என் மலர்
கிருஷ்ணகிரி
ஓசூர்:
கொரோனா தொற்று கட்டுப்படுத்தலையொட்டி, தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி, அனைத்து சிறிய, பெரியகடைகள் வர்த்தக நிறுவனங்கள், துணிக்கடைகள், டீ கடைகள், பூ மார்க்கெட்டுகள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் பஸ் நிலையமும் வெறிச்சோடி இருந்தது. மக்கள் நடமாட்டமும் இல்லாததால், சாலைகள் அமைதியாக காணப்பட்டது.
இந்த நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, இன்று காலை முதலே அதிகரித்தவாறு இருந்தது.
ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில், போலீசார் வாகனங்களில் வருபவர்களை தீவிரமாக சோதனையிட்டும், பயணிகளிடம் விசாரித்தும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, மேற் கொண்டு வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.
மேலும், தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் ஏ.எஸ்.டி.சி. பள்ளம் பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி என்பவரது மகன் வினோத்குமார் (வயது19), கட்டிட தொழிலாளி.
இந்த நிலையில் நேற்று சீனிவாஸ் (18) மற்றும் மதன்குமார்(18) ஆகிய சக நண்பர்களுடன், ஓசூர் ஜீவா நகரில், முருகேஷ் என்பவரது கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில், அவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் வினோத்குமாரையும், தடுக்கச் சென்ற சீனிவாசையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் வினோத்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சீனிவாசுக்கு தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதன்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதுபற்றி ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வினோத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவந்தனர்.
இதில் வினோத்குமாரை ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த குல்லா என்கிற சந்தோஷ் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுல்தான் ஆகியோர் குத்தி கொன்றது தெரிய வந்தது.
அதாவது குல்லாவின் தங்கையை பற்றி வினோத்குமார் அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் அவர்கள் 2 பேரும், வினோத்குமாரை கத்தியால் குத்திக்கொன்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக ஒசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு வினோத்குமாரை கொலை செய்த குல்லா மற்றும் சுல்தான் ஆகியோரை கைது செய்தனர்.
தங்கையை தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை அண்ணன் கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






