என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. 4 அணிகளாக உடைந்ததற்கு பா.ஜ.க. தான் காரணம்- செல்வப்பெருந்தகை
- காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
- பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குரிமை விளக்க விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்காக பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் சேர்ந்து பறித்து வருவதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
இதே கருத்தை வலியுறுத்தித்தான் ராகுல் காந்தி பீகாரில் பயணம் மேற்கொண்டார். இப்போது வாக்குகளை பறிப்பதற்கும், அடுத்ததாக குடியுரிமையைப் பறிப்பதற்கும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.
இதனை தடுக்கக் கோரி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாவிட்டாலும், நாங்கள் கேட்ட பல தரவுகளை அவர்கள் அழித்துவிட்டனர். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கரேஜ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
நான் எப்போதும் காங்கிரசின் குரலாகவே பேசுகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்காகவும் தி.மு.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம். இப்படி மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு குரலாக காங்கிரஸ் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் சொல்கிறார் எனத் தெரியவில்லை.
பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். 4 தேர்தல்களில் தோல்வியை கண்ட கூட்டணி. அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கூட்டணி. மக்கள் எதிர்ப்பை பார்த்துவிட்டுத்தான் டி.டி.வி. தினகரன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.
பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 4 அணிகளாக உடைந்ததற்கும், பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கும் பாரதீய ஜனதா தான் காரணம். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
யார் ஒன்றாகச் சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதகமும் கிடையாது. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால்கூட, வேறு ஒருவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி சென்று நிற்கும் நிலைதான் உருவாகும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 3-வது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.






