என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும் விரும்புகிறார்கள்- திருச்சி வேலுசாமி
    X

    த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களும் விரும்புகிறார்கள்- திருச்சி வேலுசாமி

    • காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
    • நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே களத்தில் அனல்பறக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளப்போகும் கட்சியும் தங்களுக்கான கூட்டணியை இன்னும் இறுதிசெய்யாத நிலையில் அத்தனை தொகுதிகளில் வெல்வோம், இத்தனை தொகுதிகளில் வெல்வோம் என்று கூக்குரலிட்டு வருகிறார்கள்.

    கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தபோதிலும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் ஒரு அணியும், விஜய்யின் த.வெ.க. கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டன. இதர கட்சிகளாக தே.மு.தி.க. தனது கூட்டணி குறித்து வருகிற 9-ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    அ.ம.மு.க., பா.ம.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழு போன்றவை விரைவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியுள்ளன. அதன் அடிப்படையில் 4 முனை போட்டியா அல்லது 5 முனை போட்டியா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

    கட்சி தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜயின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக அக்கட்சியும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தபோதிலும் அதன் மூத்த நிர்வாகிகள் தற்போது வரை எந்த விமர்சனமும் செய்யாதது சந்தேகங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.

    இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.

    காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

    பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

    எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்தது.

    நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இது போன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்றார்.

    Next Story
    ×