search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி கொலை: கூலிப்படையினர் 4 பேர் கைது
    X

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவி கொலை: கூலிப்படையினர் 4 பேர் கைது

    • ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
    • ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவருடைய மனைவி பிரவீணா (26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி இரவு எளம்பலூர் சாலையில் ராஜ்குமார், பிரவீணா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் பிரவீணாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பிரவீணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்ததை பிரவீணா கண்டித்ததால் கணவர் ராஜ்குமாரே கூலிப்படை மூலம் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ராஜ்குமார் தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்தார்.

    இந்த சூழ்நிலையில் அவர்கள் 2 பேரையும் கண்டித்த பிரவீணா தனது கணவர் ராஜ்குமாரை ஒரு நாள் செருப்பால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரிடம் பழகுவதை அந்த பெண் நிறுத்தி விட்டு வேறோருவருடன் பழகி வந்துள்ளார்.

    மேலும் ராஜ்குமார் தனது அண்ணனின் மனைவி ஆனந்தியுடன் (33) தகாத உறவு வைத்து இருப்பதாக பிரவீணா சந்தேகமடைந்தார். இதனால் ஆனந்தியையும் ஒரு நாள் பிரவீணா துடைப்பத்தால் அடித்துள்ளார்.

    இதனால் ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். உதவிக்கு தனது அண்ணி ஆனந்தியையும் சேர்த்துக் கொண்டாராம்.

    பின்னர் ஆனந்தி தனது அக்காள் மகனான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேசின் மகன் தீபக்கை (19) நாடியுள்ளார்.

    இவனுக்கு ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. அவனிடம் பிரவீணாவை கொலை செய்யும் திட்டத்தை கூறியுள்ளார். அதற்கு அவன் ரூ.2 லட்சம் கேட்டுள்ளான்.

    இதையடுத்து, கடந்த 19-ந்தேதி ராஜ்குமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக ஆனந்தியின் கணக்கிற்கு ஜி-பே மூலம் அனுப்பி, பின்னர் அந்த பணத்தை ஆனந்தி கணக்கிற்கு அனுப்பினார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட தீபக் தனது நண்பர்களான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் (19), சரண்குமார் (19), பப்லு (22) லக்கி என்ற லட்சன் (19) ஆகியோரை பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு இரவு பணி என்பதால் மனைவி பிரவீணாவை எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட அழைத்து சென்றார்.

    அப்போது ஏற்கனவே ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரவீணாவின் ஒரு பவுன் தங்க தாலியையும், 1½ பவுன் தங்க சங்கிலியையும், கொலுசுகளையும் கூலிப்படையினர் திருடியதோடு, ராஜ்குமாரையும் கத்தியால் லேசாக கீறி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து ஆனந்தி, தீபக், சந்தோஷ்பாபு, சரண்குமார், லட்சண், பப்லு ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×