என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.
    • செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள கூழாங்கள்சேரி பகுதி, பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.

    இதில் சுமார் 25வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோமங்களம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படப்பை, சோமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.

    • இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
    • உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 51). கடம்பாடியை சேர்ந்த வர்பலராமன்(45). இவர்கள் இருவரும் மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தனர்.

    அவர்களுக்கு "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தின் மின் வழித்தட பகுதிகளை கண்காணிக்கும் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மின் ஊழியர்கள் ஆனந்தன், பலராமன் ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலராமனும் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் நாளை முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும்.
    • லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். சென்னையில் இருந்து லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்துக்கு செல்லும் இந்த விமானம் பாரிஸ், ரோம், வாஷிங்டன், நியூயார்க், சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது.

    எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

    பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் நாளை (திங்கட்கிழமை) முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 5.31 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானத்தின் பயண நேரம் சுமார் 13 மணி நேரம் ஆகும்.

    இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் ஏற்படுத்தி உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து லண்டனுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுவதால் சென்னைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரிக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம்
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்டரங்கில், நமது பாரத நாட்டின் 75-வது சுதந்திரதின அமுத பெருவிழாவினை முன்னிட்டு, "ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @ 2047" நிகழ்ச்சியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

    இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறோம்.. இப்பெரு விழாவினை முன்னிட்டு ஜூலை 25 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் @ 2047 என்ற நிகழ்ச்சி எல்லா பகுதியிலும் கொண்டாடி வருகிறது. தீனதயாள் உபாத்தியாய கிராம ஜோதி யோஜான (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana Scheme) திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்க பயன்பெறும் திட்டமாகும்.

    மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் தடையில்லா மின்சாரம் வழங்கும் இத்திட்டத்தின் கீழ் கிராமத்தில் மின் விநியோக பயன்பாட்டிற்காக, நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.34.83 கோடி மதிப்பில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருமுக்கூடல் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 26,230 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும், இதே திட்டத்தின் மூலம் மாகரல், பெருநகர், பரந்தூர் மற்றும் நெல்வாய் ஆகிய 4 துணை மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 36,333 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Power Development Scheme) கீழ் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் பகுதிகளில் 2 புதிய 33 KV துணை மின் நிலையங்கள் ரூ.30.46 கோடி மதிப்பில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் 43,081 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் மா.சுதாகர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, கூடுதல் தலைமை பொறியாளர் கி.சண்முகம், மாவட்ட நோடல் அலுவலர் அகஸ்டின் ரேமண்ட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சுங்குவார்சத்திரம் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.
    • ஸ்ரீதர் என்வரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த திருமங்கலம் ஊராட்சியில் கள்ளச் சந்தையில் மர்மநபர்கள் மது விற்பதாக சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஏரிக்கரை அருகே ஒரு நபர் திருட்டுத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் திருமங்கலம் ஊராட்சி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 42) என்பதும் அவரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
    • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 42). கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (27). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பாலசுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    இவர்கள் வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வளைவில் திரும்பிய போது ஒரகடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாலமங்கலம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் (25) சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிள் பாலசுப்பிரமணியன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் அஸ்வின் குமாரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

    விக்னேஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி.
    • திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன்.

    தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலையொட்டி நகர கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர கழக நிர்வாகிகளை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சண்முகம், துணை செயலாளர்களாக சீனிவாசன், வினோத்குமார், தேவி கோகுலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கிட்டு, மாவட்ட பிரதிநிதிகளாக மூர்த்தி, சுந்தர், இரா.கருணாநிதி, அரங்க கிரிச்சந்திரன், இரா.அசோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கண்டோன்மெண்ட் நகர தி.மு.க. அவைத் தலைவராக ஆனந்தராஜ், செயலாளராக பாபு, துணை செயலாளர்களாக மோகன சுந்தரம், கவிச்சக்கரவர்த்தி,. தமிழ்ச் செல்வி, பொருளாளராக கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகளாக முத்து, நாராயணன், மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    குன்றத்தூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சங்கர், செயலாளராக சத்திய மூர்த்தி, துணை செயலாளர்களாக என்.கருணாநிதி, கந்தசாமி, அபிபுன்னிசா, பொருளாளராக அருள் மொழி, மாவட்ட பிரதிநிதிகளாக குணசேகர், சிதம்பரம், மணிமாறன், திருநாவுக்கரசு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

    மாங்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக மகேந்திரன் செயலாளராக ஜபருல்லா, துணை செயலாளர்களாக சங்கர், வில்லியம்ஸ், சுசிலாதேவி, பொருளாளராக வீரராகவன், மாவட்ட பிரதிநிதிகளாக ராமு, வெங்கடேசன், பாஸ்கரன், அப்துல்ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க. அவைத் தலைவராக அச்சுதாஸ், செயலாளராக காார்த்திக் தண்டபாணி, துணை செயலாளர்களாக ராமமூர்த்தி, அரி, ஸ்ரீமதி, பொருளாளராக அப்துல்காதர், மாவட்ட பிரதிநிதிகளாக குமரவேல், டில்லி, சதீஷ்குமார், ரவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் பூந்தமல்லி நகர தி.மு.க. அவைத் தலைவராக தாஜிதீன், செயலாளராக திருமலை, துணை செயலாளர்களாக துரைபாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி, பொருளாளராக அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருவேற்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக பெஞ்சமின், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர்களாக குமார சாமி, நடராஜன், பானு, பொருளாளராக சரவணன், மாவட்ட பிரதிநிதிகளாக செல்லதுரை, ஜோதிநாதன், பாண்டுரங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன், செயலாளராக தி.வை.ரவி, துணை செயலாளர்களாக கமலக் கண்ணன், நாகராஜ், பேபி, பொருளாளராக ஆர்.ரவி, மாவட்ட பிரதிநிதிகளாக பாபு, குணசேகரன் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
    • கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மூடி வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே மர்ம வாலிபர் ஒருவர் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து கூச்சலிட்டனர்.

    சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வீடு புகுந்து திருடிய வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை சுங்குவார்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்ட வாலிபர் ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (23) என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கைதான தனுசை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைததனர்.

    • புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.
    • வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், ரூ.250 கோடியில், 6 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த வளாகத்தில் ஒரேநேரத்தில் 2,200 கார்கள் வரை நிறுத்தமுடியும். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுவதும் முடிந்து வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடைபெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வாகனங்களை நிறுத்த அரை மணி நேரத்திற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கலாம் என திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் திறப்பு தாமதமாகும் என்று தெரிகிறது. அடுக்கு மாடி வாகன நிறுத்தத்துக்கு தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒப்பந்தப் பணிகளை எடுத்த நிறுவனங்களில் 123 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை, புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.

    இதனால் இதில், பணியாற்றும் ஊழியர்கள், புதிய நிறுவனத்தில் தங்களை பணியமர்த்த உத்தரவிடக் கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அடுத்த விசாரணை வரும் வரை, தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

    எனவே வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பது தாமதமாகி உள்ளது என்றார்.

    • மாணவன் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
    • தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நேதாஜி (வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று இரவு மாணவன் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    இதில் தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான். வீட்டில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாணவன் நேதாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் மேற்கூரை விழுந்து மாணவன் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் பகுதியில் இன்று அதிகாலை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தனர். இதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த அஸ்வின், பரணி என்பதும் இருவரும் அந்த பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (வயது 28), கலந்தர் ஷாஜகான் (30), சுல்தான் (30) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 3 பேரும் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த பாக்கெட்டுகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×