என் மலர்
இந்தியா

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் - கல்லூரிக்குள் தீக்குளித்து உயிரை மாய்த்த மாணவி
- கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
- திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார்.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.
அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மாணவியை மீட்டு புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 95 சதவீத தீக்காயங்களுடன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக ஒடிசா காவல்துறை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், தீக்குளித்த 22 வயது கல்லூரி மாணவி, 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு உயிரிழந்தார்.
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் துறைத் தலைவர் மற்றும் முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, மாணவியின் மறைவுக்கு முதலமைச்சர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் அனைவரும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்துள்ளார்.






