search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்
    X

    முதுமையில் நீரிழிவு கட்டுப்பட உணவும், மருந்தும்

    • இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.
    • முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    முதுமையில் சர்க்கரை (இனிப்பு) நோய் எனும் நீரிழிவு நோய் ஆரோக்கியத்திற்கு கசப்பை உண்டாக்கிவிடுகிறது. ஏனெனில் இரண்டு முதியவர்கள் பேசிக்கொள்ளும் போது, நலம் விசாரித்த காலங்கள் மாறி, சர்க்கரை அளவை விசாரிக்கும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் இந்த நிலை இருந்தாலும் நம் ஊரில் சற்று அதிகம் தான். மறந்து போன வாழ்வியல் நெறிமுறைகளும், உணவு முறைகளும், நோயினை உண்டாக்க முக்கிய காரணமாக இருப்பினும், முதுமையில் உடல் திசுக்கள் தேய்மானம் அடைவதும் காரணமாக உள்ளது.

    அத்துடன் நம் உடல் செல்களுக்குள் கொண்டு செல்ல வேண்டிய சர்க்கரையானது, இன்சுலின் தடையின் (IR) காரணமாக செல்லுக்குள் நுழைய முடியாமல், ரத்தத்தில் அதன் அளவு அதிகரித்து நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது. இன்சுலின் சுரப்பு குறைவால் உண்டாகும் டைப்-1 நீரிழிவு பெரும்பாலும் இளம் வயதினருக்கே ஏற்படுகின்றது. இன்சுலின் தடையால் உண்டாகும் டைப்-2 நீரிழிவு தான் முதுமையில் அதிகம் பேருக்கு உண்டாகி துன்புறுத்துகிறது.

    முதுமையில் 65 வயதைக் கடக்கும் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமின்றி நீரிழிவு நோயின் துணை நோய்களான அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல், உடல் பருமன் ஆகியவைகளும் ஒன்று கூடி முதுமையை வாட்டி வதைக்கும்.

    எவ்வளவு தான் அறிவியல் வளர்ச்சி அடைந்து, மருத்துவ முறைகள் மேம்பட்டாலும் நீரிழிவைக் கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. ஆக பாரம்பரிய மருத்துவ முறைகளை நாடுவதும், பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றுவதும், முதுமையில் சர்க்கரை அளவைக் குறைத்து கட்டுக்குள் வைக்க உதவும்.


    நீரிழிவு எனும் மதுமேக நோய் பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவத்தில் கூறியுள்ளது சிறப்புமிக்கது. சித்த மருத்துவத்தின் அடிப்படை கூறுகளான வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் 'கபவாதம்' கூட்டணியால் மதுமேகம் எனும் நீரிழிவு உண்டாவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. அத்தகைய நீரிழிவினை 20 வகைகளாக பிரித்தும் விளக்கியுள்ளது.

    இத்தகைய கபவாதம் தணித்து, இன்சுலின் தடையை நீக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுப் பொருட்களும், மருந்துப்பொருட்களும் பயன்படுத்துவது, உடற்பயிற்சி செய்வது முதுமையில் நீரிழிவினைக் கட்டுக்குள் வைக்கும்.

    ஏன் இந்த சர்க்கரை வியாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்? சர்க்கரை நோய் என்ற பெயரைக் கேட்ட உடனே மனதுக்குள் அலறலும், குமுறலும் ஏன்? என்றால் இந்நோயில் உண்டாகும் பின்விளைவுகள் தான் காரணம். நீரிழிவு நோயின் பின் விளைவுகள் பற்றி நவீன மருத்துவமும், நீரிழிவு நோயால் உண்டாகும் அவஸ்த்தைகள் என்று சித்த மருத்துவமும் விளக்குகின்றன. அந்த அவஸ்த்தைகளில் மிக முக்கியமானவை இரண்டு நோய்நிலைகள். ஒன்று இதய நோய்கள், மற்றொன்று பக்கவாதம்.

    நீரிழிவு நோயால் இதய நோய்கள் உண்டாகும் வாய்ப்பு 1.8 மடங்கு அதிகம் உள்ளதாகவும், 1.5 மடங்கு பக்க வாதம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் முதுமையில் உண்டாகும் இறப்புகளுக்கு நீரிழிவு நோயில் உண்டாகும் இதயம் சார்ந்த தொந்தரவுகள் முக்கிய காரணமாக உள்ளன.

    இவை ஒருபுறமிருக்க, நீரிழிவு நோய்நிலையில் உண்டாகும் கண்பார்வை குறைபாடு 28 சதவீதம் பேருக்கு உண்டாவதாகவும், கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீதம் பேருக்கு நரம்பு சார்ந்த தொந்தரவுகளும் உண்டாவதாக உள்ளது. இவ்வாறு நீரிழிவு நோயானது பல்வேறு நோய்நிலைகளுக்கு அடித்தளம் அமைப்பதாக உள்ளது. அதிமுக்கியமாக நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது.

    ஆகவே காலத்திற்கும் மருத்துவமனை வாசலை நாட வைக்கும், பொருளாதார கொள்ளை நோயாக இருக்கும் நீரிழிவு நோய் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை மட்டும் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, உடல் உறுப்புகளை பாதுகாக்கும் மருத்துவ முறைகளையும் நாடுவது நல்லது. சித்த மருத்துவம் மேற்கூறிய இரண்டிலும் ஒரு சேர நன்மைத் தரக்கூடியது.

    சித்த மருத்துவ மூலிகைகளான சீந்தில், வேப்பிலை, நிலவேம்பு, சோற்றுக்கற்றாழை, ஆவாரை, கடலழிஞ்சில், நாவல்கொட்டை, பாகல்காய், கோவைக்காய், மருதம்பட்டை, தேற்றான்கொட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், கருவேப்பிலை, வேங்கைப்பட்டை, நித்யகல்யாணி, சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, துளசி, கடுகுரோகிணி ஆகிய மூலிகைகளும் மஞ்சள், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, வெங்காயம், கருஞ்சீரகம் ஆகிய அஞ்சறைப் பெட்டி சரக்குகளும் நீரிழிவு நோயில் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் உலகமே கண்டு அஞ்சும் நீரிழிவு நோயின் பின் விளைவு களை தடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தன.

    மேற்கூறிய சித்த மருத்துவ மூலிகைகள் 'மதுமேகம்' எனும் சர்க்கரை நோய்க்காக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சித்த மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. சித்த மருத்துவ மூலிகைகளில் உள்ள பீனோலிக் வேதிப்பொருட்களும், இயற்கை நிறமிகளும், அல்கலாய்டுகளும் இன்னும் பல்வேறு வேதிப்பொருட்களும் சர்க்கரை நோய்க்கு சிகப்பு சிக்னல் காட்டி, நல்வாழ்விற்கு பச்சைக் கொடி காட்டும் தன்மை உடையன.

    சித்த மருத்துவ மூலிகைகள் நம் உடல் செல்களுக்குள் சர்க்கரையை உட்செலுத்தி பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும், இன்சுலின் தடையை நீக்குவதன் மூலமும் சர்க்கரை அளவு குறைய வழிவகை செய்கின்றன. அத்துடன் நம் குடலில் ஆல்பா குளுகோசிடேஸ் மற்றும் ஆல்பா அமைலேஸ் ஆகிய நொதிகளின் செயல்பாட்டை தடுப்பதன் மூலம் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கக்கூடியதாக உள்ளதை ஆய்வுத்தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மூலிகைகளில் உள்ள பிளவனாய்டு வகை வேதிமூலக்கூறுகள் கணைய செல்களை புதுப்பித்து, இன்சுலின் சுரப்பை த் தூண்டக்கூடியதாகவும் உள்ளன.

    அந்த வகையில் சித்த மருத்துவத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நிலவேம்பு மூலிகையானது சர்க்கரை அளவைக் குறைப்பதில் நற்பலன் தரக்கூடியது. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலெய்டு' எனும் வேதிப்பொருள் குடலில் உள்ள பல்வேறு நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    சுடுகாட்டு மல்லி எனும் நித்தியகல்யாணி இலையுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிக்க சர்க்கரை அளவு கட்டுப்படும். அல்லது பூவுடன் மிளகு சேர்த்து கசாயமிட்டு குடிப்பதும் பலன் தரும். புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட 'வின்கிரிஸ்டின்', 'வின்பிளாஸ் டின்' வேதிக்கூறுகளுக்கு ஆதாரம் இந்த மூலிகை தான். இவை புற்றுநோயில் மட்டுமின்றி, சர்க்கரை நோயிலும் பலன் தரக்கூடியன.

    மருதம்பட்டை எனும் மூலிகை இதய நோய்நிலைகளில் பலன் தரும் என்கின்றன பல்வேறு ஆய்வுகள். இதில் உள்ள 'அர்ஜுனின்' எனும் வேதி மூலக்கூறு அதற்கு காரணமாகின்றது. மேலும் இது கல்லீரலைக் காத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கும். எனவே சர்க்கரை நோயுள்ள முதியோர்கள் இதயத்தைக் காத்துக்கொள்ள 'மருதம்பட்டை சூரணம்' எனும் சித்த மருந்தை நாடுவது ஆயுளைக் கூட்ட உதவும்.

    சர்க்கரை நோயில் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண், நரம்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பினை தடுக்க வேண்டியது மிக அவசியம். இந்நிலையில் 'திரிபலை சூரணம்' எனும் சித்த மருந்து உள் உறுப்புகளைக் காத்து நலம் பயக்கக்கூடியது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. அதாவது உடலில் ஆக்ஸிஜன் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கூறுகளை நீக்கும் தன்மை இதற்குண்டு. எனவே நீரிழிவு நோயில் இறுதி வரை இதயம், சிறுநீரகம், கண் பார்வை செயல்பாடுகள் குறையாமல் தடுக்க திரிபலை சூரணத்தை தினசரி இரவில் வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்லது.

    "ஆவாரை பொழித்திருக்க சாவாரை கண்டதுண்டோ" என்ற சொலவடையை மறந்ததால் இழப்பு நம் ஆரோக்கியத்திற்குத் தான். சிறப்புமிக்க ஆவாரை பூவுடன் சிறிது லவங்கப்பட்டை, வெந்தயம், மஞ்சள் சேர்த்து தேநீராக்கி குடித்து வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அல்லது ஆவாரைக் குடிநீர் எனும் சித்த மருந்தினை கசாயமாக்கி குடித்து வந்தாலும் நல்ல பலன் தரும். நம் ஊரில் வறண்ட நிலப்பகுதியில் மஞ்சள் நிறப்பூக்களுடன் பூத்து குலுங்கும் ஆவாரை நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்த வரம். எளிமையாய் வறண்ட பூமியில் கிடைப்பதால் இதன் மகத்துவம் பலருக்கு விளங்கவில்லை.

    கல்லீரல் நோய்நிலைகளில் பெரும்பயன் தரக்கூடிய கீழாநெல்லியும் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும், நீரிழிவு நோயில் உண்டாகும் கை, கால் எரிச்சல் ஆகிய நிலைகளிலும் பலன் தரக்கூடியது. 'மதுமேக சூரணம்' எனும் சித்த மருந்தில் வெந்தயம், கருவேப்பிலை, மஞ்சள் இவற்றுடன் கீழாநெல்லி சேருவதும் குறிப்பிடத்தக்கது.

    வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பகல் நேரங்களில் தேக்கரண்டி அளவுக்கு எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன், ரத்தத்தில் அதிகமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலுக்கும் நன்மை பயக்கும்.

    அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பொருட்களும், தாவர உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதலும், நீரிழிவு நோயைத் தடுப்பதோடு, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்கின்றன ஆய்வுகள். சித்த மருத்துவமும் "கோதையர் கலவி போதை, கொழுத்த மீன் இறைச்சி போதை, ஊதுவாய் நெய்யும் பாலும் பரிவுடனுண்பீராகில்" என்று பல்வேறு உணவு உணவுகளை அதிகம் சேர்ப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும் என்கிறது. இன்றைய ஆய்வு முடிவுகள் அறுதியிட்டு கூறுவதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே சித்த மருத்துவம் கூறி இருப்பது, நம் பாரம்பரிய அறிவின் முற்போக்குத்தனத்தைக் காட்டுகிறது.

    (தொடரும்...)

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×