என் மலர்tooltip icon

    இலங்கை

    • இலங்கை அதிபர் அரசுமுறை பயணமாக இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளார்.
    • அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு முதல் முறையாக பயணம் செய்கிறார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே பதவி விலகி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். தொடர்ந்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாட்டை மீட்க இலங்கை இந்திய அரசிடம் உதவிகேட்டது. இதனால் இலங்கை அரசுக்கு இந்தியா பல கோடி ரூபாய் கடனுதவி வழங்கியது. எரிபொருள், உணவுப்பொருள் என பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கியது.

    தற்போது இலங்கை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

    இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா அடுத்த வாரம் இலங்கை சென்று இலங்கை அதிபரின் பயணத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

    அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • படகு போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொழும்பு:

    இந்தியா-இலங்கை இடையிலான படகு போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி காரைக்காலில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு படகு போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்த போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து தொடங்கவில்லை.

    இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் படகு போக்குவரத்து தொடங்குவது மேலும் தாமதமாகும் என இலங்கை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்தார்.

    "இந்தியாவுடன் படகு போக்குவரத்தை தொடங்க இலங்கை தயாராக உள்ளது. ஆனால் படகு சேவைக்காக இந்தியா தேர்ந்தெடுத்த துறைமுகத்தை மாற்றுவதால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக நாகப்பட்டினம் துறைமுகத்தை தேர்வு செய்துள்ள இந்திய அதிகாரிகள், அங்கு வசதிகளை அதிகரிப்பதற்காக மேலும் சில நாட்கள் தேவை என்று தெரிவித்துள்ளனர்" என இலங்கை மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.

    • சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
    • இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள்.

    கொழும்பு :

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரான்ஸ் அரசு ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் நடுநிலை நாடு. அதே சமயத்தில், இந்தியாவுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுப்பதற்கு இலங்கையை தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்ற உண்மையை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இலங்கையில் சீனர்கள் 1,500 ஆண்டுகளாக இருக்கிறார்கள். ஆனால், சீன ராணுவ தளம் எதுவும் அங்கு இல்லை.

    சீனாவுடன் இலங்கைக்கு ராணுவ ஒப்பந்தம் எதுவும் கிடையாது. இனிமேலும் ஒப்பந்தம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. ராணுவ ஒப்பந்தத்தை சீனா விரும்புவதாக நாங்கள் கருதவில்லை.

    இலங்கையில் உள்ள அம்பந்தொட்டை துறைமுகம், சீன வர்த்தகர்களுக்கு 99 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் பாதுகாப்பு, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

    அம்பந்தொட்டை துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை. இலங்கை தென்பிராந்திய கடற்படை தலைமையகத்தை அம்பந்தொட்டைக்கு மாற்ற போகிறோம். அங்கு ஒரு படைப்பிரிவை நிறுத்தி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு, சீனாவின் 'யுவான் வங்-5' என்ற அதிநவீன உளவு கப்பலை அம்பந்தொட்டை துறைமுகத்தில் நிறுத்திவைக்க இலங்கை அரசு அனுமதி அளித்தது.

    அந்த கப்பல், இந்தியாவில் உள்ள ராணுவ நிலையங்களை உளவு பார்க்கும் என்ற அச்சத்தால், இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கை ஆகும்.

    இலங்கையில் 1988-89 காலகட்டத்தில் நிகழ்ந்த மார்க்சிஸ்ட் கிளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த மோதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டுள்ளனர். கட்டுமான பணிகளின்போது இந்த புதைகுழிகள் வெளிப்பட்டதையடுத்து, அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதைகுழிகள் தோண்டப்பட்டன.

    குறிப்பாக 2013ம் ஆண்டு மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 155 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு இடத்தில் 81 உடல்களும், மற்றொரு இடத்தில் 318 எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில், இலங்கையில் மோதல்கள் நடந்த பல்வேறு காலப்பகுதியைச் சேர்ந்த மனித புதைகுழிகளை இலங்கை அரசு எவ்வாறு கையாண்டது? என்பது தொடர்பாக புள்ளி விவரங்களுடன் சர்வதேச மனித உரிமைகள் குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

    "இலங்கையில் உள்ள பெரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், இலங்கை முழுவதிலும் இன்னும் ஆயிரக்கணக்கான சடலங்கள் புதையுண்டு கிடப்பதாக கூறியதுடன், மனித புதைகுழிகள் தொடர்பான காவல்துறை ஆவணங்களை அப்போதைய ராணுவ அதிகாரியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அழித்திருப்பதாக குற்றம்சாட்டி உள்ளது.

    அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

    அகழ்வு பணிகளில் உள்ள பெரிய பிரச்சனை, அதில் உள்ள அரசியல் தலையீடு ஆகும். அரசியல் தலையீட்டின் பிரதான உதாரணமாக அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்சேவின் நடவடிக்கைகை குறிப்பிடலாம். (கோத்தபய ராஜபக்சே 1989 ஜூலை முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்டத்தின் ராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும், பின்னர் இலங்கையின் அதிபராகவும் இருந்தார்). அவர் மாத்தளை மாவட்டம் உள்பட மத்திய மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்த ஐந்து வருடத்திற்கு முந்தைய கால கோப்புகள் அனைத்தையும் அழித்துவிடுமாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, சர்வதேச சட்டத்தின்படி கோத்தபய ராஜபக்சே மீது இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாகிஸ்தான் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு
    • ஏலம் விடுபவர் சுரேஷ் ரெய்னா பெயரை தேர்வு செய்யவில்லை

    இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை 'சின்ன தல' என சிஎஸ்கே வீரர்கள் செல்லமாக அழைத்தனர்.

    சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரெய்னா, இலங்கையில் நடைபெற இருக்கும் லங்கா பிரீமியர் லீக்கில் விளையாட விரும்பினார். இதனால் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் செய்தார். ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றது.

    நேற்று ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவாக பிரிக்கப்பட்டு வீரர்கள் ஏலம் விடப்படுவார்கள். இவரது பெயரும் ஏலப்பட்டியலில் இருந்ததால், இந்தியாவில் லங்கா பிரீமியர் லீக்கை பிரபலப்படுத்த இவர் விளையாடுவது ஒரு வாய்ப்பாகஇருக்கலாம் என்றும் கருதப்பட்டது.

    ஆனால், ஒவ்வொரு வீரர்களின் பெயர்களையும் ஏலம் விடுபவர் வெளியிட்டு ஏலத்தை ஆரம்பித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னாவின் பெயரை அவர் வெளியிடவில்லை. சுரேஷ் ரெய்னா பெயர் புறக்கணிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஏலம் விடும்நபர் தவறுதலாக சுரேஷ் ரெய்னா பெயரை தெரிவிக்காமல் விட்டாரா? அல்லது சுரேஷ் ரெய்னா ஏலத்தில் இருந்து விலகினாரா? என்பதை சுரேஷ் ரெய்னாவும், லங்கா பிரீமியர் லீக் நிர்வாகமும் வெளிப்படுத்தினால்தான் தெரியவரும்.

    எப்படி இருந்தாலும் லங்கா பிரீமியர் லீக் ஒரு சிறந்த வீரர் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவு ஆகியவற்றை தவறவிடுகிறது என்றால் மிகையாகாது.

    • அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது.
    • தற்போதைய சாதனையை கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம் உறுதி செய்தது.

    கொழும்பு:

    இலங்கையின் ராணுவ மருத்துவர்கள் குழு, உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்றி உலக சாதனை படைத்திருக்கின்றனர். இதுவரை இந்திய மருத்துவர்கள் 2004ம் வருடம் அகற்றியிருந்த கல்தான் மிகப் பெரியதாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், அந்த சாதனை இப்பொழுது முறியடிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாத துவக்கத்தில், கொழும்புவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ஒரு நோயாளிடமிருந்து அகற்றப்பட்ட கல், 13.372 சென்டி மீட்டர் நீளமும், 801 கிராம் எடையும் கொண்டதாக இருந்தது என ராணுவம் தெரிவித்துள்ளது.

    கின்னஸ் உலக சாதனை பட்டியலில், இதுவரை அகற்றப்பட்ட கற்களிலேயே, இந்தியாவில் 2004ம் வருடம் அகற்றப்பட்ட 13 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கல்தான் பெரியதாக பட்டியலிடப்பட்டிருந்தது. அதே போன்று, மிக அதிக எடையுள்ள கல் என 2008ம் வருடம் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் கல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இலங்கையின் தற்போதைய சாதனையை உறுதி செய்த கின்னஸ் உலக சாதனைக்கான நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த கேனிஸ்டஸ் கூங்கே என்பரின் சிறுநீரகத்திலிருந்து 13.372 சென்டிமீட்டர் (5.264 இஞ்ச்) உள்ள ஒரு சிறுநீரக கல், கடந்த 1-ம் தேதி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    ராணுவ மருத்துவமனையின் சிறுநீரகத்துறை தலைவர் டாக்டர் கே.சுதர்சன் தலைமையில், டாக்டர் பதிரத்னா மற்றும் டாக்டர் தமஷா பிரேமதிலகா ஆகியோர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

    • தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
    • தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    கொழும்பு :

    இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி, தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் 13-வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட தமிழர் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் உள்பட ஏற்கனவே பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்திய அவர், இது தொடர்பான செயல் திட்டங்களை வகுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.

    இந்த பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து அவர் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில், தமிழர்களுடன் நல்லிணக்கத்துக்கான செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார். குறிப்பாக, சட்டம் வகுத்தல், நிறுவன செயல்பாடுகள், நிலப்பிரச்சினைகள், கைதிகள் விடுதலை, அதிகார பரவலாக்கம் ஆகிய 5 முக்கிய துறைகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தினார்.

    மேலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல், தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல் போன்ற அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டன.

    இதைத்தவிர காணாமல்போனோர் அலுவலகத்தின் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும் காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்டவற்றின் அவசியத்தையும் ரணில் விக்ரமசிங்கே கூட்டத்தில் வலியுறுத்தினார். நிவாரண அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கான தற்போதைய முயற்சிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யுமாறும் அதிபர் விக்ரமசிங்கே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    இறுதியாக இந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையும் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் இலங்கை வெளியுறவு மந்திரி அலி சாப்ரி, தேசிய பாதுகாப்பு மூத்த ஆலோசகர் சகலா ரத்நாயகே உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார்.

    கொழும்பு

    இலங்கையில் தமிழ் தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவர் யாழ்ப்பாணம் தொகுதி எம்.பி. ஆவார்.

    இவர் இலங்கை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினை ஒன்றை எழுப்ப இருந்தார். அந்த நேரத்தில், கொழும்பு நகரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    போலீசார் தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டின்பேரில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின.

    அவர் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமன்றத்துக்கு செல்லவிருந்த நிலையில் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது தமிழர்கள் பெருவாரியாக வாழும் வடக்கு மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது பற்றி கூறப்படுவதாவது:-

    கடந்த 2-ந்தேதியன்று கஜேந்திர குமார் பொன்னம்பலம் எம்.பி, வடமராச்சி என்ற இடத்தில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். அந்த இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்கு சி.ஐ.டி. அதிகாரிகள் என்று சிலர் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்து அவரைச் சந்தித்துள்ளனர்.

    ஆனால் அவர்களை அடையாள அட்டையை காட்டும்படி அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். மேலும், அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை தாக்கியும் உள்ளனர். வந்த போலீசாரில் ஒருவர் அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியும் உள்ளார்.

    மேலும் அவரை மருதங்கேணி போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் அளிக்குமாறு கூறி உள்ளனர்.

    ஆனால் அவர் நாடாளுமன்ற சபாநாயகரைத் தொடர்பு கொண்டு பேசி தனக்கு நடந்ததை கூறினார். அதைத்தொடர்ந்து அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து உரிமை பிரச்சினையை எழுப்பலாம் என்றும் 12-ந்தேதிக்கு பின்னர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. இதையொட்டி போலீஸ் ஐ.ஜி. அவருக்கு உறுதியும் அளித்துள்ளார். அதையும் மீறித்தான் கைது நடவடிக்கை நடந்துள்ளது.

    இவ்வாறு தெரிய வந்துள்ளது.

    • பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

    கொழும்பு:

    நமது அண்டை நாடான இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார்.

    இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக இன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது.

    இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை 323 ரன்கள் குவித்தது.
    • குசால் மெண்டிஸ், கருணரத்னே அரை சதமடித்தனர்.

    அம்பாந்தோட்டை:

    இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்தது. குசால் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 52 ரன்னிலும் அவுட்டாகினர். சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும், நிசங்கா 43 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஹஷ்மதுல்லா ஷாகிடி 57 ரன்னிலும், இப்ராகிம் ஜட்ரன் அரைசதம் அடித்து 54 ரன்னிலும் அவுட்டாகினர். ரஹ்மத் ஷா 36 ரன்னில் வீழ்ந்தார்.

    அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம்ழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட் வீழ்த்தியும், 29 ரன்னும் எடுத்த தனஞ்செய டி சில்வா ஆட்ட நாயகனாக தேர்வானார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது. வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 268 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    அம்பாந்தோட்டை:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது.

    இந்நிலையில், முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அசலங்கா பொறுப்புடன் ஆடி 91 ரன்கள் எடுத்தார். டி சில்வா 51 ரன்னும் எடுத்தார். நிசாங்கா 38 ரன் சேர்த்தார்.

    இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி 98 ரன்னில் அவுட்டானார். ரஹ்மத் ஷா 55 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹஸ்மத்துல்லா ஷாகிடி 38 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    • கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
    • இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.

    கொழும்பு :

    கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.

    இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.

    அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.

    இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

    இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

    இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    ×