என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் குணமடைந்தனர். மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 888 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 375 ஆக உள்ளது.
    புதுக்கோட்டை அருகே வேன் மோதியதில் பக்தர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது55). இவர் சம்பவத்தன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார். திருக்கோகர்ணம் கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வேன், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூரில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதால் பேரூராட்சி ஊழியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கீரனூர்:

    கீரனூர் மேல காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அழகர் (வயது 43). இவர், கீரனூர் பேரூராட்சியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அழகர் காற்றுக்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்து விட்டு வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், சாவியை எடுத்து பீரோவில் இருந்த 4 பவுன் தங்கம் மோதிரம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்று உள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனையும் எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து கீரனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    விராலிமலையில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் புதுபட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் வேளாங்கண்ணி (38). இவரது மனைவிக்கு சத்துணவு துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.6 லட்சத்தை, கடந்த 2019ம் ஆண்டு விராலிமலை தெற்குதெருவை சேர்ந்த ஜேசுராஜ் (36) மற்றும் இவரது மனைவி அனுசியா ஆகிய இருவரும் வாங்கி னார்களாம்.

    ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லையாம். இது குறித்து ஜேசுராஜ் மற்றும் அவரது மனைவி அனுசியாவிடம் பல முறை சென்று கேட்ட போது, அவர்கள் வேளாங் கண்ணியை மிரட்டினார்களாம்.

    இதனால் மனம் விரக்தியடைந்த வேளாங்கண்ணி விராலிமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஜேசுராஜ் மற்றும் அனுசியா ஆகிய இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விராலிமலை போலீசார் ஜேசுராஜை கைது செய்தனர்.

    இதேபோல் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக போலீஸ் நிலையத்தில் 3 பெண்கள் புகார் மனு கொடுத்தனர்.

    ஜேசுராஜின் மனைவி அனுசியா விராலிமலை ஒன்றியத்தில் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா பரவலை தடுக்க முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக கறம்பக்குடி கடைவீதி பகுதியில் பேரூராட்சியினர், வருவாய்துறையினர், காவல் துறையினர் இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடைவீதியில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத 20 நபர்களுக்கு தலா 200 வீதம் 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள நகை கடை, மளிகைக்கடை மற்றும் இதரகடைகள் என அனைத்து கடைகளிலும் உள்ள வியாபாரிகளிடமும், மக்களிடமும் முக கவசத்தை வழங்கி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தினர்.
    சுடுகாட்டில் வைக்கப்பட்ட நன்கொடை உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மணிப்பள்ளம் ரோட்டின் அருகே சுடுகாடு உள்ளது. இதில் ரோட்டரி நிர்வாகத்தினரால் நன்கொடை வசூல் செய்யும் உண்டியல் கண்ணாடி பெட்டியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது தொடா்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலில் ரூ.15 ஆயிரம் வரை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் கடைவீதியில் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலையில் சின்னக்கடைவீதி, பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவலை முழுமையாக தடுக்க கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் முககவசம் அணியாத வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகளுக்கு சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முககவசம், சமூக இடைவெளிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதில் இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழி அரசு, இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விராலிமலை பஸ் நிலையம், சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி காந்தி சிலை முன்பு காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவை இணைந்து முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு தலா ரூ.200 மற்றும் ரூ.500 அபராதம் விதித்தனர். அப்போது கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.
    கீரனூர் வணிகர் சங்கமும், குன்றாண்டார்கோவில் வட்டார மருத்துவத் துறையும் இணைந்து கீரனூரில் இன்று (வியாழக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துகின்றன.
    கீரனூர்:

    கீரனூர் வணிகர் சங்கமும், குன்றாண்டார்கோவில் வட்டார மருத்துவத் துறையும் இணைந்து கீரனூரில் இன்று (வியாழக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை நடத்துகின்றன. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் ஆதார் அட்டையுடன் முககவசம் அணிந்து வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    கறம்பக்குடி அருகே இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    கறம்பக்குடி அருகே உள்ள கலியரான் விடுதி தொண்டைமான் புஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மோனிஷா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. மோனிஷாகர்ப்பமாக இருந்தார். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி மோனிஷா இறந்து விட்டார். அவரது உடலை உறவினர்கள் அடக்கம் செய்து விட்டனர்.

    இதனிடையே மோனிஷா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இறப்பிற்கான காரணத்தை அறிய வேண்டும் என்று கலியரான் விடுதி கிராம நிர்வாக அதிகாரி சதிஸ் குமார் கறம்பக்குடிபோலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து கேட்டரிங் மாணவர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    மணப்பாறை பிள்ளையார் பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 20). இவர் கேட்டரிங் படித்து வந்தார். இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள பொத்தப்பட்டியில் நடைபெற்றுவரும் கருப்பர்கோவில் திருவிழாவிற்கு வந்தார்.

    இந்நிலையில் அதிகாலை அதேபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நடந்து சென்ற போது அங்கிருந்த ஒரு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரம் போராடி மாதவனின் உடலை மீட்டனர்.

    பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    விராலிமலை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நல்லபொண்ணம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் அழகுராஜா (வயது 31). இவர் கடந்த 7-ந் தேதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் விராலிமலை அருகே மணப்பாறை - விராலிமலை சாலையில் அத்திப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அழகுராஜா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×