என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எனினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ராமாபுரம் பூத்தபேடு பகுதியில் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த வினோத் (38) என்பதும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இருந்து 2கிலோ கஞ்சா , 4 செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவருடன் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர்கள் யார்?யார்? கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வது எப்படி? எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின்.
    • தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    போரூர்:

    திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் மரிய அல்போன்ஸ். இவரது மகன் அந்தோணி கவின் (வயது29) கூலித் தொழிலாளி.

    நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வானகரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் முகம் மற்றும் தலையில் பலத்த காயமடைந்த அந்தோணி கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் துளசிமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்தோணி கவினின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உரிய எச்சரிக்கை இன்றி சாலையோரம் லாரியை நிறுத்தி சென்றதன் காரணமாக விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவரான தென்காசியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.
    • கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெற்ற 65வது காமன்வெல்த் பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் பற்றியும் நடவடிக்கைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் சபாநாயகர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் பட்ஜெட் காகிதம் இல்லாத சட்டசபை நிகழ்வாக நடத்தப்பட்டது.

    சட்டமன்றம் ஆரம்பித்த 1921 முதல் நூறாண்டு சட்டமன்ற நிகழ்வுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நூறாண்டு கால சட்டப்பேரவை நிகழ்வுகளை விரைவில் இணையதளத்தில் பார்க்க முடியும் என தெரிவித்தார்.

    தற்போது சட்டப்பேரவை நிகழ்வின்போது கேள்வி பதில் நேரம் மட்டுமே நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இனி சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.

    கனடாவில் சபாநாயகர் மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட நம்முடைய தேசிய கொடி, மத்திய அரசு அனுமதியோடு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

    1962 இந்தியா-சீன போரின்போது இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மகாபலிபுரத்தில் சீனா அதிபர் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் வரை 57 ஆண்டுகள் சீன எல்லையில் பதட்டம் நிலவி வந்தது. சந்திப்பிற்கு பிறகு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு தற்போது இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட பதட்டத்தில் 20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அந்த கல்லறையின் ஈரம் காய்வதற்குள் சீனாவில் இருந்து தேசிய கொடிகளை இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது.

    மேலும் மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு, நம்முடைய தேசிய கொடி மேட் இன் சைனாவாக இருந்தது. இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இது குறித்து அனைத்து சபாநாயகர்களும், பாராளுமன்ற சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு அவர் புன்முறுவலோடு சென்றுவிட்டார். மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு தேசியக்கொடியை மேட் இன் சைனாவுடன் நமது தேசியக்கொடியை ஏந்திக்கொண்டு செல்லும்பொழுது எங்களுக்கு வேதனையாக இருந்தது.

    மேலும் இந்திய பெருங்கடல் அமைதியாக தான் இருந்தது. ஆனால் சீன உளவு கப்பல் வந்தது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது.
    • விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னையை அடுத்த குரோம்பேட்டை, ராதா நகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். சிவில்‌ என்ஜினீயரான இவர், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கண்காட்சி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 16-வது ஆண்டாக 20 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    சிட்லபாக்கம் ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மகாலில் நடக்கும் இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். இதில் பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சியில், ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகர், சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகர், சந்தனத்திலான விநாயகர் சிலை, கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், திருக்கல்யாண விநாயகர், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர், 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தாமரையில் மலரும் மூவர்ண நிறத்திலான விநாயகர் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறுவிதமான விநாயகர் சிலைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் விநாயகரின் அபூர்வ புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்காட்சியை வருகிற 12-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

    • ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் புதிதாக கல்குவாரி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், மாவட்ட கலெக்டரிடமும் புதிய கல்குவாரி அமைப்பதை எதிர்த்து பலமுறை மனு அளித்தும் குவாரி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

    இதை தொடர்ந்து பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் வெங்கச்சேரியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாசில் பிரேம் ஆனந்த், மாகரல் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்டோர் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதன் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுகளுக்கு தயாராகும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 1-ந் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
    • வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம், நெமிலி கிராமத்தை சார்ந்த நரிக்குறவர் இன 38 குடும்பங்களுக்கு ரூ.54 லட்சத்து 29 ஆயிரத்து 710 மதிப்பில் இலவச பட்டாக்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளையும், வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் கலந்து கொண்டனர்.

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை.
    • கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை.

    ஆலந்தூர்:

    கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து, சென்னை விமான நிலையத்தில் பயணிகள், ஊழியர்கள், விமான நிலையத்துக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகள் எடுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு, நாடு முழுவதும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முககவசம் அணிபவர்கள், சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிப்பது பெருமளவு குறைந்து வருகின்றன.

    மேலும் சென்னை விமான நிலைய நிர்வாகம், பயணிகளை எச்சரிக்கும் விதமாக, சென்னை விமான நிலையம் உள்நாட்டு முனையம் மற்றும் வெளிநாட்டு முனையங்கள் உள்ள பகுதிகளில் ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளனர்.

    அதோடு, சென்னை விமானநிலைய டுவிட்டா் பக்கத்திலும் அறிக்கை வெளியிட்டுள்ளனா். அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்க வில்லை. இதனால் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. எனவே விமான பயணிகள், விமான நிலையத்துக்கு வருபவர்கள், விமானநிலைய ஊழியா்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

    முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. அதை போல் விமான பயணிகள் அனைவரும், பயண நேரம் முழுமையும் கண்டிப்பாக முக கவசத்தை முறையாக வாய், மூக்கு மூடியிருக்கும் விதத்தில் அணிந்திருக்க வேண்டும்.

    சில பயணிகள் முகக்கவசம் தொடா்ந்து அணிவதால், சுவாச பிரச்சினை போன்றவைகள் ஏற்படலாம். அப்படிப்பட்ட பயணிகள் முறையான அனுமதிபெற்று முகக்கவசம் விலக்கு பெற்றுக் கொள்ளலாம். மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

    முககவசம் அணியாதவர்கள் மீது கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறை சட்டத்தின்படி, அபராதம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் தண்டனை சட்டத்தின்படி, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். எனவே பயணிகள் அனைவரும் முககவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்றவைகளை, விமான நிலையத்தில் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு
    • முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    விருகம்பாக்கம் சின்மயா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி பாபு (வயது 62). கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    இவர் வழக்கம் போல நேற்று மதியம் கடையை மூடிவிட்டு வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் படுக்கையறைக்கு சென்று திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்ததும் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று முரளி பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் முரளி பாபுவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் சஞ்சய். தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    நண்பர்கள் இருவரும் நேற்று இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கத்தில் உள்ள நண்பர் ஒருவரை பார்க்க வளசரவாக்கம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அன்பு நகர் பகுதியில் வந்தபோது பெட்ரோல் இல்லாததால் மோட்டார் சைக்கிள் திடீரென நின்றுவிட்டது.

    இதையடுத்து அவர்கள் தங்களது மோட்டார்சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றனர்.

    அப்போது அவழியே மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கும்பல் அத்வைத்திடம் பெட்ரோல் பங்க் வரை மோட்டார் சைக்கிள் "டோப்" செய்து உதவி செய்வதாக கூறினர். இதை உண்மை என்று நம்பிய அத்வைத்தும், சஞ்சய்யும் மோட்டார்சைக்கிளில் அமர்ந்தபடி அந்த கும்பலுடன் சென்றனர்.

    சிறிது தூரம் சென்றதும் 7 பேர் கும்பல் திடீரென 2 பேரையும் கத்திமுனையில் மிரட்டினர்.

    பின்னர் இருவரையும் பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று கத்திமுனையில் அத்வைத் அணிந்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வாட்ச், ரூ.3 ஆயிரம் ரொக்கம், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள "இயர் பேடு" ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    உதவி செய்வது போல நடித்து நூதனமான முறையில் கைவரிசை காட்டி தப்பிய மர்ம கும்பலை பிடிக்க கோயம்பேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது.
    • பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் சாமி தரிசனத்துக்கு கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர், உற்சவர், தாயார், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட சன்னதிகளில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி கோவில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் அலுவலர்களுடன் சேர்ந்து தொண்டு நிறுவன ஊழியர்களும் இதில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ. 60 லட்சத்து 39 ஆயிரத்து 160 ரூபாய் ரொக்கமும், 229 கிராம் தங்க நகைகளும்,614 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக கிடைத்து இருந்தது.

    பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்ட பணம் முழுவதும் எண்ணப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்படுகிறது.

    • கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை.
    • சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் அருகே கடலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரிய நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 52). தி.மு.க.வை சேர்ந்த இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று அமாவாசை என்பதால் கணபதி தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் ராமேசுவரத்துக்கு சென்றார். தரிசனம் முடித்துவிட்டு இன்று காலையில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 300 பவுன் தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கப் பணம், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    கணபதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதை அடுத்து பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளனர்.

    பின்னர் உள்ளே புகுந்து பீரோ மற்றும் லாக்கரை உடைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். கணபதியிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

    கணபதியின் வீட்டில் சி.சி.டி.வி. கேமரா ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும் சம்பவம் நடந்த பகுதி கிராமம் என்பதால் வீடுகளில் கண்காணிப்பு கேமரா இல்லை. எனவே கொள்ளையர்களை பிடிப்பதற்காக அந்த கிராம மக்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×