search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியுடனான கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட நண்பரை கொலை செய்த தொழிலாளி
    X

    மனைவியுடனான கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட நண்பரை கொலை செய்த தொழிலாளி

    • அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 52). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் உடுமலை ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு பிளாஸ்டிக் டேப்பால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அருள்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர். தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வரும் அருள்ராஜின் நண்பரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (51) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அருள்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். இதனால் நான் அடிக்கடி அருள்ராஜின் வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது அவரது மனைவிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அருள்ராஜின் மனைவியுடன் ஜாலியாக இருந்து வந்தேன். இந்த கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் நாங்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் எதும் தெரியாதபடி அங்கு இருந்து தப்பிச்சென்றேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    போலீசார் தங்கவேலுவை கைது செய்தனர்.

    Next Story
    ×