என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் மாநகராட்சியில் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 2 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளனர்.

    மீதமுள்ள 58 வார்டுகளில் அ.தி.மு.க., தி.மு.க உள்பட 354 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

    மாநகராட்சியில் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 208 ஆண்கள் 215001 பெண்கள் திருநங்கைகள் 46 என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர்.

    வாக்காளர்கள் ஓட்டு போட தேவையான பூத் சிலீப் இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    அதன்படி வேலூர் மாநகராட்சி உள்ள அனைத்து வார்டுகளிலும் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத் சிலிப் வினியோகம் செய்தனர்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை சரிபார்த்து அவர்கள் பூத் சிலிப் வழங்கினர். பூத் சிலிப்பில் வாக்காளர் விவரம் எண், ஓட்டு போட வேண்டிய வாக்குச்சாவடி விவரம் போன்றவை அச்சிடப்பட்டுள்ளது.

    2 நாட்களுக்குள் அனைத்து வார்டுகளிலும் பூத் சிலிப் வழங்கும் பணி நிறைவு பெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாநகராட்சியில் வாக்காளர் பெயர், சின்னத்துடன் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது.
    வேலூர்

    வேலூர் மாநகராட்சியில் 58 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 419 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

    ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு ஓட்டுப்பதிவு எந்திரம் பயன் படுத்தப் படவுள்ளது. மொத்தம் 354 பேர் போட்டியிடுகின்றனர் இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்தலின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. 

    அப்போது பேட்டரிகள் பழுதடைந்த எந்திரங்களில் புதியதாக பேட்டரி மாற்றப்பட்டது.

    இந்த பணி இன்றுடன் நிறைவு பெற்றது. அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தயாராகிவிட்டன.

    இந்த எந்திரங்கள் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

    வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் அனைத்து எந்திரங்களும் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
    வேலூர்

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி 628 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் 91 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் பதட்டமானவை என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் பிரதாப் இன்று ஆய்வு செய்தார்.
    காகிதப்பட்டறை அரசு நடுநிலைப்பள்ளி அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை அவர் பார்வையிட்டார்.

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான வசதிகள் செய்திருக்க வேண்டும். மின்வசதி சரியான அளவில் இருக்க வேண்டும். மின்சார வசதி குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என கூறினார்.
    மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு பாதைகள் முறையாக அமைக்க பட்டு உள்ளதா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    மேலும் அவர் கூறுகையில்:-

    வேலூர் மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது பெரிய அளவில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது 91 வாக்குச் சாவடிகளில் அசம்பாவிதம் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வெப்கேமரா வசதியும் செய்யப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு செய்வது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார். வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    குடியாத்தம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    குடியாத்தம்

    குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குடியாத்தம் ஒன்றியத்தில் பாரதப்பிரதமர் சாலைகள் மேம்பாடு திட்டத்தின் மேல்ஆலத்தூர்&நத்தம் கூட்ரோடிலிருந்து ஒலக்காசி செல்லும் சாலை, எர்த்தாங்கல் கிராமத்திலிருந்து அக்ராவரம் செல்லும் சாலை, அக்ராவரம் கிராமத்தில் இருந்து பூங்குளம் செல்லும் சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது இந்த பணிகளை ஆய்வு செய்தார்.

    மேல்ஆலத்தூர் ஊராட்சி பட்டு-நத்தமேடு இணைப்பு பாலம் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது தற்போது அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பாலத்தை ஆய்வு செய்தார்.

    மேல்ஆலத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுவரும் பண்ணைகுட்டை, மாட்டுக் கொட்டகை ஆய்வு செய்தார்.தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார், தொடர்ந்து குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது உதவி கலெக்டர் தனஞ்செயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்வேல், ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் மஞ்சுநாதன், உதவி திட்ட அலுவலர் வசுமதி, தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.யுவராஜ், எஸ்.சுமதி, ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் குகன், புவியரசன், மேல்ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதாராஜ்குமார், துணைத்தலைவர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    வேலூர், திருவண்ணாமலையில் குறைகளை குவிக்கும் வாக்காளர்களால் வேட்பாளர்கள் சிக்கி திணறிவருகின்றனர்.
    வேலூர்

    வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 2 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். 

    மீதமுள்ள 58 வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 354 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

    எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்களும் அதிகளவில் உள்ளனர். 

    அரசியல் கட்சிகளின் பலத்தை விட, சுயேச்சைகள் பலமும் இருக்கும் என்று களத்தில் இறங்கியுள்ளனர். வேட்பாளர்கள் வீடு, வீடாக ஏறி இறங்கி ஓட்டு சேகரிப்பில் தீவிரம் காட்டியுள்ளனர். ஓட்டு சேகரிக்கும்போது பெண் வேட்பாளர்கள் வாக்காளர்களின் வீட்டு சமையல் அறை வரை சென்று வாக்கு கேட்கின்றனர்.

    வாக்காளர்கள் அவர்களிடம் அடுக்கடுக்காக குறைகளை அடுக்குகின்றனர். வார்டுகளில் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், மின்விளக்கு, குடிநீர் வசதி உள்பட பல அடிப்படை வசதி குறைபாடுகள் குறித்து ஓட்டுக்கேட்டு வரும் வேட்பாளர்களிடம் பட்டியலிடுகின்றனர்.

    அவர்களும் சளைக்காமல், “இந்த கோரிக்கைகளை எல்லாம், தேர்தலில் வெற்றிபெற்று நிறைவேற்றுவேன்” என்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர்.

    ஒரு சில வேட்பாளர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று “ஓட்டு போட்டு என்னை வெற்றிபெற செய்தால், சொந்த செலவிலேயே செய்து கொடுக்கிறேன் என வாக்குறுதிகளை அளித்துவிட்டு அங்கிருந்து செல்கின்றனர்.

    திருவண்ணாமலையில் ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் அடுக்கடுக்காக குறைகளை தெரிவிப்பதால் வேட்பாளர்கள் பதில் சொல்ல தெரியாமல் திணறுகின்றனர்.
    புதிதாக உதயமான சோளிங்கர் நகராட்சியை கைப்பற்ற அனல் பறக்கும் பிரசாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    சோளிங்கர்

    தரம் உயர்த்தப்பட்ட சோளிங்கர் நகராட்சியின் முதல் தேர்தலில் தலைவர் பதவியை அலங்கரிக்கும் முதல் பெண் யார்? என்ற ஆர்வம் தேர்தல் களத்தில் சூடு பிடித்துள்ளது.

    108 வைண திருத்தலங்களில் முக்கியமான திருக்கடிமை எனப்படும் சோளிங்கர் நகரில் உள்ள யோக நரசிம்மர் கோயில் பிரசித்திப் பெற்றது. சோழர்கள், ஆற்காடு நவாப் மற்றும் திப்பு சுல்தானால் ஆளப்பட்ட பகுதியாக இருந்தது. 

    சோழர்கள் ஆட்சிக்காலத்தில் சோழசிம்மபுரம், சோழலிங்கபுரமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் சோளிங்கர் என்றழைக்கப்பட்ட நகரில் நடைபெற்ற இரண்டாம் ஆங்கில மைசூர் போரில் சர் ஐர் கூட்டுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையில் போர் நடைபெற்ற வரலாற்று சிறப்புவாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலாத்தலமாக இருந்து வரும் சோளிங்கர் பேரூராட்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

    சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சோளிங்கர் நகராட்சி 27 வார்டுகளுடன் சீரமைக்கப்பட்டு முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. 29,531 வாக்காளர்கள் கொண்ட சோளிங்கர் நகராட்சியில் முதல் தேர்தலில் மொத்தம் 116 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    சோளிங்கர் நகராட்சி தலைவர் பதவி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தி.மு.க., அ.திமுக, அமமுக என மும்முனை போட்டியுடன் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. வாக்கு சேகரிப்பில் திமுக முன்னணியில் இருந்தாலும் அதிமுக, அமமுக இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஆந்திர மாநில எல்லைக்கு மிக அருகில் உள்ள சோளிங்கர் நகரம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் முதல் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பும் தேவையும் பெரியளவில் இருக்கிறது.

    திருத்தணி& சோளிங்கர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ள நிலையில், புறவழிச்சாலைக்கு பதிலாக திருத்தணி&சோளிங்கர் சாலையின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. 

    நகரில் பொதுமக்களின் பொழுதுபோக்குமிடம் எதுவும் இல்லாததால் எஸ்பிஐ வங்கிக்கு அருகில் உள்ள குளத்தையும், நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள நாரகுளத்தையும் தூர்வாரி பூங்காவுடன் நடைபயிற்சி பாதை அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

    சோளிங்கரில் இருந்து அரக்கோணம், சித்தூர், நகரி, புத்தூர், பள்ளிப்பட்டு, திருத்தணி, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகரங்களுக்கான பேருந்து சேவை அதிகளவில் இருக்கிறது. 

    ஆனால், நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் பொதுமக்களும் இயக்கப்படும் பேருந்துகளுக்கும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதால் நகரை ஒட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். 

    அதேபோல், சோளிங்கர் அரசு மருத்துவமனையின் பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வளாகத்தை புதிதாக கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

    மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி புதிய நகராட்சி தலைவர் செயல்படுவாரா? என்பதையும் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

    தி.மு.க., அ.தி.மு.க. பா.ஜ.க., ப.ம.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு தேடி சென்று மக்களை சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிப்பதாக கூறவில்லை.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 56 வார்டுகளில் அ.தி.மு.க.வும், (4 வார்டுகளில் மனுக்கள் நிராகரிப்பு), 25 வார்டுகளில் பா.ம.க.வும் களமிறங்கியுள்ளன.

    இந்த நிலையில், 24-வது வார்டு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன், அந்தக் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் எஸ்.ஆர்.கே.அப்புவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து சால்வை அணிவித்து, பா.ம.க. போட்டியிடும் வார்டுகள் தவிர மற்ற வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததாக எஸ்.ஆர்.கே.அப்பு தெரிவித்தார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இந்த சந்திப்பு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக பா.ம.க. மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிப்பதாக கூறவில்லை. இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.கே.அப்பு அரசியல் செய்கிறார் என்றார். இதே கருத்தை பரசுராமனும் உறுதிப்படுத்தினார்.

    இந்த வேட்பாளர் பரசுராமனை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கடத்தி சென்று வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.

    அதற்கு மறுப்புத் தெரிவித்து ஏ.பி.நந்தகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன் பரசுராமன்தான் தங்களை நேரில் சந்தித்து தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த சர்ச்சையில் பரசுராமன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாநகரத்தை சேர்ந்த வேலூர் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கே.சரவணன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

    கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். பா.ம.க.வினர். எந்த வகையிலும் சரவணனுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார்: ராஜேந்திரபாலாஜியிடம் 134 கேள்விகள் கேட்ட போலீசார்

    வேலூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கோட்டை அகழியில் குதித்து பரிதாபமாக இறந்தார்.
    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார்.வேலூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் காகிதப்பட்டறை முனிசிபல் காலனியை சேர்ந்த ராஜிவ் என்பது தெரியவந்தது. வேலூர் தனியார் ஆஸ்பத்திரிகளில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த ராஜுவ் கோட்டை அகழியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பேட்டரிகள் மாற்றம் செய்யப்பட்டது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்கள் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. 

    இதையடுத்து வேட்புமனு பரிசீலனை முடிவடைந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. 2 வார்டுகளில் போட்டியின்றி கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

    வேலூர் மாநகராட்சியில் மீதமுள்ள 58 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக பணிகள் நடந்தது

    வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    அப்போது ஓட்டுப்போடும் ஒரு எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பேட்டரி பழுதாகி இருந்தது.

    பழுதான பேட்டரி உடனடியாக மாற்ற கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த எந்திரத்தில் பேட்டரி மாற்றப்பட்டது. இதேபோல் மற்ற எந்திரங்களில் பேட்டரி பழுதாகி உள்ளதா? எனவும் பரிசோதித்து வருகின்றனர்.

    இதையடுத்து வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடர்ந்து நடந்தது.
    வேலூர் பறக்கும் படை சோதனையில் மும்பை வாலிபரிடம் ரூ.82 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

    இன்று காலை சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ ஆபீஸ் சாலை சந்திப்பில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மும்பையை சேர்ந்த சுவரத் (வயது30). என்பவர் பைக்கில் வந்தார். அவர் வைத்திருந்த பையில் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

    அதில் ரூ.82,500 பணம் இருந்தது. தொழில் சம்பந்தமாக பணத்தை எடுத்து வந்ததாக கூறினார்.ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மாநகராட்சி கமிஷனர் அசோக்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காட்டினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி ஒவ்வொரு வார்டிலும் 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்த வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் ரவுடிகள் யாராவது போட்டியிடுகிறார்களா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. அப்படி யாராவது போட்டியிட்டால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள் வாரியாக திரும்பப்பெறப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு துப்பாக்கிகள், தலைமறைவு ரவுடிகள், நிலுவையில் உள்ள கைது வாரண்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் 2 போலீஸ் வீதம் நியமித்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பேரூராட்சிகளின் வார்டு பரப்பளவு குறைவு என்பதால் 5 வார்டுகளுக்கு ஒரு ரோந்து குழுவை நியமிக்க வேண்டும்.

    சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு பணியை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    குடியாத்தம் நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    குடியாத்தம்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    குடியாத்தம் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன.இந்த நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 820,பெண் வாக்காளர்கள் 44 ஆயிரத்து 605, மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேர் என மொத்தம் 85 ஆயிரத்து 432 வாக்காளர்கள் உள்ளனர்.

    36 வார்டுகளில் வாக்களிக்க 31மையங்களில் 91 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் குடியாத்தம் காந்திநகரில் உள்ள ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.

    குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கு ஒரு திருநங்கை உட்பட 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

    குடியாத்தம் நகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.திருநாவுக்கரசு தலைமையில் உதவி தேர்தல் அலுவலர்கள் சிசில்தாமஸ், வி.முருகானந்தம், கே.பாலச்சந்தர், கே.சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் நகர்மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பொது முகவர்கள் முன்னிலையில் சின்னங்கள் பொருத்தப்படும் பணிகள் தொடங்கியது.

    பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் வல்லுநர்கள் மனிஷ்குமார், சுனில்குமார், சஞ்சய், வாக்ஹி உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவினர் வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்த்தனர். அதன் பின்னரே வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
    ×