என் மலர்tooltip icon

    விருதுநகர்

    அருப்புக்கோட்டையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
    அருப்புக்கோட்டை:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் ஆம்னி பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. நள்ளிரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது.

    பந்தல்குடி புறவழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி பஸ் கவிழ்ந்தது.

    பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி வெளியே செல்ல வழியின்றி பயணிகள் பேருந்தின் உள்ளே அலறி துடித்தனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை ஆவடி பம்மல் தெருவை சேர்ந்த வேல்மணி (வயது 60) என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி 4 வழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரேன் மூலம் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    2 குடும்பத்தினரும் ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவருக்கு மொத்தமாக ஓட்டு போட்டு வருவது தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.


    பட்டாசுக்கு பெயர் பெற்ற சிவகாசி அருகே பூசாரிபட்டி என்ற அழகிய கிராமம் உள்ளது. முற்றிலும் விவசாயத்தை நம்பியுள்ள இந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கை உடைய 2 பெரிய குடும்பத்தினர் கூட்டாக வாழ்ந்து வருவது இந்த நவீன காலத்தில் தொடருகிறது.

    இதில் பூசாரி நாயக்கர் என்ற குடும்பத்தில் 90 பேர் உள்ளனர். இவர்களில் 61 பேர் வாக்காளர்கள் ஆவார்கள். பெருமாள்சாமி என்பவரது குடும்பத்தில் 190 பேர் உள்ளனர். இவர்களில் 80 பேர் ஓட்டு போட தகுதியானவர்கள்.

    இந்த 2 குடும்பத்தினரும் ஒவ்வொரு தேர்தலிலும் யாராவது ஒருவருக்கு மொத்தமாக ஓட்டு போட்டு வருவது தான் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தேர்தல் நாளன்று என்ன வேலையாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றாக சென்று ஓட்டு போடுவதை அன்று முதல் இன்று வரை கடைபிடித்து வருகின்றனர்.

    இது குறித்து பூசாரி நாயக்கர் குடும்பத்தின் தலைவர் வெடிமுத்து கூறியதாவது:-

    நாங்கள் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

    ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஒன்றாக கூடி கலந்து பேசி நமக்கு யார் நல்லது செய்வார்கள்? என பார்த்து ஓட்டு போடுவோம். இதற்காக நாங்கள் எந்த கட்சியிடம் இருந்தும் காசு, பணம் எதுவும் வாங்குவது கிடையாது.

    யார் எங்கள் வீட்டுக்கு ஓட்டு கேட்டு வந்தாலும் அவர்களை மரியாதையுடன் வரவேற்போம். கட்சி பாகுபாடு எதுவும் பார்ப்பது கிடையாது.

    எங்கள் குடும்பத்தில் வருகிற தேர்தலில் 17 பேர் புதிதாக வாக்களிக்க உள்ளனர். அவர்களும் இந்த தேர்தலில் ஓட்டு போட உற்சாகமாக உள்ளனர். அவர்களும் நாங்கள் சொல்கிறபடி தான் போட்டு போடுவதாக கூறி இருப்பது பெருமையாக உள்ளது. எப்போதுமே எங்கள் ஓட்டு விற்பனைக்கு கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வெடிமுத்துவின் மருமகள் மகாலட்சுமி கூறுகையில், பணத்துக்காக் எந்த கட்சிக்கும் ஓட்டு போடமாட்டோம். எங்க வீட்டு பெரியவர் மாமா தான். அவர் தான் குடும்பத்துக்கு எல்லாம். அவர் சொல்கிறதை தான் நாங்க எல்லாரும் கேட்போம்.

    பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக எந்த கட்சிக்கும் ஓட்டு போட சொல்ல மாட்டார். நம்முடைய விவசாயத்திற்கு யாரெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு போட சொல்வார்.

    இந்த தேர்தலிலும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு என்றார்.

    இதே குடும்பத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கூறும்போது, “நாங்கள் கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பது பெருமையாக உள்ளது. அனைத்து வேட்பாளர்களும் எங்கள் வீடுகளை தேடி வரும்போது அதுவே எங்களுக்கு ஒரு கெத்தாக உள்ளது என்று கூறினார்.

    இதேபோல் பெருமாள் சாமி குடும்பத்தினரும் தேர்தல் சமயத்தில் ஒன்றாக கலந்து பேசி பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அந்த சொல்லுக்கு மதிப்பு கொடுத்து ஓட்டு போட்டு வருகின்றனர்.

    ஒரே கிராமத்தில் 2 குடும்பத்திலும் மொத்தம் 141 ஓட்டுகள் உள்ளதால் ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த 2 குடும்பத்தினர் ஓட்டுகளை குறிவைத்து அனைத்து வேட்பாளர்களும் இவர்களது வீடு தேடி செல்வது இன்றளவும் தொடர்கிறது.

    வருகிற தேர்தலிலும் இவர்களின் ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்ய அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களை தேடி செல்ல ஆரம்பித்து விட்டனர்.

    2 குடும்பத்தினர் ஓட்டுகளை எப்படியும் பெற வேண்டும்? என்பதற்காக அரசியல் கட்சியினர் அவர்கள் வெளியில் எங்கே சென்றாலும் மரியாதையுடன் கைகூப்பி ஓட்டு கேட்டு வருவது வித்தியாசமாக உள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ரகுமானும், அ.ம.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.
    மாவட்டத்திற்கு விருதுநகர் தலைநகராக இருந்தாலும் சட்டமன்ற தொகுதியாக முதலில் அங்கீகாரம் பெற்றது சாத்தூர்.

    சாத்தூருக்கு மற்றொரு சிறப்பாக பெருந்தலைவர் காமராஜர் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்று முதல் அமைச்சரானார்.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி அருப்புக்கோட்டை நகர், சாத்தூர் நகர் மற்றும் 2 யூனியன் கிராமங்களையும் உள்ளடக்கியதாக 2006 வரை இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது சாத்தூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த அருப்புக்கோட்டை நகர் பகுதி அருப்புக்கோட்டை தொகுதியாக மாற்றப்பட்டது.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூர் தொகுதியை பொறுத்த மட்டில் காங்கிரஸ் 3 முறையும், பார்வர்ட் பிளாக் ஒரு முறையும், அ.தி.மு.க. 6 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    முக்கியமாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 6 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இடம் பெற்றிருந்தபோது அமைச்சரவையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அமைச்சராக இருந்ததால் இவர் சாத்தூர் ராமச்சந்திரன் என அழைக்கப்பட்டார். அதுமுதல் சாத்தூர் ராமச்சந்திரன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

    சாத்தூர் சட்டமன்ற தொகுதி மொத்த வாக்காளர்கள் 2,51, 502. ஆண்கள் 1,21,939. பெண்கள் - 1,29.534. மூன்றாம் பாலினத்தவர்- 29.

    தற்போது இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனும், தி.மு.க. கூட்டணி சார்பில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் ரகுமானும், அ.ம.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.

    கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இவர் கட்சி மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஜவர்மன் போட்டியிட்டு 456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு அ.தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அ.ம.மு.க.வில் சேர்ந்து களம் இறங்குகிறார்.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூர் நகர் மற்றும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் பிரதான தொழிலாகவும், கிராம மக்களுக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

    எழுதுவதற்கு மை பேனா பிரதானமாக பயன்பட்டு வந்தபோது சாத்தூரில் பேனா நிப் தயாரிக்கும் தொழில் பிரசித்தி பெற்று நடந்து வந்தது. காலப்போக்கில் மை பேனா முக்கியத்துவத்தை இழந்த நிலையில் தற்போது நிப் தயாரிப்பு தொழிலும் நலிவடைந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் குடிநீர் தேவைக்குதான் முதன் முதலாக நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் தாமிரபரணித் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது.

    சாத்தூர் பகுதியில் மிளகாய் வத்தல் வணிகம் மிகவும் பெயர் பெற்று விளங்கியது. எனினும் இன்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையே நீடிக்கிறது.

    சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாகும்.

    சாத்தூர் தொகுதி

    சாத்தூரில் உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள மரியா ஊரணியில் பஸ் நிலையம் அமைக்க எடுத்த முயற்சிகள் பலன் தராமல் போய்விட்டது. சாத்தூரில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வருவதற்கு பயன்பாட்டில் இருந்து வந்த இந்தப் பாலம் குறுகலாக இருந்ததால் அதற்கு இணையாக புறவெளியில் மற்றொரு பாலம் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டிய பாலத்திற்கு ஜட்கா வண்டி பாலம் என்ற பெயரும் உண்டு.

    முக்கிய கோரிக்கை

    சாத்தூர் காராசேவு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதற்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. முக்கிய கோரிக்கைகளாக விருதுநகர்- சாத்தூர் இடையே சிப்காட் பூங்கா அமைக்கப்பட வேண்டும், இருக்கன்குடி அணையை முறையாக பராமரித்து பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும். தீப்பெட்டி தொழில் நலிவடையாமல் இருக்க அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதே இந்த தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளன.


    2019 இடைத்தேர்தல்

    ராஜவர்மன் (அ.தி.மு.க. வெற்றி)- 76977
    கோசுகுண்டு சீனிவாசன் (தி.மு.க.)- 76521
    எதிர்கோட்டை சுப்பிரமணியன் (அ.ம.மு.க.)- 12428
    சுரேஷ்குமார் (நாம் தமிழர்)- 5004
    சுந்தர்ராஜ் (மக்கள் நீதி மய்யம்)- 3899

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1952- எஸ்.ஆர்.நாயுடு (எ) ராமசாமி (காங்கிரஸ்)
    1957- பெருந்தலைவர் காமராஜர் (காங்கிரஸ்)
    1962- பெருந்தலைவர் காமராஜர் (காங்கிரஸ்)
    1967- ராமசாமி நாயுடு (சுதந்திரா கட்சி)
    1971- அழகுத்தேவர் (பார்வர்டு பிளாக்)
    1977- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1980- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1984- சாத்தூர் ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)
    1989- கருப்பசாமி (தி.மு.க.)
    1991- சாத்தூர் ராமச்சந்திரன் (திருநாவுக்கரசு அணி)
    1996- விஜயகுமார் (தி.மு.க.)
    2001- சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.)
    2006- சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.)
    2011- ஆர்.பி. உதயகுமார் (அ.தி.மு.க.)
    2016- எதிர்கோட்டை சுப்பிரமணியன் (அ.தி.மு.க.)
    2019- ராஜவர்மன் (அ.தி.மு.க.) இடைத்தேர்தல்
    3-வது முறையாக தேர்தலை சந்திக்கும் திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசை அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னணி கழகத்தைச் சேர்ந்த ராஜசேகர் எதிர்கொள்கிறார்.
    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி என்பது காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய யூனியன் பகுதிகளில் உள்ள கிராமங்களை கொண்டது.

    இதற்கு முன்னர் இந்த 3 யூனியன்களையும் கொண்டு அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2011 முதல் திருச்சுழி தொகுதியாக மாறி உள்ளது. தற்போது உள்ள திருச்சுழி தொகுதிதான் அப்போதைய அருப்புக்கோட்டை தொகுதி.

    அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோது 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். அவர் முதலமைச்சர் ஆனதால் தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வி.எஸ். பஞ்ச வர்ணம் என்பவரை சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார்.

    பின்னர் 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிச்சை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். 1986-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பஞ்ச வர்ணம் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார்.

    திருச்சுழி தொகுதி

    இந்த இடைத்தேர்தலுக்கு உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தாலும் எம்.ஜி.ஆர். நேரடியாக வந்து பிரசாரம் மேற்கொண்டார்.

    2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு நடைபெற்றது. அப்போது அருப்புக்கோட்டையில் இருந்து புதிதாக உருவானது திருச்சுழி. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் திருச்சுழி 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் தங்கம் தென்னரசு வெற்றிபெற்றார். இவரது தந்தை தங்கப்பாண்டியன் ஏற்கனவே அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோது 1989 மற்றும் 1996-ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் மரணம் அடைந்ததால் 1998-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மகன் தங்கம்தென்னரசு வெற்றி பெற்றார். 2001-ம் ஆண்டு தோல்வி அடைந்த அவர் 2006-ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.

    திருச்சுழி தொகுதி
    திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளரம் தங்கம்தென்னரசு

    தற்போது அவர் 6-வது முறையாக களம் காண்கிறார். இவர் எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் மூவேந்தர் முன்னணி கழகத்தைச் சேர்ந்த ராஜசேகரும், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமியும் போட்டியிடுகின்றனர்.

    இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 20 ஆயிரத்து 720. ஆண்கள் 1,08,172. பெண்கள் 1,12,536. மூன்றாம் பாலினத்தவர் 12.

    திருச்சுழி தொகுதி என்பது முற்றிலும் கிராம பகுதிகளை கொண்ட பகுதியாகும். விருதுநகர் மாவட்டத்திலேயே காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இந்த தொகுதி மக்கள் முற்றிலும் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நரிக்குடி பகுதியில் சீமைகருவேலமரங்களை வெட்டி கரிமூட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி தொகுதி

    இந்த பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகளும் இல்லை. கம்பிக்குடி நிலையூர் கால்வாய் திட்டம் மதுரை மாவட்டம் வரை வெட்டப்பட்டு முழுமை அடையாமல் உள்ளது. இந்த திட்டம் முழுமை அடையாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலையூர் கம்பிக்குடி கால்வாய் திட்டம் முழுமை அடைந்தால் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

    நீண்டகால எதிர்பார்ப்பு

    திருச்சுழி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிருதுமால் நதியில் தொடர்ந்து வருடந்தோறும் வைகை ஆற்றில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை வேண்டும். மேலும் தொகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீரை முழுமையாக முறைப்படுத்த வேண்டும், மழை காலங்களில் குண்டாற்றில் வரும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு கொண்டு செல்ல ஆங்காங்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் திருச்சுழி தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் இந்த பகுதி இளைஞர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பு.
    வெடி விபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
    சிவகாசி:

    விருதுநகரை அடுத்த குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புதுராஜா என்ற தொழிலாளி பலியானார். 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.

    இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை நேரில் சந்தித்து விபத்து குறித்து கலெக்டர் கண்ணன் விசாரித்தார். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது கலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆமத்தூர் அருகே உள்ள ஜி.என்.பட்டியில் இயங்கி வந்த மத்தாப்பூகுச்சிகள் தயாரிக்கும் ஆலையில் மத்தாப்பூ குச்சிகள் தயாரிக்கும் போது உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதுவரை பட்டாசு ஆலைகளில் வெடிகள் தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டு வந்தது. தற்போது மத்தாப்பூகுச்சிகள் தயாரிக்கும் ஆலையில் இதுபோன்ற பெரிய அளவில் தீக்காயம் ஏற்படும் வகையில் விபத்து ஏற்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது.

    தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இனி வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினசரி 40-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் தான் பணியாற்றி உள்ளனர். விபத்து நேரத்தில் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு இருந்தும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை.

    மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரின் அறிக்கைப்படி நடவடிக்கை எடு்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர்-சிவகாசி செல்லும் சாலையில் ஆமத்தூர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது.

    இங்கு கலர் மத்தாப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவாசியை சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மாலை மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ விபத்துபற்றி அறிந்ததும் தீயணைப்பு விரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 2 அறைகள் தீப்பிடித்து எரிந்து சேதமாயின.

    இதில் வீராசாமி (வயது 64), புதுராஜா (54), நடராஜன் (50) மற்றும் முருகேசன் மனைவி பஞ்சவர்ணம் (54) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உடல் கருகிய நிலையில் அவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுராஜா இறந்தார்.

    மேலும் வீராசாமி, நடராஜன் ஆகியோரும் அடுத்தடுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பஞ்ச வர்ணத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் ஆலை உரிமையாளர் விசாகன் மற்றும் போர்மேன் துரைராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சாத்தூர் அருகே தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே போத்திரெட்டிபட்டி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லையா. இவரது தாயார் மாரியம்மாள் (வயது 88). இவர் கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த இருக்கன்குடி போலீசார் மாரியம்மாளின் உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ரிசர்வ்லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த குருவையா (வயது 40) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், குருவையாவை கைது செய்தனர்.
    டாஸ்மாக் பார் நடத்துபவரை மிரட்டி பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முனிசெல்வம் (வயது 39). இவர் சிவகாசியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் தனது பாருக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாட்சியாபுரத்தை சேர்ந்த அழகுராஜா (22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி முனிசெல்வத்திடம் இருந்து ரூ.1300-யை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து அழகுராஜாவை கைது செய்தனர். இதே போல் சிவகாசி அண்ணாகாலனியை சேர்ந்த பிரபு (30) என்பவர் பராசக்தி காலனியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகுளம் கண்மாய் பகுதியில் நடந்த சென்ற போது அங்கு வந்த கொங்கலாபுரத்தை சேர்ந்த கண்ணன் (23) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பிரபுவிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் முருகனை பிடித்து சிவகாசி டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.
    விருதுநகர் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள இ.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தினசரி குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிராஜ் மனைவி சரஸ்வதியுடன் தகராறு செய்தார். இதைத்தொடர்ந்து சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.

    சிறிது நேரத்தில் மணிராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    தாங்கள் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர் இனாமாக தருகிறேன் என்றும் மீதி ஆறு சிலிண்டருக்கு காசு தர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கூறிவருகிறார்.

    ராஜபாளையம்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட குழு கூட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-,

    விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    பட்டாசு ஆலைகளில் விபத்து தவிர்க்கப்பட வேண்டும். விபத்தை காரணம் காட்டி பட்டாசு ஆலைகளை மூட நேரிடும் போது பட்டாசு தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

    பெட்ரோல்,டீசல் விலை கடுமையாக ஏறிக் கொண்டே போகிறது. அதேபோன்று சமையல் எரிவாயு விலையும் அதிகமாக ஏறிக்கொண்டே போகிறது.

    தாங்கள் வெற்றி பெற்றால் 6 சிலிண்டர் இனாமாக தருகிறேன் என்றும் மீதி ஆறு சிலிண்டருக்கு காசு தர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் கூறிவருகிறார்.

    விலை உயர்வை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசாங்கத்தை கண்டிப்பதற்கு பதிலாக, விலை ஏற்றத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவதற்குப் பதிலாக, இதைக் கைவிட வேண்டும் என்று கூறுவதற்கு பதிலாக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறு சிலிண்டர் இனாமாக தருகிறோம் என்று கூறுவது அரசியல் நாகரிகம் ஆகாது.

    தேர்தல் ஆணையம் தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை. எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. இதையும் நாங்கள் எதிர் கொள்வோம்.தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு ஒரு மாத காலம் உள்ளது இதனால் எல்லாருக்கும் ஒரு அச்சம் உள்ளது .

    இடைப்பட்ட காலத்தில் ஏதாவது சதி செய்வார்களோ என்ற எண்ணம் நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி எத்தகைய செயலையும் செய்யக்கூடிய கட்சியாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கூட்டும் கூட்டத்தில் இந்தக் கருத்துகளை நாங்கள் சொல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சாத்தூர் அருகே குடோனில் இருந்த ரூ.5½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 32). இவர் சாத்தூர் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் ராமலிங்காபுரத்தில் இவரது குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் ராமலிங்கபுரத்தில் உள்ள ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினா்.

    அப்போது அந்த குடோனில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 68 மூடைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து புகையிலை மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலையின் மதிப்பு ரூ.5½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோன் உரிமையாளர் ராமகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×