந்த கோவிலில் நந்தி மண்டப தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டில் 'கி.பி. 1503- கொல்லம் ஆண்டு 679-ல்' என காணப்படுகிறது. இதன் மூலம் இந்த கோவில் கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது.

    இந்த கோவிலில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சி தந்ததால் இந்த கோவில் கருவறை பாறையை குடைந்து நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் மேல் விமானம் கிடையாது. மூலவரை சுற்றி வலம் வந்து வழிபட சுற்று பிரகாரமும் இல்லை. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலின் வடக்கே ஒரு அழகிய தெப்பக்குளமும் அதன் நடுவே அழகிய மண்டபமும் காட்சி தருகிறது.

    கருவறை மூலவராக பூதலிங்க சாமி காட்சி அளிக்கிறார். மேலும் பூதநாதர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான், சாஸ்தா, சண்டிகேசுவரர், இறைவன் காட்சி தந்ததாக சொல்லப்படும் பக்தர் ஆண்டி செட்டியார் ஆகியோர் இந்த கோவிலில் காட்சி தருகின்றனர்.

    மூலவர் பூதலிங்க சாமியின் வலதுபக்கம் தெற்கு பகுதியில் சிவகாமி அம்பாளுக்கு விமானத்துடன் கூடிய தனி சன்னதியும் சுற்று பிரகாரமும் உள்ளன.

    சாலியர் கண்ட திருமேனி

    பல நூற்றாண்டுக்கு முன்பு நெசவு தொழிலை குலத்தொழிலாக கொண்ட சாலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இப்படி வாழ்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களில் ஒருவர் வளர்த்து வந்த பசு பாறைகள் அடர்ந்த புல்வெளியில் ேமய்ந்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். அந்த பசு பல நாட்களாக பால் தராமல் இருந்தது. இதனால் ஒரு நாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார்.

    அப்போது செடி அடர்ந்த புதர் ஒன்றின் மீது தனது பாலை சொரிந்து கொண்டு நிற்பதை பார்த்தார். அந்த புதரை வெட்டி மாற்றிய போது சுயம்புலிங்கம் உருவில் சிலை ஒன்று இருப்பதை கண்டார். இதுகுறித்து அவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார். ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்து அங்கு கோவில் ஒன்று கட்டி வழிபட தொடங்கினர். சாலியர் முதல் முதலில் கண்டதால் இறைவன் சாலியன் கண்ட திருமேனி என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    கி.பி.1691-ல் (கொல்லம் 867) செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வடக்குதெரு மூலையில் காணப்படுகிறது. இதில் சேரமன்னன் ரவிவர்மா கோவில் அலுவலகத்தில் இருக்கும் போது சாலிய மக்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கு சில சலுகைகள் அளித்ததோடு இப்போது உள்ள வடசேரியில் அவர்கள் குடியிருக்க அனுமதி அளித்ததாக தெரிகிறது.

    எனவே, சாலிய சமுதாய மக்கள் இங்கு வசித்து வந்துள்ளனர். இன்றும் அவர்கள் பயன்படுத்திய நூல் நனைக்கும் கல்தொட்டி வரலாற்று சான்றாக இந்த பகுதியில் காணப்படுகிறது.

    விழாக்கள்

    பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டில் சேர ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். சேரர்கள் கைக்கு வந்ததும் சேர மன்னர்கள் ஆலய வழிபாட்டிற்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்ததோடு பல நிலங்களையும் கொடுத்துள்ளனர்.

    இந்த கோவிலில் தைமாதமும், சித்திரை மாதமும் 10 நாள் விழா ெகாண்டாடப்படுகிறது. தை மாதம் பெருந்திருவிழாவாக கொண்டாட படுவதுடன் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவமும், பிரதோச நாளில் தேவருக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. நினைத்ததை முடிக்கும் விநாயகரை ஆட்கொண்ட அரச மரத்தடியை இங்கு காணலாம்.

    இங்கு மாதம்தோறும் அமாவாசை அன்று மூலஸ்தான திருமூர்த்தியே சந்திர சேகரராக, உற்சவ மூர்த்தியாக தேரில் எழுந்தருளி கோவிலில் அமைந்துள்ள குடை வரை கொண்ட திருமலையை சுற்றி வலம் வருவார். அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷம் முழங்க பின்னால் வருவார்கள்.

    -கு.மகாதேவன்,

    நிறுவன தலைவர், நேசநாயனார் அறக்கட்டளை, வடசேரி.

    • தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார்.
    • தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்.

    இறைவன்: கோமுக்தீஸ்வரர், மாசிலாமணீஸ்வரர்

    இறைவி: ஒப்பிலாமுலையம்மை  

    தீர்த்தம்: கோமுக்தி தீர்த்தம்  

    கோவிலின் சிறப்புகள்:

    தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 36-வது ஆலயம். திருக்கயிலாயத்தில் இறைவி இறைவனோடு சொக்கட்டான் ஆடிக்களித்தமையால் பசு வடிவம் எய்தினார்.. அவர் அப்பசு வடிவத்தோடு இங்கு வந்து வழிபட்டு அவ்வடிவம் நீங்கப்பெற்றனர். இறைவரின் திருப்பெயர் மாசிலாமணியீஸ்வரர். இவரே கர்ப்ப கிரகத்தில் எழுந்தருளியிருப்பவர். அணைத்தெழுந்த நாயகர்; இவர் உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக இருப்பவர்.

    திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருளுபவர் இவரே. இரண்டு பிள்ளையார்கள் துணை வந்த பிள்ளையார், அழகிய பிள்ளையார். இறைவியின் திருப்பெயர் ஒப்பிலாமுலையம்மை. இத்திருப்பெயர் சுந்தர மூர்த்திநாயனாரால் `ஒப்பிலா முலையாள் ஒரு பாகா" என்று இவ்வூர்ப் பதிகத்தில் எடுத்து ஆளப்பெற்றுள்ளது. தீர்த்தங்கள் கோமுத்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்யதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோவிலுக்கு எதிரிலும், கொங்கணேசுவரர் கோவிலின் பக்கத்திலும், திருக்காவிரியிலும் இருக்கின்றன. 

    திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரம் இயற்றிய திருத்தலமிது. ஒரு ஆண்டுக்கு ஒரு பதிகம் வீதம் மூவாயிரம் பதிகம் பாடிய இவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சிவபக்தரான திருமாளிகைத் தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில் மீது இருந்த நந்திகளனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில் மீது நந்திகள் கிடையாது. சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது. திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம். முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.

    தமிழகத்திலேயே உயரமான நந்தியெம்பெருமான் இத்திருத்தலத்திலேயே அமைந்துள்ளார். இவரது உயரம் 14 அடி 9 அங்குலம். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் ஒரே கல் நந்தியின் உயரம் 12 அடி).தர்மதேவதையே இந்த நந்தியெம்பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம். இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. 

    மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 15.கி.மீ. தொலைவில் இக்கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்திலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. 

    கோவிலின் முகவரி:

    அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோவில்,

    திருவாடுதுறை,

    குத்தாலம் வழி,

    மயிலாடுதுறை மாவட்டம் 609803.

    • இங்கு பெருமாள் 12 அடி நீளத்தில் சயனக்கோலம் அருள்பாலிக்கிறார்.
    • இந்த கோவில் புதன் அம்சமாக விளங்குகிறது.

    நவகிரகங்கள் வரிசையில் நான்காவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் "திருப்புளிங்குடி". இது புதன் அம்சமாக விளங்குகிறது.

    முன் ஒருசமயம் மகாவிஷ்ணு, தன் இருதேவியர்களுள் ஒருவரான லட்சுமியுடன் பூலோகத்தில் கருட வாகனத்தில் உலா வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மணல்மேடான இடங்களை பார்த்து அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். இதனை கண்ட நாரதர் உடனே பூமாதேவியிடம் சென்று இந்த சம்பவத்தினை கூறி கலகம் மூட்டினார்.

    இதனை கேட்டு வெகுண்ட பூமாதேவி, வைகுண்டம் விடுத்து பாதாள உலகத்திற்குள் சென்று மறைந்து விட்டாள். பூமாதேவியின் கோபத்தால் உலகனைத்தும் நீரின்றி வறண்டது. குடிக்கக்கூட தண்ணீரின்றி உயிர்கள் தத்தளித்தன.

    இந்நிலை கண்டு அஞ்சிய முப்பத்து முக்கோடி தேவர்களும் திருமாலை தேடி வந்து முறையிட்டனர். உடனே திருமால் திருமாலும் பூமாதேவியின் கோபத்தை அறிந்து அவளை சமாதானம் செய்ய பாதாள உலகம் நோக்கி சென்றார்.

    அங்கு சென்று பூமாதேவியை கண்டு, சமாதானமாக பேசி என்னை பொறுத்த வரை திருமகளும், நீயும் எனக்கு சமமானவர்களே என எடுத்துரைத்தார். பொறுமையின் சிகரமான பூமாதேவியும் அந்த விளக்கத்தை கேட்டு மகிழ்ந்து தன் தவறை உணர்ந்தாள். மீண்டும் வைகுண்டம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பூவுலைகையும் வளம் கொழிக்க செய்தாள். இவ்வாறு பூமிதேவியின் சினத்தை தணித்ததால் இவர் பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் திருநாமம் பெற்றார்.

    இந்திரனின் பிரம்மகத்தி தோஷம் நீக்கி, யக்ஞசர்மாவுக்கு சாபநிவர்த்தி அளித்த வரலாறு:

    முற்காலத்தில் இமயமலையில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது இந்திரன், மான் உருவில் இருந்த முனிவரை தனது ஆயுதத்தால் கொன்று பிரம்மகத்தி தோஷத்திற்கு ஆளானான். வியாழ பகவானின் ஆலோசனைப்படி, இந்திரன் இத்தலத்திற்கு வந்து பூமிபாலகனை வேண்டி இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி, அதில் நீராடி இத்தல பெருமாளை வணங்கினார். அவர் உருவாக்கிய தீர்த்தமே இந்திர தீர்த்தம் என பெயர் பெற்றது.

    தனது தோஷம் நீங்கிய மகிழ்ச்சியில் இந்திரன் இந்த புண்ணிய தீர்த்தக் கரையில் யாகம் ஒன்றினை நடத்த நினைத்து அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான். அந்த நேரத்தில், இந்திரன் நடத்தும் யாகத்தினை தடுக்கும் நோக்குடன் அரக்கன் ஒருவன் அங்கு வந்து இந்திரனுக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தான். அந்த அரக்கனால் இன்னலுக்கு ஆளான இந்திரன் பூமிபாலகரை மனதார நினைத்து மனமுருக வேண்டி நின்றான். இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க பூமிபாலகரும் அந்த அரக்கனை தன் கதையினால் தாக்கினார்.

    அப்போது அந்த அரக்கன் தனது சுய உருவத்தைப் அடைந்தான். அப்போது பூமிபாலகர், அவனை நோக்கி, நீ யார்? என்று கேட்க " நான் முன்ஜென்மத்தில் யக்ஞ சர்மா என்ற பெயரில் ஒரு பிராமணனாகப் பிறந்தேன். நான் எனது இல்லத்தில், வசிஷ்ட புத்திரர்களால் செய்யப்பட்ட யாகத்திற்கு உரிய மரியாதை செய்யாமல் அவர்களை அவமதித்ததன் காரணமாக, அவர்கள் என்னை கொடிய அரக்கனாக ஆகும்படி சாபமிட்டனர். நான் என் தவறை உணர்ந்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சாபவிமோசனம் கூறும்படி கேட்டேன்.

    அதற்கு அவர்கள் பூலோகத்தில் பொருநை ஆற்றின் நதிக்கரையோரமாக இந்திரன் தனது பாவத்தைப் போக்கிக் கொள்ள யாகம் மேற்கொள்வான். அந்த சமயம் நீ போய் யாகத்தை நடத்த விடாமல் தடுக்கும் நேரத்தில் திருமால் உன்னை கதையால் தாக்குவார். அன்றைய நாளில் இருந்து உன் பழைய உருவம் பெற்று நீ வாழ்வாய்" எனக் கூறினார். அரக்கனும் தன் நிஜ உருப்பெற்று மகிழ்ச்சியுடன் சென்றபின் இந்திரன் தான் செய்ய நினைத்த வேள்வியினை சிறப்புடன் செய்து முடித்து பூமிபாலகப்பெருமாளின் அருளை பெற்றதாகும் வரலாறு கூறுகிறது.

    பொதுவாக பெருமாளின் நாபியிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கும் பிரம்மா, இங்கு பெருமாளின் தொப்புளிலிருந்து தோன்றும் தாமரை மலரில் காட்சியளிக்கிறார்.

    இங்குள்ள நிலமகள் நாச்சியார் மற்றும் பூமகள் நாச்சியார் இருவரும் சற்றே பெரிய திருமேனி. இவர்கள் பெருமாளின் பாதங்களுக்கு அருகே வீற்றிருக்கிறார்கள் என்பதால் இங்கு தாயார்களுக்கு தனி சன்னதி இல்லை.

    இங்கு பெருமாள் சுமார் 12, அடி நீளத்தில் சயனக்கோலம் சாதித்தருள்வதால் இவரின் திருமுகம் முதல் மூட்டு வரை உள்ள பகுதியை மட்டுமே கருவறையில் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் இவரின் பாதங்களை நன்றாக தரிசிக்க முடியும். இங்கு வருணன், நிருதி, யக்ஞசர்மா, இந்திரன் ஆகியோர் பெருமாளை வணங்கி அருள்பெற்றுள்ளார்கள்.

    முன்னர் ஒருமுறை ராமானுஜர் இத்தலம் வந்து இங்குள்ள பெருமாளை தரிசித்தபின், ஆழ்வார்திருநகரி செல்ல திருவுள்ளம் கொண்டார். ஆனால் அவருக்கு அங்கிருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் தொலைவு தெரியாத காரணத்தால், அங்கு நெல் மணிகளை காய வைத்துக்கொண்டிருந்த அர்ச்சகரின் பெண்ணிடம் அதுபற்றி கேட்க, அதற்கு அந்தப்பெண் "கூப்பிடும் தூரத்தில் தான் ஆழ்வார்திருநகரி உள்ளது"என்று சாதுர்யமாக பதிலளிக்க, ராமனுஜரின் கண்களில் நீர் பெருக அவர் அகநெகிழ்ந்தார். பின் "யாமும் கூப்பிடும் தொலைவை எய்திவிட்டோம்" என்று ராமானுஜர் பதில் அளித்தார். அந்த அளவிற்கு இத்தலத்தில் வளர்ந்தவர்களுக்கு ஞானம் வந்தவிடும் என்பது சிறப்பம்சம் ஆகும்.

    ×