என் மலர்
உலகம்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரஷியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைந்தது
- ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
- இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்டது. இதில் இந்தியா மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
இதில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் அபராத வரியாக விதிக்கப்பட்ட 25 சதவீதத்தை அமெரிக்கா ரத்து செய்தது. மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இந்தியாவுக்கு அமெரிக்கா, வெனிசுலா கச்சா எண்ணெயை விற்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தியாவில் ரஷியாவிடம் இருந்து பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரஷியாவில் இருந்து இந்தியாவின் பொருட்கள் இறக்குமதி 2.86 பில்லியன் டாலராக இருந்தது.
இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடும்போது 40.48 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரியில் ரஷியாவின் பொருட்கள் இறக்குமதி 4.81 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ரஷியாவில் இருந்து இந்தியாவின் மொத்த பொருட்கள் இறக்குமதியில் கச்சா எண்ணை இறக்குமதி 80 சதவீதம் ஆகும். தற்போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ளன.
இதன் காரணமாக ரஷிய இறக்குமதி சரிவை சந்தித்து உள்ளது. ரஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு வரும் மாதங்களில் கடுமையாக குறையும் என்றும் , இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது மலிவான வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்க விரும்பும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
வெனிசுலா மீதான அமெரிக்க தடைகளுக்கு முன்பு இந்தியா வெனிசுலா கச்சா எண்ணெய் வாங்குபவர்களில் முக்கிய நாடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






