search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர்
    X
    டாக்டர்

    கர்நாடகத்தில் டாக்டர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டம்

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதை கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கர்நாடகம் முழுவதும் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் தாலுகா சுகாதாரத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த டாக்டர் ஒருவர், கடந்த மாதம் உயர் அதிகாரியின் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள், முதல்-மந்திரி பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் பணிக்கு திரும்பினார்கள்.

    மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஏராளமான டாக்டர்கள், அந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த டாக்டர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதை கண்டித்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கர்நாடகம் முழுவதும் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி நாளை முதல் கர்நாடகத்தில் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதன்காரணமாக நாளை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் வெளிபுற நோயாளிகள் பிரிவு மூடப்பட உள்ளது. ஆனால் அதே நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் நோயாளிகளின் விவரம் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படாது என்றும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    டாக்டர்களின் இந்த முடிவால் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டாக்டர்கள் நாளை முதல் போராட்டம் நடத்த உள்ள நிலையில், கர்நாடக மாநில அரசு இன்று (திங்கட்கிழமை) அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டால், நாளை நடக்கும் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×