search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அமாவாசைக்கு கிரிவலம் நடக்கும் பூதப்பாண்டி சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி திருக்கோவில்
    X

    அமாவாசைக்கு கிரிவலம் நடக்கும் பூதப்பாண்டி சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி திருக்கோவில்

    • பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது.
    • கருவறையின் மேல் விமானம் கிடையாது.

    'ஆலயம் தொழுவது சாலவும் நன்று', 'கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்றனர் நமது முன்னோர்கள். அதனால்தான் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவ, குறுநில மன்னர்கள் திரும்பிய பக்கம் அனைத்திலும் கோவில்களை அமைத்தனர்.

    குமரி மாவட்டம் தோவாளை தாலுகா நாகர்கோவிலில் இருந்து வடக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் பூதப்பாண்டியில் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்கதுமான சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தாடகை மலை அடிவாரத்தில் பழையாற்றின் கரையில் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.

    பூதப்பாண்டி மிகவும் பழமையான வரலாற்று பின்னணியை கொண்டது. அதாவது கி.பி.25 முதல் கி.பி.50-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் பசுபொன் பாண்டியன். இவர் தனது தந்தை பூதப்பாண்டியன் பெயரால் இந்த ஊரை நிறுவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த கோவிலில் சுமார் 13 கல்வெட்டுகளை தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறை பதிவு செய்துள்ளது. இந்த கோவிலில் நந்தி மண்டப தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டில் 'கி.பி. 1503- கொல்லம் ஆண்டு 679-ல்' என காணப்படுகிறது. இதன் மூலம் இந்த கோவில் கி.பி.15-ம் நூற்றாண்டுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்க வேண்டும் என தெரிகிறது.

    இந்த கோவிலில் மூலவர் சுயம்புலிங்கமாக காட்சி தந்ததால் இந்த கோவில் கருவறை பாறையை குடைந்து நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. கருவறையின் மேல் விமானம் கிடையாது. மூலவரை சுற்றி வலம் வந்து வழிபட சுற்று பிரகாரமும் இல்லை. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலின் வடக்கே ஒரு அழகிய தெப்பக்குளமும் அதன் நடுவே அழகிய மண்டபமும் காட்சி தருகிறது.

    கருவறை மூலவராக பூதலிங்க சாமி காட்சி அளிக்கிறார். மேலும் பூதநாதர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான், சாஸ்தா, சண்டிகேசுவரர், இறைவன் காட்சி தந்ததாக சொல்லப்படும் பக்தர் ஆண்டி செட்டியார் ஆகியோர் இந்த கோவிலில் காட்சி தருகின்றனர்.

    மூலவர் பூதலிங்க சாமியின் வலதுபக்கம் தெற்கு பகுதியில் சிவகாமி அம்பாளுக்கு விமானத்துடன் கூடிய தனி சன்னதியும் சுற்று பிரகாரமும் உள்ளன.

    சாலியர் கண்ட திருமேனி

    பல நூற்றாண்டுக்கு முன்பு நெசவு தொழிலை குலத்தொழிலாக கொண்ட சாலியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். இப்படி வாழ்ந்து வந்த காலகட்டத்தில் அவர்களில் ஒருவர் வளர்த்து வந்த பசு பாறைகள் அடர்ந்த புல்வெளியில் ேமய்ந்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். அந்த பசு பல நாட்களாக பால் தராமல் இருந்தது. இதனால் ஒரு நாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார்.

    அப்போது செடி அடர்ந்த புதர் ஒன்றின் மீது தனது பாலை சொரிந்து கொண்டு நிற்பதை பார்த்தார். அந்த புதரை வெட்டி மாற்றிய போது சுயம்புலிங்கம் உருவில் சிலை ஒன்று இருப்பதை கண்டார். இதுகுறித்து அவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார். ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்து அங்கு கோவில் ஒன்று கட்டி வழிபட தொடங்கினர். சாலியர் முதல் முதலில் கண்டதால் இறைவன் சாலியன் கண்ட திருமேனி என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.

    கி.பி.1691-ல் (கொல்லம் 867) செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று வடக்குதெரு மூலையில் காணப்படுகிறது. இதில் சேரமன்னன் ரவிவர்மா கோவில் அலுவலகத்தில் இருக்கும் போது சாலிய மக்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கு சில சலுகைகள் அளித்ததோடு இப்போது உள்ள வடசேரியில் அவர்கள் குடியிருக்க அனுமதி அளித்ததாக தெரிகிறது.

    எனவே, சாலிய சமுதாய மக்கள் இங்கு வசித்து வந்துள்ளனர். இன்றும் அவர்கள் பயன்படுத்திய நூல் நனைக்கும் கல்தொட்டி வரலாற்று சான்றாக இந்த பகுதியில் காணப்படுகிறது.

    விழாக்கள்

    பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் கி.பி. 15-ம் நூற்றாண்டில் சேர ஆட்சிக்கு உட்பட்டிருக்க வேண்டும். சேரர்கள் கைக்கு வந்ததும் சேர மன்னர்கள் ஆலய வழிபாட்டிற்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்ததோடு பல நிலங்களையும் கொடுத்துள்ளனர்.

    இந்த கோவிலில் தைமாதமும், சித்திரை மாதமும் 10 நாள் விழா ெகாண்டாடப்படுகிறது. தை மாதம் பெருந்திருவிழாவாக கொண்டாட படுவதுடன் 9-ம் நாள் தேரோட்டமும் 10-ம் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    ஐப்பசி மாதம் திருக்கல்யாண உற்சவமும், பிரதோச நாளில் தேவருக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. நினைத்ததை முடிக்கும் விநாயகரை ஆட்கொண்ட அரச மரத்தடியை இங்கு காணலாம்.

    இங்கு மாதம்தோறும் அமாவாசை அன்று மூலஸ்தான திருமூர்த்தியே சந்திர சேகரராக, உற்சவ மூர்த்தியாக தேரில் எழுந்தருளி கோவிலில் அமைந்துள்ள குடை வரை கொண்ட திருமலையை சுற்றி வலம் வருவார். அப்போது பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷம் முழங்க பின்னால் வருவார்கள்.

    -கு.மகாதேவன்,

    நிறுவன தலைவர், நேசநாயனார் அறக்கட்டளை, வடசேரி.

    Next Story
    ×