என் மலர்tooltip icon

    மற்றவை

    • 17 பெட்டிகள் தடம் புரண்டதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்று தகவல்.

    ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசாவில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரெயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா அறிவித்துள்ளார்.

    மேலும், விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரெயில் விபத்தை தடுக்கும் கவாச் பாதுகாப்பு அமைப்பு பாலசூர் வழிதடத்தில் இல்லை என்றும் ரெயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரெயில்கள் மோதிக்கொள்ளாமல் தடுப்பதே கவாச் திட்டம் ஆகும்.

    • ‘பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்’ என்று ‘கரகாட்டக்காரன்’ டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.
    • இளையராஜாவின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது.

    திரைப்படத்துறையில் 3 தலைமுறை சக இசையமைப்பாளர்களோடு இசைஞானி இசையமைத்து வருகிறார். கிட்டத்தட்ட 1000 படங்கள்.. 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளவருடைய இசை படைப்பூக்கத்தை வெளிப்படுத்த இவை போதுமானதாக இல்லை. அதனால்தான் இளையராஜா, சிம்பொனி, ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகம், ரமணர் பாடல்கள் என மனம் விரும்பும்படி எல்லாம் ஒரு குழந்தையைப் போல இசையை உருவாக்கிக்கொண்டே செல்கிறார்...

    "என்னோடு நண்பர்களாகப் பழகியவர்கள் எல்லாம் நண்பர்கள் இல்லை. எனக்கு ஆர்மோனியப் பெட்டி தான் நண்பன். இந்த ஆர்மோனியப் பெட்டியை கோவை மாநகரத்தை சேர்ந்த உக்கடத்தில் ரூ.60-க்கு எனது அண்ணன் வரதராஜன் வாங்கினார்.

    இதில் பயிற்சி பெற்றுத்தான் இசை அமைப்பாளராக ஆனேன். என்னிடம் இருக்கும் விலைமதிப்பற்ற பொருள் இந்த ஆர்மோனியப் பெட்டிதான்" என்கிறார் இளையராஜா.

    "இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்திலுள்ள 'மாங்குயிலே பூங்குயிலே' பாடலுக்கு மிகக்குறைந்த நேரத்தில் இசையமைத்துள்ளேன். அதிக நேரம் இசையமைக்க எடுத்துக் கொண்ட பாடல், உதயகீதம் படத்தின் 'பாடு நிலாவே' பாடல் என்று சொல்லி இருக்கிறார் இளையராஜா.

    'பாட்டுக்கு நான் பாடுபட்டேன், அந்தப் பாட்டுக்கள் பலவிதம் தான்' என்று 'கரகாட்டக்காரன்' டைட்டில் பாடலில் சொல்லிக்கொண்டவர் இசைஞானி.

    'அன்னக்கிளி உன்னத் தேடுதே' என்று குரலெடுத்து தமிழ்த்திரையில் 1976-இல் இளையராஜா நுழைந்தபிறகு, அவரது இசையை நாடத் தொடங்கியது தமிழ்த் திரை ரசிகர்களது மனம். 'மச்சானைப் பாத்தீங்களா' என்று எஸ்.ஜானகி வசீகரக் குரலில் இழைத்த கிராமிய மெட்டு, அவரை அதிகமாகக் கவனிக்க வைத்தது.

    வாத்தியார் படம், தலைவர் படம் என்ற நிலைமாறி இயக்குனர் பெயரால் படங்கள் பேசப்படத் தொடங்கிய அதே கால கட்டத்தில், இசையை வைத்துப் படத்தை வெற்றி பெற வைப்பதில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. இசைக்காகவே திரைப்படங்களைப் பார்ப்பதற்கு திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை வரவைத்தவர் இசைஞானி.

    வழக்கமான பாட்டையில் போகாமல், வித்தியாசமான தளத்தில் பரிசோதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருந்தது அவரது இசைத்தேடல். சிட்டுக்குருவி படத்தில், 'என் கண்மணி உன் காதலி' பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி சுசீலா இருவரது குரல்களில் அவர் செய்திருக்கும் ஜாலம், இடையே ஒலிக்கும் கண்டக்டர் குரல், விசில் ஒலி எல்லாமே ஒரு பேருந்து பயணத்தை கண்ணுக்குள் கொண்டு வந்து நிறுத்தும்.

    அவரின் இசை ஏற்படுத்தும் உணர்வு அலைகளில் எவராலும் சிக்காமல் இருக்க முடியாது. மண்ணின் மணம் கமழும் இசையை அவர்தான்- அவரேதான் கொடுத்தார். மண்வாசனை படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே' பாட்டுடைய இசையில் அவர் கொடுத்திருக்கும் ஒலிகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும். இந்தப் படம் வந்த காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் அரிசி குத்துவது, முறத்தில் புடைப்பது போன்றவை வீட்டில் அன்றாடம் நடக்கும் வேலைகளாக இருந்தன. அப்போது எழும் ஓசை, அப்படியே இந்தப் பாட்டில் இருக்கும். இளையராஜாவின் இசையில் வெளிப்படும் இந்த இயல்புநிலைதான் அவரின் தனித்தன்மை.

    'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வரும் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே..' பாடலின் முகப்பு இசை முடிந்து, பாடல் தொடங்கும் போதே, பரவசம் நம்மைத் தொற்றிக் கொள்ளும் சுகானுபவம் உண்டாகும்.

    தளபதி படத்தின் 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலினூடே ' குனித்த புருவமும்' என்று தேவார வரிகளைக் கொண்டு வந்து இணைக்கும் மாயம், ப்ரியா படத்தின் பாடல்கள் தமிழ்த்திரை இசையில் முதன்முறை ஸ்டீரியோ முறையில் பதிவு செய்யப்பட்டது, பின்னணி இசையில் கதையோட்டத்திற்கு ஏற்ப புதுமைகள் கொணர்ந்தது என இளையராஜாவின் சிறப்புக்கள் சொல்ல ஏராளமானவை.

    கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் திரைப்பாடலுக்கு (இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்) இசையமைத்த ராஜாவின் இசையில் தான், கவியரசு கண்ணதாசனின் கடைசி பாடலும் (கண்ணே கலைமானே – மூன்றாம் பிறை) பிறந்தது.

    1991-ஆம் ஆண்டு இளையராஜா இசையில் தளபதி படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமனியம் மற்றும் சுவர்ணலதா பாடிய 'ராக்கம்மா கையத் தட்டு' பாடல் 2003-இல் பிபிசி நடத்திய 'வேர்ல்ட் டாப் 10 பாப்புலர் மியூசிக்' சர்வேயில் 165 நாடுகளைச் சேர்ந்த அரை பில்லியன் மக்கள் வாக்களிக்க, 4-ஆம் இடம் பெற்றது.

    கவிதை வரிகளின் அழகு, சொற்கள் இசைக்கருவிகளின் ஒலியில் அடித்துக் கொண்டு செல்லப்படாது, தற்காத்து ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் இசையை நெய்துகொண்டே இருக்கும் விரல்கள் அவருடையவை.

    அவரிடம் எத்தனையோ சர்ச்சைகள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் கலந்திருந்தாலும் இளையராஜா என்ற மனிதனின் நெடிய பயணத்தில், மேலோங்கி நிற்பது ராஜாவின் இசை தான்! இசைதான்! இசையே தான்!

    -அம்ரா பாண்டியன்

    • சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.
    • பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது.

    அன்று இளையராஜாவின் ஸ்டுடியோவில் ஒரு ரெகார்டிங்.... பாடல் எல்லாம் தயார். கே.ஜே.ஜேசுதாஸ் பாடுவதாக இருந்தது. இளையராஜா முதல் எல்லா இசை கலைஞர்களும் வந்தாகி விட்டது. ஆனால் ஜேசுதாசை காணோம். சரி, அவர் வரும் வரையில் ஒரு ட்ரையல் பார்ப்போம் என முடிவு செய்து, இளையராஜா அந்த பாடலை பாடி ரெகார்டிங் செய்து பார்த்தார்.

    பாடல் நன்றாக வந்திருந்தது. நீண்ட நேரம் ஆகியும் ஜேசுதாஸ் வரவில்லை. பிறகு ஒரு போன் வந்தது.. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் தன்னால் வர இயலவில்லை என ஜேசுதாஸ் வருந்தினார்.

    இளையராஜா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாள் ரெகார்டிங்கை வைத்துகொள்ளலாம் என கூறினார்.

    அடுத்த நாள், ஜேசுதாஸ் ஸ்டுடியோவுக்கு வந்தார். முன்தினம் தான் பாடிய பாடலை அவரிடம் இளையராஜா கொடுத்து, "இது தான் நீங்கள் பாட வேண்டிய பாடல், இதை ஒரு முறை கேட்டுக்கொள்ளுங்கள்" என கூறி சென்றார்.

    பாடலை முழுவதும் கேட்ட ஜேசுதாஸ் கண்கள் குளமானது. நேராக இளையராஜாவிடம் சென்றார். இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறினார். அதிர்ச்சி அடைந்த இளையராஜாவிடம் ஜேசுதாஸ் கூறியது இது தான்...

    "இந்த அளவுக்கு என்னால் உணர்ச்சிபூர்வமாக இந்த பாடலை பாட முடியுமா என்று தெரியவில்லை. இந்த பாடல் மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டும் என்றால், அது உங்கள் குரலில் இருந்தால் மட்டுமே முடியும்" என்று கூறினார்.

    இளையராஜா எவ்வளவோ வற்புறுத்தியும் அந்த பாடலை பாட மறுத்து, இளையராஜாவின் குரலில் அந்த பாடலை வெளிவரவைத்தார் கே.ஜே.ஜேசுதாஸ்.

    அந்த பாடல்.., "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ".

    • வரலாறு சொல்லும்... அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் என்று.
    • நமது படிப்போ, பட்டமோ, பதவியோ, நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை...

    1979 ம் வருடம்..

    திருவனந்தபுரம் கடற்கரை ஓரத்தில் பெரிய மனிதர் தோரணையில் இருந்த ஒருவர் அமர்ந்து பகவத்கீதையை படித்து கொண்டிருந்தார்...

    அப்போது நாத்திக இளைஞன் ஒருவன் அருகில் வந்து அமர்ந்தான்...

    அந்த வயதானவரை பார்த்து இந்த விஞ்ஞான உலகில் முட்டாள்கள் தான் இந்த பழம் பஞ்சாங்கமான பகவத் கீதையை படிப்பார்கள் என கிண்டல் செய்தான்.

    இதை படித்த நேரத்தில் அறிவியலை கற்றிருந்தால் இன்னேரம் நீங்கள் உலகப்புகழ் அடைந்திருக்கலாம் என்றான்...

    அந்த வயதானவரோ, தம்பி நீ என்ன படித்திருக்கிறாய் ? என்றார்...

    இளைஞன், நான் கொல்கத்தாவில் படித்து அறிவியல் பட்டதாரி ஆனேன். தற்போது பாபா அணு ஆராய்ச்சி கழகத்தில் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளேன் என்றான்.

    நீங்களும் இப்படி வீணா கீதையை படித்து பொழுதை கழிப்பது விடுத்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடலாமே என்றான்.

    பதில் பேசாமல் சிரித்து கொண்டே அந்த முதியவர் எழுந்ததும் எங்கிருந்தோ வேகமாக நாலு பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை சுற்றி நின்றனர். விலையுயர்ந்த கார் ஒன்று மெல்ல உருண்டு வந்து அவர் பக்கத்தில் நின்றது...

    அதிர்ந்து போன இளைஞன் ஐயா நீங்கள் யார் என்றான்.

    அதற்கு அவரோ சிரித்து கொண்டே நான் விக்ரம் சாராபாய். பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் என்றார்.

    அந்த நேரத்தில்13 பாபா அணுமின் நிலையங்கள் இயங்கி வந்தன. அத்தனைக்கும் தலைவர் இவரே.

    இப்பொழுது அதிர்ந்து போன இளைஞன் தடாலென சாராபாய் கால்களில் விழுந்தான்.

    சாராபாய் சிரித்து கொண்டே கூறினார்...

    தம்பி. ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளி இருக்கிறான். அது மகாபாரத காலமாக இருந்தாலும் சரி.. இந்த விஞ்ஞான யுகமாக இருந்தாலும் சரி. கடவுளை மறக்காதே. இன்று நாத்திகர்கள் அறிவியல் யுகமென ஆட்டம் போடலாம்.

    ஆனால் வரலாறு சொல்லும். அறிவியலை உருவாக்கியது கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் என்று. இறைவன் என்பது ஒரு முடிவில்லா உண்மை.

    நமது படிப்போ, பட்டமோ, பதவியோ, நம் தகுதியை நிர்ணயிப்பதில்லை...

    -பரதன் வெங்கட்

    • சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
    • சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும்.

    திருமணம் போன்ற அனைத்து சுபகாரியங்களிலும் வாழை இலையில் விருந்து பரிமாறுகிறார்களே, அதற்கு ஏன் என்று என்றாவது விருந்து சாப்பிடும் போது சிந்தித்திருக்கிறீர்களா ?

    அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முதல் காரணம் வாழை இலை விருந்துக்கு சமைத்த உணவில் ஏதாவது நஞ்சு இருந்தால் அதை வாழை இலை நீக்கிவிடும்.

    நம்பமுடியவில்லையா.. இன்றும் கிராமங்களில் பாம்பு கடித்தால் முதலுதவியாக வாழையின் மட்டையில் இருந்து சாறு பிழிந்துதான் தருவார்கள். அதன் அடிக் கிழங்கில் இருந்து சுரக்கும் நீரைத்தருவார்கள் .

    அதற்காகத்தான் பெருவாரியாக மக்கள் கூடும் கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமணம் இன்னும் சொல்லப்போனால் சில பகுதியில் இறப்பு வீடுகளிலும் கூட முதலுதவி இருக்கவேண்டும் என்று தயாராக வாழையை மங்களகரம் என்று கூறி கட்டிவைப்பார்கள் .

    திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தார்கள் தொல் தமிழர்கள் .

    அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் முதலுதவிக்கு அவ்வாறு செய்து வைத்தார்கள். எத்தகைய அமங்கலமும் நடக்காமல் இருந்தால் அது மங்கலம் தானே ! இவ்வாறு தொல் தமிழ் மக்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவே செய்திருக்கிறார்கள் .

    வாழை இலையில் உண்பது நஞ்சு நீக்க மட்டும் காரணம் அல்ல. வாழை இலையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் உடலின் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன.

    சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

    சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள பாலிபீனால் சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.

    வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக்கொண்டே இருக்கும்.

    வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது. அதனால் தான் சமீப காலம் வரை பூக்கடைகளில் கட்டிய பூ வாங்கினால் அதை வாழை இலையில் தான் கட்டித் தருவார்கள் .

    -அண்ணாமலை சுகுமாரன்

    • துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.
    • உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது.

    லிப்ஸ்டிக், நகப்பாலீஷ், முகத்திற்குப் பூசப்படும் அழகு சாதன பொருட்கள், மருந்துகள், மாத்திரைகள், டானிக்குகள், மேல் பூச்சு மருந்துகள்... இப்படி அனைத்தையும், அனைத்திலும் சிவப்பு நிறத்தை பார்க்கும் நாம், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ளவதில்லை.

    மேற்கூறிய அனைத்துப் பொருட்களிலும் சிவப்பு நிறத்திற்காகக் கலக்கப்படும் நிறமி ஒரு வகையான பூச்சிகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

    கோச்சினீல் பக் என்னும் ஒரு வகையான ஒட்டுண்ணி பூச்சியில்தான் இந்த சிவப்பு நிறமி இருக்கிறது. காக்ட்ஸ் வகை (கள்ளி) செடிகளில் வெள்ளை நிற கூட்டுடன் வாழும் இப்பூச்சிகளை கசக்கினால், கைகளில் சிவப்பு நிறம் கிடைக்கும். உலர வைத்த இப்பூச்சிகளை அலுமினியம் அல்லது கால்சியம் உப்புடன் சேர்த்துப் பின் பக்குவப்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு நிற மைக்கு "கார்மைன்" அல்லது "காக்கினியல் மை" என்று பெயர் வைத்துள்ளார்கள்.

    துணிகள், காகிதங்கள் போன்றவற்றில் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் அனைத்துப் பொருட்களிலும் கலக்கப்பட்டுவிட்டது.

    உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருட்களானாலும் அதனுடைய மேல் அட்டையில் (லேபிள்) E 120, Natural Red 4, Carmine, Cochineal, Carminic acid என்று ஏதாவது ஒன்றை கண்டிப்பாகக் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

    ஒருவேளை இந்த சிவப்பு நிறமே செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு இருந்தால் E 124 என்று குறிப்பிடவேண்டும்.


    உணவு மற்றும் மருந்து நிர்வாகக் கழகமும் குறிப்பிட்ட அளவில்தான் இந்த நிறத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வரையறை கொடுத்துள்ளது. ஆனால், கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகளைக் கவரவேண்டும் என்பதற்காகவே ஜெல்லி மிட்டாய்கள், கேண்டீஸ், சாக்லேட், போன்றவை அதிக அளவில் சிவப்பு நிறத்திலேயே தயாரிக்கப்படுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட மாமிசம், குளிர்பானங்கள், பழ ரசங்கள், ஆற்றல் தரும் பானங்கள், உணவுப் பொடிகள், இனிப்பு தயிர், பால் பொருட்கள், ஐஸ்கிரீம், சூயிங்கம், சாக்லேட், கற்கண்டு வகை இனிப்புகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட பழங்கள், உலர் சூப் பொடி, கெச்சப், மதுபானங்கள்...... என்று இவை அனைத்திலும் இந்த நிறம் இருக்கும்.

    ஒருவேளை.... அழகு சாதன பொருட்கள் உபயோகிக்கும்போது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் அது இந்த பூச்சியினாலேயே இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    -வண்டார் குழலி

    • பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள்.
    • பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம்.

    வாஸ்துபடி பணம் எப்போதும் ஒருவரின் கையில் தவழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்றால் வீட்டின் வடக்குச்சுவர் ஜன்னலுடன் இருக்க வேண்டும். ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், ஜன்னல்கள் திறந்திருப்பது நல்லது.

    வீட்டில் பணம் சேருவதற்கு வடக்கு திசையும் ஜன்னலும் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தென்மேற்கு திசை முக்கியம்.

    இங்குதான் நாம் பணத்தை வைக்க வேண்டும். வடமேற்கு மூலையில் பணத்தை வைக்கக் கூடாது.

    பீரோ வடக்கு பார்த்து இருக்க வேண்டும். பீரோவைத் திறக்கும்போது நம் முதுகு வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பணத்தை எப்போதும் தேக்கு மரப்பெட்டியில்தான் வைத்து எடுக்க வேண்டும். எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் 'தேக்கு மரம்' என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத் தன்மை நம்மிடம் பணத்தைத் தங்கிடச் செய்யும்.

    பணம் எப்போது வந்தாலும் அதை எந்தக்காரணத்தைக் கொண்டும் பூஜையறையில் வைக்காதீர்கள். பணம் பல பேர்களின் கைகளுக்குச் சென்று மாறி வந்திருக்கலாம். பூஜையறையை நாம் தெய்வத் தன்மையுடன் வைத்திருப்பதால் அதைப் பூஜையறையில் வைக்க வேண்டாம்.

    பணம் நம் கைக்கு வருகிறதென்றால் அது நம் வீட்டுக்குள் வந்து பறந்துபோகும் சிட்டுக்குருவியைப் போன்றது. அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடுங்கள். நல்ல விஷயங்களுக்குத் தாராளமாகச் செலவு செய்யுங்கள். உங்களை எப்போதும் செல்வந்தராகவே எண்ணிச் செலவு செய்யுங்கள். அப்போதுதான் பணம் உங்களைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்.

    உங்களுக்கு வருகிற பணத்தை சிவப்பு நிறத் துணியில் சுற்றி மரப்பெட்டியில் வைக்கும்போது, அந்தப் பணம் பல மடங்காகப் பெருகும்.

    பணத்தை வைக்கும்போது சில்லறையாக வைக்காதீர்கள். நிறை நிறையோடு சேரும் குறை குறையோடு சேரும் என்பதால், அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டாக வையுங்கள்.

    பணப்பெட்டியில் எப்போதும் ஒரு நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். (பீரோவில் பச்சை கற்பூரம் போட்டு வைக்கலாம்) பணத்துக்கு நாம் அடிமை ஆகாமலும் நமக்குப் பணத்தை அடிமையாக்காமலும் ஒரு நண்பனைப்போல் பணத்தை பாவித்தோமென்றால், பணம் எப்போதும் நம்மைவிட்டுப் போகாமல் தங்கியிருக்கும்.

    -ஸ்ரீராம் கோவிந்த்

    • நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க.
    • நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது.

    இந்தியாவை பொறுத்தவரைக்கும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் இதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ரொம்பவே அவதிப்பட்டு வர்றாங்க. அப்படிப்பட்டவங்க தினமும் காலையில வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே போதும், நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.

    அதுசரி, நெல்லிக்காய்னு சொன்னதுமே பெரிய நெல்லிக்காயா? சின்ன நெல்லிக்காயான்னுதான் நிறையபேர் கேள்வி கேப்பாங்க. பொதுவா அரிநெல்லின்னு சொல்லக்கூடிய சின்ன நெல்லிக்காயை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துறது இல்லை. ஆனாலும் ஒரு கேள்வி கேட்டு வைப்பாங்க... நம்ம மக்கள். நெல்லிக்காய்... நாட்டு நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் அளவு பெரிதாக இருக்குமே அந்த நெல்லிக்காய்தான் நான் சொல்லக்கூடியது.

    வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியலைனா நெல்லிக்காயோட இஞ்சி சேர்த்து அரைச்சி அதோட எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை, தேவைப்பட்டா உப்பும் சேர்த்து தண்ணி கலந்து சாப்பிடலாம். காலையில் டீக்கு பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

    நெல்லிக்காய் இதயத்தை பாதுகாக்குறதோட கொழுப்பை கரைக்கும். அதோட ரத்தக்குழாய்ல கொழுப்பு படியாம தடுக்கக்கூடியது. கல்லீரல், கணையத்தை பாதுகாக்கும். அந்த வகையில கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரி செய்யும் நெல்லிக்காய். ஏன்... ரகசியமா வரக்கூடிய எய்ட்ஸ் நோயைக்கூட நெல்லிக்காய் குணப்படுத்தும்னு ஆராய்ச்சியில கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா நாம சாப்பிடுற முறையிலதான் நோய் குணமாகும்.

    -மரியா பெல்சின்

    • ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்.
    • மாடுகள் பெருகியவுடன்.. மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்.

    அந்த ஏழை விவசாயி, தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு மேலே தொங்கி கொண்டிருக்கும் தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே...

    ஒரு நாள்... இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும்.

    அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்.

    கஞ்சி விற்ற காசில் கோழிகள் வாங்கி வளர்ப்பேன்.

    சில மாதங்களில் கோழிகள் நிறைய பெருகியவுடன்.. கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்.

    ஆடுகள் பெருகியவுடன்... ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்.

    மாடுகள் பெருகியவுடன்.. மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்.

    பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி... அதிலுள்ள குதிரை லாயத்தில் குதிரைகளை கட்டி வைப்பேன்.

    ஊரில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர் தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்.

    எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...

    அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்.

    மாடியிலிருந்து என் மனைவியும் என் குழந்தையும் விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்.

    அப்போது அவன் சேட்டை செய்வான்.

    பிறகு கீழே சென்று அவளை பார்த்து...

    "ஏய்..! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ... என்று கம்பால் ஓங்கி அடிப்பேன்" என்று அடித்தான்...

    அடித்தவுடன் கஞ்சிகலயம் உடைந்து அவன் முகத்தில் கொட்டியது .

    வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்.

    - ஓஷோ

    • 1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது.
    • நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார்.

    1947 ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதை நாட்டு மக்களுக்குப் பிரகடனப்படுத்த பிரமாண்டமான சுதந்திர விழா டெல்லியில் நடந்தது. அந்த விழா மேடையில் சுமார் 10 நிமிடம் மட்டுமே தனது நாதஸ்வரத்தை வாசித்துக் காட்டினார் டி.என். ராஜரத்தினம் பிள்ளை.

    இதைக்கேட்டு இந்திய முதல் பிரதமர் நேரு அசந்து போனார். இவரது நாதஸ்வர இசைக்குப் பிறகுதான் இந்திய சுதந்திரப் பிரகடனத்தையே நேரு வாசித்தார். அப்போது அவரிடம் நேரு "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.

    "ஊரில் திருடர் பயம் அதிகமாக இருக்கிறது. எனவே கரன்ட் வேண்டும்" என்று கேட்டார் ராஜரத்தினம் பிள்ளை. இதைச் சொல்லிவிட்டு டெல்லியிலிருந்து புறப்பட்டு ஊர் திரும்பிய ராஜரத்தினம் பிள்ளையை ஊரில் இருந்த மின்சார விளக்குகள், கண்சிமிட்டி வரவேற்றன!

    ஒரு கச்சேரிக்கு, தான் வரும்போது எழுந்து நிற்காத மாவட்ட கலெக்டரிடம் ராஜரத்தினம் கேட்டாராம்.. ''ஏம்ப்பா... நான் இந்தக் கச்சேரிக்கு மட்டும் மூவாயிரம் ரூபாய் வாங்கியிருக்கேன். உன் மாசச் சம்பளமே ஆயிரத்தைத் தாண்டாது. நீ பெரியவனா, நான் பெரியவனா?''

    ஒருசமயம் கலெக்டர் என்ன, மைசூர் மகாராஜாவையே ஒரு பிடி பிடித்துவிட்டார். கச்சேரி முடிந்ததும் கைதட்டி பாராட்டிய மகாராஜா, ''கணக்குப்பிள்ளை, பணத்தை எடுத்துவந்து பிள்ளைக்குக் கொடு'' என்றாராம்.

    உடனே பிள்ளை, பக்கவாத்தியம் வாசித்தவரைக் கூப்பிட்டு, ''மேளக்காரரே... பணத்தை வாங்கும்...'' என்று சொல்லிவிட்டு, மகாராஜாவிடம், ''நீங்கள் மாநிலத்துக்கு ராஜா என்றால் நான் இசைக்குச் சக்கரவர்த்தி ஐயா'' என்று சொல்லியிருக்கிறார். அப்புறம் மகாராஜா தன் கையாலேயே பிள்ளைக்குச் சன்மானம் செய்தாராம்!

    - அம்ரா பாண்டியன்

    • விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
    • இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.

    யூதர்கள் பெரும்பாலான துறைகளில் சிறந்தவர்களாக இருக்கின்றனர். நோபல் பரிசு பெற்ற 900க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், இலக்கியவாதிகளில் 256 பேர் யூதர்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன், ஸ்பீல் பெர்க், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் யூதர்கள். பெப்ஸி, கோக், மேக்ஸ்ஃபேக்டர், யுனிலீவர், டன்ஹில் போன்ற உலகின் பெரும் வணிக நிறுவனங்களில் 70 சதம் யூதர்களுடையது. கூகுள், ஆப்பிள், பேஸ்புக், மோடாடோரோலோ வாய்ஸ்மெயில், கணிணி ஆண்டி வைரஸ் ஆகிய தகவல் தொழில்நுட்பம் யூதர்களுடையது.

    மான்சான்ட்டோ போன்ற பெரும் விவசாய நிறுவனங்கள் யூதர்களுடையது. சொட்டுநீர் பாசனம், கிரீன் ஹவுஸ் கல்டிவேஷன் போன்ற விவசாய தொழில் நுட்பமும், ஸ்டெம்செல் தெரப்பி போன்ற மருத்துவ தொழில் நுட்பமும் யூதர்களுடையவை.

    உலகிலேயே ஏவுகணைகளை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் அயர்ன் டாம்ப் எனப்படும் ஆயுதம், யூதர்கள் பெரும்பான்மையாக உள்ள இஸ்ரேலில் மட்டும் இருக்கிறது. விமானப்படையை பொறுத்தவரை இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கிறது.

    பெரும்பாலான யூதர்களுக்கு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை அட்டைகளும் வீடுகளும் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய சிகரெட் தயாரிக்கும் தொழிலகம் அவர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் சிகரெட் புகைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் யூதர்களுடையது. ஆனால் இஸ்ரேலில் குழந்தைகள் கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை.

    உலகில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கி உலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்பது யூதர்களின் கனவாயிருக்கிறது.

    -எம்.எஸ். ராஜகோபால்

    • 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
    • இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.

    'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.

    2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.

    பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

    மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.

    பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    -சித்ரா ரங்கராஜன்

    ×