என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று ஆடிப்பெருக்கு: பவானி கூடுதுறையில் 1 லட்சம் பேர் கூடியதால் பலத்த பாதுகாப்பு
    X

    இன்று ஆடிப்பெருக்கு: பவானி கூடுதுறையில் 1 லட்சம் பேர் கூடியதால் பலத்த பாதுகாப்பு

    ஆடிப்பெருக்கு விழாவான இன்று மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.
    காவிரி ஆறு பாயும் இடங்களில் எல்லாம் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

    மூன்று நதிகள் சங்கமிக்கும் தென்னக திரிவேணி சங்கமாக போற்றப்படும் ஈரோட்டை அடுத்த பவானி கூடுதுறையில் இன்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

    காவிரி அற்றில் நீராடி காவிரி தாயை வழிபட்டால் புது வாழ்வு சிறக்கும். செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த புதுமண தம்பதிகளும் பஸ் மற்றும் வாகனங்களில் பவானி கூடுதுறைக்கு வந்து குவிந்தனர்.

    அவர்கள் தாங்கள் கொண்டு வந்த மணமாலைகளை காவிரி ஆற்றில் விட்டு காவிரி தாயை வழி பட்டனர். இதே போல் ஏற்கனவே திருமணமான தம்பதியினரும் வந்த புதிய தாலி கயிற்றை (மஞ்சள் கயிற்றை) மாற்று கொண்டு வழிபட்டனர்.

    ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி 18 அன்று ஆற்றில் புது வெள்ளம் பொங்கி வரும். அதே போல் தற்போது மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரியில் புது வெள்ளம் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.



    இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆற்றில் நீராடி வழிபட்டு சங்கமேஸ்வரரையும் வழிபட்டு சென்றனர்.

    கன்னி பெண்களும் இன்று தங்கள் பெற்றோருடன் வந்து காவிரியில் நீராடி தங்களுக்கு சிறந்த மணவாழ்க்கை அமைய வேண்டும். தடை நீங்கி திருமணம் நடக்க வேண்டும் என வழிபட்டனர்.

    இதனால் புதுமண தம்பதிகளை போல திருமணமாகாத இளம் பெண்களின் கூட்டத்தையும் கூடுதுறையில் அதிகளவில் காண முடிந்தது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து விவசாய நிலமும் செழிக்க வேண்டும். விவசாயம் பெருகிட வேண்டும் என ஈரோடு மாவட்ட விவசாயிகளும் காவிரியில் நீராடி வழிபட்டனர்.

    ஆடிப்பெருக்கு விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் பவானி நகரமே இன்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வாகனங்களில் வருபவர்களுக்கு வசதியாக வாகனங்கள் நிறுத்த இட வசதியும் செய்யப்பட்டிருந்தது.



    பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வந்து சென்றதால் கோவில் முன்பும் பின்புற பகுதிகளிலும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் மலை மோதியது.

    பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவின் பேரில் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் மேற்பார்வையில் பவானி, சித்தோடு, அம்மாபேட்டை, மற்றும் ஈரோடு போலீசார் 100-க் கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களிடம் தங்கள் உடமைகளையும், தாங்கள் அழைத்து வந்த குழந்தைகளையும் பத்திரமாக பார்த்து கொள்ளும் படி மைக்குகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    போலீசார் படகுகள் ஆற்றில் சென்று பொதுமக்களை ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தனர். மேலும் போலீசார் மற்றும் தியணைப்பு வீரர்கள் சிறிய படகுகளில் சென்று பொதுமக்களை எச்சரித்தப்படி கண்காணித்தனர்.
    Next Story
    ×