என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழகத்தை போல் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

    ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என தீர்ப்பளித்தார். 

    இதை தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க சட்ட வரையறை தயாரிக்கப்பட்டு கவர்னர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதிருந்த கவர்னர் கிரண்பேடி இந்த சட்டவரையறையை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளதால் புதுவையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

    தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்பட அரசியல் கட்சிகளும், பல்வேறு மாணவர் அமைப்புகளும் புதுவையிலும் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    புதுவை மாநில என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சிக்கு உண்மையிலேயே, அரசு பள்ளிகளில் படிக்கும் நடுத்தர மற்றும் ஏழை-எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதா? 

    அப்படி இருந்திருந்தால், கடந்த 10 மாத ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்த அனுப்பப்பட்ட கோப்புக்கு ஒப்புதல் பெற்றிருக்கலாம். இப்போது தமிழக அரசு கொண்டுவந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு ஒப்புதல் கொடுத்துவிட்டது. 

    எனவே, புதுவையில் ஆட்சியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு 10 சதவீத இடஒதுக்கீடு கோப்புகளுக்கு ஒப்புதல் பெற வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இதனால் புதுவை அரசு மத்திய அரசிடம் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது.
    முதலியார்பேட்டை மற்றும் புதுவை நகர பகுதி மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை மற்றும் புதுவை நகர பகுதி மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் மரப்பாலம் தொழில்நுட்ப பயிற்சி மையத்தில் நடந்தது. செயற்பொறியாளர் கனியமுதன், உதவி பொறியாளர் ஜேம்ஸ், இளநிலை பொறியாளர்கள் செல்வபாண்டியன், செல்வமுத்தையன், கார்த்திகேயன், பாரதி ஆகியோர் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்தனர். 
    கொம்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    புதுச்சேரி:

    கொம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை சாந்தகுமாரி தலைமை தாங்கினார். முருங்கப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள்  கார்த்திகேயன், ஸ்ரீதர், விஷ்வகுமார் ஆகியோர் மாணவர்களுக்கு டெங்கு நோய் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்தும், ஆரோக்கிய உணவு முறைகள், சுத்தமான பழக்கவழக்கங்கள் ஆகியவை குறித்தும் சிறப்புரையாற்றினர்.

    ஆசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். அர்ஜுனன் நன்றி கூறினார். வனிதா நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். ஆசிரியர்கள் மணி, வெங்கடபிரியா, சுகந்த பிரியா, ஊழியர் சாந்தலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
    புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு நவீன ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு, தமிழக பகுதியான கொண்டிமேடு மற்றும் கடப்பேரிகுப்பம் பகுதியில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மேலும் சேதராப்பட்டு தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 

    இந்நிலையில் இரவு நேரங்களில் திடீரென யாருக்காவது நெஞ்சு வலி ஏற்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ பாதிக்கப் பட்டவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கோ அல்லது மற்ற மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல தனியாக ஆம்புலன்ஸ் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். 

    கடந்த 30 ஆண்டுகளாக அந்த பகுதி பொதுமக்கள் அவசர நேரத்தில் பாதிக்கப் பட்டவர்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் புதுவை சுகாதாரத் துறை அதிகாரியிடம் அழுத்தம் கொடுத்து சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு நவீன ஆம்புலன்ஸ் பெற்றுத் தந்தார். 

    இந்த நவீன ஆம்புலன்ஸ் மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா சேதராப்பட்டு செங்கழுநீரம்மன் கோவில் திடலில் நடந்தது. 

    கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அமைச்சர் சாய்.ஜெ.சரணம்குமார் கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தின் சாவி சேதராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பாமகள் கவிதையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகு முன்னிலை வகித்தார். முன்னதாக பா.ஜனதா பிரமுகரும் சேதராப்பட்டு அறங்காவலர் குழுத் தலைவருமான புருஷோத்தமன் தலைமையில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமாருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பா.ஜனதா தொகுதி நிர்வாகிகள், இளைஞர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லியனூரில் தலையில் கல்லைப் போட்டு முதியவர் படுகொலை செய்யப்பட்டார்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூர் பைபாஸ் சாலையில் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகே பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

    நேற்று வியாபாரம் முடிந்தது பரத் பிரியாணிகடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பிரியாணிகடை முன்பு ஒரு முதியவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இது பற்றி வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமு சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்ட முதியவருக்கு சுமார் 65 வயது மேல் இருக்கும் அவரது உடல் அருகே ஒரு பையில் 3 துணிகள் இருந்தன. 3 ஒற்றை செருப்புகள் அருகே கிடந்தது. அவர் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை.

    நள்ளிரவில் அந்த முதியவர் பிரியாணி கடை முன்பு படுத்து இருந்த போது குடிபோதையில் மர்ம நபர்கள் அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலையில் போட்டு கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபடுட்டு இருக்கலாம் என தெரிகிறது.

    இதை தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிகாமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை செய்யப்பட்ட முதியவர் யார்-எந்த ஊர் மற்றும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்

    இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் பீஸ்ட் படம் வெளியிடப்படுகிறது. இதையொட்டி நகர் முழுவதும் விளம்பர பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற 13-ந்தேதி திரையிடப்படுகிறது.

    புதுவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இப்படம் வெளியிடப்படுகிறது. இதையொட்டி நகர் முழுவதும் விளம்பர பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

    இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் விஜய் நிற்பது போன்ற விளம்பரங்களும் உள்ளன. இதற்கிடையே ரசிகர் மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க தினமும் 2 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாலை 4 மணி, காலை 8 மணி என கூடுதலாக 2 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமான 4 காட்சிகளுடன் சேர்த்து 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அனைத்து திரையரங்குகளும் 6 காட்சிகளை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    விஜய் மக்கள் இயக்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க திரையரங்கில் கட்டணம் 5 நாட்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அனைத்துக் காட்சிகளுக்கும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு திரையரங்குகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 

    10 ஆண்டுகளுக்கு பிறகு பாகூர் கொம்யூன் பஞ்சாயத்தில் திருமண பதிவு செய்ய ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் திருமண பதிவுகள் வருவாய் துறையின் கீழ் உள்ள பதிவாளர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் உள்ள பஞ்சாயத்து, நகராட்சி அலுவலகத்தில் நடப்பது வழக்கம். 

    இதுபோல தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திலும் நடக்க வேண்டும். ஆனால், சார்பதிவாளர் அலுவலகத்தில் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே திருமண பதிவுகள் நடத்தப்பட்டு வருகிறது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக திருமண பதிவுகள் சில காரணங்களால் நிறுத்தப்பட்டு இருந்தது. 

    இது சம்பந்தமாக தற்பொழுது உள்ள பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் திருமணப் பதிவுகள் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    இதற்கான ஏற்பாடுகளை ஆணையர் கார்த்திகேயன் செய்தார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திருமண பதிவு பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆணையர் கார்த்திகேயன், மேலாளர் ரவி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். முதல் திருமணம் செய்த மணமக்களுக்கு வாழ்த்-துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    இது சம்பந்தமாக ஆணையர் கார்த்திகேயன் கூறும்போது, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இணங்க திருமண பதிவுகள் கொம்யூன் பஞ்சாயத்திலும் நடக்கிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  திருமணம் ஆன 15 நாட்களுக்குள் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். உரிய ஆவணங்கள் பெற்று திருமண பதிவு உடனுக்குடன் வழங்கப்படும் என்றார்.
    கல்லூரி மாணவிகள் பெண்களை கிண்டல் செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை போலீசார் நெல்லிதோப்பு மார்க்கெட் பகுதியில் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 கல்லூரி மாணவிகள் தங்களை 2 வாலிபர்கள் கேலி- கிண்டல் செய்வதாக போலீசாரிடம் கூறினர்.

    இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 25) பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த சூர்யா (22) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

    இதுபோல் லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதி அருகே 3 வாலிபர்கள் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த லாஸ்பேட்டை போலீசார் 3 வாலிபர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் புதுவை வினோபா நகரை சேர்ந்த பிரவின் (25) மற்றும் பத்மநாபன் (26) கிருஷ்ணா நகர் 9-வது குறுக்குத் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22) என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
    பிரமோற்சவ விழாவையொட்டி முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புஷ்ப விமானத்தில் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. முக்கிய  நிகழ்ச்சியாக சிம்ம வாகனத்தில் அம்மன் வல்லாளகண்டனை அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 

     இதையடுத்து முத்தியால்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் உள்ள திருமணமான பெண்கள் குழந்தை  பாக்கியம் வேண்டி அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

    இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள்  கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
    பாகூரில் உள்ள திறன்மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரியா ஒர்க், ஸ்டோன் ஒர்க், ஜமிக்கி ஒர்க், போன்ற கை வேலைபாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
    புதுச்சேரி:

    தீபம் அறக்கட்டளை மற்றும் நபார்டு வங்கி இணைந்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள புதுவையை சேர்ந்த சுய உதவி குழு பெண்களுக்கு குருந்தொழில் முனைவோர் பயிற்சி திட்டத்தின் மூலமாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

    அதன் ஒரு பகுதியாக, பாகூரில் உள்ள திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் ஆரியா ஒர்க், ஸ்டோன் ஒர்க், ஜமிக்கி ஒர்க், போன்ற கை வேலைபாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

    இதில், பாகூர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். கைவினை சேவை மைய உதவி இயக்குனர் வினோத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தீபம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஜோதி லட்சுமி, மேலாளர் ஜார்ஜ் ஸ்டீபன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற பெண்கள், தங்களின் பயிற்சி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
    காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவியரசன் கிருத்திகா- திருமணம் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
    காரைக்கால்:

    காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்-லட்சுமி தம்பதி மகன் கவியரசன். காரைக்கால் கிளிஞ்சல்மேடு செல்வராஜ்-விஜயலட்சுமி தம்பதி மகள் கிருத்திகா. இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

    இவர்கள் தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி காரைக்கால் காமராஜ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவியரசன் கிருத்திகா- திருமணம் தமிழ் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. அதோடு தமிழக கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் திருமண மண்டபத்தில் அசத்தலாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காரைக்காலில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
    தி.மு.க.வினர் சட்டசபை முற்றுகையிட்டனர். இதில் 4 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    மத்திய அரசின் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, முக்கிய மருந்துகளின் விலை உயர்வு, மாநில அரசின் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து இன்று சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. அறிவித்து இருந்தது.

    புதுவை அண்ணாசாலையில் இருந்து தி.மு.க.வின் மாட்டுவண்டி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்துக்கு மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாட்டு வண்டியை எதிர்கட்சித்தலைவர் சிவா ஓட்டி வந்தார். 

    அவரோடு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க.வினர் 5-க்கும் மேற்பட்ட வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி, ஜென்மராக்கினி ஆலயம் வழியாக சட்டமன்றம் நோக்கி வந்தது. 

    ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். ஊர்வலத்தை ஆம்பூர் சாலை சந்திப்பில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

    ஆர்ப்பாட்டத்தில் ஏறிப்போச்சு.. ஏறிப்போச்சு... விலைவாசி எறிபோச்சு... ரங்கசாமி அண்ணாச்சி... கியாஸ் விலை என்னாச்சு... அடிக்காதே... அடிக்காதே... ஏழை வயிற்றில் அடிக்காதே... கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... விலை உயர்வை கண்டிக்கிறோம். உடைக்காதே... உடைக்காதே... ஏழைகளின் எலும்பை உடைக்காதே... அதானி, அம்பானிக்கு தள்ளுபடி... ஏழைகளின் வயிற்றில் அடி... தனியார் மயமாக்காதே... தனியார் மயமாக்காதே... மின்துறையை தனியார் மயமாக்காதே என கோஷம் எழுப்பினர். 

    இதையடுத்து தி.மு.க.வினர் போலீசாரின் தடுப்புகளை மீறி முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

    இதையடுத்து தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். எதிர்கட்சி தலைவர் சிவா உட்பட 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். 

    ஊர்வலம், ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் முகமதுயூனுஸ், காந்தி, கோபால், கார்த்திகேயன், சக்திவேல், தைரியநாதன், செந்தில்குமார், குணாதிலீபன், வேலவன், அகிலன், அருள்செல்வி, நளினிசாரங்கன், தங்கவேலு, சண்குமாரவேல், கலியகார்த்திகேயன், சீத்தாராமன், மதன்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ×