என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில் 2 மின் ஊழியர்கள் பலி
- இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
- உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 51). கடம்பாடியை சேர்ந்த வர்பலராமன்(45). இவர்கள் இருவரும் மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தனர்.
அவர்களுக்கு "செஸ் ஒலிம்பியாட்" போட்டி நடைபெறும் போர் பாய்ண்ட்ஸ் அரங்கத்தின் மின் வழித்தட பகுதிகளை கண்காணிக்கும் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடம்பாடியில் இருந்து பூஞ்சேரியில் உள்ள போர் பாய்ண்ட்ஸ் அரங்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மின் ஊழியர்கள் ஆனந்தன், பலராமன் ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பரிதாபமாக பலியானார். உயிருக்கு போராடிய பலராமனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலராமனும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






