search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese Spy Ship"

    • கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

    லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.

    இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.
    • 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முக்கிய ராணுவ நிலைகளை உளவு பார்க்க சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென் இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில் திட்டங்களை சீன கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்த படியே நவீன கருவிகள் மூலம் உளவு பார்ப்பது அடிக்கடி நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது இந்திய பெருங்கடல் பகுதியில் 3 சீன உளவு கப்பல்கள் ஊடுருவி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கிறது.

    அந்த கப்பல் அந்தமானில் உள்ள இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த உளவு கப்பல் மிகப்பெரிய ஒத்திகை ஒன்றை நடத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

    மற்றொரு உளவு கப்பல் மாலத்தீவு அருகே இருக்கிறது. 3-வது உளவு கப்பல் மொரீசியஸ் தீவு அருகே சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த 3 உளவு கப்பல்களும் இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

    • ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.
    • கப்பல் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சீன துறைமுகமான கிங்டாவோவில் இருந்து புறப்பட்டது.

    புதுடெல்லி:

    5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிக்கரமாக நடத்தியது. இந்த ஏவுகணை ஒன்றுக்கு மேற்பட்ட இலக்குகளை தாக்கி விட்டு மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த ஏவுகணை சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை சோதனையை சீன உளவுக் கப்பல் கண்காணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஒடிசா கடற்கரையில் ஏவுகணை சோதனை நடத்தப்படுவதாக இந்தியா அறிவித்த சில நாட்களில், சீன ஆராய்ச்சிக் கப்பலான சியான் யாங் ஹாங் 01 இந்தியாவின் கிழக்குக் கடற் பரப்பில் காணப்பட்டு உள்ளது.

    இந்த கப்பல் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சீன துறைமுகமான கிங்டாவோவில் இருந்து புறப்பட்டது. 4,425 டன் எடையுள்ள இக்கப்பல் கடந்த 6-ந் தேதி மலாக்கா ஜலசந்தியில் நுழைந்தது. 8-ந்தேதி நிக்கோபார் தீவுக்கும் இந்தியத் தீபகற்பத்திற்கும் இடையில் காணப்பட்டது.

    பின்னர் 3 நாட்களில் வங்காள விரிகுடாவில் சோதனை செய்யும் இடத்திற்கு அருகே வந்துள்ளது. இந்தியா ஏவுகணை சோதனையை நடத்திய போது சியான் யாங் ஹாங் 01 விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் இருந்துள்ளது.

    ஏவுகணை சோதனைக்கு முன், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் 3,550 கிமீ தொலைவில் விமானப் பயணத்திற்கான எச்சரிக்கை அறிவிப்பை அண்டை நாடுகளுக்கு கடந்த 7-ந்தேதி இந்தியா வெளியிட்டது. வங்காள விரிகுடா பகுதியில் மார்ச் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை எந்த விமானமும் பறக்கக்கூடாது என்று இந்தியா எச்சரித்து இருந்தது.

    3,500 கிலோமீட்டர்கள் வரை இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ஏவுகணை சோதனை நடந்த சமயத்தில் சீன உளவுக்கப்பல் அந்த பகுதியில் இருந்துள்ளது.

    100 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் ஒரே நேரத்தில் 15 ஆயிரம் கடல் மைல் தூரம் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யக்கூடிய ரிமோட் சென்சிங் கருவிகளை கொண்டுள்ளது. மேலும் அதிநவீன ஒலியைக் கண்டறியும் சென்சார்கள் இருக்கிறது. நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்படுத்தும் சிறு ஒலியைக் கூட இது உணரலாம்.

    இது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஒலியியல் தடம் மற்றும் நீருக்கடியில் ஏவுகணை ஏவுதல் உள்ளிட்டவற்றையும் கண்டறியும் திறன் கொண்டது.

    இந்தியா தடை விதித்திருந்த பகுதியில் சீனக்கப்பல் இருந்ததால் அது இந்தியாவின் ஏவுகணை சோதனையை அதிநவீன கருவிகள் மூலம் உளவு பார்க்க நோட்டமிட்டுள்ளது. இதனால் முழு ஏவுகணை சோதனையையும் பார்த்து அதன் வீச்சு மற்றும் திறன் பற்றிய தரவுகளை கணக்கிட்டிருக்கலாம்.

    ஏற்கனவே சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற சியான் யாங் ஹாங் 03 அங்கிருந்து புறப்பட்டு இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது.
    • சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    கொழும்பு:

    சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவில் இருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன.

    கடந்த ஆகஸ்டு மாதம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட்டு நிறுத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சீனாவின் மற்றொரு கப்பலான ஷின் யான்-6 இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இலங்கையில் உள்ள ருஹுனு பல்கலைகழக நீரியியல் துறை கடல் சார்ந்த ஆய்வினை சீன கப்பல் உதவியுடன் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்காகவே சீன உளவு கப்பல் இலங்கை வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅருகில் உள்ள இந்தியாவின் ஸ்ரீ ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது.

    இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது

    இந்த சூழலில் சீன கப்பலின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீன உளவு கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து சுமார் 474 கடல் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    சீனக் கப்பலை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் இடங்கள் மற்றும் தேதிகளை முதலில் அறிவிக்க வேண்டும் என இலங்கை உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

    இந்நிலையில் சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருந்த ருஹுனு பல்கலைக்கழக பேராசிரியர்களில் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் மற்றொரு பேராசிரியர் ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் இருந்து ருஹுனு பல்கலைக்கழகம் விலகி உள்ளது.

    இதன் காரணமாக சீன உளவு கப்பல் இலங்கை வர வாய்ப்பு இல்லை எனவும், அரசு அதற்கான அனுமதியை வழங்கவில்லை என்றும் இலங்கை அரசுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

    • சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.
    • கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது.

    இந்தியாவுக்கு பல்வேறு வகைகளிலும் சவாலாக திகழும் சீனா தனது அதிநவீன படைகள் மூலம் இந்தியாவை உளவு பார்க்கும் பணிகளை அடிக்கடி மேற்கொள்கிறது.

    குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதற்காக அடிக்கடி தனது உளவு கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதிக்கு அனுப்பி வருகிறது.

    கடந்த ஆண்டு இலங்கையின் உளவு கப்பலான இவான்வாங்-5 என்ற அதிநவீன கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் அது தென் இந்தியாவின் பல பகுதிகளை உளவு பார்த்ததாக கருதப்பட்டது.

    சீன கப்பலை அனுமதித்தற்காக இலங்கையிடம் இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் இலங்கைக்கு சீனாவின் மற்றொரு ஆராய்ச்சி உளவு கப்பல் சமீபத்தில் புறப்பட்டு வந்தது.

    சீனா வைத்திருக்கும் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற அந்த கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அடுத்த மாதம் அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தது.

    அந்த கப்பல் மூலம் தென் இந்தியாவின் பல பகுதிகளை இலங்கையால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும் அபாயம் இருந்தது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள முக்கிய ராணுவ நிலைகளை அந்த கப்பலால் மிக எளிதாக படம் பிடித்து ஆய்வு செய்து விட முடியும் என்ற நிலை உள்ளது.

    தமிழகத்தின் அருகே வரும் இந்த அபாயத்தை உணர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கையுடன் தொடர்பு கொண்டு பேசியது. இதையடுத்து சீன உளவு கப்பல் வருகை பற்றி இலங்கை ஆய்வு செய்தது.

    இந்த நிலையில் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை தற்போது அறிவித்துள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலிசப்ரி இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

    இந்தியாவின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே சீன கப்பலுக்கு அனுமதி வழங்கவில்லை. எங்கள் கடல் பகுதி அமைதியான சூழ்நிலையில் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

    இலங்கை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டு இருந்த சீன உளவு கப்பல் இலங்கையின் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருந்தது. தற்போது அந்த ஆராய்ச்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி அலிசப்ரி சமீபத்தில் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்க சென்று இருந்தார். அப்போது அமெரிக்க மந்திரியை அவர் சந்தித்து பேசினார். அந்த சமயத்தில் சீன உளவு கப்பல் வருகைக்கு அதிருப்தி தெரிவித்து அமெரிக்காவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஆயுதப்படைகளில் போர்க்கப்பல்கள் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களைக் கையாள்வது முக்கிய அம்சமாகும்.
    • இந்த ஆண்டில் மட்டும் இந்தியப் பெருங்கடலில் 24 சீனக் கப்பல்கள் நுழைய திட்டமிட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பலான ஷின் யான்-6 நாளை (சனிக்கிழமை) இலங்கைக்கு வர உள்ளது.

    இந்த உளவுக் கப்பல் ஷின் யான் மலேசியாவை அடுத்த மலாக்கா நீரிணை வழியாக இலங்கையை அடைகிறது. இது 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவியுள்ளது.

    எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. ஏற்கனவே இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ள இருந்த இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கடைசி நேரத்தில் அதனை ரத்து செய்திருந்தார்.

    சீன உளவு கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கினால் பதட்டமான நிலைமைகள் உருவாகும் என இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள், இந்திய ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    இலங்கையின் ருகூணு பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, இந்த கப்பல் இலங்கைக்கு வருகிறது என்று நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நீர் மாதிரிகளை எடுப்பதற்காக தமது நிறுவனம் இந்த கப்பலுடன் பணியில் ஈடுபடும் என்றும் நாரா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனினும் இதுவரை இந்த கப்பல் வருவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்று ருகூணு பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இந்த உளவு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி இலங்கைக்கு வந்ததோடு, 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த சில வருடங்களாக இலங்கைக்கு வருகை தந்து உள்ள கப்பல்களில் பெரும்பாலானவை சீனாவை சேர்ந்த ஆய்வுக் கப்பல்களாகவே உள்ளன.

    ஆசியாவை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது எதிர்காலத் திட்டத்திற்கு இந்தியா தான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று கருதும் சீனா, இந்தியாவைச் சுற்றிலும் தனது பாதுகாப்பு நிலைகளை ஏற்படுத்தி, ராணுவ ரீதியாக முடக்குவதற்கு திட்டமிட்டு வருகிறது.

    அதற்காகவே ஒன்றன் பின் ஒன்றாக உளவுக்கப் பல்களை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    சீனக் கப்பலின் இலங்கை வருகை என்பது ஐக்கிய நாடுகள் கடல் சட்ட உடன் படிக்கையை மீறிய செயல் ஆகும். சீனக் கப்பலை இலங்கை அனுமதிப்பது 1987-ம் ஆண்டு இந்திய, இலங்கை அமைதி உடன்பாட்டிற்கு எதிரான செயலாகும். சீனக் கப்பலை அனுமதிப்பது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் அதை இலங்கை அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று இந்தியா தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இதனிடையே சீன உளவு கப்பல்கள் நுழைவதையும், அது எந்தவிதமான பணிகளில் ஈடுபடுகிறது என்பதையும் இந்தியா ஓமன், மொரீஷியஸ் உதவியுடன் கண்காணிக்க உள்ளது. ஓமனில் உள்ள துறைமுகத்தில் இந்தியக் கப்பல்களைப் பராமரிக்கவும், பழுதுபார்க்கவும், மாற்றியமைக்கவும், இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்குத் தங்கும் இடம், எரிபொருள் மற்றும் ஓய்வு வசதிகளை வழங்குவதற்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல இந்தியாவின் நட்பு நாடான மொரீஷியசின் போர்ட் லூயிசுக்கு வடக்கே சுமார் 1,050 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு அகலேகா தீவுகளில், கடல்சார் பாதுகாப்பை வழங்குவதோடு, அதன் சுற்றுலா இடங்களைப் பாதுகாக்கவும் ஒரு விமான ஓடுதளத்தை உருவாக்கியுள்ளது.

    அதே வேளை இந்திய கடற்படை ஏற்கனவே குறைந்தபட்சம் 50 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அனுப்புவதற்கான திட்டங்களைத் தயாரித்து வருகிறது. இந்திய ஆயுதப்படைகளில் போர்க்கப்பல்கள் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களைக் கையாள்வது முக்கிய அம்சமாகும்.

    இந்த ஆண்டில் மட்டும் இந்தியப் பெருங்கடலில் 24 சீனக் கப்பல்கள் நுழைய திட்டமிட்டு உள்ளன. சீனக் கப்பல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 29 ஆக இருந்தது. அது 2022-ல் 43 ஆக அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பெருங்கடலில் ராணுவ தளத்தை உருவாக்க சீனா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
    • சீனா இந்தியாவை சுற்றியுள்ள அனைத்து நாடுகளிலும் ராணுவ தளங்களை நிறுவி இருக்கிறது.

    கொழும்பு:

    சீன உளவு கப்பல் யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கை துறைமுகத்துக்கு வந்தது. அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த கப்பல் தென் இந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதால் மத்திய அரசு இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த உளவு கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் 22-ம் தேதி வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உளவு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்து வந்தன. எரிபொருள் தவிர உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரிக்கும் பணியிலும் உளவு கப்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், எரிபொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து சீன உளவு கப்பலான யுவான் வாங் 5 கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இன்று புறப்பட்டது.

    சீன உளவு கப்பல் இந்தியாவின் செயற்கை கோள்களையும், தென் இந்தியாவில் உள்ள கடற்படை தளங்களையும் உளவு பார்க்கும் என்று கருதப்பட்டது. ஆனால் அத்தகைய பணிகள் எதையும் செய்யக் கூடாது என்று இலங்கை நிபந்தனை விதித்து இருந்தது.

    • மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • பிரதமர் மோடி தலைமையின் கீழ் எந்த சூழ்நிலையையும் கையாள தயாராக உள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பல் யுவான் வாங்-5 நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) இலங்கை கொழும்பு அருகே உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர இருக்கிறது. இந்த உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கருதப்படுகிறது.

    இந்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை அதிபர் ரணில் விக்கிரம சிங்கே அனைத்துக்கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தினார். அப்போது சீன கப்பலுக்கு அனுமதி அளிப்பதென்று முடிவு செய்தனர்.

    இந்நிலையில், உயர்தொழில்நுட்ப சீன ஆராய்ச்சி கப்பல் இலங்கையில் இருப்பதால் எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

    இது தொடர்பாக, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள்வதற்கு நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். அதுபற்றி தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாரதீப், விசாகப்பட்டினம் மற்றும் சென்னை துறைமுகத்தில் ஏற்கனவே உள்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    ×