என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடனுக்கு பொருட்கள் வாங்கியதில் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் மளிகை கடையை சூறையாடி தந்தை-மகனை தாக்கினர்.
    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டு துளுக்கானத்தம்மன் நகர்  4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது39). இவர் தனது வீட்டின் தரை தளத்தில் தந்தை சுகுமாறன் மற்றும் தம்பி அன்பு ஆகியோருடன் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே மளிகை கடையில் அன்பு இருக்கும் போது  அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவர் ரூ-.3 ஆயிரத்து 800-க்கு கடனில் மளிகை பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால் 6 மாதம் ஆகியும் அந்த பணத்தை சக்தி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து கிருபாகரன் தனது தம்பியிடம் கடனுக்கு வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கொடுக்கும்படி சக்தியிடம் கேட்டு வந்தார். அப்போது அந்த  பணத்தை அதே பகுதியை சேர்ந்த கல்வி செல்வம் என்பவர் தருவதாக அன்புவிடம் உறுதியளித்தார்.

    ஆனால் கல்வி செல்வமும் பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து அன்பு, சக்தியிடம் கல்விசெல்வம் பணம் கொடுக்காததால்  நீதான் தரவேண்டும் என்று கூறினார். இதனால் சக்தி ஆத்திரத்தில் அங்கிருந்து சென்று விட்டார்.

    கிருபாகரன் மளிகை கடையில் இருக்கும் போது கல்வி செல்வம் மற்றும் 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் இனிமேல் சக்தியிடம் பணம் கேட்ககூடாது, அதனை மீறி கேட்டால் நடப்பதே வேறு என்று கூறி அங்கு கிடந்த கல்லை எடுத்து கிருபாகரனை தாக்கினர்.
     
    மேலும் மளிகை கடையில் பாட்டில்களில் உள்ள பொருட்களை தூக்கி போட்டு உடைத்து சேதப்படுத்தினர். இதனை கண்ட கிருபாகரன் தந்தை சுகுமாறன் அந்த கும்பலை தட்டிக்கேட்டார். அவரையும் அந்த கும்பல் தாக்கியது. 

    மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.  இதுபற்றி தகவல் அறிந்த அன்பு  உடனே வீடு திரும்பினார்.

    பின்னர் காயமடைந்த தனது தந்தை சுகுமாறன் மற்றும் சகோதரர் கிருபாகரன் ஆகியோரை மீட்டு ஆட்டோ மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் இது குறித்து  சுகுமாரன் முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைண நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூர் அருகே புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் அண்ணா மலைநகரை சேர்ந்தவர் ரகு. இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் விக்கிரவாண்டி அருகே ஒலக்கூரை சேர்ந்த உறவினர் பெண்ணான சந்தியா (வயது20) என்பவ ருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த சில நாட்களாக சந்தியா அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார். இதுபற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்தநிலையில்   சந்தியாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்த சந்தியா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மாடியில் உள்ள கூரையில் இரும்பு பைப்பில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேறொரு திருமணம் செய்து கொள்ள காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து சித்ரவதை செய்த கணவன்-மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை நயினார்மண்டபம் வண்ணார வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் சவுமியா(வயது30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செம்பியம்பாளையத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    சவுமியா புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். திருமணம் செய்தது முதல் அன்பழகனின் தாய்  மற்றும் சகோதரியை மதிக்கவில்லை என்று அவர்கள் சவுமியா விடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தனர்.

    மேலும் தாய் மற்றும் சகோதரியின் பேச்சை கேட்டு அவர்களுக்கு ஆதரவாக அன்பழகன் சவுமியாவை அடித்து சித்ரவதை  செய்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விவகாரத்து செய்வதாகவும் அதற்கான நோட்டீஸ் தபால் அலுவலகத்தில் சென்று வாங்கி கொள்ளுமாறு சவுமியாவிடம் அன்பழகன் செல்போனில் தெரிவித்ததார்.  இதை கேட்டு சவுமியா அதிர்ச்சியடைந்து வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில்  சவுமியா தனது கணவர் அன்பழகனை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது அங்கு வந்த அன்பழகன் தகாத வார்த்தைகளால் சவுமியாவை திட்டினார்.

    மேலும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அன்பழகன் தூக்கி சென்று தனது தாயாரிடம் கொடுத்து விட்டு சவுமியாவை சரமாரியாக தாக்கினார். மேலும் அவருடன் சேர்ந்த அவரது தாய் ஜெயலட்சுமி, உறவினர் கமலவள்ளி ஆகியோர் சவுமியாவை ஆடையை பிடித்து கிழித்து வீட்டை விட்டு வெளியே தூரத்தினர்.

    அதோடு 3 பேரும் சேர்ந்து சவுமியாவை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். உடனே சவுமியா இதுபற்றி அவசர போலீஸ் 100 எண்ணுக்கு போன் செய்து வரவழைத்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சவுமியாவை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சவுமியா பின்னர் இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் புறக்காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.
    புதுச்சேரி:

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மகா சம்மேளனமும், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

    இதன்படி நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

    2-வது நாளான இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உட்பட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது.

    போராட்டத்தால் புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதிய பஸ் நிலையத்தின் பெரும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆட்டோ, டெம்போக்கள் இயங்கவில்லை. அதே நேரத்தில் புதுவை மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.

    புதுவை பணிமனையில் இருந்தும் தமிழக அரசு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது.

    பிரதான சாலைகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, மி‌ஷன் வீதி, அண்ணா சாலை, புஸ்சிவீதி, 100 அடி சாலையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பாலகம், மருந்தகம் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.

    தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பெரிய மார்க்கெட்டில் காய்கறி, பழம், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2-வது நாளாக இன்றும் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருந்தது. வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்றதால் இன்றும் பண பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    நகர்ப்புறத்தில் உட்புற சாலைகள், குடியிருப்பு பகுதியில் சிறிய கடைகள் திறக்கப்பட்டிருந்தது. புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.

    புதுவையில் பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகள் வழக்கம்போல இயங்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் பஸ்களையும் இயக்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றதால் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.

    கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது. கல்லூரி பஸ்களும் இயக்கப்பட்டது. நகர பகுதியில் பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தது. புதுவையில் 11 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    பந்த் போராட்டத்தையொட்டி மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், தொழிற்பேட்டைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுவை தனியார் விடுதியில் பதுங்கி இருந்த தமிழகத்தை கலக்கிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 24). இவர் மீது ஈரோடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டு தமிழகத்தை கலக்கிய 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    பிரபல கொள்ளையனான நாகராஜ் நீண்ட காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

    இதற்கிடையே நாகராஜ் கடந்த வாரம் ஈரோட்டில் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஈரோடு போலீசார் புதுச்சேரி விரைந்து வந்தனர். பின்னர் ஒதியஞ்சாலை போலீசார் உதவியுடன் அந்த தங்கும் விடுதியை சுற்றி வளைத்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு அழைத்துச் சென்றனர்.
    புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்காததால் அதிருப்தியில் இருந்தனர். தங்களின் அதிருப்தியை கட்சி மேலிட பொறுப்பாளரிடம் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்தாலும் பா.ஜனதா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதேபோல புதுவையிலும் பா.ஜனதாவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.

    சமீபத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தனித்து போட்டியிட தயாராகும்படி பா.ஜனதாவினருக்கு மேலிட தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    தங்கள் பகுதியில் உள்ள கொம்யூன், நகராட்சி வார்டுகளில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

    இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. விசாரணையில் அரசு தரப்பில் தேர்தலை நடத்த கால அவகாசம் கோர முடிவு செய்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு அளிக்க உள்ள உத்தரவை பொறுத்து புதுவையில் உள்ளாட்சி தேர்தல், கூட்டணி விவகாரம் சூடுபிடிக்கும்.
    தனியார் மயம், ஊரக வேலை திட்டத்தில் ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி:

    புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., எம்.எல்.எப்., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று வேலைநிறுத்தமும், நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி இன்று புதுவையில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.

    தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளான தட்டாஞ்சாவடி, திருபுவனை, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

    அதேநேரத்தில் அரசு அலுவலகங்களில் இன்றும், நாளையும் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியது.

    வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் புதுவையில் வங்கிகள் இயங்கவில்லை. பண பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தையொட்டி புதுவை நகர், தொழிற்பேட்டை பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தமிழகத்தில் போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் வழக்கத்தைவிட குறைவாகவே இயக்கப்பட்டன. இதனால் புதுவையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும், தமிழக பகுதியில் இருந்து புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைவாக இயங்கியது. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்களுக்கு உரிமம் பெற இணையதள சேவையை ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் தொழிலாளர் துறை, தேசிய தகவலியல் மையம் மூலம் பல்வேறு இணையதள வசதிகளை செயல்படுத்தி வருகிறது.

    இணையதள வசதிகளை மேலும் எளிமையாக்க மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சர்வீஸ் பிளஸ் என்ற இணையதள கட்டமைப்பு வழியாக விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் பயனாளி சேவையை பெற பதிவு செய்ய வேண்டும். 

    பின்னர் சேவையை தேர்ந்தெடுத்து, கடைகள், விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய கட்டணத்தை இணைய வழியிலேயே செலுத்தி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன்மூலம் தொழில் நிறுவனங்களை தொடங்க, உரிமம் பெற, பதிவு செய்ய, பதிவை புதுப்பிக்க முடியும். 

    துறையின் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமம், சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய இணையதள சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் உள்ள கேபினட் அறையில்  தொடங்கி வைத்து பதிவு செய்ததற்கான உரிமம், சான்றிதழை வழங்கினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திரபிரியங்கா, தொழிலாளர் துறை செயலர் சுந்தரேசன், ஆணையர் மோகன்குமார், தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் முருகையன், தொழிலாளர் அதிகாரி கண்ணபிரான் மற்றும் தேசிய தகவலியல் மைய அதிகாரிகள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். 

    இந்த புதிய இணையதள வசதியை செல்போன் மூலமும் பயன்படுத்தலாம். இதன்மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் பயன்பெறுவர். ஒவ்வொரு காலகட்ட பரிசீலனையிலும் விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப்பதாரர் அறிந்து கொள்ளலாம்.
    சபாநாயகர் மீது தி.மு.க. வெறுப்பு அரசியல் நடத்துவது சரியானது அல்ல என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அட்டவணை இனத்தவர்களுக்கு அரசின் குறைந்தபட்ச அதிகாரங்கள் கிடைத்திருக்கும். 

    எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் குறையும் என்ற ஒரே நோக்கத்திற்காக சில எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதியாக நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை நிறுத்தியுள்ள தி.மு.க. செயலை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.

    எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்கள் தி.மு.க.விற்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர் மீது தனிப்பட்ட வெறுப்பு அரசியலை நடத்துவது சரியானது அல்ல. 

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டமன்ற நடத்தை விதிகளை தி.மு.க. புரிந்து கொள்வது நல்லது. 

    சட்டமன்ற நடத்தை விதியின் கீழ் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் 14 நாட்களுக்கு முன் வழங்கப்பட வேண்டும் என உள்ளது. 

    வருகிற 30-ந் தேதி ஒரே ஒருநாள் மட்டும் நடைபெற இருக்கும் சட்டமன்ற நிகழ்வுகள் தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட வாய்ப்பில்லை என்பதை தி.மு.க. புரிந்து கொள்ள வேண்டும். வீணான வெற்று அறிக்கை விடுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியின் பணியை தி.மு.க. செய்ய வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    அகில இந்திய வேலை நிறுத்தத்தில் வருமான வரித்துறை ஊழியர்களும் பங்கேற்றுள்ளனர்.
    புதுச்சேரி:

    மத்திய தொழிற் சங்கங்களுக்கு ஆதரவாக புதுவை வருமான வரித்துறை ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    புதுவை ஊழியர்கள் சங்க தலைவி உமா மகேஷ்வரி தலைமை வகித்தார். செயலாளர் அனிருத்சர்மா முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் கோவிந்தன் விளக்கவுரையாற்றினார். இதில் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பொருளாளர் சிற்றரசன் நன்றி கூறினார்.

    இதேபோல எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக புதுவை சாரம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    சங்க தலைவர் மனோகர் தலைமை வகித்தார். கோட்ட தலைவர் நாகராஜன், புதுவை கிளை செயலாளர் ஜவகர் கண்டன உரையாற்றினர். பொருளாளர் ஆனந்தி நன்றி கூறினார்.  இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். 
    நாளை நடைபெற உள்ள முழு அடைப்பை கைவிட வேண்டும் என வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு நடத்திட திட்டமிட்டுள்ளதாக அறிந்தோம். 

    உங்களது கோரிக்கைகள் மற்றும் உங்கள் அனைவரின் உணர்வுகளை முழுமையாக உணர்ந்துகொள்கிறோம். அதற்கு புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் தொழில் மற்றும் வணிகப்பெருமக்கள் துணை நிற்பார்கள். 

    ஆனால்  அதே வேளையில் 29-ந் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் எற்கனவே பல்வேறு காரணங்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் வணிகர்களுக்கு மேலும் பாதிப்பையே ஏற்படுத்தும் என்று பல்வேறு வணிகர் அமைப்புகள் புதுச்சேரி வர்த்தக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து திட்டமிடப்பட்டுள்ள முழு அடைப்பை கைவிட வலியுறுத்தும்படி கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

    புதுவை மாநிலத்தை பொறுத்தவரை  வேலை வாய்ப்புகள் என்பது தற்போது வணிகர்களாலே பெருமளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட நடுத்தர மக்கள்  பலனைடைந்து வருகிறார்கள். முழு அடைப்பு நடத்துவதால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கும், மேலும், நடத்தப்படும் முழு அடைப்புகளால் சிறு, குறு, பெரு வணிகர்கள் மட்டுமின்றி அன்றாட வணிகர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். 

    புதுவை மாநிலத்திற்கான பெருவாரியான வருவாய் வணிகர்களாலே வரிகள் மூலமாக வசூலித்து தரப்படுகிறது. இதுபோன்ற சூழலில் முழு அடைப்பு போன்ற போராட்டங்கள் நடத்துவதால் வரி வருவாயில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு மாநிலத்தின் வளர்ச்சியையே அது பாதிக்கும். 
    ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா நோய் பாதிப்பால் போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட நமது மாநிலத்தின் தொழில் மற்றும் வணிகம் தற்போது தான் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறது. ஆனால் இந்த முழு அடைப்பு  நடத்தப்பட்டால் மேலும் பாதிப்பையே உருவாக்கும். 

    பொருட்கள் வாங்க வருகை தரும் அண்டை மாநில மக்களின் வருகை குறைந்ததால் மேலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள புதுவை வணிகம்  முழு அடைப்பு போராட்டங்களால் மேலும் மேலும் பாதிப்புக்கு உள்ளாகி வருவது அனைவரும் அறிந்ததே. அதனை களையும் பொருட்டும் புதுவை தொழில் வணிகப்பெருமக்கள் நலன் கருதியும் வரும் காலங்களில் முழு அடைப்பை முழுவதுமாக கைவிடவேண்டும் என  அனைத்து கட்சிகள், தொழிற் சங்கங்கள், சமூக இயக்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் புதுச்சேரி வர்த்தக சபை வேண்டுகோள் விடுக்கின்றது. 

    முழு அடைப்பு போராட்டத்தை கைவிட்டு மாற்றுவழி போராட்டங்களை மேற்க்கொள்ள வேண்டு மென  புதுச்சேரி வர்த்தக சபையின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    காதலர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக வாலிபர் எலிமருந்து தின்று தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணன் பெருமாள் கோவில் கரைமேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (வயது 24).  இவர் அரியாங்குப்பம் பகுதியில் தங்கியிருந்து மணவெளியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அரியாங்குப்பம் அடுத்த இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். 

    இந்த நிலையில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில்  மனமுடைந்த வெங்கடேசன் கடந்த 21-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்டார்.

    இதற்கிடையே வெங்கடேசன் தனது தந்தை பாலகிருஷ்ணனிடம் போன் மூலம் தனக்கு வயிறு வலி இருப்பதாக கூறினார். இதனால் வெங்கடேசனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் வயிறு வலி குணமாகவில்லை.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு பரிசோதனை செய்தபோது எலி மருந்து  தின்றிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×