என் மலர்
செய்திகள்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததே மோடி அரசின் சாதனை- கனிமொழி எம்பி பேச்சு
கோவில்பட்டி:
கோவில்பட்டி தொகுதிக்கான தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் வரும் போதும் கோ பேக் மோடி என்று தைரியமாக சொல்லக்கூடிய மாநிலம் தமிழகம் தான். சாலை வழியாக வந்தால் மக்கள் கருப்பு காட்டுவார்கள் என்று கருதி ஹெலிகாப்டரில் போன போது கருப்பு பலூன் பறக்கவிட்டார்கள். அந்தளவுக்கு பா.ஜ.க. மீது வெறுப்பும், காழ்ப்பும் உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. வை மக்கள் வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள். அவர்கள் இருவரும் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். மக்கள் வாக்களிப்பதற்கும், வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கும் ஒரு இடைவெளி இருக்கும். அந்த இடைவெளியை வாக்குச்சாவடி முகவர்கள் நிரப்பக்கூடியவர்கள்.
இத்தனை வருடமாக எந்த உதவித்தொகையும் போய் சேரவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் தெருவில் இறங்கி போராடினால் தான் அரசு அவர்களது கருத்தை கேட்கும் நிலை உள்ளது. ஆனால் தேர்தல் வருகிறது என புரிந்து கொண்டு ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் பணம், சலுகைகள் கொடுக்கக்கூடிய விஷயங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குழப்பமான ஜி.எஸ்.டி. வரியால் கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற கடலைமிட்டாய் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பெரிய முதலாளிகள் மட்டுமே தற்போது கடலை மிட்டாய் தயாரித்து, விற்பனை செய்து லாபம் பார்க்கும் நிலையில் உள்ளனர். சாதாரண நிலையில் உள்ளவர்கள் அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. தீப்பெட்டி தொழிலுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் பெண்கள் தான் வேலை பார்க்கின்றனர். அவர்கள் வேலை இழந்துள்ளனர். புதிதாக வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளது. இது தான் மோடி அரசின் சாதனை.
மோடியின் எந்தவொரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எடப்பாடி எதை சொன்னாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதனால், அ.தி.மு.க.- பாரதிய ஜனதா கூட்டணியை நாட்டை விட்டு விரட்ட வேண்டும். அப்போது தான் இந்த நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற முடியும்.
அ.தி.மு.க. ஆட்சி எப்போது தமிழகத்தை விட்டு அகலும், எப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று மக்கள் காத்து கிடக்கின்றனர். வருகிற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்காத நிலை உள்ளது. இது தான் மோடி அரசின் சாதனை.
இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #bjp #pmmodi






