என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆசர்கானா பகுதியில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி
- சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை அமைந்தகரை ஆசாத் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 31). இவர், நேற்று பல்லாவரம் வாரச்சந்தைக்கு சென்றுவிட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் ஆசர்கானா பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது, அவருக்கு பின்னால் தாம்பரத்தில் இருந்து ஆவடி நோக்கி வந்த மாநகர பஸ் இவரது மொபட் மீது மோதியது.
இதில் ராஜேஸ்வரி, மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மாநகர பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ராஜேஸ்வரி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபாமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான ராஜேஸ்வரி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான அயப்பாக்கத்தை சேர்ந்த பழனி (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகர பஸ் மோதியதில் சாலையோரம் இருந்த வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்து வாலிபர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.






