என் மலர்tooltip icon

    இலங்கை

    • தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம்.
    • கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். தற்போது அவர் தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மேலும் அமெரிக்காவில் குடியேற கோத்தபய விண்ணப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கோத்தபய ராஜபக்சே, விரைவில் இலங்கை திரும்புவார் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நாடு திரும்பினால் மீண்டும் பிரச்சினை ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கோத்தபய ராஜபக்சேவின் சகோதரரும், முன்னாள் நிதி மந்திரியுமான பசில் ராஜபக்சே அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார். அப்போது கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பசில் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார்.

    இதுக்குறித்து ராஜபக்சே கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வெளியிட்ட அறிக்கையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாடு திரும்ப ஏற்பாடுகளை செய்து தருமாறு பசில் ராஜபக்சே கோரிக்கை விடுத்தார் என்று தெரிவித்துள்ளது.

    ராஜபக்சே கட்சியின் ஆதரவுடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே, கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    தாய்லாந்தில் உள்ள கோத்தபய ராஜபக்சே, ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும் வெளியில் வர வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.
    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள் கொண்டாடிய காலம் என்று ஒன்று உண்டு.

    இலங்கையில் கால் நூற்றாண்டாக சிங்களப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போரில் வெற்றி தேடித்தந்தவர்கள் என்று மகிந்த ராஜபக்சேயையும், கோத்தபய ராஜபக்சேயையும் "இவர்களன்றோ நமது ஹீரோக்கள்" என்று கொண்டாடினார்கள் சிங்கள மக்கள்.

    இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது, ஆயிரமாயிரம் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்கள். பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

    இதற்கெல்லாம் ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்பது இன்றுவரை நிலைத்து விட்ட குற்றச்சாட்டு.

    காலச்சக்கரம் சுழன்றது. காட்சிகள் மாறின.

    ஆனால் 2009-ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2010 தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்து அதிபராக்கி மகிழ்ந்தார்கள், இலங்கை மக்கள்.

    2019-ல் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சேயை அதிபராக்கி அழகு பார்த்தார்கள்.

    அந்த கோத்தபய, அண்ணன் மகிந்த ராஜபக்சேயை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்.

    2019 இறுதியில் சீனாவில் தோன்றி உலக நாடுகளை வதைக்கத்தொடங்கிய கொரோனா தொற்று, இலங்கையிலும் காலடி எடுத்து வைத்தது. சுற்றுலா ஒன்றையே முக்கிய வருமானமாகக் கொண்ட இலங்கையில் அந்த சுற்றுலாத்துறை அடியோடு முடங்கியது. அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அன்னியச்செலாவணி கரைந்து போனது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விண்ணோடும், முகிலோடும் போட்டி போட்டது. சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, நாடே இருளில் தவித்தது.

    அப்போதுதான் சிங்கள மக்கள் விழித்தார்கள். இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருப்பது ராஜபக்சே குடும்பம்தான் என்று கண்டு கொண்டு அவர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

    மகிந்த ராஜபக்சே முதல் களப்பலியானார். அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார். மக்கள் கிளர்ச்சி நீண்டது. அதிபர் மாளிகையையே மக்கள் சூறையாடப்போகிறார்கள் என்று உளவுத்துறை செய்தி சொன்னபோது ஆடித்தான்போனார், கோத்தபய ராஜபக்சே. இரவோடு இரவாக அதிபர் மாளிகையை விட்டு அந்தோ பரிதாபம் என ஓடினார்.

    முதலில் அவர் ஓடிய நாடு, மாலத்தீவு.

    அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், இந்நாள் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது நஷீத் தயவால் அவர் அங்கே சிலகாலம் தஞ்சம் அடைய விரும்பினாலும், அங்குள்ள மக்களும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.

    ஜூலை 13-ல் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை.

    14-ந் தேதி சிங்கப்பூர் போனார். அங்கே அவர் அரசியல் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    ஆனால் அவசரஅவசரமாக சிங்கப்பூர் அரசு மறுத்தது.

    "இல்லை... இல்லை... சிங்கப்பூர் யாருக்கும் தஞ்சம் தருவதில்லை. அவருக்கு 15 நாள் தற்காலிக அனுமதி தரப்பட்டுள்ளது" என்றது. தொடர்ந்து இலங்கையின் ரணில் விக்ரம சிங்கே அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்டு 11-ந் தேதியுடன் அது முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து கோத்தபயராஜபக்சேயின் அடுத்த ஓட்டம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு. அங்கேயும் அவர் கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போன்று ஓட்டலுக்குள் அடைந்து கிடந்தாக வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு.

    அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என தடை போட்டிருக்கிறது, அங்குள்ள பிரயுத் சான் ஓச்சா அரசு.

    அடுத்த ஓட்டம் எங்கே? உறக்கம் வராமல் தவிக்கிறார், கோத்தபய ராஜபக்சே. அங்கே 90 நாட்கள் தங்க அனுமதி தரப்பட்டிருப்பதாக தகவல்.

    இப்போது கசிந்துள்ள தகவல், கோத்தபய ராஜபக்சே, அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற விரும்புகிறார்.

    குடியுரிமை பெற அவரது வக்கீல்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பதுதான்.

    கோத்தபய தரப்பில் முறைப்படி அமெரிக்க அரசிடம் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டாகி விட்டது. அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கடைசியாக கிடைத்திருக்கிற தகவல்.

    கோத்தபய ராஜபக்சேயின் மனைவி லோமா ராஜபக்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே அதன் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் கிரீன் கார்டு கிடைத்து விடும் என்று சொல்லப்படுகிறது.

    கோத்தபய ராஜபக்சேயும் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்தவர்தான். ஆனால் 2019-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    விட்டதை மீண்டும் பெற அவர் எடுக்கிற முயற்சி வெற்றி பெறுமா? நாடாண்டவர் நாடு நாடாக ஓடும் அவலம் முடிவுக்கு வருமா? கேள்விகள் நீளுகின்றன.

    • கோத்தபய ராஜபக்சே கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார்.
    • கோத்தபய வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கொழும்பு :

    இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி போராட்டத்தில் குதித்தனர்.

    இந்த போராட்டம் கடந்த மாதம் தொடக்கத்தில் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து ஜூலை 13-ந் தேதி கோத்தபய ராஜபக்சே குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்ற கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினமா செய்தார்.

    சிங்கப்பூரில் அவரது விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்துக்கு சென்றார். தலைநகர் பாங்காக்கில் உள்ள ஓட்டல் அறையில் தங்கியிருக்கும் அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக அறைக்குள்ளே இருக்கும்படி தாய்லாந்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கோத்தபய அடுத்த வாரம் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பவார் என அவரது உறவினரான உதயங்க வீரதுங்கா தெரிவித்துள்ளார். கோத்தபய வருகிற 24-ந் தேதி இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
    • சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.

    கொழும்ப:

    சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 நேற்று இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந் தேதி வரை இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அந்த உளவு கப்பலுக்கு எரி பொருள் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு 2 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. நாளையுடன் எரிபொருள் நிரப்பப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை காலை இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து சீன உளவு கப்பல் வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.

    அதை சீன உளவு கப்பல் ஏற்றுக்கொண்டாலும் அது ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அந்த கப்பல் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தது.

    இலங்கைக்கு வந்துள்ள சீன உளவு கப்பலின் முக்கிய நோக்கமே இந்திய பெருங்கடலில் உள்ள வசதி வாய்ப்புகளை அறிந்து கொள்ளதான். இந்திய பெருங்கடலில் மிகப்பெரிய ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.

    தற்போது இலங்கையிலும் அத்தகைய ராணுவ தளத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்கு சீன உளவு கப்பலின் வருகை தொடக்கமாக இருப்பதாக இந்திய ராணுவ மூத்த அதிகாரிகள் கருதுகிறார்கள். இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து சீன ராணுவ கப்பல்கள் வருவது அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

    ஒரு வாரம் இலங்கையில் முகாமிட்டு இருப்பதாக கூறப்பட்ட சீன உளவு கப்பல் 3 நாட்களில் புறப்படுவதால் மத்திய அரசு சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இந்த உளவு கப்பல் ஏதேனும் ரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதா என்பதை அறியும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

    உலகின் மிகப்பெரிய கடற்படையை வைத்திருக்கும் நாடு என்ற சிறப்பு சீனாவுக்குத்தான் உள்ளது. 355 போர் கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. ஏராளமான நீர் மூழ்கி கப்பல்களையும் சீனா வைத்துள்ளது.

    இவை அனைத்தையும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை நிறுத்த சீனா துடிக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் உளவு கப்பலை அனுப்பி சீனா ஆட்டத்தை தொடங்கி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன.
    • ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளி நாட்டுக்கு தப்பி சென்றார்.

    இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர நிலையை பிரகடனப் படுத்துவதாக ரணில் விக்ரம சிங்கே அறிவித்தார்.

    மேலும் அதிபர் மாளிகை எதிரே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதற்கிடையே காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

    இதற்கிடையே ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்த அவசர நிலை நாளையுடன் காலாவதியாகிறது. இந்த நிலையில் அவசர நிலை வாபஸ் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் தரப்பில் கூறியதாவது:-

    நாட்டின் நிலைமை நிலையான வகையில் இருப்பதால் அரசுக்கு எதிராக போராட்டங்களை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அவசரகால சட்டம் நீட்டிக்கப்படமாட்டாது.

    இந்த வாரத்தில் அவசர கால சட்டம் காலாவதி யாகும் நிலையில் மீண்டும் அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. அதிபர் ரணில் விக்ரசிங்கே அவசர கால சட்டம் இந்த வார இறுதிக்குள் நீக்கப்படும். தற்போது நாடு, ஸ்திரமான நிலையில் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்க வேண்டிய அவசிய மில்லை என்றார்.

    • இந்தியாவின் சுதந்திர தினத்தன்று கடல்சார் கண்காணிப்பு விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடல்சார் கண்காணிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ட்ரோனியர் ரோந்து விமானத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

    இந்நிலையில், கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், முன்னாள் பிரதமர் நேரு இலங்கைக்கு செய்த உதவிகளை சுட்டிக்காட்டினார். அத்துடன் ஐ.நா.சபையில் இலங்கை இடம் பெறுவதற்கு நேரு உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

    மேலும், இந்தியாவும் இலங்கையும் ஒரு நாணயத்தில் இரு பக்க‌ங்கள். இரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது. விமானம் வழங்கியிருப்பதன் மூலம் இரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்தியா ராமரை மாவீரனாக பார்க்கிறது. ஆனால் இலங்கை ராமர், ராவண‌ன் இருவரையும் மாவீர‌ர்களாக பார்க்கிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து நாடுகளுடன் உறவு முக்கியம் என இலங்கை தகவல்.
    • அண்மை நாடுகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என வெளியுறவுத்துறை அறிக்கை.

    சீனாவின் உளவுக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு காலை 8.20 மணியளவில் வந்தடைந்தது. துறைமுகத்தில் உளவுக்கப்பலை இலங்கைக்காக சீன தூதர் இகி ஷென்காங் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சீனத்தூதர், இலங்கைக்கு சீன ஆராயச்சிக் கப்பலின் வருகை இயற்கையானது என்றார். இது போன்ற ஒரு கப்பல் 2014ம் ஆண்டு இலங்கை வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த கப்பல் வருகை குறித்த இந்தியாவின் எதிரப்பு குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் பந்துல குணவரதன, சீன உளவுக்கப்பல் வருகை குறித்த பிரச்சினை சுமூக தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். எல்லா நாடுகளுடனான உறவுகள் தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் சீன உளவு கப்பல் வருகை விவகாரத்தில் அண்டை நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் இம்மாதம் 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் சீன உளவுக் கப்பலுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

    இதனிடையே கடந்த 2014 ஆண்டு அணுசக்தியால் இயங்கும் சீன நீர்மூழ்கிக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதி அளித்திருந்தது. இதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பு உறவுகள் இடைய விரிசல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் உளவு கப்பல் கடந்த 11-ந் தேதி இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரத் திட்டமிட்டு இருந்தது.
    • உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் தென் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது.

    கொழும்பு:

    சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் இருக்கின்றன. அதில் யுவான் வாங்-5 என்ற உளவு கப்பல் மிக மிக பிரமாண்டமானது.

    222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த உளவு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களை இந்த உளவு கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.

    ஏவுகணைகள் ஏவப்படுவதையும், அந்த ஏவுகணைகளின் ஆற்றலையும் இந்த உளவு கப்பலால் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இருந்த இடத்தில் இருந்தே 750 கி.மீ. சுற்றளவில் உள்ள இடங்களை ஆய்வு செய்யும் திறனும் இந்த உளவு கப்பலுக்கு இருக்கிறது. கடந்த மாதம் 14-ந்தேதி இந்த உளவு கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டது.

    எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் இந்த கப்பல் கடந்த 11-ந் தேதி இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரத் திட்டமிட்டு இருந்தது. இந்த உளவு கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தால் தென் இந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று இந்திய ராணுவம் தெரிவித்தது. அமெரிக்காவும் இதே கருத்தை வெளியிட்டது.

    இதையடுத்து யுவான் வாங்-5 உளவு கப்பலுக்கு இந்திய தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தம் காரணமாக உளவு கப்பல் வருகையை ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் சீனா இதை ஏற்கவில்லை.

    இலங்கையின் தென் புறத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனா எடுத்திருக்கிறது. எனவே அந்த துறைமுகத்துக்குத்தான் வரப்போவதாக சீனா ராணுவம் அறிவித்தது. மேலும் இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா தலையிடுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

    சீனாவின் பிடிவாதம் காரணமாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே சிங்கள தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பிறகு சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கடந்த சனிக்கிழமை இலங்கை அறிவித்தது. அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்திருப்பதாக இலங்கை விளக்கம் அளித்தது.

    என்றாலும், இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகுந்த கவலையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் கடும் சர்ச்சைக்கு மத்தியில் யுவான் வாங்-5 உளவு கப்பல் கடந்த 2 நாட்களாக இலங்கை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்தியது. நேற்று இரவு அது இலங்கையை நெருங்கியது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.20 மணிக்கு யுவான் வாங்-5 உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இன்று முதல் 22-ந்தேதி வரை 7 நாட்களுக்கு அந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டு நிலை கொண்டிருக்கும்.

    ஏற்கனவே கொழும்பு துறைமுகத்துக்கு பாகிஸ்தான் கடற்படையின் தைமூர் கப்பல் வந்திருந்தது. இந்த கப்பலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட போர் கப்பல்தான். கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்ட பிறகு இந்த கப்பல் நேற்று கராச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் சீன உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருக்கிறது.

    சீன உளவு கப்பல் எந்த கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று இலங்கை தெரிவித்து இருந்தாலும், அந்த உளவு கப்பல் தென் இந்திய பகுதிகளை கண்காணிக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் இந்த உளவு கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டபோது, இலங்கைக்கும் சீன ராணுவ அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தையின் போது என்னென்ன பேசப்பட்டது என்ற விவரங்களை இரு நாடுகளும் வெளியிட மறுக்கின்றன. இதனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் நடவடிக்கைகள் தொடர்ந்து மர்மமாகவே இருக்கின்றன. அதனால் இந்த கப்பலால் தென் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது என்று ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சீன உளவு கப்பலுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகமும், சிங்கள அதிகாரிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இதுவும் இந்தியா, அமெரிக்காவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இந்த 7 நாட்களும் அந்த கப்பலின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க இந்தியா ஏற்பாடு செய்திருப்பதாக தெரிகிறது.

    என்றாலும், யுவான் வாங்-5 உளவு கப்பல் தனது அதிநவீன கருவிகள் மூலம் உளவு பார்ப்பதை தீவிரப்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவில் உள்ள 6 கடற்படை தளங்களை இந்த உளவு கப்பலால் படம் பிடிக்க முடியும். அங்கு என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

    தமிழகத்தில் கல்பாக்கம், கூடங்குளம் 2 இடத்திலும் சக்திவாய்ந்த அணுமின் நிலையங்கள் உள்ளன. இந்த அணுமின் நிலையங்களையும் உளவு கப்பலால் பார்க்க முடியும். சென்னைக்கு அருகே இருக்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பணிகளையும் அந்த கப்பலால் ஆய்வு செய்ய முடியும்.

    இந்த அச்சுறுத்தல்கள் தவிர விசாகப்பட்டினம், கொச்சி கடற்படை தளங்களையும் அந்த உளவு கப்பல் துல்லியமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உளவு தகவல்கள் உடனுக்குடன் சீன ராணுவத்துக்கு அனுப்பப்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    யுவான் வாங்-5 உளவு கப்பலில் சுமார் 2 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களை மாற்றம் செய்யும் நடவடிக்கைகளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருக்கிறது.

    என்றாலும், ரகசியமாக வீரர்கள் பரிமாற்றம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    • கடல்சார் கண்காணிப்பு விமானத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.
    • இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது.

    கொழும்பு:

    இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

    இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற இந்திய தூதர் கோபால் பாக்லே

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வரவேற்ற இந்திய தூதர் கோபால் பாக்லே

    நிகழ்ச்சியில் பேசிய கோபால் பாக்லே, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதுடன், இந்த இலக்கிற்காக இந்தியா வழங்கும் சமீபத்திய பங்களிப்பாக டோனியர்-228 விமானம் பரிசு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

    இந்தியாவுடனான ஒத்துழைப்பின் பிற பகுதிகளின் பலன்களைப் போலவே, இலங்கை விமானப்படைக்கு டோர்னியர் விமானம் பரிசாக வழங்கப்பட்டிருப்பது, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவின் பலம் அதன் நட்பு நாடுகளின் பலத்தை கூட்டுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும் கோபால் பாக்லே கூறினார்.

    இந்த கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இயக்குவதற்கு இந்திய கடற்படை ஏற்கனவே இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் குழுவினருக்கு பயிற்சி அளித்துள்ளது.

    இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பலான யுவான் வாங்-05 நாளை வருகை தர உள்ளது. இதறகு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இந்தியா இலங்கையிடம் தூதரக ரீதியில் கோரியிருந்தது. ஆனால் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனக் கப்பலின் வருகைக்கு இலங்கை அனுமதி அளித்தது.

    இந்த நிலையில், தமது உளவு விமானமான டோர்னியர் 228 என்ற விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

    • 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை நீக்கியுள்ளது.
    • 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

    கொழும்பு :

    இனப் பிரச்சினை காரணமாக இலங்கையை விட்டு பெருமளவில் வெளியேறிய தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்துவருகிறார்கள். பல அமைப்புகளையும் அவர்கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள்.

    இந்த அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. பொருளாதார நெருக்கடியால் தடுமாறும் இலங்கை, வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்கள், சொந்த நாட்டின் அன்னியச் செலாவணி இருப்புக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழ் அமைப்பு, உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் ஈழ மக்கள் பேரவை, கனடா தமிழ் காங்கிரஸ், பிரிட்டீஷ் தமிழ் அமைப்பு ஆகிய 6 வெளிநாடுவாழ் தமிழ் அமைப்புகளுக்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது. மேலும் 316 தனிநபர்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடம் உதவியை எதிர்பார்த்து வெளிநாடுவாழ் தமிழர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
    • பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.

    கொழும்பு :

    இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் கூட்டு போர்ப்பயிற்சி நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    இதை இலங்கை கடற்படை தவறான தகவல் என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் பாகிஸ்தானின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்ததால், பாகிஸ்தான் கடற்படையில் இணையும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் அதை நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது.
    • இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர்.

    இலங்கையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு அந்த நாட்டு மக்கள் பட்டினியும், பசியுமாக கிடந்தபோது அய்யோ பாவம் என்று இந்தியா எல்லா அத்தியாவசிய பொருட்களையும் கொடுத்தது.

    பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமையை வாரி வாரி வழங்கியது. அனைத்தையும் வாங்கி தின்றுவிட்டு இன்று இந்தியாவை பாதுகாப்பு விஷயத்தில் அலறவிட்டு அல்லாட வைத்திருக்கிறது இலங்கை அரசு.

    பொதுவாகவே சிங்களத் தலைவர்கள் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள் என்பது கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் பல தடவை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது மீண்டும் இந்தியாவுக்கு துரோகம் செய்யும் ஒரு செயலை சிங்கள தலைவர்கள் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.

    அவர்கள் துரோகத்தால் சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

    நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட இந்த யுவான் வாங்-5 கப்பல் கடந்த 11-ந் தேதியே இலங்கைக்கு வருவதாக இருந்தது. இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததும், கப்பலின் வருகையை காலவரையின்றி ஒத்தி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது.

    ஆனால் சீனா அந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருப்பதால் நாங்கள் வருவதை தடுக்க இயலாது என்று சீனா அதிகாரத்துடன் பதில் அளித்தது.

    இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா-சீனா இரு நாடுகளின் கருத்துக்களை பரிசீலித்தனர். இறுதியில் சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்துள்ளனர்.

    இதன் காரணமாக யுவான் வாங்-5 உளவு கப்பல் நாளை மறுநாள் ஹம்பாத்தோட்டை துறைமுகத்துக்கு வந்துவிடும். 22-ந் தேதி வரை அது அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் சீனா இதையெல்லாம் நிச்சயம் மதிக்காது. நிச்சயமாக அது உளவு தகவல்களை சேகரிக்கும். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி சீனாவுக்கு ஆதரவாக இலங்கை எடுத்திருக்கும் முடிவு வரலாற்று பிழையாகக் கருதப்படுகிறது. இந்த மாத இறுதியில் சர்வதேச நிதி ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. அந்த ஆணையத்திடம் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்க இலங்கை தீவிரமாக உள்ளது. இதற்கு சீனா உதவ உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை நம்பித்தான் சீனா பக்கம் இலங்கை சாய்ந்திருக்கிறது.

    தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 600 கடல் மைல் தொலைவில் இருக்கும் யுவான் வாங்-5 உளவு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் வந்ததும் தனது வேலையை ஆரம்பித்துவிடும். தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கிறது.

    ஆனால் யுவான் வாங்-5 உளவு கப்பல் மூலம் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும். சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. விண்வெளி ஆய்வுக்கு மட்டுமே இந்த கப்பல் பயன்படுத்தப்படும் என்று பொதுவாக சீனா சொல்லிக் கொள்கிறது.

    ஆனால் முழுக்க முழுக்க உளவு பார்க்கும் வேலையைத் தான் இந்த கப்பல் செய்கிறது. இதே போன்று 7 உளவு கப்பல்களை சீனா வைத்திருக்கிறது. அந்த நாட்டிடம் உள்ள மிகப் பெரிய உளவு கப்பல் இந்த யுவான் வாங்-5 கப்பல் தான்.

    இதனால்தான் இந்த கப்பலை நினைத்து இந்திய ராணுவம் அச்சுறுத்தலாக கருதுகிறது. இந்தியாவில் எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தின் வாசல் கதவு வரை அந்த உளவு கப்பல் வரப்போகிறது.

    இந்த உளவு கப்பலால் இந்தியாவில் மேற்கொள்ளப் படும் ஏவுகணை பரிசோதனைகளை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும். அந்த ஏவுகணைகள் எத்தகைய வலிமையுடன் இருக்கின்றன என்பதையும் கூட இந்த உளவு கப்பலால் மோப்பம் பிடித்துவிட முடியும்.

    அது மட்டுமல்ல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்ற விவரத்தையும் கூட இந்த உளவு கப்பலால் அறிந்துகொள்ளும் திறன் இருக்கிறது. ராணுவ ரீதியிலான பல ரகசிய நடவடிக்கைகளையும் இந்த உளவு கப்பல் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

    அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருக்கும் 7 நாட்களும் அந்த கப்பல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை அப்படியே கபளீகரம் செய்யும் வகையில் ஸ்கேன் செய்யும் என்று ராணுவ உயர் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    குறிப்பாக இந்தியா தனது செயற்கைகோள் கட்டுப் பாடுகளை எப்படி மேற்கொள்கிறது என்பதை யும் அந்த கப்பல் தெரிந்துகொள்ளும். தென் இந்தியாவில் 6 முக்கிய கடற்படை தளங்கள் இருக்கின்றன. அந்த 6 இடங்களிலும் என்ன நடக்கிறது என்பதை உளவு கப்பலால் கண்காணிக்க முடியும்.

    தென் இந்தியாவின் கடற்படை தலைமை அலுவலகம் கொச்சியில் இருக்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதையும் துல்லியமாக இந்த உளவு கப்பலால் பார்க்க முடியும். இதனால்தான் இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்த லாக கருதப்படுகிறது.

    கடந்த மாதம் 14-ந் தேதி சீனாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் இடையில் வேறு எந்த துறைமுகத்துக்கும் செல்லவில்லை. எனவே எரிபொருள் நிரப்பவும், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளவும் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் எரிபொருள் நிரப்புவதற்கு 2 நாட்கள் போதுமானவை.அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எதிர் காலத்தில் நிரந்தரமாக ராணுவ முகாம் அமைக்கப் படும்போது அங்கு இந்த கப்பல் எப்படி செயல்பட முடியும் என்பதை ஒத்திகை பார்க்கவே தற்போது 7 நாட்கள் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

    222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உளவு கப்பல் 11 ஆயிரம் டன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமை கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதியும் இந்த கப்பலில் இருக்கிறது.

    விண்வெளி மற்றும் செயற்கை கோள்களை க ண்காணிப்பதற்கான தொழில்நுட்பத்தை அதிக அளவில் வைத்திருக்கும் இந்த கப்பல் மிக மிக எளிதாக கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் இருக்கும் அணுமின் நிலையங்களை அணு அணுவாக ஆய்வு செய்துவிடும்.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய தகவல்களை திருட முடியும். ஒடிசா கடற் கரை வரை இந்த கப்பலால் ஊடுருவி பார்க்க முடியும். இந்த உளவு கப்பலுக்கு சீனாவின் ராணுவ புலனாய்வு துறையோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

    எனவே இந்த உளவு கப்பல் சேகரிக்கும் தகவல்கள் அனைத்துமே சீனாவின் ராணுவ புலனாய்வு அமைப்புக்கு அடுத்த நிமிடமே சென்று சேர்ந்துவிடும். இதுதான் இந்தியாவுக்கு ஏற்படப் போகும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று இந்தியா உறுதியாக கருதுகிறது.

    மேலும் சீன ராணுவம் தலைநகர் பீஜிங்கில் பல இடங்களில் ராணுவ கண்காணிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறது. அந்த கண்காணிப்பு மையங்களுக்கு இந்த உளவு கப்பலில் இருந்து எளிதாக தகவல்களை அனுப்ப முடியுமாம். இந்தியாவின் சைபர், மின்னணு தகவல்கள் அனைத்தையும் இந்த உளவு கப்பலால் எளிதாக அள்ளி விட முடியும்.

    இந்திய பெருங்கடலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்த கப்பல் அடித்தளம் அமைக்கும் வகையில் செயல்பட போகிறது. அடுத்தமாதம் (செப்டம்பர்) வரை இந்த கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில்தான் முகாமிட்டு நிற்கப்போகிறது.

    சக்திவாய்ந்த இந்த கண்காணிப்பு கப்பலில் இருந்து இந்திய பெருங்கட லின் பெரும் பகுதி அதனுடைய ஆதிக்கத்தில்தான் இருக்கும். இலங்கை சிங்கள தலைவர்கள் அளவுக்கு மீறி கடன் வாங்கிவிட்டு வட்டி கொடுக்க முடியாமல் சீனாவிடம் அடிபணிய நேரிட்டதால் இந்த ஆபத்து நம்மை நெருங்கி இருக்கிறது.

    ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் அமைந்த சிறப்பான துறைமுகமாகும். கிழக்கு ஆசிய நாடுகளையும், மேற்கு ஐரோப்பிய நாடுகளையும் இணைக்கும் மையமாக இதுஉள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சீனா இந்தியாவை இலக்காக கொண்டு அடுத்தடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் தனது வேலையை காட்டப் போகிறது.

    அதற்கு இந்த யுவான் வாங்-5 உளவு கப்பல் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

    ×