என் மலர்
புதுச்சேரி

உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள்- பாஸ் இல்லாதவர்களை அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் போலீஸ்
- பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
- நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்துக்காக காலை முதல் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கியூ.ஆர். கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக்கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜயை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீசாரை நெட்டித்தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்குள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீசார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதிப்போம். காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என தொடர்ந்து மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னரும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு இருந்தனர்.
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த தொண்டர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்ற நிலையில் பாஸ் இல்லாதவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மைதானத்திற்குள் பாஸ் இல்லாதவர்கள் செல்ல அனுமதித்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை பெண் காவல் அதிகாரி ஈஷா சிங் கடுமையாக எச்சரித்தார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுப்பிய புஸ்ஸி ஆனந்தை பார்த்து கடுப்பான பெண் காவல் அதிகாரி, நான் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எனக்கு சொல்லாதீர்கள். உங்களால் பலர் இறந்திருக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.






