search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்திகை தீபம் ஏற்றும்போது மலைக்கு மேல் பக்தர்களை அனுமதித்தால் என்ன?: கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    கார்த்திகை தீபம் ஏற்றும்போது மலைக்கு மேல் பக்தர்களை அனுமதித்தால் என்ன?: கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி

    கார்த்திகை தீபம் ஏற்றும்போது மலைக்கு மேல் பக்தர்களை அனுமதித்தால் என்ன என்று திருவண்ணாமலை கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
    சென்னை:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் மலை மேல் ஏற தடை விதித்து மாவட்ட கலெக்டர் கடந்த 7-ந் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சக்திவேல் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘மகாதீபம் ஏற்றும்போது மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு போடுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவதால் அசம்பாவிதம் நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், ‘கார்த்திகை தீப திருநாளன்று கிரிவலம் செல்வது என்பது மக்களின் நம்பிக்கை. அதை தடுக்கமுடியாது. மலைமேல் தீபம் ஏற்றுவது என்பது முக்கியமான நிகழ்வு. இதற்காக பக்தர்கள் 40 நாட்கள் விரதமிருந்து மலைக்குமேல் செல்கின்றனர். இந்த பழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க முடியாது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, ‘குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களை மலைக்கு மேல் ஏன் அனுமதிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பி, அதற்கு மாவட்ட கலெக்டர் இன்று (புதன்கிழமை) பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×