search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் பிரசாரம்
    X

    தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இன்று ஒரே நாளில் பிரசாரம்

    • தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. தி.மு.க. வேட்பாளராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் முதல் வீதி, வீதியாக சென்று மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இன்று மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் கனிமொழி, ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்தார். சிந்தலக்கரை பிரசாரத்தை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் புறப்பட்டு செல்கிறார்.

    இதேபோன்று தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார்.

    அவரை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    ஒரே நாளில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதேபோன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடக்கிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×