என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.
- முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.
முதுமையில் சர்க்கரை (இனிப்பு) நோய் எனும் நீரிழிவு நோய் ஆரோக்கியத்திற்கு கசப்பை உண்டாக்கிவிடுகிறது. ஏனெனில் இரண்டு முதியவர்கள் பேசிக்கொள்ளும் போது, நலம் விசாரித்த காலங்கள் மாறி, சர்க்கரை அளவை விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் இந்த நிலை இருந்தாலும் நம் ஊரில் சற்று அதிகம் தான். மறந்து போன வாழ்வியல் நெறிமுறைகளும், உணவு முறைகளும், நோயினை உண்டாக்க முக்கிய காரணமாக இருப்பினும், முதுமையில் உடல் திசுக்கள் தேய்மானம் அடைவதும் காரணமாக உள்ளது.
அத்துடன் நம் உடல் செல்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய சர்க்கரையானது, இன்சுலின் தடையின் (IR) காரணமாக செல்லுக்குள் நுழைய முடியாமல், ரத்தத்தில் அதன் அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இன்சுலின் சுரப்பு குறைவால் உண்டாகும் டைப்-1 நீரிழிவு பெரும்பாலும் இளம் வயதினருக்கே ஏற்படுகின்றது. இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.
முதுமையில் 65 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி நீரிழிவு நோயின் துணை நோய்களான அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவைகளும் ஒன்று கூடி முதுமையை வாட்டி வதைக்கும்.
எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி அடைந்து, மருத்துவ முறைகள் மேம்பட்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. ஆக பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவதும், பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதும், முதுமையில் சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்.

நீரிழிவு எனும் மதுமேக நோய் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் கூறியுள்ளது சிறப்புமிக்கது. சித்த மருத்துவத்தின் அடிப்படை கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் 'கபவாதம்' கூட்டணியால் மதுமேகம் எனும் நீரிழிவு உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அத்தகைய நீரிழிவினை 20 வகைகளாக பிரித்தும் விளக்கியுள்ளது.
இத்தகைய கபவாதம் தணித்து, இன்சுலின் தடையை நீக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருட்களும், மருந்துப்பொருட்களும் பயன்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது முதுமையில் நீரிழிவினைக் கட்டுக்குள் வைக்கும்.
ஏன் இந்த சர்க்கரை வியாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? சர்க்கரை நோய் என்ற பெயரைக் கேட்ட உடனே மனதுக்குள் அலறலும், குமுறலும் ஏன்? என்றால் இந்நோயில் உண்டாகும் பின்விளைவுகள் தான் காரணம். நீரிழிவு நோயின் பின் விளைவுகள் பற்றி நவீன மருத்துவமும், நீரிழிவு நோயால் உண்டாகும் அவஸ்த்தைகள் என்று சித்த மருத்துவமும் விளக்குகின்றன. அந்த அவஸ்த்தைகளில் மிக முக்கியமானவை இரண்டு நோய்நிலைகள். ஒன்று இதய நோய்கள், மற்றொன்று பக்கவாதம்.
நீரிழிவு நோயால் இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பு 1.8 மடங்கு அதிகம் உள்ளதாகவும், 1.5 மடங்கு பக்க வாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.
இவை ஒருபுறமிருக்க, நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கண்பார்வை குறைபாடு 28 சதவீதம் பேருக்கு உண்டாவதாகவும், கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் பேருக்கு நரம்பு சார்ந்த தொந்தரவுகளும் உண்டாவதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயானது பல்வேறு நோய்நிலைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது. அதிமுக்கியமாக நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.
ஆகவே காலத்திற்கும் மருத்துவமனை வாசலை நாட வைக்கும், பொருளாதார கொள்ளை நோயாக இருக்கும் நீரிழிவு நோய் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, உடல் உறுப்புகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகளையும் நாடுவது நல்லது. சித்த மருத்துவம் மேற்கூறிய இரண்டிலும் ஒரு சேர நன்மைத் தரக்கூடியது.
சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், வேப்பிலை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, ஆவாரை, கடலழிஞ்சில், நாவல்கொட்டை, பாகல்காய், கோவைக்காய், மருதம்பட்டை, தேற்றான்கொட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, வேங்கைப்பட்டை, நித்யகல்யாணி, சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, துளசி, கடுகுரோகிணி ஆகிய மூலிகைகளும் மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப் பெட்டி சரக்குகளும் நீரிழிவு நோயில் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் உலகமே கண்டு அஞ்சும் நீரிழிவு நோயின் பின் விளைவு களை தடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தன.
மேற்கூறிய சித்த மருத்துவ மூலிகைகள் 'மதுமேகம்' எனும் சர்க்கரை நோய்க்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சித்த மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீனோலிக் வேதிப்பொருட்களும், இயற்கை நிறமிகளும், அல்கலாய்டுகளும் இன்னும் பல்வேறு வேதிப்பொருட்களும் சர்க்கரை நோய்க்கு சிகப்பு சிக்னல் காட்டி, நல்வாழ்விற்கு பச்சைக் கொடி காட்டும் தன்மை உடையன.

சித்த மருத்துவ மூலிகைகள் நம் உடல் செல்களுக்குள் சர்க்கரையை உட்செலுத்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் தடையை நீக்குவதன் மூலமும் சர்க்கரை அளவு குறைய வழிவகை செய்கின்றன. அத்துடன் நம் குடலில் ஆல்பா குளுகோசிடேஸ் மற்றும் ஆல்பா அமைலேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கக்கூடியதாக உள்ளதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மூலிகைகளில் உள்ள பிளவனாய்டு வகை வேதிமூலக்கூறுகள் கணைய செல்களை புதுப்பித்து, இன்சுலின் சுரப்பை த் தூண்டக்கூடியதாகவும் உள்ளன.
அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நிலவேம்பு மூலிகையானது சர்க்கரை அளவைக் குறைப்பதில் நற்பலன் தரக்கூடியது. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலெய்டு' எனும் வேதிப்பொருள் குடலில் உள்ள பல்வேறு நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
சுடுகாட்டு மல்லி எனும் நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் பலன் தரும். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட 'வின்கிரிஸ்டின்', 'வின்பிளாஸ் டின்' வேதிக்கூறுகளுக்கு ஆதாரம் இந்த மூலிகை தான். இவை புற்றுநோயில் மட்டுமின்றி, சர்க்கரை நோயிலும் பலன் தரக்கூடியன.
மருதம்பட்டை எனும் மூலிகை இதய நோய்நிலைகளில் பலன் தரும் என்கின்றன பல்வேறு ஆய்வுகள். இதில் உள்ள 'அர்ஜுனின்' எனும் வேதி மூலக்கூறு அதற்கு காரணமாகின்றது. மேலும் இது கல்லீரலைக் காத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். எனவே சர்க்கரை நோயுள்ள முதியோர்கள் இதயத்தைக் காத்துக்கொள்ள 'மருதம்பட்டை சூரணம்' எனும் சித்த மருந்தை நாடுவது ஆயுளைக் கூட்ட உதவும்.
சர்க்கரை நோயில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், நரம்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பினை தடுக்க வேண்டியது மிக அவசியம். இந்நிலையில் 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்து உள் உறுப்புகளைக் காத்து நலம் பயக்கக்கூடியது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. அதாவது உடலில் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கூறுகளை நீக்கும் தன்மை இதற்குண்டு. எனவே நீரிழிவு நோயில் இறுதி வரை இதயம், சிறுநீரகம், கண் பார்வை செயல்பாடுகள் குறையாமல் தடுக்க திரிபலை சூரணத்தை தினசரி இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.
"ஆவாரை பொழித்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சொலவடையை மறந்ததால் இழப்பு நம் ஆரோக்கியத்திற்குத் தான். சிறப்புமிக்க ஆவாரை பூவுடன் சிறிது லவங்கப்பட்டை, வெந்தயம், மஞ்சள் சேர்த்து தேநீராக்கி குடித்து வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அல்லது ஆவாரைக் குடிநீர் எனும் சித்த மருந்தினை கசாயமாக்கி குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். நம் ஊரில் வறண்ட நிலப்பகுதியில் மஞ்சள் நிறப்பூக்களுடன் பூத்து குலுங்கும் ஆவாரை நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்த வரம். எளிமையாய் வறண்ட பூமியில் கிடைப்பதால் இதன் மகத்துவம் பலருக்கு விளங்கவில்லை.
கல்லீரல் நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடிய கீழாநெல்லியும் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், நீரிழிவு நோயில் உண்டாகும் கை, கால் எரிச்சல் ஆகிய நிலைகளிலும் பலன் தரக்கூடியது. 'மதுமேக சூரணம்' எனும் சித்த மருந்தில் வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் இவற்றுடன் கீழாநெல்லி சேருவதும் குறிப்பிடத்தக்கது.
வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பகல் நேரங்களில் தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், ரத்தத்தில் அதிகமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலுக்கும் நன்மை பயக்கும்.
அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களும், தாவர உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதலும், நீரிழிவு நோயைத் தடுப்பதோடு, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுகள். சித்த மருத்துவமும் "கோதையர் கலவி போதை, கொழுத்த மீன் இறைச்சி போதை, ஊதுவாய் நெய்யும் பாலும் பரிவுடனுண்பீராகில்" என்று பல்வேறு உணவு உணவுகளை அதிகம் சேர்ப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்கிறது. இன்றைய ஆய்வு முடிவுகள் அறுதியிட்டு கூறுவதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்த மருத்துவம் கூறி இருப்பது, நம் பாரம்பரிய அறிவின் முற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது.
(தொடரும்...)
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com
- செய்த உதவிக்குப் பணம் பெறுவது அறத்திற்குப் புறம்பானது! பணம் வேண்டாம் என்றான் இளைஞன்.
- உதவி செய்யும் தயாள குணம் உடையவர்களே உதவிபெறும் தாராளத் தகுதியையும் அடைகிறார்கள்.
உதவி! - செய்பவரே பெறுகிறார்உதவும் குணத்தில் ஒப்பற்று விளங்கும் உன்னத வாசகர்களே!
வணக்கம்.
மருத்துவமனைகள், விமான, ரெயில், பஸ் நிலையங்கள், பெரும் அலுவலகங்கள், காவல் நிலையங்கள், முகாம்கள், மாநாடுகள், திருவிழாக்கள் போன்ற மக்கள் அதிகமாகச் செல்லும் இடங்களிலெல்லாம், முகப்பில், "நான் தங்களுக்கு உதவட்டுமா?"( May I Help You!) என்கிற சிறு பெயர்ப் பலகையோடு சில மனிதர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டிருப்பீர்கள்.
வாழ்வில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவைகள் ஆயிரக்கணக்கில் என்றால், சமுதாய மனிதனுக்குப் பல்லாயிரக்கணக்கில் இருக்கும். தனிமனிதனோ சமூக மனிதனோ, அவரவர் தேவைகளை அவரவர் நிறைவேற்றிக்கொள்ள முடியாதபோது அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இப்படித்தான் 'உதவி' என்பது உற்பத்தி ஆகிறது.
தேடிப்பார்த்தால், உதவி தேவைப்படாத மனிதர்கள் இந்த உலகில் இல்லவே இல்லை என்றுதான் கூற வேண்டும். வறியவர்கள், கூழுக்கு உப்பில்லை எனக் காத்திருப்பர்; கொஞ்சம் வசதி படைத்தோர் பாலுக்குச் சீனி இல்லை என வருந்தியிருப்பர். அவரவர் தகுதிக்கேற்ப அடுத்தவர் உதவிக்காகக் காத்தே இருக்கின்றனர்.
பிரதிபலன் கருதாமல் செய்யப்படுவதே உதவி. அதுவும் நியாயமான தேவையின் உச்சத்தில், கடும் நெருக்கடியில் உழலும்போது, உதவும் குணத்தோடு, ஓடிவந்து செய்யப்படுவதே சரியான உதவி. பெரும்பாலும் நண்பர்கள் இந்த வகையில் ஒருவருக்கொருவர் கேட்காமலேயே உதவி செய்து கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
உதவி என்பது பொருள் சார்ந்ததா? அல்லது செயல் சார்ந்ததா? என்று கேட்டால், கோடீஸ்வரனுக்குப் பத்து லட்ச ரூபாய் கொடுத்து உதவுவதை விட, ஓர் ஏழைக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உதவுவது உத்தமமானதாக இருக்கலாம். கோடீஸ்வர நண்பன் மூன்றாவது கார் வாங்குவதற்குப் பத்து லட்ச ரூபாய் கொடுத்து உதவியிருக்கலாம்; ஏழை நண்பர் மனைவியின் காதுக் கம்மல் அடகுக் கடையில் மூழ்கிப்போகாமல் திருப்ப அந்தப் பத்தாயிரம் உதவி செய்யப்பட்டிருக்கலாம். இதில் பொருளை விடச் செயலின் நோக்கமே உதவிக்கு உன்னதம் சேர்க்கிறது.
நாம் ஏன் அடுத்தவர்க்கு உதவி செய்ய வேண்டும்?. பொருளோ? செயலோ? எதுவாயினும் அடுத்தவர்க்கு உதவினால் அது எப்படி நமக்கு நன்மையைத் தரும்?. பொருளைத் தரத்தர நமது செல்வக் கையிருப்புக் குறையத்தானே செய்யும். வலியச் சென்று பிறருக்கு உதவும்போது பல சமயங்களில், வீண் பழிச்சொல்லும் நேர விரயமும் நமக்குத்தானே வருகிறது? என்று சிலர் கூறும் அனுபவப் புலம்பலும் ஒருபக்கம் ஒலிக்கத் தான் செய்கிறது.
உதவி செய்வதிலும் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறும் திருவள்ளுவர், அவரவர் தகுதி அறிந்து உதவி செய்யவேண்டும் என்கிறார். ஆயினும் சரியான மனிதர்க்குச் செய்யப்படுகிற உதவி அளவில் மிகச் சிறிய தினை அளவினதாக இருந்தாலும் அதனைப் பனையளவு உயர்ந்ததாகக் கருத இடமிருக்கிறது என்றும், இக்கட்டின் தருணம் தீர்வதற்குள், காலத்தில் செய்யப்படுகிற உதவிக்கு இந்த உலகம்கூட ஈடாகாது என்றும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
உதவி செய்வதால் நன்மை உண்டு; ஒரு தானியம் விதையாக இருக்கும்போது அது ஒற்றையாகவே இருக்கும். அது நல்ல நிலம் பார்த்து விதைக்கப்படும்போதே ஒன்று பலவாகப் பெருகும். விதைப்பவர்க்கே விளைச்சல் பெருகும். நாம் பிறருக்குச் செய்யும் உதவியும் அப்படித்தான்.
வெளிநாட்டில் ஓர் ஆறுவழி நெடுஞ்சாலை; எந்த வண்டி எந்த வேகத்தில் எப்படிச் செல்லுகிறது என்பதையெல்லாம் கண்டுகொள்ளாதபடி சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இருள் நெருங்கிக் கொண்டிருக்கும் மாலை நேரம்; ஒரு வயதான பெண்மணி ஓட்டிக்கொண்டு வந்த காரின் டயர் பஞ்சர் ஆகி சாலை ஓரமாக நிறுத்தப்படுகிறது. காரை விட்டு இறங்கிய பெண்மணி, போகிற கார்களையெல்லாம் பார்த்துக் கைகளை உயர்த்தி உதவி கேட்கிறாள்; யாரும் இவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாயிற்று; குளிர் பொறுக்க முடியவில்லை; நடுங்கிக்கொண்டே காருக்குள் ஏறி ஏமாற்றத்துடன் அமர்ந்துகொண்டாள்.
அப்போது ஒரு கார் இவரது காருக்குப் பின்னால் ஓரங்கட்டி நிறுத்தப்படுகிறது. ஆஜானுபாகுவான ஓர் இளைஞன் இறங்கி வந்து, "ஏதாவது பிரச்சினையா? நான் உதவலாமா?" என்று மூதாட்டியிடம் கேட்டார். சற்று அச்சத்துடன், டயர் பஞ்சர் ஆனதையும் மாற்று ஸ்டெப்னி டயர் வண்டியின் பின்புறம் இருப்பதையும் சொன்னார் மூதாட்டி.
அந்த இளைஞன், மளமளவென்று வேலையில் இறங்கினான். குளிர் கூடிக்கொண்டிருக்கும் அந்த மங்கிய வெளிச்ச நேரத்திலும், பழுதான சக்கரத்தை கழற்றி, மாற்றுச் சக்கரத்தை மாட்டி, அந்த மூதாட்டியிடம்,"வேலை முடிந்தது மேடம்!, நீங்கள் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பலாம்!" என்றான்.
மிகுந்த மகிழ்ச்சியோடு அந்த மூதாட்டி, 'நீங்கள் பார்த்த வேலைக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டார். "மேடம் நான் பார்த்தது வேலை அல்ல! உதவி!; செய்த உதவிக்குப் பணம் பெறுவது அறத்திற்குப் புறம்பானது! பணம் வேண்டாம் என்றான் இளைஞன்.
"இது உங்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஆயினும் உங்களுக்குப் பிரதியாக நான் எதுவும் செய்யாமல் போனால் நான் நன்றி கொன்றவள் ஆவேன். உங்கள் உதவிக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேளுங்கள்!. தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்; தயவு செய்து மறுத்து விடாதீர்கள்" என்றார் மூதாட்டி.
"அம்மா! என் பெயர் ஜான் பிரிட்டோ. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இனி உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நபர்களில் யாராவது ஒருவருக்கு உதவி பெறும் தகுதி இருந்து, அவருக்கு மனப்பூர்வமாக நீங்கள் உதவ முனையும்பொழுது, அப்பொழுது என் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள் அதுபோதும். மிக்க நன்றி. நீங்கள் போய் வாருங்கள்!" என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிக் கிளம்பினான் ஜான் பிரிட்டோ.
ஜானின் உதவும் குணத்தை வியந்த வண்ணம் காரில் கிளம்பிய மூதாட்டி, சிறிது தொலைவில் இருந்த ஒரு சாலையோர உணவகத்தில் இரவு உணவுக்காக வண்டியை நிறுத்தினார். ஓர் நிறைமாத இளம் கர்ப்பிணிப்பெண் அந்த மூதாட்டிக்கு வேண்டிய உணவு வகைகளைப் பரிமாறும் பணியில் ஈடுபட்டாள். வயிற்றில் பிள்ளை சுமக்கும் அந்த சிரமமான தருணத்திலும் மலர்ந்த முகத்தோடு பரிமாறிய அந்தப் பெண்ணை மூதாட்டிக்குப் பிடித்து விட்டது. சாப்பிட்ட பில்லுக்குரிய பணத்தோடு அன்புத் தொகையாகப் பத்து டாலர் கொடுத்தாள் மூதாட்டி.
"அம்மா! உணவுக்குரிய தொகை மட்டும் போதும். இங்கு நாங்கள் கூடுதலாக அன்புத் தொகை எதுவும் பெற்றுக் கொள்வதில்லை என்று திருப்பித் தந்து விட்டாள் கர்ப்பிணிப்பெண். அவள் அங்கிருந்து நகர்ந்ததும், மூதாட்டி, டயர் மாற்றி உதவிய ஜான் பிரிட்டோவை நினைத்துக் கொண்டே, மேஜையில் இருந்த பில் புத்தகத்திற்குள் ஐந்நூறு டாலரை வைத்து விட்டுச் சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்த கர்ப்பிணிப் பெண்ணுக்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
பணி முடித்து இரவு வீட்டுக்குத் திரும்பிய கர்ப்பிணிப்பெண், தன் கணவனிடம், உணவு விடுதியில் நடந்த சம்பவத்தைக் கூறி, இந்த மாதம் எனக்கு நடக்கவிருக்கும் பிரசவச் செலவு ஐந்நூறு டாலருக்கு என்ன செய்வது? எனத் தவித்துக் கொண்டிருந்தோம்! அதற்கான வழி பிறந்து விட்டது ஜான் பிரிட்டோ!" என்று தனது கணவனின் பெயர் சொல்லித் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். ஜான் பிரிட்டோ இந்தக் கதையில் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் வாசகர்களே!.

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
உதவி செய்யும் தயாள குணம் உடையவர்களே உதவிபெறும் தாராளத் தகுதியையும் அடைகிறார்கள். உதவி என்பது பணமாக இருக்கலாம்; பொருளாக இருக்கலாம்; ஏன் ஆறுதலான வார்த்தைகள்கூட உதவியின் கீழ்தான் வரும்.
மகாகவி பாரதி உதவியை இப்படிக் கேட்கிறார்:
"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!!
அதுவும் அற்றோர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!"
நகை, பணம், நற்சொல், உடல் உழைப்பு இந்த நான்கில் ஆறுதலாக நாலு நல்ல வார்த்தைகள் சொல்வதுகூடத் தற்காலத்தில் பேருதவியாகக் கருதப்பட வாய்ப்பிருக்கிறது. பணம், பொருள் தேவைகளை விட நல்ல வார்த்தைகளைப் பேசி நன்னெறிப்படுத்தி உதவுகிறவர்களின் சேவையே தற்காலத்தில் பெரும் தேவையாக இருக்கிறது.
கணவன், மனைவி, பிள்ளைகள் எனும் குடும்பம்; குடும்ப நிலை தாண்டிய உறவினர்கள்; பிறகு இவர்களைத் தாண்டி நிற்கிற நண்பர்கள் ஆகிய இவ்வட்டத்திற்குள் உள்ளவர்களே ஒருவருக்கொருவர் உடனடியாக உதவிக்கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் பணம் பொருள்களால் உதவிக்கொண்டாலும், வார்த்தைகளால் ஆறுதல் தரும் நற்சொல் உதவிகளை வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் உடல்நல பாதிப்பிற்கு இணையாக மன நலப் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மனம் கனிந்த புன்னகையில் ஆறுதலாக ஒரு வார்த்தை உதிர்ப்பதற்கு காசு பணம் எதுவும் செலவாகி விடுவதில்லை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கி, அடுத்தவர் துன்பங்களில் அக்கறை செலுத்தி, அவை தீர்வதற்கான வாய்ச்சொல் வழிமுறைகள் வழங்குவதும் உதவுகளில் பேருதவிதான். அழுத்தம் இல்லாத மனங்களால் மனிதம் மகிழ்ந்து தழைக்கிறது.
'மனிதன் ஒரு சமுதாய விலங்கு' என்றார் சாக்ரட்டீஸ். அதனால் வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் அவன் மற்ற மனிதர்களையோ, இயற்கையையோ சார்ந்திருந்தே ஆக வேண்டும். சார்ந்திருத்தல் என்பதற்கு உதவியிருத்தல், நன்றியோடிருத்தல் என்றே பொருள். அதனால் அடுத்தவர்க்கு உதவுவது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் சமுதாயக்கடமை.
அரபுநாட்டில், ஒரு தந்தை ஒரு பெரிய ஆட்டைச் சமைத்து பெரு விருந்து தயாரித்தார். மகளிடம், வெளியில் சென்று அக்கம்பக்கத்தில் வாழும் நம் உறவினர் நண்பர்களை விருந்துக்கு அழைத்து வா என்றார். வீட்டுக்கு வெளியில் வந்த மகள்,"ஆபத்து! ஆபத்து! வீட்டில் சமையல் கட்டில் தீப்பற்றிக்கொண்டுள்ளது! நெருப்பில் என்தந்தை மாட்டிக்கொண்டுள்ளார்! யாராவது வந்து காப்பாற்றுங்களேன்!" என்று கூச்சலிட்டார்.
பல உறவினர்கள் ஓடி விட்டனர்; சில உறவு நட்பினரும், முகம்தெரியாத சில புதியவர்களும் உதவுவதற்காக வீட்டிற்குள் சென்றனர். அவர்களுக்கு அங்கே பெருவிருந்து காத்திருந்தது.
ஆம் உதவி என்பது எல்லைகளைத் தாண்டியது!
செய்பவர்களே பெறுகிறார்கள்!
தொடர்புக்கு:
94431 90098
- உங்கள் பேட்டரி புதிய ஸ்மார்ட்போனாக இருந்தபோது இருந்ததை விட கணிசமாக குறைவான திறன் கொண்டதாக இருக்கும்.
- உங்கள் சாதனத்தின் திரையின் ஆயுளைப் பாதுகாக்கவும் நீட்டிக்கவும் ஒரு ஸ்கிரீன் புரொடெக்டர் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்மார்ட் போனின் ஆயுட்காலம் சாதரணமாக மூன்று அல்லது உயர்ந்த பட்சம் நாலு வருடங்கள்.
அதன் பாட்டரி வீக்காகிக்கொண்டே போகும். நாள் பட சக்தி இழக்காத பாட்டரி இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. தொடர்ந்து 100 சதவீதம் சார்ஜிலேயே வைத்திருக்கும் பாட்டரிகள் தேசலாகிவிடக்கூடியவை. மெல்ல மெல்ல அவை சக்தி இழந்து சில மணி நேரங்களிலேயே உங்கள் போனை மறுபடி மறுபடி சார்ஜ் செய்ய வைக்கும்.
இரண்டாவதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னும் இயக்க முறைமை மென்பொருள் தவறுகள் செய்ய ஆரம்பிக்கும். அவ்வப்போது கம்பெனிக்காரர்கள் செய்தாலும் ஒரு சமயத்தில் இயக்க முறைமையும் உங்கள் போனும் விவாகரத்து செய்யும் நிலைமைக்குப்போய்விடுவது உண்டு.
மூன்றாவதாக உங்கள் ஸ்மார்ட் போனின் ஸ்கிரீன் விண்டு கொள்ளும். கீழே விழுந்துவிட்டால் அவ்வளவுதான் குளோஸ். அப்படி இல்லாமல் இரண்டு வருடங்களுக்குப்பின்னர் இது நிகழலாம். அப்போது போனில் என்ன தெரிகிறது என்பதில் குழப்பம் ஆரமித்து மனைவிக்குத்தெரியாமல் போன் செய்கிறேன் பேர்வழி என்று அவருக்கே போன் போட்டுவிடும் பேரபாயம் நிகழும்.
இந்த வித காரணங்களால் உங்கள் ஸ்மார்ட் போன் காலாவதி ஆகக்கூடும்.
காலேஜ் அல்லது பள்ளியில் படிக்கும் உங்கள் மகனோ மகளோ "திஸ் இஸ் நாட் கூல்" என்று ஆறே மாதத்தில் உங்களிடம் அடுத்த ஸ்மார்ட் போனுக்கு வருவது கூட ஒரு விதத்தில் ஸ்மார்ட் போன் ஆயுள் முடிவுக்குச்சமானம் தான்!
பொதுவாக, ஸ்மார்ட்போனின் சராசரி ஆயுட்காலம் 2 முதல் 4 ஆண்டுகள். அறிக்கைகளின்படி, ஐபோன் 4-10 ஆண்டுகள் நீடிக்கும், அதைத் தொடர்ந்து சாம்சங் போன்கள் 3-6 ஆண்டுகள் நீடிக்கும். ஹவாய் மற்றும் சியோமி போன்களின் சராசரி ஆயுட்காலம் 2-4 ஆண்டுகள், ஓப்போ போன்கள் 2-3 ஆண்டுகள். மூன்று வருட காலப்பகுதியில், உங்கள் போனின் வன்பொருள் குறிப்பிடத்தக்க அளவு காலாவதியாகிவிட்டதை நீங்கள் கவனிப்பீர்கள், மேலும் உங்கள் பேட்டரி புதிய ஸ்மார்ட்போனாக இருந்தபோது இருந்ததை விட கணிசமாக குறைவான திறன் கொண்டதாக இருக்கும்.

ஐபோன்கள் எவ்வளவு காலம் நீடிக்கும்?
ஐபோனின் சராசரி ஆயுட்காலம் 4-10 ஆண்டுகள். ஆப்பிள் மாடல்கள் பொதுவாக பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் எதிர்பார்க்கப்படுவதை விட நீண்ட காலம் நீடிக்கும், இது பொதுவாக இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். தொழில்துறையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளிலும் ஐபோன்கள் அதிக ஆயுட்காலம் கொண்டதாக கருதப்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுட்காலத்தை பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. காலப்போக்கில் உங்கள் சாதனத்தின் ஆயுளைக் குறைக்கும் சாத்தியமான காரணங்களை கீழே பார்க்கலாம்
சேதம்: விரிசல் செல்போனில் சேதத்தை ஏற்படுத்தும் ஆனால் இந்த விஷயங்களை சரிசெய்ய முடியும். சில சந்தர்ப்பங்களில், அதற்கு பதிலாக புதிய செல்போனை வாங்குவது நல்லது.
சிறிய விரிசல் கொண்ட செயல்பாட்டு போன்: இது உங்கள் போனின் ஆயுட்காலம் மீது சிறிதளவு அல்லது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
உங்கள் மொபைலில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் கிராக் ஆக்கிரமித்துள்ளது: டிஸ்பிளேவில் ஏற்கனவே கவனிக்கத்தக்க டெட் பிக்சல்கள் மற்றும் பல குறைபாடுள்ள கூறுகள் இருந்தால், உங்கள் போன் சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும் அல்லது விரைவில் வேலை செய்வதை நிறுத்தும்.
பேட்டரி உங்கள் சாதனத்தின் மிக முக்கியமான பகுதியாகும், ஏனெனில் அது இல்லாமல், உங்கள் செல்போனில் வேறு எதுவும் வேலை செய்யாது. உங்கள் பேட்டரி ஆயுளை நீட்டிக்கவும், பேட்டரி மாற்றுவதைத் தடுக்கவும் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இவை:
சார்ஜ் சைக்கிள்கள்: போன் பேட்டரிகளின் சராசரி சுழற்சி சார்ஜ் 500 முதல் 800 வரை இருக்கும். அதாவது, உங்கள் மொபைலை ஒரு நாளைக்கு பலமுறை சார்ஜ் செய்தால், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மொபைல் போனை சார்ஜ் செய்யும் ஒருவரை விட உங்கள் மொபைலின் பேட்டரி ஆயுள் குறைவாக இருக்கும்.
வெம்மை உங்கள் பேட்டரியை சேதப்படுத்துகிறது, ஏனெனில் இது பேட்டரியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, உங்கள் மொபைலை வெப்பமான சூழல்களிலோ அல்லது எளிதில் சூடாக்கக்கூடிய பரப்புகளிலோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
உங்கள் போனின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பல வழிகள் உள்ளன, அதன் மூலம் அதை மாற்றுவதற்கு முன் முடிந்தவரை அதை நீங்கள் பயன்படுத்தலாம்.
உங்கள் சாதனத்தின் ஆயுட்காலத்தை மேம்படுத்துவதற்கான சில வழிகள் இங்கே உள்ளன:
உங்கள் மொபைலை 20 சதவீதம்-80 சதவீதம் வரை சார்ஜ் செய்யுங்கள் உங்கள் மொபைலின் பேட்டரி குறைந்த எண்ணிக்கையிலான முழு சார்ஜ் சுழற்சிகளைக் கொண்டு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால் தான் உங்கள் சார்ஜை 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வைத்திருப்பது நல்லது.
ஸ்கிரீன் புரொடெக்டரைப் பயன்படுத்தவும். உங்கள் சாதனத்தின் திரையின் ஆயுளைப் பாதுகாக்கவும் நீட்டிக்கவும் ஒரு ஸ்கிரீன் புரொடெக்டர் பயனுள்ளதாக இருக்கும். திரைப் பாதுகாப்பாளர்கள் கடைகளிலும் ஆன்லைனிலும் பரவலாகக் கிடைக்கின்றன. ஸ்கிரீன் புரொடக்டரின் கூடுதல் செலவு உங்களைப் பற்றி கவலைப்பட்டால், இதைக் கவனியுங்கள்:
உங்கள் ஸ்மார்ட்போனின் உடைந்த திரையை சரிசெய்வதை விட அல்லது மாற்றுவதை விட மிகவும் விலை உயர்ந்தவை கூட விலை குறைவாக இருக்கும்.
ஒரு ஹெவி-டூட்டி புரொடெக்டிவ் கேசை வாங்கவும், உங்கள் சாதனத்தை கிராக் செய்யப்பட்ட திரையில் இருந்து அல்லது தற்செயலாகக் கீழே விழுந்தால் கடுமையான சேதத்தில் இருந்து பாதுகாக்க போன் கேஸ்கள் சிறந்த வழியாகும். நீங்கள் கடைகளில் வாங்கக்கூடிய பல்வேறு வகையான போன் கேஸ்கள் உள்ளன.
சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள, உடல் ரீதியாக தேவைப்படும் தொழில்களில் நீங்கள் பணிபுரிந்தால், சிறந்த சிறப்பு வாய்ந்த மொபைல் கேஸ்கள் உள்ளன. நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தால், உங்கள் மொபைலைப் பாதுகாக்க மெலிதான கேஸ்களும் கிடைக்கும்.

நீங்கள் அரிதாகப் பயன்படுத்தும் செயலிகளை நீக்குவது சிறந்தது, ஏனெனில் இந்த பயன்பாடுகள் பின்னணியில் இயங்கும் உங்கள் பேட்டரி மற்றும் வன்பொருள் வளங்களை மட்டுமே கஷ்டப்படுத்தும். இது உங்கள் ரேம் மற்றும் பிற உள் கூறுகளில் பணிச்சுமையை அதிகரிக்கிறது, உங்கள் தொலைபேசியின் செயல்திறனைக் குறைக்கிறது.
ஆக ஒரு ஸ்மார்ட் போனை சில ஆண்டுகள் நிச்சயம் பயன்படுத்தலாம். ஆனால் உங்கள் காதலியோ அல்லது மனைவியோ "என்ன இது ஒரே போனை வெச்சிருக்கீங்க" என்று உதட்டைச் சுழித்து அலட்சியப்படுத்துவது உங்களுக்கு இதயத்தில் வலிக்குமென்றால். ஆறு மாதத்துக்கு ஒரு முறை போனை மாற்றலாம்.
என்ன மாசக்கடைசியில் சோத்துக்கு தில்லாலங்கடி ஆகிவிடப்போகிறது, பார்த்துக்கொள்ளுங்கள்!
- வீடு கட்டி பால்காய்ச்சும் போது முதலில் பசுமாட்டைத்தான் வீட்டுக்குள் நுழைப்பார்கள்.
- வாழைமரத்தைப் போல பெண்களைப் பசுவிற்கும் ஒப்பிடுவார்கள்.
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலங்காக்கும் குணமாதா....
கண்ணை இருக்கமா மூடிக்கிட்டு இந்த வரிகளைப் பாடிப் பாருங்களேன். தப்பித்தவறி சரஸ்வதி சபதம் பட செட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டோமோன்னு ஒரு வியப்பு வரும். அப்படி ரசிகர்கள் மனதில் பதிந்து போன ஒரு பாடல் இது. அதுக்கு தத்ரூபமா அதில் நடித்தவர்களும் ஒரு காரணம்.
அதென்னப்பா எதை எடுத்தாலும் சினிமாவில் இருந்தே உதாரணம் சொல்றீங்கன்னு கேட்பவர்களுக்கு.....நம்மைச் சுற்றிலும் ஒலி, ஒளி ஊடகங்கள் தான் கோலோச்சுது. அதிலும் சினிமாவின் ஆதிக்கம் ஆளவும் செய்கிறதே. விஷயத்திற்கு வருவோம்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
அதென்னங்க நல்ல மாடு கெட்ட மாடுன்னு எப்படி வகை பிரிக்கிறீங்க ? தீய செயல்கள் செய்யும் மனிதனை, உதாரணமா நம்ம சீரியல் வில்லன்கள் மற்றும் வில்லிகளை வைத்துக்கொள்ளலாம். என்னதான் கதாநாயகி டப்பா கணக்கில் கிளிசரினை வைத்துக் கொண்டு, கர்ச்சிப்களை ஈரமாக்கினாலும், சீரியல் ஹிட் அடிப்பதென்னவோ வில்லன்கள் வில்லிகளின் நடிப்பில்தான். அவங்க டிரஸ்சிங் பிளஸ் லுங்கிங் பார்க்கவே டி.ஆர்.பி எகிறும்.
இந்த பழமொழியின் வழக்கு அர்த்தம், மாடு போலத்தான் மனிதனும் சூட்டைப் போல வலி மிகுந்த ஒரு சொல்லில் தவறு செய்பவர்கள் திருந்திவிட வேண்டும் என்ற அர்த்தத்தில் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்லு என்பார்கள்.
சொல்பேச்சு கேட்காத கால்நடைகளுக்கு சூடு வைப்பது என்பது பழமொழியின் அர்த்தம் கட்டாயமா இல்லை. அர்த்தத்திற்கு போகும் முன் மாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும்போது அதனை தேனு என்பார்கள். இரண்டாவது கன்றைப் பிரசவித்ததும் கோ என்பார்கள். அந்த பசுவைத்தான் கோமாதா பூஜைக்கு பயன்படுத்துவார்கள் என்பதும், இந்த பூஜை சகல ஐஸ்வர்யங்களையும் கொண்டு வரும் என்பதும் ஐதீகம். சிவபெருமானின் வாகனமும் காளை மாடுதான். எமதர்மனின் வாகனமும் எருமைமாடுதான்.
முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபயதோமுகி என்னும் பூஜை செய்துதான் கட்டிடம் கட்டுவார்கள். இதிலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. அந்த பசு பிரசவத்தின் போது, கன்றின் முன்னங்காலும் தலையும் தான் முதலில் வெளிவரும். இவ்வாறு இரண்டு பக்கமும் தலையையுடைய பசுவை உபயதோமுகி என்பார்கள். இப்போதும் வீடு கட்டி பால்காய்ச்சும் போது முதலில் பசுமாட்டைத்தான் வீட்டுக்குள் நுழைப்பார்கள்.
பொன் பொருளை விடவும், கால்நடைகளாகிய ஆடு மாடு வைத்திருப்பவர்களே செல்வந்தர்களாக அன்றைய காலத்தில் கருதப்பட்டார்கள். உழைப்பிற்கு பெயர் பெற்றதுதான் மாடு. கடுமையான வேலை செய்பவர்களை மாடு போல் உழைக்கிறான் என்று சொல்வதைக் கேட்டிருப்போம்.
ஒரு நாட்டின் மீது போர்த்தொடுக்க விரும்பும் அரசன் அந்நாட்டின் எல்லைக்குள் புகுந்து அங்குள்ள பசுக்கூட்டங்களைக் கவர்ந்து வருவான். அப்படி கவரப்பட்ட பசுக்களை மீட்டு வருவது வெட்சித்திணை ஆகும். தொல்காப்பியத்தில் அரசர்களின் போரைப் பற்றி பேசும் பகுதிகளில் முதல் கட்டமே பசுக்களைக் கவரும் வெட்சித்திணைதான் என்கிறது.

லதா சரவணன்
வாழைமரத்தைப் போல பெண்களைப் பசுவிற்கும் ஒப்பிடுவார்கள். பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்ப்பகாலம் 10 மாதம் 10 நாள். தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தாய்மையின் இலக்கணமாகவும் பசுக்களைச் சொல்வது உண்டு.
சந்தர்ப்பம் கிடைச்சா உடனே பெண்களைப் புகழ்ந்துடுவீங்களேன்னு கேட்கறீங்க. சயின்ஸ் படி 2009ம் ஆண்டில் பசுக்களோட மரபணுக்களை சோதனை செய்ய 22ஆயிரம் வகை மரபணுக்களில் 80 சதவீதம் மனிதர்களுடன் ஒத்துப்போகிறதாம்.
அரோச் எனப்படும் காட்டு மாடுகளின் வம்சாவழிதான் பசுமாடுகள். மொத்தம் பசுக்களில் மட்டும் 80 இனங்கள் உள்ளன. பசுவின் பாலில் உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, அதன் கழிவான சாணம்,கோமியம் போன்றவை உரமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஒரு நாளைக்கு 45கிலோ உணவு சாப்பிடும் மாடுகள், 250 முதல் 500 லிட்டர் வரையில் தன் கழிவுடன் மீத்தேன் வாயுவை வெளியேற்றுகிறது. ஆறு மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும் உணரும் மோப்பசக்தி பசுக்களிடம் உண்டு.
அமிர்தத்திற்காக பாற்கடலைக் கடையும் போது, வெளிவந்த காமதேனு என்கிற பசு வசிஷ்டர் ஆசிரமத்தில் இருந்து வந்தது. விருந்தாளியாக வந்த மன்னர் விசுவாமித்திரரின் படையினருக்கு காமதேனுவின் உதவியால் விருந்து படைத்தார் வசிஷ்டர். இந்த அரியவகை பசு தன் அரண்மமையில் இருக்க வேண்டும் என்று அதை கவர முயல, காமதேனுவை தன்னுடைய தவ வலிமையால் காப்பாற்றினார் வசிஷ்டர். இந்த நிகழ்வின் பிறகே, விசுவாமித்திரர் தீவிரமாய் தவம் புரிந்து, பிரம்மரிஷி என்ற பட்டம் பெற்றார் என்கிறது புராணம்.
காளையை அடக்கு பொண்ணைத் தருகிறேன் என்று எத்தனை மாமனார்கள் மருமகன்களுக்கு செக் வைத்திருக்கிறார்கள். 80 முதல் 90 களின் கிராமியப் படங்களில் மாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.
மனிதர்களைப் போலவே தன் விருப்பமானவர்களின் உணர்வுகள் தனதாக்கிக் கொண்டு, சந்தோஷமும், சோகமாக இருந்தால் மன அழுத்தத்துடன் இருக்குமாம். அப்படி உணர்வு பூர்வமான தருணத்தில் அதன் இதயத்துடிப்பில் மாற்றம் நிகழ்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
காளைகளை விற்க மாட்டுச்சந்தைகள் நடைபெறுவது உலகபிரசித்தியாகும். அதிலும் காங்கேயம் காளைகளுக்கு நல்ல மவுசு உண்டு. ஐந்து மனிதர்களின் வலிமையை ஒரு மாடு கொண்டிருக்கிறது.
எருமைமாடு மேல மழை பெய்தா மாதிரி நிக்குறியேன்னு திட்டுவதை கேட்டு இருப்போம். அடிச்சி வெளுக்கும் மழை, வெட்டவெளியில் உதிரும் வெய்யில்ன்னு எல்லாத்தையும் பார்த்து தைரியமா நிற்கும் உம்பளாச்சேரி மாடுகள். விவசாயம், பாரம் இழுத்தல், சமீபகாலமா ஜல்லிக்கட்டுக்கு கூட பயன்படுத்தப்படுகிறது. சந்தையில் இந்த மாடுகளின் கன்றுக்குட்டிகள் ரூ.15 ஆயிரம் வரை விலை போகுமாம்.
இந்த ஒரு மாடு இருந்தாலே போதும், பல ஏக்கர் விவசாயத்திற்கு தேவையான உரமும், சாணமும், சிறுநீரும் மண்ணில் பட்டால், அந்த நிலம் பொண்ணு விளையும் பூமியா மாறிப்போகுன்னு இந்த உம்பளாச்சேரி மாடுகளுக்கு ஏக கிராக்கி இருக்கு.
முத்துமுத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளாச்சேரி மோருக்குச் சோறு கிடைக்காது என்று காளமேக புலவர் ஒரு பாடல்ல எழுதியிருக்காரு.
இதையெல்லாம் கடந்து அவங்களைக் கொண்டாடவே நாம உழவர்திருநாளன்று பொங்கல் வைச்சி கடவுளா கொண்டாடறோம். அப்படிப்பட்ட மாட்டுக்கு சூடுன்னு இனி பழமொழியோட அர்த்தத்தை மாற்றிச் சொல்லமாட்டோம் இல்லையா?
சரி உண்மையான விளக்கம் என்ன? அதைச் சொல்லாம போனா எப்படி? சொல்றேன்... சொல்றேன்...
நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான் என்ற வார்த்தையே சூடு என்று திரிந்து போனது. சந்தையில் உழவுக்கும், வளர்ப்புக்கும் மாடு வாங்க செல்லும் போது, மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்து வாங்குவார்கள். அந்த அடிச்சுவடுதான் சூடாகிப் போனது.
- ஆலயத்தில் உள்ள நவகன்னியர்கள் பெண்களின் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிமை பொருந்தியவர்களாக உள்ளனர்.
- ராமர் கும்பகோணத்துக்கு வந்து இந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவநாதரை வழிபட்டு ராவணனை கொல்லும் மன வலிமையை பெற்றார்.
பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். சில பெண்களுக்கு சிறிய வயதில் இருந்தே உரிய கவனிப்பு இருக்காது. சில பெண்களுக்கு காரணமே இல்லாமல் திருமணம் கைகூடுவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும்.
சில பெண்களுக்கு புத்திர பாக்கியம் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் தீர்க்க முடியாத உடல்நல பிரச்சினைகள் இருக்கலாம். சில பெண்கள் உரிய வயது வந்த பிறகும் ருதுவாகாத நிலைமை இருக்கும்.
சில பெண்களுக்கு பெற்றோர் அல்லது கணவரால் எப்போதும் அமைதியற்ற நிலை காணப்படும். இத்தகைய நிலையில் இருக்கும் பெண்களுக்கு எத்தனையோ ஆலயங்களை பிரார்த்தனைக்காகவும், பரிகாரத்துக்காகவும் பலரும் சொல்லி இருப்பார்கள்.
ஆனால் கும்பகோணத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் பற்றி பெரும்பாலானவர்கள் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஆலயத்தில் உள்ள நவகன்னியர்கள் பெண்களின் அனைத்துவித பிரச்சினைகளையும் தீர்க்கும் மகிமை பொருந்தியவர்களாக உள்ளனர். இந்த நவகன்னியர்களை வழிபட்டால் பெண்களின் பிரச்சினைகள் தீர்வதாக பலரும் அனுபவத்தில் சொல்லி உள்ளனர்.
எனவே கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும் போது காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கும் செல்லுங்கள். இந்த ஆலயம் கும்பகோணம் மகாமகம் குளக்கரை ஓரத்திலேயே அமைந்து இருக்கிறது. ஆகையால் எளிதில் செல்ல முடியும். காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் இந்த ஆலயம் திறந்து இருக்கும்.
இந்த தலத்தின் விருட்சமாக வேப்ப மரம் உள்ளது. வேப்ப மரத்தின் கீழ்தான் சிவபெருமான் வீற்றிருக்கிறார். பொதுவாக வேப்பமரத்தின் கீழ் பெரும்பாலும் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகள்தான் பிரதிஷ்டை செய்யப்படும். இந்த தலத்தில் சிவலிங்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தலத்தில் உள்ள நவகன்னியர்கள் என்பவர்கள் 9 நதிகளை குறிப்பதாகும். 9 நதிகளும் கும்பகோணத்துக்கு வந்து தங்கள் பாவங்களை தீர்த்துக் கொண்டதாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. அப்படி நவ நதிகளும் இந்த தலத்தில்தான் வீற்றிருக்கின்றனர்.
மகாமகம் குளத்தில் நீராடி தங்களது பாவங்களை தீர்த்துக் கொண்ட 9 நதிகளும் மீண்டும் சிவபெருமானை நோக்கி வணங்கினர். அவர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்து அருள்பாலித்தார். அப்போது தங்களோடு ஈசனும் இந்த தலத்தில் அமர வேண்டும் என்று நவநதிகளும் கோரிக்கை விடுத்தன.
அதை ஏற்று ஈசன் காசி விசுவநாதராக அங்கேயே அமர்ந்தார். அவருடன் விசாலாட்சியும் அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். கருவறையின் வலது புறம் பிரகாரத்தில் விசாலாட்சி அம்பாள் தனி சன்னதி உள்ளது.

இவர்களின் அருள் பெற்ற 9 நதிகளும் கும்பகோணத்துக்கு வந்ததன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.
கங்கை, யமுனா, நர்மதா, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 நதிகளில் பக்தர்கள் மூழ்கிக் கழித்த பாவங்கள் அதிகமாக சேரவே அவை வருத்தப்பட்டன. கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களது பாவச் சுமையைக் குறைக்குமாறு முறையிட்டன.
இதை ஏற்ற சிவன், மகாமகத்தன்று மகாமக தீர்த்தத்தில் நீராடி, பாவங்களைப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி நவநதிகளும் கும்பகோணம் வந்தன. சிவன், அவர்களுக்கு காவலராக வீரபத்திரனை அனுப்பி வைத்தார். அவர் மகாமக குளக்கரையில் வீற்றிருக்கிறார்.
ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த கோவிலில் சுவாமி கோரைப் பற்களுடன் உள்ளார். கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளன. அருகில் தட்சன் வணங்கியபடி இருக் றான். தலைக்கு மேல் ஜலதாரை (நீர் பாத்திரம்) இருக்கிறது. பத்திரகாளி தனிச் சன்னதியில் இருக்கிறாள். இத்தல வீரபத்திர ருக்கு 'கங்கை வீரன்', 'கங்கை வீரேஸ்வரர்' என்ற பெயர்களும் உண்டு.
நவநதிகளில் பிரதானமானது கங்கை. கங்கையின் தலைமையில் இங்கு வந்து பாவம் போக்கிக் கொண்ட நதிகளுக்கு, காவலராக இருந்தவர் என்பதால் இப்பெயர் ஏற்பட்டது. சுவாமி சன்னதி எதிரில் உள்ள நந்திக்கு பிரதோஷ பூஜை சிறப்பாக நடக்கிறது. கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தியும், பிரகாரத்தில் ராஜராஜேஸ்வரியும் இருக்கின்றனர். சிவராத்திரி அன்று இரவில் ஐந்து கால பூஜை நடக்கிறது.
சோழனின் அரசவையில் கவிச் சக்கரவர்த்தியாக இருந்தவர் ஒட்டக்கூத்தர். வீரபத்திரரின் பக்தரான இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு மடத்தில் சில காலம் தங்கி சேவை செய்து வந்தார். வீரபத்திரரைக் குறித்து 'தக்கயாகப் பரணி' என்னும் நூலையும் இயற்றினார். இந்நூலை வீரபத்திரர் சன்னதி முன்பு அரங்கேற்றம் செய்தார். ஒருவர் பெற்ற வெற்றியைக் குறித்து இயற்றப்படும் நூல் 'பரணி' எனப்படும். தட்சனின் யாகம் அழித்து வீரபத்திரர் வெற்றி பெற்றதால் இந்நூல், 'தக்கயாகப் பரணி' எனப்பட்டது.
ஒட்டக்கூத்தர், சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் வணங்கியபடி காட்சி தருகிறார். ஆவணி உத்திராடத்தில் இவருக்கு குரு பூஜை நடக்கிறது.
மேற்கு நோக்கி அமைந்த இந்த தலத்தின் அருகில் நவ கன்னியருக்கு அருள் செய்த சிவன், காசி விசுவநாதராக அருளுகிறார். இங்கு நவ கன்னியரும் சிலை வடிவில் இருக்கின்றனர். மாசி மகத்தன்று கும்பேஸ்வரர், மகாமக குளக்கரைக்கு வரும்போது, வீரபத்திரர் கோவில் முன்பே எழுந்தருளுவாார்.
அப்போது வீரபத்திரர் கோவில் அர்ச்சகர், கும்பேஸ்வரருக்கு பூஜை செய்வார். இப்பூஜையை வீரபத்திரரே செய்வதாக ஐதீகம். மூர்க்க நாயனார், இங்குள்ள மடத்தில் சிலகாலம் தங்கி இருந்து சேவை செய்தார். இவரது சிலை முன் மண்டபத்தில் உள்ளது. கார்த்திகை, மூலம் நட்சத்திரத்தில் இவரது குருபூஜை நடக்கிறது.
ராமபிரான் சீதையை பிரிந்து தவித்த போது இலங்கை சென்று ராவணனை கொல்வதை தவிரவேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தார். இதற்காக ராமன் இலங்கைக்கு புறப்பட்டார். ஆனால் ராவணனை எப்படி கொல்வது என்று ராமபிரான் தவித்தார். கொலை செய்வது என்பது தனது இயல்பான குணத்துக்கு மாறான ஒன்றாக இருந்ததால் அவர் மிகவும் குழப்பம் அடைந்தார்.
இதற்கு விடை காண அகத்திய முனிவரை சந்தித்து யோசனை கேட்டார். அப்போது அகத்திய முனிவர், "கும்பகோணத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்துக்கு சென்று காசி விசுவநாதரை வழிபட்டால் பலன் கிடைக்கும்" என்று கூறினார். இதையடுத்து ராமர் கும்பகோணத்துக்கு வந்து இந்த தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து காசி விசுவநாதரை வழிபட்டு ராவணனை கொல்லும் மன வலிமையை பெற்றார்.

இந்த தலத்தில் சண்டி கேஸ்வரருக்கு எதிரே துர்க்கை அமைந்திருப்பது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது. சப்தமாதர்கள் பைரவர், சூரியன், சந்திரன், லிங்கோத்ப வர், ஆஞ்சநேயர், மகாசூர மர்த்தினி, தட்சிணா மூர்த்தி ஆகியோரும் இத்தலத்தில் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் உள்ளனர்.
இத்தலத்துக்கு வரும் பெண்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்கு நவ கன்னியர்களுக்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். நவ கன்னியர்களை 12 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜித்து வந்தால் பெண்களுக்கு உரிய காலத்தில் உரிய நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
நவ கன்னியரை மனமுருகி வழிபடும் பெண்களுக்கு சகல கஷ்டங்களும் நிவர்த்தியாகும். திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனவே கும்பகோணம் யாத்திரை மேற்கொள்ளும் பெண்கள் இத்தலத்தில் உரிய வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
மேலும் இந்த தலம் மேற்கு நோக்கிய தலம் என்பதால் கூடுதல் சிறப்பு கொண்டதாக கருதப்படுகிறது. மூலவர் லிங்கம் சுயம்பு லிங்கமாகும். இது மிகப்பெரியதாக உள்ளது. அந்த சுயம்புலிங்க பாணத்திலேயே கண்கள், காது, மூக்கு போன்ற உறுப்புகள் அமைய பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.
கும்பகோணத்தில் சோலையப்பன் தெருவில் காசி விசுவநாதர் ஆலயம் என்ற பெயரில் சிவாலயம் இருக்கிறது. ஆனால் புராணங்களில் கூறப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த காசி விசுவநாதர் ஆலயம் கும்பகோணம் மகாமகம் குளக்கரையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் நகருக்குள் இருக்கும் ஆலயங்களை வழி பட்டுக் கொண்டு வரும் போது இந்த தலத்துக்கு மிக எளிதாக செல்ல முடியும். பஸ் நிலையத்தில் இருந்து இந்த கோவில் வழியே பஸ்கள் செல்கின்றன.
அடுத்த வாரம் திருமண தடைகளை நீக்கும் திருமணஞ்சேரி தலம் பற்றி பார்க்கலாம். திருமணத்தை உடனடியாக கைக்கூட செய்யும் மிக சிறப்பான தலமான திருமணஞ்சேரியில் எப்படி வழிபட செய்ய வேண்டும் என்ற தகவலை அதில் காணலாம்.
- மாநாடு தொடங்கியதும் மன்னர் ஜனகர் நாள்தோறும் தான் காணும் கனவை விவரித்துவிட்டுத் தன் வினாவைக் கேட்கலானார்.
- தோற்றத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தோற்றம் இயற்கையாக நேர்வது. ஞானம் கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அடைவது!
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார் விதேக நாட்டை ஆட்சி செய்யும் மகாராஜா ஜனகர்.
உறக்கம் வரவில்லையே என்பதல்ல அவர் கவலை. உறக்கம் வந்துவிடுமோ என்பதே அவர் கவலை!
உறக்கம் வந்தால் நாள்தோறும் வரும் அந்தக் கனவு மறுபடி அன்றும் வரும். கனவில் அவர் கந்தல் துணி உடுத்திய பிச்சைக்காரனாக மாறுவார். கையில் திருவோட்டைத் தூக்கிக்கொண்டு விதேக நாட்டின் தலைநகரான மிதிலையில் தெருத்தெருவாக `அம்மா தாயே! பிச்சை போடுங்கள்!` எனக் கூவியவாறு பிச்சையெடுக்க ஆரம்பிப்பார்.
என்ன கொடுமை இது? ஒரு மாமன்னனுக்கா இந்த நிலை?
மக்களில் சிலர் பிச்சை போடுவார்கள். வேறு சிலர் போ போ என விரட்டுவார்கள். ஒருசிலர் கல்லால் அடித்துத் துரத்துவார்கள்.
கல்லடி பட்டதும் அந்த வலியில் அவர் உறக்கம் கலைந்து கண்விழித்துக் கொள்வார்.
அவர் மனம் திகைப்பில் ஆழும். தான் யார்? நாட்டை ஆளும் மன்னனா? இல்லை தெருக்களில் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரனா?
கனவில் கண்டது நிஜமா, இல்லை இப்போதுள்ள மன்னர் நிலை நிஜமா? அவர் தலை வெடித்துவிடும்போல் விண்விண்ணென்று வலிக்கும்.
இன்றும் அந்த விபரீதமான சொப்பனம் வருமோ? அச்சத்தோடு புரண்டு புரண்டு படுத்த மன்னர் அசதியில் உறங்கிப் போனார்.
அன்றும் வந்தது அந்தக் கனவு. அதே கனவு. மீண்டும் அவர் கந்தல் துணி உடுத்திய பிச்சைக்காரனானார். தெருத்தெருவாகப் பிச்சையெடுக்கத் தொடங்கினார். மறுபடியும் கல்லடி பட்டு திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்.
உடலெல்லாம் குப்பென வியர்த்தது. மெல்ல எழுந்து குடுவையில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகினார். அவர் கைநடுக்கத்தில் அந்தத் தண்ணீர்க் குவளை கீழே விழுந்து கடகடவென உருண்டது.
மகாராணி சுனயனா குவளைச் சப்தம் கேட்டு விழித்துக் கொண்டாள். மன்னரின் உடலெல்லாம் வியர்ப்பதையும் கை நடுங்குவதையும் பார்த்தாள்.
அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துப் படுக்கையில் அமர வைத்தாள். சாமரத்தால் விசிறினாள். விசிறிக் கொண்டே மெல்லக் கேட்டாள்:
`பிராண நாதா! என்ன சிக்கல் உங்களுக்கு? நாள்தோறும் இப்படி நள்ளிரவில் நடுநடுங்குகிறீர்களே? ஏதேனும் உடல்நலக் கோளாறா? மருத்துவரை அழைக்கவா?`
ஒரு பெருமூச்சோடு மாமன்னர் ஜனகர் சொன்னார்:
`வேண்டாம் அன்பே! இது உடல்நலக் கோளாறல்ல. நாள்தோறும் எனக்கு ஒரு கனவு வருகிறது. அதனால் நேரும் சிக்கல் இது!`
மன்னர் தன் கனவை மனைவியிடம் விவரித்தார். மகாராணி சுனயனா சிந்தனையில் ஆழ்ந்தாள். பின் சொல்லலானாள்:
`பிரபோ! உங்களை ராஜரிஷி எனப் புகழ்கிறது உலகம். நீங்களே மாபெரும் ஞானிதான். ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு விந்தையான ஐயம் எழுந்துள்ளது. எது நிஜம், கனவா நனவா எனத் திகைக்கிறது உங்கள் உள்ளம்.
நம் மிதிலையில் ஞானிகளுக்குப் பஞ்சமில்லை. அக்கம்பக்கத்திலும் பல ஞானியர் வசிக்கிறார்கள். ஞானியர் மாநாடு ஒன்று நடத்தி அவர்களிடம் உங்கள் சந்தேகத்தைக் கேளுங்களேன். யாராவது ஒருவர் நிச்சயம் உங்கள் ஐயத்தைத் தீர்த்துவைப்பார்!`

திருப்பூர் கிருஷ்ணன்
மன்னனுக்கு மகாராணியின் யோசனை மிகச் சரி என்றே பட்டது. `நீ எனக்கு மனைவி மட்டுமல்ல, சரியான யோசனை சொல்லும் மந்திரியும் கூட `எனச் சொல்லிச் சிரித்தார் மன்னர். அப்படியே படுத்து மெல்ல உறங்கிப் போனார்...
மறுநாள் எழுந்ததும் மனைவி சொன்ன யோசனையைச் செயல்படுத்த முடிவு செய்தார்.
மந்திரி சபையைக் கூட்டினார். உடனே ஞானியர் மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து ஞானிகளையும் அழைக்க வேண்டும் என ஆணையிட்டார்.
மாநாட்டுக்கான தேதி குறிக்கப்பட்டது. விறுவிறுவென்று அழைப்போலைகள் தூதுவர்கள் மூலம் எங்கும் அனுப்பப்பட்டன.
குறிப்பிட்ட தினம் வந்தது. தூர தேசத்தில் இருந்தெல்லாம் பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து ராஜசபையில் குழுமினர்.
உடலில் எட்டுக் கோணல்களை உடைய முனிவரான அஷ்டாவக்கிரரும் மாநாட்டுக்கு வந்து சேர்ந்தார். குள்ளமாக, கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை உடைய அவரைப் பார்த்ததும் மன்னர் ஜனகரைத் தவிர மற்ற அனைவரும் ஒருவருக்கொருவர் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு ஏளனமாக நகைத்தார்கள்.
அவர்களின் நகைப்பைப் பார்த்த அஷ்டாவக்கிரர் எந்தச் சலனமும் இல்லாமல் தமக்குள் நகைத்துக் கொண்டார்.
மாநாடு தொடங்கியதும் மன்னர் ஜனகர் நாள்தோறும் தான் காணும் கனவை விவரித்துவிட்டுத் தன் வினாவைக் கேட்கலானார்:
"நான் பிச்சைக்காரனா, இல்லை மன்னனா? நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா? அல்லது பிச்சைக்காரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா? இதில் எது நிஜம் எது பொய்?"
சபையில் எல்லோரும் அமைதி காத்தார்கள். பதில் தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
`யாருக்குமேவா பதில் தெரியவில்லை?`
வியந்தார் மன்னர். அஷ்டாவக்கிரர் குறுக்கிட்டார்.
`பதில் எனக்குத் தெரியும் மன்னா! ஆனால் ஞானியர் சபையில்தான் என்னால் பதில் சொல்ல முடியும். நீங்கள் கூட்டியிருப்பதோ தோல் வியாபாரிகள் மற்றும் கசாப்புக் கடைக்காரர்களின் சபை!`
அஷ்டாவக்கிரரின் பேச்சைக் கேட்டு மற்ற அனைவரும் சீற்றத்தில் குதித்தார்கள்.
`நாங்களெல்லாம் ஞானிகள் இல்லையா? தோல் வியாபாரிகளா? கசாப்புக் கடைக்காரர்களா? என்ன முட்டாள்தனமான பேச்சு இது!`
அஷ்டாவக்கிரர் அமைதியாகப் புன்முறுவல் பூத்தார்.
`என் தோற்றத்தைப் பார்த்து நீங்களெல்லாம் ஏளனமாகச் சிரித்தீர்களே? அதற்குள் மறந்து விட்டீர்களா? தோலை வைத்து என்னை மதிப்பிடும் நீங்கள் தோல் வியாபாரிகள் தானே? கசாப்புக் கடைக்காரர்கள் தானே?
தோற்றத்திற்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தோற்றம் இயற்கையாக நேர்வது. ஞானம் கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் அடைவது!
ஜனகன் ஒருவன்தான் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமல் இருந்தவன். ஆகையால் மன்னன் ஜனகனுக்கு நான் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் தனித்துத்தான் என்னால் பதில் சொல்ல முடியும். உங்களைப் போன்ற தோல் வணிகர்களின் கசாப்புக் கடைக்காரர்களின் முன்னிலையில் அல்ல.`
அஷ்டாவக்கிரரின் பேச்சைக் கேட்டு வந்தவர்களின் முகங்கள் சூரியனைக் கண்ட அல்லி மலர்போல் வாடின. மன்னர் உத்தரவிடாமலே ஒவ்வொருவராக சபையை விட்டுத் தயக்கத்தோடு விலகி வெளியேறினார்கள்.
மன்னர் ஜனகர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி மகாஞானியான அஷ்டாவக்கிரரின் காலடியில் வந்து அமர்ந்து கொண்டார்.
`சுவாமி! சொல்லுங்கள். என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள். எது நிஜம்? நான் மன்னனா இல்லை பிச்சைக்காரனா?`
அஷ்டாவக்கிரர் மன்னனின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார்.
`நீ ஞானத் தேடல் உள்ளவன். ஆகையால் உண்மையை அறியும் உரிமையை நீ பெற்றிருக்கிறாய்!` என்றவர், அவன் விழிகளை உற்றுப் பார்த்துப் பேசலானார்:
`ஜனகனே! நான் சொல்வதை கவனத்தோடு கேட்பாயாக. உறங்கினபோது நீ கண்டதும் கனவு தான். இப்போது மன்னனாக நீ வாழும் இந்த வாழ்வும் கனவுதான். உன்னுடைய அரச வாழ்வு, பிச்சைக்கார வாழ்வு இரண்டுமே உண்மையில்லை.
இந்த இரண்டையும் தவிர்த்த வாழ்வொன்று இருக்கிறது. அந்த வாழ்வுதான் உண்மை. அது எதுவென்று நாம் அறிய மாட்டோம்.
இறந்தபின் கனவும் நனவும் அற்ற ஒரு நிலை தோன்றும். அப்போதுதான் அந்த வாழ்வே மெய் என்பதை நாம் உணர முடியும். அதுவரை அதை உணர இயலாது.
எனவே கனவு நிலையும் பொய், நனவு நிலையும் பொய் என்பதை உணர்ந்துகொள். இரண்டுமே உண்மையென மயங்காதே. இரண்டும் பொய்தான்.
அரசனாக இருக்கும்போது எது குறித்தும் சந்தோஷப்படாதே. நீ உறங்கும்போது அந்த உறக்கத்தில் அந்த சந்தோஷம் உன்னை விட்டு முற்றிலுமாக விலகிவிடும். பிச்சைக்காரனாக இருக்கும்போது வருத்தப்படாதே. விழித்தால் அந்த வருத்தம் மறைந்து விடும்.
இரண்டு நிலைகளிலும் மனச் சலனமில்லாமல் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக் கொள்வாயாக!` என்றார்.
மனச்சாந்தி பெற்ற ஜனகர் தன் மனைவி சுனயனாவை அழைத்தார். இருவருமாக அஷ்டாவக்கிரரின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து அவர் ஆசியைப் பெற்றார்கள்.
எதையும் எதிர்பாராத, எந்தத் தேவைகளும் இல்லாத முனிவருக்கு இந்த அரிய ஞானத்தைத் தந்ததன் பொருட்டாகப் பிரதியாகவோ நன்றிக் கடனாகவோ எதைத்தான் தர முடியும்?
விழிகளில் நன்றிக் கண்ணீர் வழிய வழிய மன்னனும் அரசியும் அவரை அரண்மனை வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தார்கள்.
அஷ்டாவக்கிரரின் உபதேசத்தை நாள்தோறும் சிந்தித்த ராஜரிஷி ஜனகர், கனவு நனவு எல்லாம் மாயையே என்ற பேருண்மையைப் புரிந்துகொண்டார்.
மகிழ்ச்சியில் ஒருசிறிதும் துள்ளாமலும் துயரத்தில் ஒருபோதும் துவளாமலும் இருக்கும் நிலையை ஓயாத மனப் பயிற்சியின் மூலம் அடையலானார்.
`உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை கடவுளைத் தவிர!` என்ற சத்தியத்தை அவர் மனம் உணர்ந்து கொண்டது.
மெய்ஞ்ஞானி அஷ்டாவக்கிரர் மாமன்னர் ஜனகருக்கு உபதேசித்த உபதேசம் கண்ணன் அருளிய பகவத் கீதைக்கு இணையாக அஷ்டாவக்கிர கீதை என ஆன்மிக உலகில் புகழ்பெற்று நிலைத்துள்ளது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com
- உணவுகளை குறைவாகவும் குறைந்த இடைவேளைகளிலும் வழங்க வேண்டும்.
- ஏலாதி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் கர்ப்பமுற்ற காலம் முதல் பிரசவ காலம் வரை பல்வேறுவிதமான மாற்றங்களை உடல் அளவிலும் மனதளவிலும் எதிர்கொள்கின்றனர். அதிக வாந்தி, தலைசுற்றல், நீர்சுருக்கு, மலக்கட்டு, கால்வீக்கம், அதிகம் உணர்ச்சிவசப்படல் போன்ற பல்வேறு குறிகுணங்கள் ஏற்படுகின்றன. ஆனால் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒரே மாதிரியான குறிகுணங்கள் ஏற்படுவதில்லை. இதுபோன்ற சவுகரியங்களை தடுக்க தமிழ் மருத்துவம் பெரிதும் துணை செய்யும். முடிந்த வரை கர்ப்ப காலத்தில் நம் முன்னோர்கள் கூறிய உணவுமுறை மற்றும் மருத்துவ முறையை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பது மிகவும் நல்லது.
பொதுவாக கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் 'மசக்கை' என்னும் பிரச்சினையால் அதிகப்படியான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அடிக்கடி குமட்டல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்படும். எனவே அதிக சோர்வாக காணப்படுவர். இது போன்ற நிலையில் மாதுளை பழச்சாற்றுடன் சிறிது தேன் மற்றும் கற்கண்டு சேர்த்து பருகி வர குமட்டல், வாந்தி படிப்படியாக குறையும்.
சித்த மருத்துவத்தில் உள்ள மாதுளை மணப்பாகு, நன்னாரி மணப்பாகு, வெட்டிவேர் மணப்பாகு, எலுமிச்சை மணப்பாகு போன்ற மருந்துகள் வாந்தி ஏற்படுவதை குறைப்பதுடன் உடம்பில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக்கொள்ளும்.
பொதுவாக கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் இட்லி, இடியாப்பம், இருமுறை வடித்த சோறு போன்றவற்றை உண்ணலாம். உணவுகளை குறைவாகவும் குறைந்த இடைவேளைகளிலும் வழங்க வேண்டும். அதிகமான புரதங்கள், கொழுப்பு பொருட்கள், எண்ணையில் வறுத்த பொருள்கள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
எளிதில் சீரணமாகாதவைகளையும், மாந்தம், கரப்பான், வெப்பம் இவைகளை உண்டாக்கும் உணவுகளையும், அதிக உப்பு, காரம் சேர்ந்த பொருள்களையும் நீக்க வேண்டும்.
போதுமான அளவு புரோட்டீன், கொழுப்பு, கார்போஹைட்ரேட், உயிர்சத்துகள், தாது உப்புகள் நிறைந்த பசும்பால், நெய், முட்டை, கீரை, பழ வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.
அசீரணம் ஏற்படும் பட்சத்தில் ஏலாதி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். முதல் மூன்று மாதங்கள் ஏற்படும் உடல் உபாதைகளை தடுக்க சித்த மருத்துவ "பரராசசேகரம்" என்னும் நூல் தாமரை பூவின் காய், சந்தனம், அதிமதுரம், இஞ்சி, அல்லி, சீந்தில்தண்டு போன்ற மூலிகைகளை தேவைகேற்ப எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறது. முதல் மூன்று மாதங்களில் சிலருக்கு உதிரபோக்கு ஏற்படும். அந்நிலையில் அதிமதுரம், சீரகம் சேர்த்து நீரிலிட்டு 8ல் ஒரு பாகமாக சுண்டி வரும்வரை கொதிக்க வைத்து 3 அல்லது 4 நாட்கள் கொடுக்க உதிரபோக்கு நிற்கும்.
கறிவேப்பிலை பொடியை தொடர்ந்து முதல் மூன்று மாதங்கள் உணவில் சேர்த்து வர இரும்புச்சத்து குறைவு ஏற்படுவதை தடுக்கலாம் இரும்பு சத்து குறைவு உள்ள பெண்கள் கறிவேப்பிலை ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு இரண்டையும் சம அளவு எடுத்து வறுத்து, கற்கண்டு, சுக்கு சம அளவு எடுத்து கறிவேப்பிலை, முருங்கை ஈர்க்குடன் சேர்த்து, தண்ணீர் 400 மிலி விட்டு கொதிக்க வைத்து 100 மிலி ஆனவுடன் வடிகட்டி மாலை வேளைகளில் குடித்து வர இரத்த அளவு அதிகரிக்கும். இரத்த சோகையினால் ஏற்படும் உடல்சோர்வு, படபடப்பு, மூச்சு வாங்குதல் போன்ற குறிகுணங்களும் குறையும்.

இயற்கை மருத்துவர் நந்தினி
நெல்லிக்காய் லேகியம், அன்னபேதி செந்தூரம் போன்ற மருந்துகளை சித்த மருத்துவர்களின் பரிந்துரைக்கேற்ப கருவுற்ற காலங்களில் எடுத்து வரலாம். ரத்த சோகையை சரிசெய்வதுடன் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் இது துணை செய்யும்.
கருவுற்ற நடு மூன்று மாதங்கள் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். உணவுடன் அதிக நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழ வகைகளை சேர்த்து கொள்வதன் மூலமும், இரவு உறங்கும் முன் அதிக நீர் அருந்துவதன் மூலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
மலச்சிக்கலை சரிசெய்ய வீட்டிலேயே நெல்லிக்காய் வற்றல் கைப்பிடி அளவு எடுத்து, அதில் 200 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைத்து, அது 50 மிலி ஆனவுடன் சம அளவு பசும்பால் சேர்த்துக் சாப்பிட்டு வரலாம். மேலும் மலக்குடார மெழுகு, குல்கந்து போன்ற மருந்துகளையும் தேவைக்கேற்ப மருத்துவர் அறிவுரைப்படி எடுத்து வரலாம்.
சில பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்களால் உடல் மடிப்பு பகுதிகளில் தோல் நிறம் கருமையடையலாம். அந்த பகுதிகளில் பிண்டத்தைலம் தடவி, நலங்கு மா தேய்த்து குளித்து வர சிறிது நிறமாற்றம் ஏற்படும்.
கருவுற்ற கடைசி மூன்று மாதங்கள் குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். அந்த நிலையில் வயிறு விரிவடைவதன் காரணமாக வயிற்றில் கோடுகள் ஏற்படும். சிலருக்கு அவ்வப்போது அடிவயிறு வலி, இடுப்பில் வலி ஏற்படுவதுண்டு.
இடுப்பு வலிக்கு உளுந்து தைலம் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு குழந்தையின் எடை அதிகரிக்கும் பொழுது கால்களில் வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படும். மேலும் கால் கெண்டை சதைகளில் இரவு நேரங்களில் பிடிப்பு ஏற்படும். மருதம்பட்டை சூரணத்தை மருத்துவரின் பரிந்துரை படி பாலில் கலந்து தினம் பருகி வர இப்பிரச்சினை குறையும்.
கால்களில் வீக்கம் ஏற்பட்டு, சிறுநீரில் சில பெண்களுக்கு புரதம் வெளியேறும். இந்த நிலையில் சிறுகண்பீளை எனப்படும் பொங்கல் பூவை கஷாயம் செய்து பருகி வரலாம். அல்லது சிறுகீரையை சூப் செய்து பருகலாம். மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் சாரணை வேர் மற்றும் சுக்கு சேர்த்து இடித்து முடிச்சாக இட்டு அரிசியுடன் வேக வைத்து பின் நீக்கிவிட்டு மதிய உணவாக கடைசி மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்கின்றனர். இதன் மூலம் கால் வீக்கம் குறைவதுடன், நோய் தொற்றுகளில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது.
நீரிழிவு நோய் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே தொடங்கி விடுகிறது. உடல் எடை அதிகரிப்பதாலும், இன்சுலின் உற்பத்தி குறைவுபடுவதாலும், இன்சுலின் எதிர்பொருள் உருவாகுவதன் காரணமாகவும் நீரிழிவு ஏற்படலாம். இந்நிலையில் ஒரு வெண்டைக்காயை எடுத்து வெட்டி இரவு நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அருந்தி வர கருவுற்றிருக்கும் காலத்தில் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு குறையும்.
மேலும் கடைசி மூன்று மாதங்கள் பனிக்குட நீரின் அளவு குறையும் அபாயம் சிலருக்கு உள்ளது. அப்படி கணிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி சதாவேரி நெய் எடுத்து வர பனிக்குட நீரின் அளவு அதிகரிக்கும்.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கருவுற்றிருக்கும் கடைசி மூன்று மாதங்கள் முடக்கற்றான் கைபிடி அளவு, சீரகம், தேங்காய்துருவல் தலா 10 கிராம் எடுத்து பிட்டவிப்பது போல் அவித்து சாறு எடுத்து 200 மிலி வாரம் இருமுறை ஒரு வேளை எடுத்து வருவார்கள். இதன் மூலம் பனிக்குட நீர் குறையாமல் தடுக்க முடியும்.
சில பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் எடை குறைவாக இருக்கலாம். அந்நிலையில் பஞ்சமுடிச்சு கஞ்சி தினம் பருகி வரலாம்.
பச்சரிசி- 5 கிராம்
பச்சைபயிறு- 5 கிராம்
துவரம்பருப்பு - 5 கிராம்
கடலை பருப்பு - 5 கிராம்
உளுந்து- 5 கிராம்
அனைத்து பொருட்களையும் தனித்தனியாக லேசாக வறுத்து பின்னர் ஓர் சுத்தமான துணியில் வைத்து சிறு முடிச்சாக கட்டிக்கொள்ளவும். பின்னர் பாத்திரத்தில் 500 மிலி நீர் எடுத்து அதில் முடிச்சை இட்டு வேக வைக்கவும். தண்ணீரில் அனைத்து சத்துகளும் சேர்ந்து கலங்கலாக தோன்றும்போது (தண்ணீர் 100 மிலி ஆக வற்றி வரும்போது) முடிச்சை நீக்கி கஞ்சி தெளிவை அருந்தி வர குழந்தையின் எடை படிப்படியாக அதிகரிக்கும்.
கருவுற்றிருக்கும் காலத்தில் ஹைபோதைராய்டு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க சுடு சோறு வடித்த கஞ்சி தண்ணீரில் வெண்ணெய் சேர்த்து வாரம் இருமுறை அருந்தி வரலாம்.
பாவன பஞ்சாங்குல தைலம் என்னும் சித்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவில் கருவுற்ற பத்து மாதங்களும் எடுத்து வர, பிறக்கும் குழந்தை கர்ப்பசூடும் நோயுமின்றி திடமாகவும், அழகாகவும், புத்தி கூர்மையுடையதாகவும் இருக்கும் என நூல்கள் உரைக்கின்றன.
பிரசவ காலம் நெருங்கிய பின்னரும் சில பெண்களுக்கு குழந்தையின் தலை இறங்காமல் இருக்கும். சிலருக்கு கருவாய் திறக்காமல் இருக்கும். அந்த நிலையில் ஆடாதோடை வேரை கஷாயம் செய்து பருகலாம். இதன் மூலம் குழந்தை தலை இறங்குவதுடன் உயர் குருதி அழுத்தமும் குறையும். மேலும் சோம்பு, குங்குமப்பூ சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வர கருவாய் திறந்து சுகபிரசவம் ஏற்படும்.
இந்த முறைகளை சரியாக பின்பற்ற முடியாதவர்கள் அரசின் மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் கிடைக்கும் சித்த மருந்துகளை பயன்படுத்தி கர்ப்பகால அவத்தைகளை தடுக்கலாம்.
பிரசவத்திற்கு பிறகு பெண்கள் போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். சவுபாக்ய சுண்டி லேகியம் தினம் இரு வேளை எடுத்து வரலாம். தாய்ப்பால் சுரப்பை இது அதிகப்படுத்துவதுடன் பிரசவத்திற்கு பின் ஏற்படும் பலக்குறைவு, களைப்பு, சோர்வு, ஜீரணக்குறைவு, ரத்த சோகை போன்றவற்றை நீக்கும்.
பிரசவத்திற்கு பின் முதல் வாரம் முருங்கை, கத்தரி, அவரை இவைகளின் பிஞ்சு, கருணைகிழங்கு, அரைக்கீரை போன்றவைகளை உணவாக கொள்ளலாம். துவர்ப்பான அத்திபிஞ்சு, வாழைப்பிஞ்சு போன்றவைகளை சேர்க்கக்கூடாது. இவைகளினால் வெளிப்பட வேண்டிய அழுக்கு தடைப்படும். அதிக சூடான உணவை உட்கொள்ள கூடாது. கரப்பான், மாந்தம் இவைகளை உண்டாக்ககூடிய பொருள்களை உண்ண கூடாது. தாய்ப்பாலை அதிகமாக சுரப்பிக்க கூடிய பூண்டு, பாதாம் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். சீரகம் மற்றும் அதிமதுரம் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து 2 கிராம் அளவு நாட்டு சர்க்கரை அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும். குழந்தைக்கு பால் ஊட்ட வேண்டிய காலம் வரை பத்தியமாகவே உணவு உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை குழந்தைகளுக்கு 12 மாதம் வரை தாய்ப்பால் புகட்டுவது நன்று.
- நம் தெருக்களின் சாலையோரங்களில் எளிமையாக கிடைக்கும் நொச்சி இலை ஆஸ்துமா நோயினருக்கு கிடைத்த மாபெரும் புதையல்.
- உணவு முறை மாற்றம் கொண்டு வருவது ஆஸ்துமாவிற்கும் நல்லது.
முதுமையில் கிட்டத்தட்ட 2.5 முதல் 5 விழுக்காடு பேருக்கு ஆஸ்துமா எனும் இரைப்பு நோய் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இது மிகப்பெரிய கொடுமையைத் தரக்கூடிய நோய்நிலை. குழந்தை பருவம் முதல் முதுமை வரை பலர் இந்த ஆஸ்துமாவால் துன்புறும் அவலநிலை உள்ளது.
நாட்பட்ட நுரையீரல் தடை நோய்நிலைகளுள் ஆஸ்துமாவும் ஒன்று. முதுமையில் அதிகப்படியான மரணத்தை உண்டாக்கும் நோய்நிலைகளில் நாட்பட்ட நுரையீரல் நோய்கள் நான்காவது இடத்தில் உள்ளன. நாளுக்கு நாள் இந்த விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வது முதுமையில் வாழ்நாளிற்கு மிகப்பெரும் சவால் தான்.
ஆஸ்துமா எனும் நோய்நிலைக்கு நெஞ்சாங்கூட்டில் சேரும் கபம் (சளி) முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக பனி காலங்களில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஆஸ்துமா நோயுள்ள முதியவர்களுக்கு மிகச் சவாலான காலமாக இருக்கின்றது. தொற்றுக்கிருமிகள் மட்டுமல்லாது, ஒவ்வாத பொருட்களை எதிர்கொள்ளும் போதும், பருவங்கள் மாறும்போதும், குளிர்ந்த காற்றும், புகையும், தூசும் ஆஸ்துமா நோயின் குறிகுணங்களை அதிகரித்து மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்தும்.
'கபம் அல்லாது காசசுவாசம் காணாது' என்கிறது சித்த மருத்துவம். மார்பு கூட்டின் உள்ளே நுரையீரலில் சேரும் அதிகப்படியான கபம் எனும் சளி அத்துடன் சேரும் வாதம் ஆஸ்துமா எனும் கொடிய இரைப்பு நோய்க்கு காரணமாகி துன்புறுத்தும் என்கிறது நம் மரபு மருத்துவம்.
கபத்துடன் சேரும் பித்தம் மூச்சுக்குழாயில் வீக்கத்தை உண்டாக்கி நோய்நிலைக்கு அடித்தளமிடும். கபத்துடன் சேரும் வாதம் (வாயுவானது) குறிகுணங்களை உண்டாக்கி நோயாளிகளை அதிக சிரமத்திற்கு ஆட்படுத்துவதாக உள்ளது. இருப்பினும் கபம் தான் ஆஸ்துமாவிற்கு ஆதாரம்.
எனவே சித்த மருத்துவத்தில் உள்ள கபத்தை நீக்கும் மூலிகைகளும், மருந்துகளும் ஆஸ்துமா நோய்க்கு நல்ல பலன் தரக்கூடும். அதேபோல் கபத்தை அதிகரிக்கும் உணவுப்பொருட்களை தவிர்ப்பதும் நோய் வராமல் தடுக்கும் எளிய வழிமுறை. இதன் மூலம் முதுமையில் மூச்சிழுத்தற்மருந்தின் (இன்ஹேலெர்) பயன்பாட்டைக் குறைத்து, அதன் பின் விளைவுகளையும் குறைக்க முடியும்.
கபத்தைக் குறைக்கும் துளசி, அதிமதுரம், தூதுவளை, கண்டங்கத்திரி, நஞ்சறுப்பான், திரிகடுகு, தாளிசபத்திரி, ஆடாதோடை, நொச்சி, கற்பூரவள்ளி, வெற்றிலை, முசுமுசுக்கை, அரத்தை ஆகிய மூலிகைகளும், மஞ்சள், கிராம்பு, பூண்டு, ஓமம் ஆகிய அஞ்சறைப்பெட்டி கடைசரக்குகளும் ஆஸ்துமா நோயில் பலனைத் தரக்கூடியதாக உள்ளன. அடிக்கடி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு, ஆஸ்துமாவால் உண்டாகும் அவதியில் சித்த மருத்துவம் ஆறுதல் தரும்.

நொச்சி இலை - தூதுவளை
நம் தெருக்களின் சாலையோரங்களில் எளிமையாக கிடைக்கும் நொச்சி இலை ஆஸ்துமா நோயினருக்கு கிடைத்த மாபெரும் புதையல். நொச்சி இலையுடன் பூண்டு, மிளகு, ஓமம் சேர்த்து கசாயமாக்கி குடித்து வர மூச்சு இரைப்பு நோய்நிலையில் நல்ல பலன் தரும். நொச்சி இலையில் உள்ள 'லிக்னேன்' வேதிப்பொருட்கள் மூச்சுக்குழாயில் உண்டாகும் அழற்சியைக் குறைத்து மூச்சு விட சிரமத்தைக் குறைக்கும்.
தூதுவளை நுரையீரலின் வன்மைக்கு இயற்கை தந்த வரம். இதனை பயன்படுத்த மறப்பது நுரையீரலுக்கு இழைக்கும் பெரும் துரோகம். காரச் சுவையுடைய தூதுவளை இலைகளுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, மஞ்சள், பெருங்காயம், சிறிது உப்பு சேர்த்து சூப் வைத்து மாலை நேரங்களில் எடுத்துக்கொள்ள நுரையீரல் வலுவடையும். அடிக்கடி உண்டாகும் ஆஸ்துமா தொல்லையும் குறையும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள 'தூதுவளை நெய்' எனும் மருந்தினை பயன்படுத்துவதும் பலன் தரும்.
அதே போல் கண்டங்கத்திரி எனும் மூலிகை ஆஸ்துமா நோய்நிலையில் நன்மை பயக்கக்கூடியது. இவை இரண்டும் சேர்ந்த மருந்துக்கலவை ஆஸ்துமா நோயில் பலன் தருவதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கண்டங்கத்திரி வேரினை ரசம் வைத்து எடுத்துக்கொள்ள சளியைக் குறைத்து இரைப்பு நோயில் உதவும்.
ஆடாதோடையின் பேரை சொன்னால் பாடாத நாவும் பாடும் என்கிறது சித்த மருத்துவம். நுரையீரலில் கெட்டிபட்டு மூச்சுத் திணறலை உண்டாக்கும் சளியை இளக்கி வெளிப்படுத்தும் தன்மை இதற்குள்ளது. மேலும் இதில் உள்ள வாசைன், பிரோம்ஹெக்சன் ஆகிய வேதிப்பொருட்கள் மூச்சுக்குழாயை விரிவடையச் செய்து ஆஸ்துமாவின் துன்பத்தை குறைக்க உதவும். சித்த மருந்துகளாகிய 'ஆடாதோடைக் குடிநீரும்', 'ஆடாதோடை மணப்பாகும்' அத்தகைய நன்மைகளைத் தர வல்லன. ஆடாதோடை இலைச்சாறுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு மூன்று வேளை எடுத்துக்கொள்வதும் பலனளிக்கும்.
தாளிசபத்திரி இலைகள் சேர்ந்த 'தாளிசாதி சூரணம்' எனும் எளிய மருந்து ஆஸ்துமா முதல் நுரையீரல் புற்றுநோய் வரை பலனை அளிக்க கூடியது. தாளிசபத்திரி இலையில் உள்ள 'பிக்ளிடாக்சால்' எனும் வேதிப்பொருள் நுரையீரல் சார்ந்த பல்வேறு நோய்நிலைகளில் பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
எளிமையாக காரச் சுவையும், விறுவிறுப்புத் தன்மையும் உள்ள வெற்றிலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க மார்பில் கெட்டிப்பட்ட கோழை வெளிப்பட்டு துன்பம் நீங்கும். இது பாரம்பரிய பாட்டி வைத்தியமாய் இன்றளவும் பல கிராமங்களில் பயன்பாட்டில் உள்ளது.
'திரிகடுகு சூரணம்' எனும் சித்த மருந்து சுவாசப்பாதை தொற்றினைக் குறைத்து ஆஸ்துமா நோயில் பலன் தரக்கூடியது. இதில் உள்ள சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் கபத்தை வேரறுக்கும் காரத்தன்மை உடைய மூலிகை பொக்கிஷங்கள். இதனை தேனில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது. ஆஸ்துமாவில் இருந்து மீண்ட பிறகு நுரையீரலை வன்மைப்படுத்த 'திப்பிலி ரசாயனம்' எனும் மருந்து உதவும். இதனை தினசரி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ளலாம்.
மஞ்சளில் உள்ள 'குர்குமினாய்டு' வேதிப்பொருட்கள் ஆஸ்துமா நோயில் மூச்சுக்குழாய் அழற்சியை உண்டாக்கும் பல்வேறு வேதிநொதிகளைத் தடுத்து வீக்கத்தைக் குறைக்க உதவும். மேலும் இது ஒவ்வாமையை தடுத்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் கூடியது. ஆஸ்துமாவில் ஓமத்தை கசாயமாக்கி எடுத்துக்கொள்வதும் மூச்சுதிணறல் குறைய வழிவகை செய்யும்.
மூலிகைகள் மட்டுமல்லாது பவழம், முத்துச்சிப்பி சேர்ந்த சித்த மருந்துகளும், இன்னும் பல தாது கலப்புள்ள மருந்துகளும் இரைப்பு நோய்நிலையில் பெரும் பயன் தரக் கூடியதாக உள்ளன. மார்பு இறுக்கம் இருப்பின் தேங்காய் எண்ணெயில் பூங்கற்பூரம், ஓமம் சேர்த்து காய்ச்சி வெளிப்பிரயோகமாக தடவிவர சிரமம் குறையும். கோதுமை தவிட்டினை வறுத்து துணியில் முடிந்து ஒற்றடம் இடுவதும் நல்லது. மூச்சுத்திணறல் இருக்கும்போது ஆவி பிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
உணவு முறை மாற்றம் கொண்டு வருவது ஆஸ்துமாவிற்கும் நல்லது. குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களையும் நோயுள்ள காலங்களில் தவிர்ப்பது நல்லது. குளிரூட்டப்பட்ட பானங்களும், உணவுப்பொருட்களும் கபத்தைக் கூட்டும். எனவே எக்காலத்திலும் அவற்றை தவிர்ப்பது நல்லது. இனிப்பும், இனிப்பு கலந்த உணவுப்பண்டங்களும், சளி சுரப்பை அதிகரிக்கும். அடிக்கடி சுவாசப்பாதை தொற்று, ஆஸ்துமா உள்ளவர்கள் இனிப்பைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ஊட்டமளிக்கும் உணவுப்பொருளாக இருப்பினும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்புடையது அல்ல. இது கபம் சார்ந்த உணவு என்பதால் சளி உற்பத்தி அதிகரிக்கக்கூடும் என்கிறது சித்த மருத்துவம். சீன பாரம்பரிய மருத்துவமும் பால் பயன்பாட்டால் ஆஸ்துமா நோய் அதிகரிப்பதாக தெரிவிக்கின்றது. ஆகவே கபத்தை அறுக்கும் தன்மையுள்ள துளசி, அதிமதுரம், சுக்கு, மஞ்சள், மிளகு இவற்றை நீரில் கொதிக்க வைத்து தேநீராக எடுத்துக்கொள்வது நுரையீரலுக்கு வன்மை தரும்.
முதுமையில் திடீரென ஏற்படும் மூச்சுத்திணறல் சவால் மட்டுமல்ல, பயமும் தான். அடுத்து என்ன நிகழ்ந்து விடுமோ என்ற உள்ளுணர்வும், உடனிருக்கும் பிறருக்கு சிரமம் கொடுக்க நேரிடுமோ என்ற வருத்தமும், ஆஸ்துமா முதுமையை மனம் உடைய செய்யும். அவசர தேவைக்கு மூச்சிழுத்தற் மருந்துகளை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் நாட்பட பயன்படுத்துவதால் மூட்டுக்கள் தேய்மானமும், நடுக்கமும், மார்பு படபடப்பும் ஏற்படக்கூடும் என்று நவீன அறிவியல் எச்சரிக்கின்றது.

சோ.தில்லைவாணன்
முதுமையில் இதயம் சார்ந்த நோய்நிலைக்காக எடுத்துக்கொள்ளும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளால் கூட ஆஸ்துமா உண்டாவதாக இருப்பதால், சாதாரண ஆஸ்துமா தான் என்று சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் மருத்துவரை நாடுவது நல்லது.
மூச்சுப் பயிற்சி செய்வது பல்வேறு உடல் உபாதைகளுக்கு நன்மை பயக்கும் எனினும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவசியம் பழகுவது நல்லது. யோக இருக்கை நிலைகளான சுகாசனம், சவாசனம், புஜங்காசனம், சேது பந்தாசனம், உஷ்ட்ராசனம், உத்தனாசனம், திரிகோணாசனம் ஆகியவற்றுடன் மூச்சு பயிற்சி பழகுவது நுரையீரலை வலுப்படுத்தும், அடிக்கடி ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்கும்.
எத்தோப்பியா நாட்டில் நடந்த ஆய்வில், ஆஸ்துமா நோயாளிகள் யோகா பயிற்சி மேற்கொள்ளும்போது, நோயின் தாக்கம் குறைவதாகவும், ஆஸ்துமா மருந்துகளின் பயன்பாடு குறைவதாகவும் ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. இது நமது பாரம்பரிய மருத்துவத்தின் யோகக்கலைக்கு மணிமகுடம் சூட்டுவது போலுள்ளது.
அதிகாலை வேளையில் மூச்சுத்திணறலை உண்டாக்கி பிராணன் பறிபோகும் அளவிற்கு பயத்தையும், உடல் சோகத்தையும் உண்டாக்கி சித்ரவதை செய்யும் நோய்நிலையாக உள்ளது ஆஸ்துமா. கபம் நீக்கும் மூலிகை மருந்துகள், பாரம்பரிய உணவுகள் இவற்றை நாடுவதும், மூச்சுப்பயிற்சியும், முதுமையில் ஆஸ்துமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி வாழ்நாளைக் கூட்டும்.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com
- சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும்.
- 80 வயதுக்கு பிறகு கேதுவின் ஆதிக்கம். கேது ஒரு நிழல் கிரகம்.
ஐந்தாம் நிலை
மனிதர்களாய் பிறந்தவர்கள் லவுகீக உலகில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அனுபவித்த பிறகு பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொல்வாக்கை நிலை நாட்ட விரும்பும் காலம்.
இந்நிலையில் சம்பாதித்தது போதும் இருப்பதை வைத்துக் கொண்டு உற்றார் உறவுகள் பேரன், பேத்தி, பிள்ளைகள், மருமகள், மருமகன் என வாழ மனம் விரும்பும் பருவம். இந்த காலகட்டத்தில் நல்ல ஓய்வையும், சொந்த பந்தங்களுடன் கலந்து உறவாடுவது, உலகைச் சுற்றிப் பார்ப்பது என மகிழ்ச்சியை யார் அனுபவித்து வாழ்கிறார்களோ, அவர்கள்தான் நான்காம் நிலையில் நன்றாக வாழ்கிறார்கள் என அர்த்தம். மாறாக இந்தப் பருவத்திலும் ஒருவர் பொருள் ஈட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தால், அவர் கடந்த காலங்களைத் தவறவிட்டுவிட்டார் என்றுதான் பொருள்.
குரு தேடி வரும் காலம்:
50 முதல் 60 வயது வரை குருவருள் தேடி வரும் காலம்.
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் குரு. மனிதவாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால் எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும் குரு பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும் குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும். எனவே தான் ஜோதிட சாஸ்த்திரம் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுகிறது. ஜனன கால ஜாதகத்தில் குரு பலம் பெற்றவர்கள் உடல் ஆரோக்கியம், மன அமைதி ஆன்மீகச் சிந்தனை, தெய்வ பக்தி, நல்ல புத்திரர், நல்ல அறிவு, கற்பு, மந்திர சாஸ்திரம், தெய்வதரிசனம், தீர்த்த யாத்திரை, ஆன்மீக குருக்களின் நட்பு, சமுதாயத்தில் நல்ல மதிப்பு, பிராமணர் ஆசி, சொல்வாக்கு, பணம் ஆகிய நற்பலன்கள் தானாக வந்து விடும். அத்துடன் ஆலய தரிசனம் கிடைக்கும். குழந்தைகளின் அன்பு, அரவணைப்பு உண்டாகும் காலம். கவுரவம் புகழ் அந்தஸ்து தேடி வரும் காலம்.
ஆறாம் நிலை
தன் கணக்கை கூட்டி கழித்து லாப நஷ்டங்களை மனிதன் பார்க்கும் காலம். தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட வேண்டிய காலம்.
40 முதல் 60 வயது வரை சம்பாதிக்க தவறியவர்களுக்கு பிள்ளைகளின் கல்விக் கடன், மகளின் திருமண செலவு. மனைவியின் நச்சரிப்பால் வங்கியில் வீட்டுக் கடன் என்று பல கடன்கள் வந்து பயமுறுத்தும் காலம்.
சனியின் ஆதிக்கம்:
60 முதல் 70 வயது வரை சனியின் ஆதிக்கம்
சனி பகவான் நவகிரகத்தில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர். கர்மக் காரகன், ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். வாழ்க்கையில் கடுமையான துன்பத்தையும் அளவற்ற நன்மையையும் தருபவர் இவரே. ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர். ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் ரெக்காடிங் செய்து தனக்குள் பதிவு செய்பவர். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர் சனியாகும்.
சனி வலுவாக இல்லையெனில் இந்தப் பத்து வருட காலமும் அவதியாகவே இருக்கும். கடனிலும் கவலையிலும் வாழ்வு கழியும்.
ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் சுகமாக சகரியமாக வாழ்க்கையில் செட்டிலாகுவது எப்படி என ஓய்வு காலத்தில் பிறருக்கு ஆலோசனை வழங்குவார்கள். வயதான காலத்தை சுகமாக கழிப்பார்கள்.
ஏழாம் நிலை
ஏமாற்றங்கள், துரோகங்களால் அவதியுறும் காலம். இதுவரை பாடுப்பட்ட நம்மை மனைவி, மக்கள், உற்றார், உறவினர் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என நினைக்கும் காலம்.
ராகுவின் ஆதிக்கம்:-
70 முதல் 80 வயது வரை ராகுவின் ஆதிக்கம். நவகிரகங்களில் மிகவும் வலிமையானவர் ராகு. ஒளி கிரகங்களான சூரிய, சந்திரர்களை தன் பிடியில் சிக்க வைத்து செயலிழக்க செய்யும் வலிமை மிக்கவர். கலியுகத்தில் மிகவும் வலுவாக செயல்படும் கிரகம் ராகுவாகும். ராகு மனித தலையும் பாம்பின் உடலும் கொண்டவர். பாதி மனிதன் பாதி மிருகம். மெய், வாய், கண், மூக்கு , காது என்ற ஐம்புலன்களே ஒருவரின் சிந்தனை உறுப்புகள். மனித உடலில் உள்ள ஐம்புலன்கள் தலைப் பகுதியில் உள்ளன.
ராகு மனித தலையின் ஐம்புலன்களை இயக்கி புறச் சிந்தனைகளை உருவாக்கி லவுகீக உலகோடு இணைக்க வைப்பதே ராகுவின் வேலை. லவுகீக உலகோடு இணையும் மனிதனே தவறு செய்வான். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே அகச் சிந்தனைகள் உருவாகும். ஐம்புலன்களை அடக்க பாடம் கற்பிப்பதே ராகு பகவான்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
சுபத்தன்மையுடன் பலமாக அமைந்த ஜாதகர்கள் மட்டும் ராகுவின் தொல்லையில் இருந்து தப்பித்து விடுவார்கள் அல்லது விதிவிலக்குப் பெறுவார்கள்.
நமக்கு உரிய மதிப்பும் மரியாதையும் இல்லையே! பலரும் உதாசீனப்படுத்து கிறார்களே! எனும் சிந்தனைகள் வலுக்கக்கூடிய காலம். இவர்களுக்கா பாடுபட்டோம் ? என்று மனவேதனையை ஏற்படுத்தக்கூடிய காலம்.
அத்துடன் பலவிதமான உடல் உபாதைகள் நோய்கள் வந்து நட்பு கொள்ளும் காலம். உதவிக்கு உறவுகள் தேவைப்படும் காலம்.
எட்டாம் நிலை
மனிதன் ஞானம் பெறும் காலம். பழைய நினைவுகளிலேயே காலம் கழிக்கும் நிலை. அதிகமாக பேசாமல் மவுனமாகவே இருக்கும் காலம். வாலிப பருவத்தில் உலக இன்பங்களை நுகர தான் செய்த தவறுகளுக்கு வருந்தும் காலம்.
80 வயதுக்கு பிறகு கேதுவின் ஆதிக்கம். கேது ஒரு நிழல் கிரகம். சட்டப்படியான மற்றும் தீர்ப்பதற்கு கடினமான அல்லது தீர்க்கவே முடியாத அனைத்து பிரச்சினைக்கும் கேதுவே காரணம்
உருவம் இல்லாமல் நிழலாக நின்று செயல்படுவதால் உடலில் சூட்சமமாக நின்று செயல்படும் குண்டலினி சக்திக்கு ஒப்பிடலாம். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப் பகுதியில் அமைதியாய் இருக்கும் குண்டலினி சக்தியை
யோகா மற்றும் தியானம் மூலம் எழுப்பும் போது அளவிட முடியாத பேராற்றல் கிடைக்கும். லவுகீகம் என்னும் மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை அடக்கி முக்தி அடையச் செய்பவர் கேது. முக்தியை ஆன்மா நாடும் வரை அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பவர் கேது.
இந்த காலத்தில் அனைவரையும் அனுசரித்துப் போகும் கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். குடும்பத்திற்கு பாரமாக இருக்கிறோம் என்ற எண்னம் மிகும். ஒரே இடத்தில் பொழுதைக் கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் உறுப்புகள் தளர்ந்து நடை, உடை, பாவனை மாறிவிடும். ஒருவரின் அந்தஸ்திற்கும் கல்வித்தகுதிக்கும் தற்போதைய உருவத்திற்கும் சம்பந்தம் இருக்காது. முக்தியை மனம் விரும்பும் காலம். இனி மனிதப் பிறவியே வேண்டாம் என மனம் வேதனைப்படும் காலம்.
விதி- மதி- கதி
விதி, மதி, கதி இந்த மூன்றுமே ஒரு மனிதனின் வாழ்வை பிறப்பு முதல் இறப்பு வரை வழிநடத்துகிறது.
ஜோதிட ரீதியாக இந்த எட்டு நிலையையும் தீர்மானிப்பது விதி மதி கதி. ஒருவர் ஜாதகம் என்னதான் யோகம் படைத்த ஜாதகமாக இருந்தாலும் அந்த யோகத்தை முழுவதுமாக முறையாக அனுபவிக்க லக்கனாதிபதி வலிமை அடைந்த நிலையில் பாவ தன்மை அல்லது பலவீனம் அடையாமல் இருக்க வேண்டும். சிலர் பிறந்த நேரத்தில் இருந்து இறக்கும் வரையிலும் ஒரு சிலருக்கு எல்லாமே சரியாக அமைந்து சரியான சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு நிறைவாக மறைவார்கள்.
காரணம் அவர்களது ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் நல்லபடியாக அமர்ந்து லக்கனாதிபதி வலிமை பெற்று உகந்த யோக தசைகள் பிறப்பிலிருந்து இறப்பு வரை சரியாக அமைந்து இருக்கும்.
சிலர் பிறப்பிலிருந்து இறப்பு வரை கஷ்டப்பட்டு பிறந்து, வளர்ந்து மற்றும் கஷ்டப்பட்டு இறப்பார்கள். இவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஜாதகத்தில் லக்கின பாவகமும் பலவீனம் பெற்று, கிரக அமைவிடமும் சரியாக இல்லாமல் தொடர்ந்து யோக தசைகள் நடப்பில் இல்லாமல் இருப்பதை பார்க்கலாம்.
ஜாதகத்தில் லக்னாதிபதி வலிமையாக கேந்திர கோணங்களில் நின்று இயற்கை சுப கிரகமான குரு பகவான் அல்லது வளர்பிறை சந்திரன் அல்லது தனித்த புதன் அல்லது சுக்கிரன் ஆகிய சுப கிரக தொடர்பை பெற்ற நிலையில் ஜாதகர் எவ்வித சூழலிலும் நிலை குலையாமல் எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் வெற்றி காண்பார். லக்கனாதிபதி பலம் இழந்த நிலையில் ராசியையும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். இதைத்தான் விதி கெட்டால் மதி என்று சொல்வார்கள். அந்த வகையில் ராசியில் எந்த பாவ கிரகம் இடம்பெறாமல் இருக்க வேண்டும். ராசி அதிபதியும் பாவர் கலப்பு இன்றி சுப கிரக பார்வை அல்லது சேர்க்கை தொடர்பை பெற்றிருக்க வேண்டும்.
விதி-மதி இரண்டும் கெட்டால் கதி என்று அழைக்கப்படும் சூரியன் ஜாதகத்தில் வளம் பெற வேண்டும்.
விதி
விதி என்பது லக்னம் ஜோதிட ரீதியாக லக்னம் என்பது விதியாக, ஒருவரின் தலையெழுத்தாக அமைகிறது.
மதி
மதி என்பது சந்திரன். 5-ம்மிடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் விதிக்கப்பட்டதை மதியால் எப்படி சாதகமாக மாற்றி அமைப்பது என்பதை காட்டுகிறது.
கதி என்பது சூரியன்
5-ம் இடம் எனும் பூர்வ புண்ணிய பலத்தால் மதியால் மாற்றியமைக்கப்பட்டதை 9-ம் இடம் எனும் பாக்கிய பலத்தால் சாதகமாக கிடைக்க வழிவகை செய்யப்படுவதை குறிக்கிறது..
மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் தசா புத்தியோடு இணைந்தே செயல்பட்டாலும் மேலே குறிப்பிட்ட வயது பிரிவின்படியும் கிரகங்களின் ஆளுமை படியுமே வாழ்க்கை பயணம் அமையும்.
இந்த எட்டு நிலைகளையும் அந்தந்த நிலைகளுக்கேற்ற ஞானத்துடன் கடந்தால் நிச்சயம் மகிழ்ச்சியுடனும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்க்கை அமையும். வாழ்வில் விதி, மதி, கதி நன்கு அமைந்தவர்களுக்குத்தான் சகல வெற்றிகளும் கூடி வருகின்றன. சாதாரணமாக இருப்பவர்கள்கூட மிக பெரிய சாதனை மனிதராக மாற்றுவது இத்தகைய அமைப்பினால்தான்.
எனவே, அந்தந்த நிலையில் சரியாக வாழ்ந்து நம் வாழ்வை மகிழ்ச்சியும், அர்த்தமும், சமுதாயத்திற்கு உதவி கொண்டதாகவும் மாற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும்.
- நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும் கோள் செய்யாததை குல தெய்வம் செய்யும் என்று சொல்வார்கள்.
- குல தெய்வத்தை கண்டு பிடித்து கும்பிட கும்பிடதான் தோஷங்களில் இருந்து தப்ப முடியும்.
நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ சாமி கும்பிடுகிறோம். பெரும்பாலும் அனைவருமே ஒன்றுக்கும் மேற்பட்ட சாமிகளை வணங்குவது உண்டு. ஆதிகாலத்தில் இயற்கையாகவே அமைந்து விட்ட பல்வேறு காரணங்களால் சனாதன தர்மங்களின் அடிப்படையில் பல்வேறு கடவுள்களை வழிபடுவது வழக்கத்தில் வந்து விட்டது.
இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்துக்குரிய தெய்வம் என்றெல்லாம் கடவுள் வழிபாட்டை பல வகைகளாக பிரித்து விட்டார்கள். ஒவ்வொரு வழிபாட்டிலும் ஒவ்வொரு வகையான திருப்தி கிடைப்பதாக பலரும் சொல்வது உண்டு.
ஆனால் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடாவிட்டால் எந்த பிரயோஜனமும் கிடையாது. பல்வேறு தெய்வங்களை ஒருவர் வழிபட்டு வந்தாலும் குல தெய்வ வழிபாடு மட்டுமே வலிமையானதாக பலன் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதற்கு காரணம் ஒரு குடும்பத்தில் ஒரு குல தெய்வத்தை வழிபடுகிறார்கள் என்றால் அதை அவர்களது முன்னோர்கள் பாரம்பரியமாக தனிச்சிறப்புடன் வழிபாடுகளை காலம் காலமாக செய்து வருகிறார்கள் என்று அர்த்தமாகும். இதனால்தான் குல தெய்வத்தை குலம் காக்கும் தெய்வமாக போற்றுவது உண்டு.
சுருக்கமாக சொல்ல வேண்டு மானால் ஒருவரது வாழ்வு அமைதியாகவும், மேம்பாடு கொண்டதாகவும் இருக்கிறது என்றால் அதற்கு 100 சதவீதம் குல தெய்வம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஏனெனில் குல தெய்வம் மட்டும்தான் ஒருவரது அனைத்து வகையான நலன்களையும் உண்மையான அக்கறையையும் காட்டும்.
மற்ற தெய்வங்களை வழிபட்டாலும் குல தெய்வத்தை வழி பட்டால்தான் அதற்கான பலன்கள் கிடைக்கும். இதை உணர்த்தவே நாள் செய்யாததை கோள் செய்யும் என்றும் கோள் செய்யாததை குல தெய்வம் செய்யும் என்று சொல்வார்கள். என வே குல தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது.
குல தெய்வ வழிபாட்டை யார் ஒருவர் சரியாக செய்கிறாரோ அவரது வம்சம் தழைத்தோங்கும். இதை கருத்தில் கொண்டுதான் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் மாறி வருபவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவையாவது தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குல தெய்வத்தை வழிபடுவதை முக்கிய கடமையாக வைத்துள்ளனர்.
சிலர் மாதத்துக்கு ஒரு தடவையாவது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். மற்ற தெய்வ வழிபாட்டுக்கும், குல தெய்வ வழிபாட்டுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு.
மற்ற தெய்வங்களை வழிபட செல்லும்போது சாதாரணமாக தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு வந்து விடலாம். ஆனால் குல தெய்வத்தை வழிபட செல்லும்போது கண்டிப்பாக பொங்கலிட்டு நைவேத்தியம் படைத்துதான் வழிபட வேண்டும். யார் ஒருவர் இந்த ஐதீகத்தை கடைபிடிக்கிறாரோ அவர்கள் வாழ்வில் துன்பம் என்பது இருக்காது.
மாறாக இதையெல்லாம் செய்யாமல் அலட்சியமாக குல தெய்வத்தை வழிபடாவிட்டால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காது. அது மட்டுமல்ல குல தெய்வத்தை மறந்துவிட்டால் அதுவே ஒரு தோஷமாகி விடும். அதைதான் ஜாதகத்தில் குல தெய்வ தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வதுண்டு.
குல தெய்வத்தை வழிபடாதபோது முன் ஜென்ம கர்ம வினைகள் நீங்கவே நீங்காது. அதுவும் ஒரு தோஷமாக சேர்ந்து கொள்ளும். இதனால்தான் குல தெய்வ தோஷம் மிக கடுமையானதாக கருதப்படுகிறது.
மேலும் ஒருவருக்கு குல தெய்வ தோஷம் இருந்தால் அவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அது நிறைவு பெற்றதாக இருக்காது. இன்னும் சொல்லப்போனால் குல தெய்வ தோஷம் இருப்பவர்கள் மற்ற எந்த கடவுளை வணங்கினாலும் அந்த கடவுள்களின் அருள் கிடைக்கவே கிடைக்காது.
வசதி உள்ள சிலர் வீட்டில் ஹோமம் அல்லது யாகம் செய்து வழிபட்டால் பலன் பெற்று விடலாம் என்று கருதுவது உண்டு. குல தெய்வத்தை வழிபடாமல் எந்த யாகம் செய்தாலும் அது வீணான செலவாகவே இருக்கும். எனவே ஜாதகத்தில் குல தெய்வ தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வழிபாடுகளை அவசியம் செய்ய வேண்டும்.
சிலருக்கு மகன் அல்லது மகளின் திருமணம் தாமதமாகி கொண்டே போகும்போதுதான் குல தெய்வ தோஷம் இருப்பது தெரிய வரும். அதன் பிறகு குல தெய்வத்தை கேட்டு அறிந்து சென்று வழிபடுவார்கள்.
குல தெய்வம் சிறிய தெய்வமாக இருந்தாலும் அதுவே சக்தி வாய்ந்த தெய்வம் என்பதை மறுக்கவே முடியாது. ஒருவரது குடும்பத்தில் எமதர்மன் நுழைய வேண்டுமானால் கூட குல தெய்வத்திடம் அனுமதி பெற்றுதான் நுழைவான் என்று சொல்வார்கள். எனவே குல தெய்வத்தை வழிபடாவிட்டால் தோஷம் மேல் தோஷம் வாங்கி சிக்கல்களைதான் எதிர்கொள்ள நேரிடும்.
சிலருக்கு முன் ஜென்ம கர்ம வினைகள் அளவுக்கு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஒரு கால கட்டத்திற்கு பிறகு குல தெய்வமே தெரியாமல் போய் விடும். அவர்களது வாரிசுகளும் எங்களுக்கு குல தெய்வம் பற்றி தெரியாது என்று பரிதாபமாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள்.
இத்தகைய நிலையில் இருப்பவர்கள் பவுர்ணமி தோறும் குல தெய்வத்தை நினைத்து வழிபட்டால் விரைவில் அந்த குல தெய்வத்தை கண்டுபிடித்து விடலாம். இதற்கான பூஜைகள் நடத்தும் போது குல தெய் வத்தை நினைத்து 27 முறை உச்ச ரித்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இப்படி செய்து வந்தால் குல தெய்வம் தாமாகவே முன் வந்து உங்களுக்கு வழிகாட்டும்.
முழுமையாக குல தெய்வத்தை கண்டுபிடிக்க முடியாதவர்கள் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு அனைத்து விதமான வழிபாடுகளையும் செய்யலாம். திருச்செந்தூர் சம்கார தலம் என்பதால் ஒருவரது வாழ்வில் தீய சக்தி களை விரட்டுவதற்கு அந்த ஆலயத்து முருகனையும் குல தெய்வமாக ஏற்பது உண்டு.

திருச்செந்தூர் தலம் குருவுக்குரிய தலமாகவும், செவ்வாய்க்குரிய தலமாகவும் கருதப்படுகிறது. எனவே குல தெய்வம் தெரியாதவர்கள் 90 சதவீதம் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆண்டுக்கு ஒரு தடவை வழிபாடு நடத்த சென்று வருவார்கள்.
இதன் மூலம் குல தெய்வ சாபத்தில் இருந்தும் விடுபட முடியும். குல தெய்வ சாபம் நீங்கினால் தடைப்பட்ட சுப காரியங்கள் அடுத்தடுத்து நிறைவேற வாய்ப்பு உள்ளது.
குல தெய்வ கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த தவறுக்காக குல தெய்வத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மனமுருகி மன்னிப்பு கேட்டால் குல தெய்வ சாபம் நிவர்த்தியாக வாய்ப்புள்ளது.
குல தெய்வத்தின் சிறப்பை அறிந்தவர்கள் அதை தங்களது தலைமுறையுடன் நிறுத்தி விடக்கூடாது. தங்கள் மகன்-மகளை குல தெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு சன்னதியையும் சுற்றி காண்பித்து அதன் சிறப்புகளை சொல்லி கொடுக்க வேண்டும். அப்படி சொல்லி கொடுத்தால்தான் குல தெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திலும் வாழையடி வாழையாக தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி செய்யாமல் இருப்பதால்தான் குல தெய்வத்தை மறந்து குல தெய்வ தோஷத்துக்கு ஆளாகிறார்கள். ஜாதகத்தில் 5-ம் கட்டத்தில் இருக்கும் கிரகங்களை கொண்டு ஒருவரது குல தெய்வ வழிபாட்டை ஜோதிடர்கள் எளிதாக சொல்லி விடுவார்கள். குல தெய்வத்தின் அனுகிரகமும், அருளும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அந்த கட்டம் காட்டி கொடுத்து விடும்.
ஜாதகத்தில் 5-ம் இடத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருந்தால் குல தெய்வத்தை அதிகம் வழிபடவில்லை என்று சொல்வார்கள். இதை நிவர்த்தி செய்ய உங்களுக்கு அருகில் உள்ள முக்கிய ஆலயங்களுக்கு சென்று வழிபட்டாலே போதும் என்கிறார்கள்.
தென் மாவட்டங்களில் இருப்பவர்கள் சதுரகிரி மகாலிங்கத்தை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியினரும் இப்படி தங்கள் பகுதியில் உள்ள மிக பழமையான ஆலயத்தின் தெய்வங்களை குல தெய்வங்களாக ஏற்கலாம்.
அந்த ஆலயத்தின் தெய்வத்தின் படத்தை வாங்கி வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து குல தெய்வமாக வழிபடலாம். இது அனைத்து செல்வங்களையும் தேடி தருவதாக அமையும். எனவே குல தெய்வ தோஷத்தை சாதாரணமாக கருதாதீர்கள். குல தெய்வத்தை கண்டு பிடித்து கும்பிட கும்பிடதான் தோஷங்களில் இருந்து தப்ப முடியும்.
- விஞ்ஞான பைரவ தந்திரம் என்று ஒரு நூல் உள்ளது.
- சில சிறிய முயற்சிகளை அன்றாடம் நாமே செய்யலாம்.
தியானம் செய்யனும், ஆத்ம பலம் பெருகனும் இப்படி எல்லாம் ஆசை தான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது? எந்த பிரிவு முறையினை பின் பற்றுவது என்பது தான் குழப்பமாய் இருக்கின்றது என்பவர் அநேகர் உள்ளனர்.
நீங்கள் பழக விரும்பினாலும் சரி, அறிய விரும்பினாலும் சரி தியான முறை எத்தனை பிரிவுகளில் உள்ளது என்பதை முதலில் பார்ப்போம். பொதுவில் உலகின் பல இடங்களில் புத்தர் அவர்களின் பிரிவுகளை பின்பற்றுதல் என்பது உள்ளது.
நம் நாடு போன்ற தொன்மை பழக்கம் உள்ள இடங்களில் சித்தர் முறை பின்பற்றப்படுகிறது. இவற்றினை பின்பற்றுவோர் அவரவர் குழ்நிலைக்கு ஏற்ப கலாச்சார பிரிவு மற்றும் பயிற்சி பாடங்கள் மூலம் அறிகின்றனர். பயிற்சி செய்கின்றனர்.
விஞ்ஞான பைரவ தந்திரம் என்று ஒரு நூல் உள்ளது. இதில் 112 தியான முறைகள் இடம் பெற்றுள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிவபெருமான், பார்வதி தேவிக்கு கூறியதாக சொல்லப்படும் இந்நூல் 162 பாடல்களை கொண்டது.
ஏவா-சப்தம், பைரவா சப்தம், ஒலியினைத் தாண்டி தந்த்ரா முறை என்ற பொருளில் தலைப்பினைக் கொண்டுள்ளது. பார்வதி அன்னையின் கேள்விகளுக்கு பதிலாக இந்நூல் சிவபெருமானால் கூறப்பட்டுள்ளது. இதில் மிக ஆழ்ந்த ரகசியங்களைக் கொண்ட ரேக சாஸ்த்திர முறைகள் உள்ளன. ஆனால் இவைகள் அனைத்தினையும் எளிதில் அறிந்து விட, முடியாது சில அடிப்படை பயிற்சிகளை கற்கவே குரு மிக அவசியம் ஆகின்றது.
இதனைப் படித்தால் ஒருவர் ஆச்சரியம் கொள்வார். வாழ்வும், பிரபஞ்சமும் சாதாரண விஷயமல்ல என்பதனை புரிந்து கொள்வார். மீண்டும் நாம் நடைமுறை பழக்கத்தில் இருக்கும் சில தியான முறை பயிற்சிகளைப் பார்ப்போம். பொதுவில் ஆரம்ப நிலையில் சில மூச்சுப் பயிற்சிகளை செய்ய பழக்குவர். காலத்திற்கேற்றார் போல் நோமின்மை என்பது அநேகரின் பிரச்சினையாக இருந்தாலும் அதற்கேற்ப சரி செய்து மனிதன் எப்படியாவது யோகா, தியானம் இவற்றினால் அமைதி காண வேண்டும் என பயிற்றுவிப்போம்.
* முதலில் ஒருவரின் மனநிலை அமைதியாய் இருக்க தியானம் எனும் தெளிவு நிலை பயிற்சியினை சொல்லிக் கொடுக்கின்றனர்.

* யோகா பயிற்சி- இது உடல், மனம் இரண்டும் இணைந்த பயிற்சி. உடலின் சில அசைவுகள் அத்துடன் கூடிய மூச்சு இயக்கம். இதனை அசைவு தியானம் என்பர்.
* நடை பயிற்சியில் தியானம்-நமது முழு கவனத்தினையும் அந்த நொடி, நிமிடத்தில் ஒவ்வொரு அடியின் மீதும் வைத்து முழு கவனம் செலுத்துவது.
* உடலின் ஒவ்வொரு உறுப்புகளின் மீதும் கவனம் செலுத்துவது. இது ஆரம்ப நிலை கட்டத்தில் இருப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
* மந்திரஜபம் செய்வது, பிறகு அந்த மந்திரமும் இல்லாத அமைதியாக இருப்பது.
மூச்சினை கவனித்தல்:- இதில் பல கிளை பிரிவுகள் உள்ளன. இதனை மிகவும் பிரதானமானதாக கருதுவர்.
* குண்டலினி பயிற்சி:- இதனை உங்கள் குரு அதிக கவனத்துடன் பயிற்சி செய்ய வைப்பார்.
* Touchi- இது உடற்பயிற்சியுடன் கூடியதாக இருக்கின்றது.
* தீப ஒளியின் முன்னால் தியான பயிற்சி
இப்படி மூச்சு பயிற்சி, அசையா நிலை, அசையும் நிலை, இவற்றுடன் கூடிய பயிற்சி என்று இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும், பழைய முறைகளின் வேர்கள் மாறாமல் பயிற்சிகள் அளிக்கின்றனர். ஓம் (அ.உ.ம்) இதன் உச்சரிப்பிலேயே தியான முறை பயிற்ச்சிகள் உள்ளன.
இம்முறையில் எந்த பிரிவோ, எந்த நாடோ தெரியாது. மனிதனை கடந்து தானே பிரபஞ்ச உணர்வாகி விடுவோம். அதனையும் தாண்டி செல்லும் வழியாகத் தான் இது அமைந்துள்ளது.
சில சிறிய முயற்சிகளை அன்றாடம் நாமே செய்யலாம். பொதுவாக நாம் படித்தோம் அல்லவா. சிறிது நேரம் அமைதியாய் அமருங்கள். கண்கள் மென்மையாய் மூடி இருக்கட்டும். முதுகு நிமிர்ந்து இருக்கட்டும். டிவி, போன் எதுவும் அருகில் வேண்டாம். உடல் ஆடாது, அசையாது இருக்க வேண்டும். அதற்காக பயில்வான்கள் போல் உடலை முறுக்கி, இறுக்கி இருக்க வேண்டாம். உடல் தளர்த்தி இயல்பாய் இருக்கட்டும். எண்ணங்கள் வந்தால் விட்டு விடுங்கள். அதன் பின்னே செல்ல வேண்டாம். தினமும் இப்படி 20 நிமிடங்கள் இருந்து பழகுவோம். முதலில் 5 நிமிடத்தில் ஆரம்பித்து பின் மெதுவே அதிகரிப்போம். சரி இதற்கும் சில ஒழுக்க முறைகள் வேண்டுமே.

கமலி ஸ்ரீபால்
இதனை செய்ய தகுந்த இடத்தினை வீட்டினுள் தேர்வு செய்ய வேண்டும். சத்தம் இல்லாமல் இருப்பது நல்லது. தினமும் முடிந்தவரை அதே குறித்த நேரத்தில் செய்ய வேண்டும். நாற்காலியில் அமர்ந்தால் கால்கள் தரையில் பதிந்து இருக்க வேண்டும். சில அடிப்படைகளை நாம் அன்றாடம் வாழ்வில் பழக்கத்திற்கு கொண்டு வரும் பொழுது பயிற்சிகள் எளிதாய் இருக்கும்.
தியானம் என்பதனை முறையான பயிற்சியாளர்கள், குருமார் மூலமாக அறிந்து பழகுவது மிக அவசியம். இல்லையெனில் தவறுகள் ஏற்படலாம். இதனால் மன நிலைகள் கூட பாதிக்கப்படலாம். கவனம் தேவை.
மூச்சிற்கும் மனிதனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது என்பதனை அனைவரும் அறிவோம். மனிதனுக்கும், இந்த பிரபஞ்ச சக்திக்கும் இருக்கும் தொடர்பு இந்த மூச்சில் தான் என்பது பலர் அறியாத ரகசியமாக இருக்கின்றது.
கீழ்வரும் உரையாடல் ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் நடந்த நிகழ்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாணவர் நம் நாட்டில் உயர்ந்த நிலையை அடைந்தவர் என்று பெயரை சொன்னார்கள். என்னால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. ஆயினும் இந்த உரையாடலை அனைவரும் படிக்க வேண்டும் என்ற ஒரு விருப்பத்தினால் எழுதப்பட்டுள்ளது.
கடவுள் இருக்கிறாரா? என்பது தொடர்பாக ஒரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் நடந்த விவாதம். கடவுள் இல்லை என்ற கொள்கை கொண்ட ஒரு தத்துவ பேராசிரியர் வகுப்பில் ஒரு மாணவரை கேள்விகள் கேட்டார்.
'நீ கடவுள் இருப்பதாக நம்புகிறாயா?' -ஆசிரியர்
'நிச்சயமாக ஐயா'-மாணவர்
'கடவுள் நல்லவரா?'
'ஆம் ஐயா'
'கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?'
'ஆம்'
'என்னுடைய சகோதரர் புற்று நோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னை காப்பாற்ற அவர் கடவுளிடம் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார்.'
நாம் எல்லோருமே நோய் வாய்பட்ட மக்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்கின்றோம். ஆனால் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. பின் எப்படி கடவுள் இருக்கின்றார் என்று சொல்கின்றாய்? - ஆசிரியரின் கேள்வி
மாணவர் அமைதியாய் இருக்கிறார்.
'உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா?'
'சரி... நாம் மீண்டும் ஆரம்பிப்போம்.'
'கடவுள் நல்லவரா?'
'ஆம் ஐயா'
'சாத்தான் நல்லவரா?'
'இல்லை'
'எல்லோரும் கடவுள் படைப்புதான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?'
'கடவுளிடம் இருந்துதான்'- மாணவர் பதில்
'சரி இந்த உலகத்தில் கெட்டவைகள் இருக்கின்றனவா?'
'ஆம்'
'அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?'
'மாணவர் பதில் சொல்லவில்லை'
'இவ்வுலகில் பசி இருக்கின்றது. பஞ்சம் இருக்கின்றது. மூட நம்பிக்கைகள் எங்கிருந்து வந்தன?'
(மாணவர் மவுனமாய் நிற்கிறார்)
விஷயங்களை சரியாக புரிந்து கொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றன என்று அறிவியல் சொல்கிறது. இப்போது சொல் கடவுளை கண்ணால் கண்டிருக்கிறாயா? அல்லது கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறாயா? அவர் பேசுவதை கேட்டிருக்கிறாயா? வேறு எப்படித்தான் அவர் இருப்பை உணர்ந்திருக்கிறாய்?
'மவுனம்'
'ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய். அப்படித் தானே?'
'ஆம் ஐயா?'
'நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத் தக்க வாழ்க்கையிலும் சரி, ஆதாரங்களு டன் விளக்கக்கூடிய வழி முறைகளிலும் சரி. எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது கடவுள் இல்லை என்றும். இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்.
'ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது. -மாணவர்.
'ம்ம்... நம்பிக்கை அதுதான் இப்ப பிரச்சினையே' என்று ஆசிரியர் பெருமூச்சு விடுகிறார்.
(இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
'ஐயா. வெப்பம், குளிர் என்று உள்ளதா?'
'நிச்சயமாக உள்ளது.'
'குளிர் என்று ஒன்று உள்ளதா?'
'நிச்சயமாக.'
'இல்லை ஐயா குளிர் என்ற ஒன்று இல்லை. வெப்பம் என்ற ஒன்று ஆற்றல், குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றல் இல்லாமையே குளிர் என்கிறோம்.
அதேபோல் இருட்டு என்பதே வெளிச்சம் இல்லாமைதான். எதிலும் இரட்டை நிலைபாடு பார்க்கிறோம். ஒன்று இருந்தால் அதன் எதிரிடையான மற்றொன்று இருக்கின்றது என்பது உங்கள் வாதம்.
அதேபோல் நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்ற ஒன்று இல்லை. எண்ணங்கள் உருவாகுவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத் தூண்டுதல்களால் தான். மின்சாரத்தை அளக்க முடிகின்றது. காந்தத் தன்மையை விவரிக்க முடிகின்றது. ஆனால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடிவதில்லை.
இறப்பு என்பது வாழ்வின் எதிர்பதம் அல்ல. வாழ்வு இனி இல்லை என்ற தன்மையானதாகும். பரிணாம வளர்ச்சியினை தத்தமது கண்களால் காண முடியவில்லை. இங்கு ஆசிரியரின் மூளையை யாரும் தொட்டுப் பார்த்ததில்லை. உணர்ந்ததில்லை. வாசனை நுகர்ந்ததில்லை. ஆனாலும் ஆசிரியருக்கு மூளை இருக்கின்றது என்று நம்பி நாம் படிக்கின்றோம்.
அதுபோல் கடவுளையும் நம்பித்தான் ஆக வேண்டும். நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று பதிலளித்தார் மாணவர்.
மீண்டும் படிப்போம் சிந்திப்போம்.
- ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார்.
- பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான்.
அய்யய்ய....
வெக்கத்த பாரு மாமாவுக்கு...
கட்டிக்க போறவ எப்படி இருக்கணும்னு கேட்டா...
இப்படி வெட்கப்படுறீய...
அட சொல்லுமாமா...
என்னன்னு சொல்ல....
அட யோசிக்கிறீயளா
எப்படி சொல்ல...
-என்ற ரொமான்டிக் டயலாக்கை நானும் பிரபுசாரும் பேச...
"என்னவென்று சொல்வதம்மா வஞ்சியவள் பேரழகை..." என்று பிரபுசார் பாடும் அந்த பாடல் காட்சி இடம் பெற்ற 'ராஜகுமாரனை' நினைவிருக்கிறதா?
1994-ல் வெளிவந்த படம். பிரபுசாரின் 100-வது படம். சிவாஜி புரொடக்ஷன் தயாரிப்பு. நானும் நதியாவும் ஹீரேயின்கள் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் சார்.
எனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம். குறும்புத்தனம், துடுக்காக இருப்பது. படம் முழுக்க ஜாலியாகவே போகும்.
ஹீரோ பிரபுசாரை நானும், நதியாவும் விரும்புவோம். ஆனால் பிரபு சார் விரும்புவது நதியாவைத்தான்.
ஆனால் நான் விடாமல் துரத்தி துரத்தி காதலிப்பேன். அவரிடம் குறும்புத்தனம் செய்வேன். அப்போது அவரிடம் பேசுவதுதான் மேற்கண்ட டயலாக்குகளும், அதற்கு பதிலாக அவர் பாட்டாலேயே பதில் சொல்வார்.
அவர் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்று நான் நினைப்பேன். ஆனால் அவரோ நதியா வைத்தான் வர்ணித்து பாடுவார். மஞ்சள் நிற சேலைகட்டி வரும் நதியாவை நினைத்து
"என்னவென்று சொல்வதம்மா
வஞ்சியவள் பேரழகை.
அந்த மஞ்சள் நிறத்தவளை
என் நெஞ்சில் நிலைத்தவளை......
தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி
மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி
கருங் கூந்தலோ.. என்று பாடுவார்.
அந்த காட்சியில் உண்மையிலேயே நான் ஊஞ்சல்தான் ஆடிக் கொண்டிருப்பேன். அதனால் ஊஞ்சலில் இருக்கும் என்னை நினைத்துதான் பாடுகிறார் என்பது என் நினைப்பு.
இந்த பாடலின் பின்னணியில் இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு. ஷூட்டிங் நடந்த போது எனக்குரிய காஸ்ட்யூமை தந்தார்கள். அது எனக்கு சரியாக இல்லை. அதனால்நான் எனது சொந்த டிரெஸ்சை போட்டு சென்றேன். அது மஞ்சள் நிற காக்ரா சோளி.
எனது காஸ்ட்யூமை பார்த்ததும் இந்த காஸ்டியூம் கிடையாதே! வேறு டிரெஸ் கொடுத்து இருந்தோமே என்றார்கள். நான், அது சரியில்லை என்று சொன்னதும் டைரக்டரும் ஒத்துக் கொண்டார்.
ரெடி... ஷாட்... என்றதும் அந்தி மஞ்சள் நிறத்தவளே... என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடித்தேன். அந்த பாடல் வரிகளை கேட்டதும் மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம். பாட்டுக்கு தகுந்த நிறத்தில் டிரெஸ். என்னை நினைத்தே எழுதிய பாடல் எழுதியதாக நினைத்து மனதுக்குள் அப்படி ஒரு சந்தோசம்.

ஆனால் மறுநாள் எனக்கு வேறு கலரில் காஸ்ட்யூம். எனக்கு பிடித்த மஞ்சள் நிற காஸ்ட்யூ மில் நதியா இருந்தார். அதை பார்த்ததும் என் மனதில் வருத்தம். நமக்கு பிடித்தமான கலர் அவருக்கு போய் விட்டதே என்று. அந்த வயதில் அப்படியெல்லாம் நினைத்து இருக்கிறேன். ஏன் அப்படி நினைதேன் என்றே எனக்கு புரியவில்லை.
ரொம்ப நாள் கழித்துதான் என்னால் புரிய முடிந்தது. கதைப்படி நதியாவைத்தான் பிரபுசார் விரும்புவார். அந்த பாடலில் மஞ்சள் நிறத்தவளே என்று பாடுவார். அப்படியானால் நதியா மஞ்சள் புடவை கட்டி வருவதுதானே பொருத்தமானது என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.
இந்த படத்தில் எத்தனையோ ஆச்சரியமான விஷயங்கள் உண்டு. உயிரே உனக்காக என்ற படத்தில் நதியா ஹீரோயின். நான் குழந்தை நட்சத்திரமாக குட்டி நதியாவாக நடித்திருந்தேன்.
இப்போது நதியாவுடன் அவருக்கு சரி சமமாக நானும் ஹீரோயினாக நடிக்கிறேன். நினைத்தாலே ஆச்சரியம்தானே.
நான் ஹீரோயின் அந்தஸ்துக்கு வளர்ந்து இருந்தாலும் விளையாட்டுத்தனமாகவே இருப்பேன்.
ஷூட்டிங் நடக்கும் போதே எதைப் பற்றியும் கவலைப்படாமல் விளையாடுவேன். அதற்கு இன்னொரு முக்கிய காரணம் குழந்தை பருவத்தில் இருந்தே சினிமா உலகில் எல்லோருக்கும் என்னை தெரியும். அவர்கள் பார்வையில் எப்போதும் நான் குழந்தைதான். எனக்கும் கதாநாயகி ஆன பிறகும் குழந்தை நினைப்பு மாறவில்லை.
எனது குரலும் குழந்தை குரல் போல்தான் இருக்கும். அதனாலேயே டப்பிங் பேச நினைத்தாலும் பேச முடியாமல் போனது.
ராஜகுமாரன் படத்தில்தான் முதல் முதலில் டப்பிங் பேச ஆரம்பித்தேன். முக்கியமாக அந்த படத்தில் எனக்கேற்ற கதாபாத்திரமாக இருந்ததால் நடிப்பதற்காக 'ரிஸ்க்' எடுக்க வேண்டிய அவசியம் இருந்ததில்லை. சாதாரணமாக அங்கும், இங்கும் நடந்தது போலவும் விளையாடியது போலவும் இருந்து. ஆனால் காட்சிகள் பிரமாதமாக வந்திருந்தன.
பிரபு சார் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடுதான். அவருடன் நடித்த எல்லோருமே இதை சொல்வார்கள். அவர் வீட்டு சாப்பாட்டை யாராலும் அடிச்சிக்க முடியாது. வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பெரிய பன் கேரியரில் சாப்பாடு வரும். அதுவும் விதவிதமாக இருக்கும்.

நமக்கெல்லாம் மட்டன் என்றால் சுக்கா, குழம்பு பொரிப்பு அதே போல் சிக்கன் என்றாலும் ஒருசில வகைகள்தான் தெரியும்.
ஆனால் பிரபு சார் வீட்டில் இருந்து வரும் கறிக்குழம்பை நினைத்தாலே நாவில் நீர் ஊறும். விதவிதமாக சமைத்து வைத்திருப்பார்கள்.
நான் உணவு கட்டுப்பாட்டில் இருந்ததால் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ருசி பார்ப்பேன். அவ்வளவுதான்.
உடனே பிரபு சார் 'அட... என்பார். நல்வாசாப்பிடும்மா..!
நானோ 'டயட்' சார் என்பேன்.
அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நல்லா சாப்பிடு என்று சாப்பிட வைத்து விடுவார். உணவு கட்டுப்பாடெல்லாம் தகர்ந்து விடும். இப்படி விதவிதமாக சாப்பாடு கண்முன்னே இருந்தால் எவ்வளவு நேரத்துக்குத்தான் வாயை கட்டிக் கொண்டிருக்க முடியும்?
அப்படித்தான் ஒருநாள் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கார் வந்தது. அதை பார்த்ததும் அப்பா வர்றார்.. என்று எல்லோரும் அருகில் ஓடினார்கள். சிவாஜி சாரை மரியாதையாக அப்பா என்று தான் அழைப்போம்.
சிரித்து கொண்டே காரில் இருந்து இறங்கி வந்தார். சிவாஜி புரொடஷன் தயாரிப்பு என்பதால் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை பார்க்க வந்திருந்தார்.
அதன் பிறகு நடந்த சுவாரஸ்ய சம்பவத்தை அடுத்த வாரம் சொல்கிறேன்.
(தொடரும்)






