என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை அரசும், பிரெஞ்சு அரசும் இணைந்து தொழில் முனைவோர் மாநாட்டை அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தியது.
இன்று 2-வது நாளாக மாநாடு நடந்தது. மாநாட்டில் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த 28 நிறுவனங்களும், 58 பிரெஞ்சு இந்திய கூட்டு நிறுவனங்களும் என மொத்தம் 86 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநாட்டில் புதுவையில் தொழில் தொடங்குவதற்கான சூழல், கட்டமைப்புகள், அரசின் சலுகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநாடு குறித்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம் என வாக்குறுதியளித்துள்ளார். கடந்தமாதம் புதுவைக்கு வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவும் பெஸ்ட் புதுவையை உருவாக்க உறுதியளித்துள்ளார். தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசு புதுவையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதற்காக ஒற்றைச்சாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசு எளிமையாக தொழில் தொடங்க ஒரு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை புதுவையிலும் அமல்படுத்த உள்ளோம்.
மாநாட்டில் பங்கேற்ற நிறுவனத்தினர் புதுவையில் தொழில் தொடங்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். தொழில் தொடங்க தேவையான நிலம், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை அரசு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளோம். புதிய தொழிற்சாலைகள் வந்தால் புதுவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
புதுவையின் பொருளாதாரம் மேம்படும். சேதராப்பட்டில் கையகப்படுத்தி உள்ள 750 ஏக்கரில் தொழிற்சாலைகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் தயாரிப்பு, மின்சாதனம், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
இதில் பங்கேற்ற 10 நிறுவனங்கள் உடனடியாக தொழில் தொடங்க தயாராக உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் ரூ.ஆயிரம் கோடி முதலீடு புதுவைக்கு வரும். 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை கொண்டுவர முன்னுரிமை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தொழில்துறை செயலர் அருண் உடனிருந்தார்.
புதுவை அரசு சாலை போக்குவரத்துக்கழகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் பாவாடை.
இவர் நேற்று முன்தினம் பொது மேலாளர் ஏழுமலையுடன் 100 அடி சாலையில் உள்ள போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கு பி.ஆர்.டி.சி.யில் கண்டக்டராக வேலை பார்க்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த வேலைய்யன் வந்திருந்தார்.
அப்போது வேலைய்யன், இளநிலை எழுத்தர் பாவாடையிடம், தொழிலாளர்களின் செலவு, அரியர்ஸ் தொகை எப்போது கிடைக்கும்? என கேட்டுள்ளார். இதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாவாடையை, வேலைய்யன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாவாடை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் வேலைய்யன் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நேற்று பாவாடைக்கு ஆதரவாக வேலைய்யன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பி.ஆர்.டி.சி. நிர்வாக அலுவலக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று பி.ஆர்.டி.சி. கண்டக்டர், டிரைவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். புதிய பஸ்நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியேற முடியாதபடி பஸ்களை குறுக்கே நிறுத்தினர்.
இதனால் அதிகாலை 4 மணி முதல் பி.ஆர்.டி.சி. பஸ்கள் எதுவும் செல்லவில்லை. பஸ்கள் அனைத்தும் பணிமனைக்குள் நிறுத்தப்பட்டிருந்தது. வேலைய்யன் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனக்கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் வரை பஸ்கள் ஓடவில்லை. நிர்வாகம் தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு, பிரெஞ்சு தூதரகத்துடன் இணைந்து தொழில்துறை வளர்ச்சிக்கு தொழில்முனைவோர் மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாடு அண்ணாசாலையில் உள்ள தனியார் ஒட்டலில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, பிரெஞ்சு தூதர் லிசே டால்பட் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதை உருவாக்கி தர வேண்டும் என்பதே அரசின் எண்ணம். புதுவையில் அதற்கான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான வசதிகளை விரைவாக செய்து தரவேண்டும். விண்ணப்பித்த ஒரு சில நாட்களிலேயே மின்துறை உட்பட்ட அனைத்து துறைகளிலும் உரிமம் கிடைக்கவேண்டும். இதற்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் புதுவை அரசு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், பெஸ்ட் புதுவை என்பது பிரதமரின் எண்ணம். மத்திய அரசு உதவியுடன் தொழில்துறையில் முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக மெடிக்கல் டூரிசம், மருந்துகள் தயாரிப்பு, ஸ்டார்ட் அப்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறோம். புதுவையில் இத்தொழில்களை தொடங்க முதலீடு செய்யலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் 80 பிரெஞ்சு மற்றும் இந்திய நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
புதுவை முத்திரையர் பாளையம் காந்தி திருநல்லூரை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள அங்கன் வாடியில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டு வந்தார்.
ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் அருகே வந்த போது தனியார் பஸ் ராஜலட்சுமி மொபட் மீது உரசியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். பஸ்சின் முன் பக்க டயர் ராஜலட்சுமி தலையில் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே ராஜலட்சுமி துடிதுடித்து இறந்தார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதை பதைக்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






