என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அருகே கல்லால் தாக்கி 2 பேரை கொலை செய்த சைக்கோ நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    புதுவை அருகே கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் தனியார் மதுபான கடை உள்ளது.

    இந்த கடையின் அருகில் சிமெண்ட் கடை மற்றும் டீ கடை உள்ளது. இரவு நேரங்களில் அங்கு பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடிக்கும் சிலர் தூங்குவது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு அந்த கடைகள் முன்பு 2 பேர் படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணியளவில் ஒரு சைக்கோ நபர் அங்கு வந்தார். அவர் அங்கு தூங்கிகொண்டிருந்த ஒருவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.50 மட்டுமே உள்ளது. அந்த பணத்தை தர முடியாது என மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த சைக்கோ நபர் அங்கு கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து பணம் தர மறுத்தவரை சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதனை கண்ட அவருடன் தூங்கி கொண்டிருந்த மற்றொருவர் அதிர்ச்சியடைந்து கல்லால் தாக்கிய சைக்கோ நபரை தட்டிக்கேட்டார். அவரையும் அந்த நபர் கல்லால் தலையில் தாக்கினார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், தமிழரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அங்கு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து சம்பவ இடத்திலேயே நின்றுக்கொண்டிந்த கொலையாளியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குட்டியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது45). என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சுற்றிதிரிந்து வந்ததும் தெரியவந்தது. மனநோயாளியான இவர் மேலும் 3 பேரை கொலை செய்ய உள்ளதாக போலீசாரிடம் கூறிக்கொண்டே இருந்தார்.

    இதற்கிடையே கிருமாம்பாக்கம் அருகே நரம்பை சுடுகாட்டில் ஒருவர் இன்று காலை ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கொலை செய்யப்பட்ட 2 பேரும் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை. இருவரையும் சைக்கோ நபரான மணிகண்டன்தான் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சைக்கோ நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்ற விவரம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிருமாம்பாக்கத்தில் இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொம்பாக்கத்தில் வேறொருவரின் இடத்தை விற்று பெண்களிடம் ரூ-.32 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர்நகர் வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் பேட்டரி மற்றும் இன்வெட்டர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைவாணி. இவரும் தனியாக பேட்டரி கடை வைத்துள்ளார்.

    இதற்கிடையே உதயகுமாருக்கு நன்கு அறிமுகமானவரான புதுவை பாப்பாஞ்சாவடியை சேர்ந்த சிவபாலன் என்பவர் அணுகி தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் கடன் உள்ளதாகவும் அந்த கடனை சரி செய்ய கொம்பாக்கத்தில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை விற்க உள்ளதாக தெரிவித்தார்.

    இதனை உதயகுமார் தனது மனைவி கலைவாணியிடம் தெரிவித்தார். இதை யடுத்து கலைவாணி தனது தோழிகளான கீதா, ராஜேஸ்வரி ஆகியோருடன் ஆலோசனை செய்து 3 பேரும் சிவபாலனுக்கு சொந்தமான இடத்தை வாங்கி பிரித்துகொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி 3 பேரும் சேர்ந்து ரூ.32 லட்சத்தை சிவபாலனிடம் கொடுத்தனர். சிவபாலனும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு இடத்தை கிரயம் செய்து கொடுத்தார். இதைத்தொடர்ந்து கலைவாணி உள்பட 3 பேரும் சிவபாலனிடம் தங்களுக்கு அந்த இடத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு வந்தனர். 

    ஆனால் சிவபாலன் இடத்தை பிரித்து கொடுக் காமல் காலம் கழித்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த கலைவாணி கிரயம் பெற்ற இடத்துக்கு சென்று விசாரித்தார். 

    அப்போது அந்த இடம் வேறொருவருக்கு சொந்தமானது என்பதும், சிவபாலன் தன்னுடைய இடம் என்று கூறி பணம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. 

    இதனை அறிந்த கலைவாணி மற்றும் அவரது தோழிகள் அதிர்ச்சிய டைந்தனர். பின்னர் சிவபாலனிடம் செல்போன் வழியாக தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் உங்களால் என்ன செய்ய முடியும் என்று கலைவாணி மற்றும் அவரது தோழிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் இனிமேல் என்னிடம் பிரச்சினை வைத்துக்கொண்டால் 3 குடும்பத்தினரையும் கூலிபடையை வைத்து கொலை செய்து விடுவதாக சிவபாலன் மிரட்டினார். 

    இதுகுறித்து கலைவாணி பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காதலிக்க மறுத்த மாணவியை மானபங்கம் செய்த வழக்கில் என்ஜினீயர்கள் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2017-ம் ஆண்டு விடுமுறைக்காக திண்டிவனம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தமிழ் என்கிற தமிழரசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறை முடிந்தபின் அந்த மாணவி புதுவைக்கு வந்துள்ளார். அப்போது தமிழரசன் செல்போனில் அந்த மாணவியிடம் பேசியுள்ளார்.

    பின்னர் புதுவைக்கு வந்த தமிழரசன் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் உனது பாட்டியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். அப்போது அவரது நண்பர் என்ஜினீயர் வினோத் (32) என்பவர் உடன் இருந்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்தது.

    விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன், வினோத் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.
    புதுச்சேரியில் சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதனை தயார்படுத்தும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது. அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

    இந்நிலையில், இரண்டாவது கூட்டத்தொடரின் 2-வது பகுதி இன்று காலை 9.30 மணிக்கு சட்டமன்றம் பேரவை கூடத்தில் மீண்டும் கூட்டப்படுகிறது.

    இந்தக் கூட்டத்தொடரின்போது 2022-23-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (இடைக்கால பட்ஜெட்) குறித்த மசோதாவினை சட்டசபையில் நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.

    சட்டசபை முடிந்தபிறகு தொடர்ந்து சட்டசபை நடத்தப்படுமா அல்லது ஒருநாள் மட்டும் நடத்தப்படுமா என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.  

    அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுவையில் 2-ம் வேலை நிறுத்த போராட்டத்தை முழு அடைப்பு போராட்டமாக நடத்த அழைப்பு விடுத் திருந்தோம். 

    புதுவையில் முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல்கட்சிகள், வியாபார, வர்த்தக நிறுவனங்கள், பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்களுக்கு பாராட்டுக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிறைதுறை விதிகளில் மாற்றம் செய்து போலீசாருக்கு இணையாக சம்பளம் வழங்கப்படும்.
    புதுச்சேரி:

    புதுவை சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங்சாகர் நிருபர்களிடம் கூறியதாவது:--

    புதுவை சிறை விதிகள் 1969-ல் உருவாக்கப்பட்டது. 53ஆண்டுகளுக்கு பிறகு இந்த விதிகளை திருத்தி அமைத்துள்ளோம். இதன்படி 14ஆண்டுகள் கழித்து ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர். 

    தற்போது 10ஆண்டு முடிந்த நன்னடத்தை கைதிகள் விடுவிக்கப் படுவர். போக்சோ போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். 

    அரை நூற்றாண்டு காலமாக சிறை அதிகாரிகள், காவலர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே சம்பளம், பதவி உயர்வு வேறுபாடு இருந்தது. தற்போது போலீசாருக்கு இணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    பணி நேரம் 8 மணி நேரமாக மாற்றப்பட்டு 3 ஷிப்ட் உருவாக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு புதுவையில் காலையில் கோதுமை தோசையும், காரைக்காலில் கஞ்சியும் வழங்கப்பட்டு வந்தது. 

    இதை மாற்றி காலையில் இட்லி, உப்புமா, பொங்கல் வழங்கப்படும். 6 மாத தண்டனைக்கு பின் வெளிநாட்டு கைதிகள் அவர்கள் நாட்டு சிறைக்கு மாற்றப்படுவர். கைதிகள் கால்நடை வளர்ப்பு, விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். 

    இவ்வாறு அவர் கூறினார்
    தவளக்குப்பத்தில் சாலை மறியல் ஈடுபட்ட 50- பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    மத்திய அரசை கண்டித்து மணவெளித் தொகுதி காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சி சார்பில் தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இந்த மறியலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்தராமன், தி.மு.க. தொகுதி பொறுப்பாளர் கே.ஆர்.வி. ராஜாராமன், ரவிச்சந்திரன், சக்திவேல், செல்லப்பன், குமணன், ரமேஷ், அமர், சிவக்குமார், சீத்தாபாலன், மணி, திருநாவுக்கரசு, சத்யராஜ், பவி, ராமகணேஷ், கண்ணதாசன், 
    முரளி, கனகராஜ், வீரை யன் உள்ளிட்ட 50 பேரை தவளக்குப்பம் 
    போலீசார் கைது செய்தனர்.
    புதுவை நகரின் மைய பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளது. இங்கு குரங்குகள் கூட்டம், கூட்டமாக குடும்பத் தோடு வசித்து வருகிறது.
    புதுச்சேரி:

    தாவரவியல் பூங்காவை யொட்டி உழவர்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. உழவர்சந்தையின் நுழைவுவாயிலுக்கு அருகில் இளநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த இளநீர் கடைகளில் பெண் வியாபாரி அசந்திருந்த நேரத்தில் அவர் வைத்திருந்த செல்போனை குரங்கு ஒன்று எடுத்துச்சென்றது. மரத்தில் உள்ள பொந்தில் அந்த போனை வைத்துக்கொண்டது. அவ்வப்போது போனை மரக்கிளைக்கு எடுத்துச்செல்வது, அதை அழுத்தி பார்ப்பது என செய்து கொண்டி ருந்தது. ஒரு கட்ட த்தில் போனை பெற அந்த எண்ணுக்கு மற்றொரு வியாபாரி போன் செய்தார். அப்போது குரங்கு அதை காதில் வைத்து வைத்து பார்த்தது. 

    இந்த குரங்கின் சேட்டையை அப்பகுதியில் சென்றவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க தொடங்கினர். 100&க்கும் மேற்பட்டோர் அங்கு வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்தனர். 

    பலகட்டமாக செல்போனை திரும்பப்பெற வியாபாரிகள் முயற்சித்தனர். 
    ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஒருமணி நேரத்துக்கு பிறகு அந்த செல்போனை குரங்கு ஒரு சிமெண்ட் சிலாப்பில் தானே கொண்டுவந்து வைத்துச்சென்றது. அதை அந்த வியாபாரி எடுத்துக்கொண்டார். ஒரு மணிநேரம் குரங்கு சேட்டையால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.
    முழு அடைப்பு போராட்டத்திலும் மதகடிப்பட்டு மாட்டுசந்தை வழக்கம்போல் இயங்கியது
    புதுச்சேரி:

    மத்திய அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்களின் சார்பில்  மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்து.

    இந்த நிலையில்   மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டது.

    ஆனால்  வேலைநிறுத்தத்தையொட்டி புதுவை எல்லை பகுதியான மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் ஆகிய அனைத்து பகுதிகளிலும் அனைத்து கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டன.  விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. 

    ஆனால் மதகடிப்பட்டு மாட்டு சந்தை எந்தவித மான தடையும்  இன்றி   இயங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து மாடுகளை விற்பனை செய்தும் மாடு களை வாங்கியும் சென்ற னர். மேலும் இந்த மாட்டுச் சந்தை நடைபெறும் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பல்வேறு கடைகள் எந்தவித தடையுமின்றி இயங்கியது.

    முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மக்கள் நலனுக்காக தி.மு.க. தொடர்ந்து செயல்படுகிறது என்று கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநில மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச் சினைகளை தி.மு.க. கவனம் செலுத்தாமல் சபாநாயகர் மீது தனிப்பட்ட வெறுப்பு அரசியலை நடத்துவதாக அதி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் கூறி உள்ளார். 

    இது, முட்டுக்கட்டு அறிக்கை. எப்படியாவது யாருக்காவது சாதகமாக பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுத்து பதவி பெற்று விட வேண்டும் என்பதற்காக அறிக்கை. 

    தி.மு.க. எதிர்க்கட்சி பணியை செய்யவில்லை என்று கூறி அவரது கட்சி பணியை செய்யாமல் கூட்டணி கட்சியினருக்கு ஜால்ரா அடிக்கும் பணியை செய்து வருகிறார். 

    ஆனால், தி.மு.க.வோ மின்துறை தனியார் மயமாக்கல்,  அரசு பணியிடங்கள் நிரப்பாதது, மாணவர்களை பாதிக்க செய்யும் நீட் தேர்வு, கியூட் தேர்வு, கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி உள்ளிட்ட அனைத்து மாநில பிரச்சினைகளிலும் குரல் கொடுத்து வருகிறோம். 

    தி.மு.க. தொடர்ந்து மக்கள் நலனுக்காக, எதிர்க் கட்சியைப்போல் செயல்பட்டு வருவதால்தான் இந்த அரசு முற்றிலும் மதவாத அரசைபோலவும், ஜனநாய கத்துக்கு விரோதமாகவும் செயல்படாமல் உள்ளது.

    எங்களது நோக்கமே  சபாநாயகர், சபாநாயகரைப் போல் செயல்பட வேண்டும் என்பது தான்.

    எனவே, தேவையின்றி அறிக்கை விட்டு குறுக்கு வழியில் பதவியை அடைய நினைக்கும் முயற்சியை கைவிட்டு மக்களுக்காகவும், மாநிலத்துக்காகவும் உண்மையாக செயல்பட வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    பா.ஜனதா சார்பில் முதலியார்பேட்டை தொகுதியில் கொசு மருந்து தெளிக்கும் பணியை அசோக்பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தொகுதி பாரதிதாசன் நகர் வார்டு காமராஜர் வீதி இந்திரா நகரில் பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் உமாபிரபு ஏற்பாட்டில் கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது. 

    நிகழ்ச்சியை அசோக் பாபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வர்த்தகர் அணி  தலைவர் சத்தியராஜ், கூட்டுறவு பிரிவு வெற்றிச்செல்வன், மாநில செயற்குழு  உறுப்பினர் கமலக்கண்ணன், மீனவரணி துணைத்தலைவர் நடராஜன், அமைப்பு சாரா  அணி சரவணன், தொகுதி துணைத்தலைவர் விஜயகுமார்,  செயலாளர் கனகராஜ், பாபு, மாவட்ட துணைத்தலைவர் விஜய ரங்கம்,   கார்த்திகேயன், ராஜி, ஆனந்தன், சுதாகர், கமலக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    பாகூர் தொகுதியில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு வீடு கட்டித்தர அமைச்சர் சந்திரபிரியங்கா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட இருளஞ்சந்தை கிராமத்தில் புறாந்தொட்டி கரை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

    இவர்கள் நிரந்திர குடியிருப்புகள் இல்லாததால், வாய்க்கால் கரை பகுதி, சாலையோரங்களில் குடிசைகள் அமைத்து வசிக்கின்றனர். 

    இவர்கள், தங்களுக்கு நிரந்தர குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் மற்றும் துறை அமைச்சரை சந்தித்து பேசினார். 

    இந்த நிலையில், அமைச்சர் சந்திரபிரியங்கா செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுடன் இருளஞ்சந்தை கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதிக்கு சென்று மாற்று இடத்தில் நிரந்திர குடியிருப்புகளை கட்டித்தருவது தொடர்பாக ஆய்வு செய்தார்.  

    இதனைத்தொடர்ந்து, ஆராய்ச்சிக்குப்பம், பரிக்கல்பட்டு கிராமத்தில் நீண்ட நாட்களாக தனியார் மற்றும் அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை, கையகப்படுத்தி பட்டா மற்றும் வீடு கட்டித்தர  வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில், அந்த இடத்தையும் பார்வையிட்டு அமைச்சர் சந்திரபிரியங்கா ஆய்வு செய்தார்.  

    அப்போது, மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

    ஆய்வின் போது, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்தி கேயன், மேலாளர் ரவி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நல ஆய்வாளர் மோகனா, ஏழுமலை, வருவாய் ஆய்வாளர் பரந்தாமன், ஆராய்ச்சிக்குப்பம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரவி, முருகன், கந்தன், சங்கர் ஆகியோர் உடனிருந்தனர். 

    இந்த ஆய்வின் போது பிரசித்தி பெற்ற பாகூர் மூலநாதர் வேதாம்பிகை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஆலய அர்ச்சகர் கொங்கு சனிபகவான் சிறப்பு குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.
    ×