என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காளையார்கோவில் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். மருந்து, மாத்திரை இருப்பு இருக்கிறதா? என கேட்டறிந்தார்.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதாரத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பாகனேரி, காளையார்மங்கலம், நாட்டரசன்கோட்டை, மறவமங்கலம், சாத்தரசன்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டார்.

    ஆய்வில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, மருந்துகள் வழங்கும் இடம், சிகிச்சை வழங்கும் இடம், பரிசோதனைக்கூடம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதோடு பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டு நாள்தோறும் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், தொடர் நோய்க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். இதை தொடர்ந்து 2 மற்றும் 3 மாதங்கள் பரிசோதனைக்கு வரவில்லையென்றால் அவர்கள் குறித்து விவரம் அறிய வேண்டும். துணை சுகாதார நிலைய செவிலியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளிலுள்ள தொடர் நோயாளிகளுக்கான மருந்துகள், மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது துணை சுகாதார இயக்குனர் யசோதாமணி, மாவட்ட குழந்தை நல அலுவலர் ரெஜினா, தொற்றுநோய் மருத்துவ அலுவலர் நாகநாதன், பொதுப்பணித்துறை பொறியாளர் வான்மதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் செந்தில், ராகவேந்தர், சிட்டாள், உமா, ஆருன், கண்காணிப்பு அலுவலர் முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.

    தேவகோட்டை:

    கொரோனா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு தளர்வுகளுடன் பிறப்பித்துள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் இ-பதிவு எடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

    இதன் காரணமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபாபதி, ராம்நகரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்தார்.

    இந்த சோதனையில் இ-பதிவு இல்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களுக்கு கொரோனா பரிசோதனை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார மருத்துவர் தலைமையில் நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    கொரோனா தொற்று நோயின் தன்மை அறியாமல் வெளியில் சுற்றும் நபர்களுக்கு அறிவுரை வழங்கியும், பரிசோதனையும் நடைபெற்றது. மேலும் அவர்களது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் நகரில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்கள் எண்ணிக்கை குறைந்தது.

    கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன.
    திருப்புவனம்:

    பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்தில் முன்னோடியாக விளங்கியவர்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி தெளிவுப்படுத்தி வருகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 2020-ம் ஆண்டு 6-ம் கட்ட அகழ்வாய்வில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.

    இந்த ஆண்டு 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன.

    பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

    இந்த நிலையில் கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகளும் கடந்த மாதம் 10-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன.

    இந்த நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் நேற்று முன்தினம் முதல் அமல்படுத்தப்பட்டன.

    அதன்காரணமாக கீழடியில் நேற்று மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கின. வேலைக்கு வந்த தொழிலாளர்கள் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி அகழாய்வு பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குழியில் மண் அள்ளும் பணி நேற்று நடந்தது.
    புதிய போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்.
    சிவகங்கை:

    திருச்சியில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த செந்தில்குமார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே சிவகங்கையில் பணிபுரிந்த ராஜராஜன் திருநெல்வேலி நகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து செந்தில்குமார் நேற்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றார்.

    புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற செந்தில்குமாரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன், வெற்றிசெல்வன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த உத்தரவு முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் குற்றசெயல்களை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரவுடிகள், கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை எந்த நேரத்திலும் 8608600100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அனைத்து புகார்கள் மீதும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எல். பட்டம் பெற்றவர்.பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை நகரம் உருவான கதையை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.2001-ம்ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்ற இவர் உத்தமபாளையம், செங்கல்பட்டு, நன்னிலம், அரக்கோணம் ஆகிய இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், பின்னர் அடையாறு சரக உதவி ஆணையாளராகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார்.

    பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பூக்கடை உதவி ஆணையாளராகவும் தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் மதுரை நகர் காவல்துணை ஆணையாளராகவும் திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாகவும் பணிபுரிந்துள்ளார். தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த பற்றுள்ள இவர் எழுத்தாளராகவும் சாதித்து உள்ளார். இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மனைவி சுதாமதி கண் மருத்துவரான இவர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு செம்மொழிபாரதி என்ற மகளும், திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
    சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் நகரத்தார் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி சங்க நிர்வாகி சம்பத் தலைமையில் நடைபெற்றது. அலவாக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் முத்துவேல் வரவேற்றார். முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டாக்டர்கள் கார்த்திக், ஜீவபாரதி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

    பின்னர் நகரத்தார் சார்பில் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சிவகங்கை தாசில்தார் தர்மலிங்கம் பெற்றுக்கொண்டார். இதில் நகரத்தார்கள் சார்பில் சிதம்பரம், கண்ணப்பன், சுப்பையா, ஊராட்சி மன்றத்தலைவர் பிரகாசம், கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, சவுமியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    மானாமதுரை அருகே தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 20 ஏக்கரில் கால்நடை தீவன பண்ணை அமைக்கப்படும் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள சன்னதி புதுக்குளம் ஊராட்சி, கே.கே.பள்ளம் கிராமத்தில் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவனப்பண்ணை அமைப்பது தொடர்பாக நேரில் சென்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது:-

    கால்நடைப் பராமரிப்புத்துறை மூலம் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கால்நடை தீவனபண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மானாமதுரை வட்டத்தில் கால்நடை வளர்ப்புகள் நிறைந்த இப்பகுதியில் கால்நடை வளர்ப்பவர்கள் பயன்பெறும் கால்நடை தீவனப்பண்ணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் கே.கே.பள்ளம் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் தீவன பண்ணை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ரூ.3.44 லட்சம் மதிப்பீட்டில் 20 ஏக்கர் நிலப்பரப்பளவில் கால்நடை தீவன மரங்களான சுபாபுல், வேம்பு, சீமை அகத்தி, கல்யாண முருங்கை மற்றும் மானாவாரி பயிர்களான கொழுக்கட்டை புல், புரதச்சத்து மிகுந்த முயில், மசால் போன்ற பசுந்தீவன பயிர்களை கொண்ட கால்நடை தீவனப்பண்ணை அமைக்கபட உள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ஓராண்டுக்கு தீவன வகைகள் வளர்த்து பராமரிக்கப்படும். இதன் மூலம் நிரந்தரமாக அப்பகுதியில் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் நாள்தோறும் கால்நடைகள் பெற்று பயன்பெறும் வகையில் அமையும். அந்த வகையில் முதல் ஓராண்டிற்கு கால்நடைத்துறையின் மூலம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு கால்நடைகள் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், சன்னதி புதுக்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் வாசுகிமாரி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை, திருப்புவனத்தில் வேளாண்மை திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
    திருப்புவனம்:

    மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் சந்திரன், முத்துப்பாண்டி, சகாயம், கங்கைசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சட்ட நகல் எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் திருப்புவனம் வட்டாரத்தில் பல்வேறு ஊர்களில் நடைபெற்றது. பூவந்தியில் கரும்பு விவசாய சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையிலும், ஏனாதியில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமையிலும், செங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்தையா தலைமையிலும், மாரநாட்டில் கணேசன் தலைமையிலும், பிச்சைப்பிள்ளையேந்தலில் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையிலும், இலந்தைகுளத்தில் சின்னக்கருப்பன் தலைமையிலும், மடப்புரத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவி தலைமையிலும் சட்ட நகல் எரிப்பு போராட்டங்கள் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.1 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 460 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவு பரவுவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் முக கவசம் அணியாமல் செல்லும் நபர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்த வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து கண்காணிப்புப்பணிகள் மேற்கொண்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த 17.3.2021 முதல் 4.6.2021 வரை விதிமுறை கடைபிடிக்காமல் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டமைக்காக சுகாதாரத்துறையின் மூலம் ரூ.1,92,500-ம், காவல்துறையின் மூலம் ரூ.68,93,000-ம், வருவாய்த்துறையின் மூலம் ரூ.19,48,560-ம், ஊராட்சித்துறையின் மூலம் ரூ.2,40,600-ம், பேரூராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.3,06,100-ம், நகராட்சிகள் நிர்வாகம் மூலம் ரூ.7,38,700-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 3லட்சத்து 19ஆயிரத்து 460 அபராத தொகையாக பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையின் மூலம் வாகனத்தணிக்கையின் போது விதிமுறைகள் மீறி பயணம் மேற்கொண்டவர்களை கண்டறிந்து 1,754 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    எனவே, விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் கட்டணத்தொகை அதிக அளவு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    காவலாளியை கட்டிப்போட்டு கடையை உடைத்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.1¼ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    காளையார்கோவில்:

    காளையார்கோவில் அருகே ஆலங்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை அள்ளிச் சென்றனர்.

    இது குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் காளையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித், ராமச்சந்திரன், அன்சாரி உசேன், ராஜ்கமல் ஆகியோர் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஒருவரை அடையாளம் கண்டனர். அதனைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 26), திருப்புவனம் அருகே மாங்குடியைச் சேர்ந்த பிரேம்குமார் (26), கோமாளிப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி (32), அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (37) திருப்புவனம் சந்தை கடையை சேர்ந்த ராஜ்குமார் (32) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    கொள்ளையடித்த மதுபாட்டில்களை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கணேசனின் மனைவியின் சொந்த ஊரான கருங்குளம் கிராமத்தில் ஒரு கண்மாயில் புதருக்குள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

    தனிப்படை போலீசார் அந்த மதுபாட்டில்களையும், 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்ரகு. இவர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.
    திருப்பத்தூர்:

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் போலீசாரும் தங்களால் இயன்ற உதவிகளை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. பொன்ரகு. இவர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவு, மளிகை பொருட்கள், நிதியுதவி உள்ளிட்டவைகளை செய்து வருகிறார்.

    ஊரடங்கு காரணமாக தெரு விலங்களும் உணவின்றி பரிதவித்து வந்தன. இதையடுத்து டி.எஸ்.பி. ரகு அவைகளுக்கும் தன் முயற்சியில் உணவளித்து வருகிறார்.

    அதன்படி திருப்பத்தூர் சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோவில் யானை, வன பகுதிகளில் சுற்ற திரியும் குரங்ககள், தெரு நாய்களுக்கு பழங்கள், உணவு, பிஸ்கட் போன்றவைகளை வழங்கி வருகிறார்.

    போலீஸ் டி.எஸ்.பி. இந்த செயலை அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.




    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. வெளிமாவட்டத்தில் இருந்து இ-பதிவு இல்லாமல் வந்த வாகனங்களையும், அனுமதியின்றி ஊர் சுற்றிய வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சுகாதார பணியாளர்களும், மருத்துவத்துறையினரும் விரைந்து செயல்பட்டதால் மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 2,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 203 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

    எனவே பொதுமக்கள் ஊரடங்கு காலம் முடியும் வரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அவசிய தேவைக்கு வெளியே வருபவர்கள் கூட முககவசம் அணிந்து கொண்டு வெளியே வர வேண்டும். முககவசம் உயிர் கவசம் என்பதை உணர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
    ஒக்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊரிலிருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    கல்லல்:

    காளையார்கோவில் ஒன்றியம் காளையார்மங்கலம் ஊராட்சியில் சுகாதாரத்துறையினரும், காளையார்மங்கலம் நகரத்தார்களும் இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை நேற்று முன்தினம் நடத்தினர். இதில் நாட்டரசன்கோட்டை, பாகனேரி, பனங்குடி, ஒக்கூர் உள்ளிட்ட பல்வேறு ஊரிலிருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி 315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சிட்டாள், ஊராட்சி மன்ற தலைவர் மாலா பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் நடராஜன் மற்றும் அனைத்து நகரத்தார்களும் கலந்து கொண்டனர்.
    ×