என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் அரசு அலுவலர் பயிற்சி பள்ளியில் தோட்ட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (36). இவர்களுக்கு கருநாதன் என்ற ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று இந்துமதி தனது மகனுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை இந்துமதியின் மீது இடிந்து விழுந்தது.
இதில் அவருக்கு இடதுபக்க கழுத்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக இந்துமதியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நசியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஈரோடு ஆசிரியர் காலனியில் நிதி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் ஆப் மூலம் ஷாம்பு ஒன்று வாங்குவதற்கு ஆர்டர் செய்து உள்ளார். ஆர்டரை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பார்சல் அனுப்பியது. அதில் ஷாம்புக்கான தொகை ரூ.330-ஐ பார்சல் கொண்டு வந்த நபரிடம் வழங்கினார் அந்த பெண்.
பின்னர் அவர் பார்சலை பிரித்தபோது கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர் பார்சலின் உள்ளே பார்த்தபோது அதில் ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு ஒன்று இருந்தது. அதைப்பார்த்த பெண் நிதி ஆலோசகர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தும் உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






