என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற காங்கிரஸ் முடிவு? - மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்
- காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தி.மு.க. தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு.
- ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை ஒவ்வொன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளை கேட்டதாகவும், தி.மு.க. தரப்பில் 23 தொகுதிகளை வழங்குகிறோம் என சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ் கட்சி கேட்கும் சீட் எண்ணிக்கையை குறைக்காமல் பிடிவாதமாக இருப்பதால் எந்த முடிவுக்கும் தயார் நிலையில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை காங்கிரஸ் எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரசின் கோரிக்கையை ஏற்க தி.மு.க. தலைமை மறுத்துவிட்டதால் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.
கூட்டணியை தக்கவைக்க கடைசி வாய்ப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்திக்க உள்ளார். தி.மு.க.வுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதில் ப.சிதம்பரம் உறுதியாக இருக்கிறார். கூட்டணி முறிவை தவிர்க்க ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ப.சிதம்பரத்தின் இல்லத்தில் அவரை சந்தித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தி வருகிறார்.
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் அவசர ஆலோசனை நடத்தினர்.






