என் மலர்
விளையாட்டு
தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
சிந்து அடுத்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-9 என்ற நேர் செட்டில் ரஸ்மஸ் ஜெம்கேவை (டென்மார்க்) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீவ் டாரனிடம் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகிய இந்திய ஜோடிகளும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதியை உறுதி செய்தன.
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவ்வளவு எளிதில் சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.
ஒரு வழியாக கடைசி நிமிடத்தில் மோகன் பகான் வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்தார். முடிவில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது. சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் (இரவு 7.30மணி) ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு டெல்லி வந்திறங்கிய இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம், உங்களை டோனியுடன் ஒப்பிட்டு பேசுகிறார்களே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு 23 வயதான ரிஷாப் பண்ட் கூறுகையில்,
‘டோனி போன்ற மிகச்சிறந்த வீரருடன் என்னை நீங்கள் ஒப்பிட்டு பேசுவது மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை, எந்த வீரருடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. இந்திய கிரிக்கெட்டில், எனக்குரிய அடையாளத்துடன் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.
டோனி போன்ற ஜாம்பவான்களுடன் என்னை போன்ற சிறிய வீரர்களை ஒப்பிடுவது நல்ல விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய தொடரில் நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து ஒட்டுமொத்த அணியினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்’ என்றார். சிட்னி டெஸ்டில் 97 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன்களும் விளாசி ரிஷாப் பண்ட் ஹீரோவாக ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.
India's series winning captian Ajinkya Rahane receiving a grand welcome as he returns back home in Mumbai. #INDvAUS#AUSvINDpic.twitter.com/bc22dizSYL
— Gav Joshi (@Gampa_cricket) January 21, 2021
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் மிகவும் வெற்றி கரமாக முடிந்தது.
3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
இரு அணிகள் இடையே 4 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய மண்ணில் 2-வது தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
அடிலெய்டுவில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிரா ஆனது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேனில் முதல்முறையாக டெஸ்டில் வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.
விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களையும், அனுபவமற்ற பந்து வீச்சையும் வைத்துக் கொண்டு ரகானே தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவில் சாதித்து காட்டியது. சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் இன்று நாடு திரும்பினார்கள்.
வீரர்கள் தனித்தனியாக தங்களது சொந்த நகருக்கு சென்றடைந்தனர். அணியின் தற்காலிக கேப்டன் ரகானே, ரோகித்சர்மா, பிரித்விஷா, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் மும்பை வந்தடைந்தனர்.
கடைசி டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஷப் பண்ட் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவர் கூறும்போது, “கோப்பையை தக்க வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரை கைப்பற்றியதால் ஒட்டு மொத்த வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்” என்றார்.
ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார்.
29 வயதான அவர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு இன்று வருகிறார்.
கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார்.
சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அவரது நண்பர்கள் கூறும்போது, “நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
நாளையே (22-ந் தேதி) சென்னைக்கு புறப்பட்டு சென்று விடுவார் என்பதால் அவரை பார்த்து வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள் இன்று மாலையே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்” என்றனர்.
நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டிகளில் சேர்த்து 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.
20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்து வீச்சாளரான நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் சென்னை வந்து கொரோனா தடுப்பு வளையத்துக்குள் வருவார்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மாற்றமின்றி முதலிடத்திலும்(919 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 2-வது இடத்திலும் (891 புள்ளி) தொடருகிறார்கள்.
இந்தியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 12 புள்ளி கூடுதலாக பெற்று மொத்தம் 878 புள்ளிகளுடன் 4-ல் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது இடம் வகித்த இந்திய கேப்டன் விராட் கோலி கடைசி டெஸ்டையும் தவற விட்டதால் மேலும் 8 புள்ளிகளை இழந்து 862 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் 89 ரன் விளாசி 328 ரன் இலக்கை எட்டுவதற்கு வித்திட்ட இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கிடுகிடுவென 13 இடங்கள் எகிறி 13-வது இடத்துக்கு (691 புள்ளி) வந்துள்ளார். தற்போது விக்கெட் கீப்பர்களில் சிறந்த தரநிலையை கொண்டிருப்பது ரிஷாப் பண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே டெஸ்டில் 91 ரன்கள் குவித்த மற்றொரு இந்திய ‘இளம்புயல்’ சுப்மான் கில் 21 இடங்கள் உயர்ந்து 47-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதே போல் இந்திய அனுபவ வீரர்கள் புஜாரா 7-வது இடத்திலும் (ஒரு இடம் ஏற்றம்), அஜிங்யா ரஹானே 9-வது இடத்திலும் (2 இடம் சரிவு) ரோகித் சர்மா 18-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு) உள்ளனர். காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 6 இடங்கள் அதிகரித்து 5-வது இடத்தை (783 புள்ளி) பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில், இந்திய தொடரில் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 2-வது இடத்திலும், நியூசிலாந்தின் நீல் வாக்னெர் 3-வது இடத்திலும் உள்ளனர். பிரிஸ்பேன் டெஸ்டில் மொத்தம் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் மேலும் ஒரு இடம் ஏற்றம் கண்டு 4-வது இடத்தை வசப்படுத்தினார். கடைசி டெஸ்டில் ஆடாவிட்டாலும் இந்தியாவின் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா தலா ஒரு இடம் உயர்ந்து முறையே 8, 9-வது இடங்களை வகிக்கிறார்கள்.
பிரிஸ்பேன் டெஸ்டில் சொதப்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8-ல் இருந்து 11-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். இதே போட்டியில் 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 32 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தை பிடித்துள்ளார்.






