search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    நாடாண்டவர், நாடு நாடாக ஓடித்திரியும் அலங்கோலம்: கோத்தபய ராஜபக்சேவின் இன்றைய நிலை...
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாடாண்டவர், நாடு நாடாக ஓடித்திரியும் அலங்கோலம்: கோத்தபய ராஜபக்சேவின் இன்றைய நிலை...

    • கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.
    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கோத்தபய ராஜபக்சே அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    கோத்தபய ராஜபக்சேயை சிங்கள மக்கள் கொண்டாடிய காலம் என்று ஒன்று உண்டு.

    இலங்கையில் கால் நூற்றாண்டாக சிங்களப்படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போரில் வெற்றி தேடித்தந்தவர்கள் என்று மகிந்த ராஜபக்சேயையும், கோத்தபய ராஜபக்சேயையும் "இவர்களன்றோ நமது ஹீரோக்கள்" என்று கொண்டாடினார்கள் சிங்கள மக்கள்.

    இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தபோது, ஆயிரமாயிரம் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார்கள். பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

    இதற்கெல்லாம் ராஜபக்சே குடும்பம்தான் காரணம் என்பது இன்றுவரை நிலைத்து விட்ட குற்றச்சாட்டு.

    காலச்சக்கரம் சுழன்றது. காட்சிகள் மாறின.

    ஆனால் 2009-ம் ஆண்டு உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 2010 தேர்தலில் மகிந்த ராஜபக்சேவுக்கு அமோக வெற்றியை தேடித்தந்து அதிபராக்கி மகிழ்ந்தார்கள், இலங்கை மக்கள்.

    2019-ல் அவரது தம்பி கோத்தபய ராஜபக்சேயை அதிபராக்கி அழகு பார்த்தார்கள்.

    அந்த கோத்தபய, அண்ணன் மகிந்த ராஜபக்சேயை பிரதமர் நாற்காலியில் அமர வைத்தார்.

    2019 இறுதியில் சீனாவில் தோன்றி உலக நாடுகளை வதைக்கத்தொடங்கிய கொரோனா தொற்று, இலங்கையிலும் காலடி எடுத்து வைத்தது. சுற்றுலா ஒன்றையே முக்கிய வருமானமாகக் கொண்ட இலங்கையில் அந்த சுற்றுலாத்துறை அடியோடு முடங்கியது. அந்த நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காணத்தொடங்கியது. அன்னியச்செலாவணி கரைந்து போனது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விண்ணோடும், முகிலோடும் போட்டி போட்டது. சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, நாடே இருளில் தவித்தது.

    அப்போதுதான் சிங்கள மக்கள் விழித்தார்கள். இந்த நிலைக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டிருப்பது ராஜபக்சே குடும்பம்தான் என்று கண்டு கொண்டு அவர்களுக்கு எதிராக மக்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள்.

    மகிந்த ராஜபக்சே முதல் களப்பலியானார். அவர் பிரதமர் பதவியை விட்டு விலகினார். மக்கள் கிளர்ச்சி நீண்டது. அதிபர் மாளிகையையே மக்கள் சூறையாடப்போகிறார்கள் என்று உளவுத்துறை செய்தி சொன்னபோது ஆடித்தான்போனார், கோத்தபய ராஜபக்சே. இரவோடு இரவாக அதிபர் மாளிகையை விட்டு அந்தோ பரிதாபம் என ஓடினார்.

    முதலில் அவர் ஓடிய நாடு, மாலத்தீவு.

    அந்த நாட்டின் முன்னாள் அதிபரும், இந்நாள் நாடாளுமன்ற சபாநாயகருமான முகமது நஷீத் தயவால் அவர் அங்கே சிலகாலம் தஞ்சம் அடைய விரும்பினாலும், அங்குள்ள மக்களும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடத்தொடங்கினார்கள்.

    ஜூலை 13-ல் ஒரே நாளில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை.

    14-ந் தேதி சிங்கப்பூர் போனார். அங்கே அவர் அரசியல் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    ஆனால் அவசரஅவசரமாக சிங்கப்பூர் அரசு மறுத்தது.

    "இல்லை... இல்லை... சிங்கப்பூர் யாருக்கும் தஞ்சம் தருவதில்லை. அவருக்கு 15 நாள் தற்காலிக அனுமதி தரப்பட்டுள்ளது" என்றது. தொடர்ந்து இலங்கையின் ரணில் விக்ரம சிங்கே அரசு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மேலும் 15 நாள் நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்டு 11-ந் தேதியுடன் அது முடிவுக்கு வந்தது.

    அதைத் தொடர்ந்து கோத்தபயராஜபக்சேயின் அடுத்த ஓட்டம் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகருக்கு. அங்கேயும் அவர் கிட்டத்தட்ட வீட்டுச்சிறை போன்று ஓட்டலுக்குள் அடைந்து கிடந்தாக வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு.

    அதுமட்டுமல்ல, தங்கள் நாட்டில் இருந்து கொண்டு எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என தடை போட்டிருக்கிறது, அங்குள்ள பிரயுத் சான் ஓச்சா அரசு.

    அடுத்த ஓட்டம் எங்கே? உறக்கம் வராமல் தவிக்கிறார், கோத்தபய ராஜபக்சே. அங்கே 90 நாட்கள் தங்க அனுமதி தரப்பட்டிருப்பதாக தகவல்.

    இப்போது கசிந்துள்ள தகவல், கோத்தபய ராஜபக்சே, அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேற விரும்புகிறார்.

    குடியுரிமை பெற அவரது வக்கீல்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்பதுதான்.

    கோத்தபய தரப்பில் முறைப்படி அமெரிக்க அரசிடம் கிரீன்கார்டு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டாகி விட்டது. அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அவரது வக்கீல்கள் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கடைசியாக கிடைத்திருக்கிற தகவல்.

    கோத்தபய ராஜபக்சேயின் மனைவி லோமா ராஜபக்சே, அமெரிக்க குடியுரிமை பெற்றவர். எனவே அதன் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவுக்கும் கிரீன் கார்டு கிடைத்து விடும் என்று சொல்லப்படுகிறது.

    கோத்தபய ராஜபக்சேயும் அமெரிக்க குடியுரிமை வைத்திருந்தவர்தான். ஆனால் 2019-ல் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுத்தார்.

    விட்டதை மீண்டும் பெற அவர் எடுக்கிற முயற்சி வெற்றி பெறுமா? நாடாண்டவர் நாடு நாடாக ஓடும் அவலம் முடிவுக்கு வருமா? கேள்விகள் நீளுகின்றன.

    Next Story
    ×