என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்தவர் அஜித் (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் (23). இவர்கள் 2 பேரும் மேலும் 4 நண்பர்களுடன் கிருஷ்ணகிரியில் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் கோவை மாட்டத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டனர்.
அவர்கள் இன்று காலை 7.30 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள அக்கரைதத்தப்பள்ளி என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி ஒரு பிக்கப் வேன் வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அருண், அஜித் வந்த மோட்டார் சைக்கிள் மீது வேன் பயங்கரமாக மோதியது.
இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி விசப்பட்டு சம்பவ இடத்திலேயே நண்பர்கள் கண் முன்னால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதை பார்த்த நண்பர்கள் கதறி அழுதனர். மேலும் இது பற்றி தெரிய வந்நததும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிக்கப்வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வரதப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மனைவி கோகிலா (38). இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் கோகிலா தனது கணவரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் பண்ணாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் வீடு திரும்பிய கோகிலா குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் தான் கொண்டு வந்த சாணி பவுடரை குடித்தார். பின்னர் இதுகுறித்து தனது கணவருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் ஜெயவேல் பதறி அடித்துக்கொண்டு குளத்துப்பிரிவு பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்று அங்கு மயக்க நிலையில் இருந்த கோகிலாவை மீட்டு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது கோகிலாவின் உடல்நிலை மோசமடைந்ததால் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும்வழியிலேயே கோகிலா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அடுத்த பள்ளபாளையம், குண்டுமல்லநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குப்ப நாயக்கர் (57). இவரது மனைவி பொன்னம்மாள். இவர்களது மகன் தங்கராசு.
இந்நிலையில் தங்கராசுக்கு திருமணமாகி தாய், தந்தை வசிக்கும் பக்கத்து வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். தங்கராசு மனைவிக்கு கருசிதைவு ஏற்பட்டு தற்போது அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தங்க ராசுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் பெற்றோர்கள் இருவரும் மனவேதனையுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் தங்கராசு தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த சின்னகுப்பநாயக்கர், பொன்னம்மாள் ஆகியோர் விஷம் குடித்து மயங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






