என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்- குடும்ப தலைவர் படம் இணைக்க முகாம்
    X

    ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்- குடும்ப தலைவர் படம் இணைக்க முகாம்

    ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண்- குடும்ப தலைவர் படம் இணைக்க இன்று முதல் வரும் 13-ந்தேதி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் 6 லட்சத்து 55 ஆயிரத்து 46 குடும்ப அட்டைகள் வழக்கத்தில் உள்ளன.

    மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 530 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆதார் பதிவில் குடும்ப தலைவரின் புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதாலும், குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருப்பதாலும் ஸ்மார் கார்டுகள் அச்சடிக்க காலதாமதமாகிறது.

    இதையடுத்து மின்னணு குடும்ப அட்டைகள் உடனடியாக அச்சடித்து வழங்கிட ஆதார் எண் இணைப்பு மற்றும் குடும்ப தலைவர் புகைப்படம் சேகரிக்கும் பணி தற்போது அந்தந்த நியாய விலைக்கடைகளில் நடந்து வருகிறது. இப்பணிகளில் தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க இன்று 6-ந் தேதி முதல் வரும் 13-ந்தேதி வரை வரும் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நீங்கலாக அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    தினசரி பணிகளோடு ஆதார் எண் இணைத்தல் மற்றும் புகைப்படம் பெறும் பணியினையும் விற்பனையாளர்கள் மேற்கொள்வர்.

    ஆகவே இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் தங்கள் பகுதி நியாயவிலைக்கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கவும், குடும்பத்தலைவர் அல்லது தலைவியின் புகைப்படத்தை நேரில் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

    திருவள்ளூர் பகுதியில் இன்னும் பெரும்பாலானோர் ஆதார் எண் பெறாமல் உள்ளனர். இதைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது.

    காலையிலேயே 100-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்து கிடக்கிறார்கள். பல மணி நேரம் காத்திருந்து ஆதார் எண்ணுக்கு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
    Next Story
    ×