என் மலர்tooltip icon

    ஈரோடு

    அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் தந்தை மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குடும்பத்தகராறில் 2 மகன்களுடன் தந்தை மாயமான சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அம்மாபேட்டை அருகே உள்ள உமாரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (33) ,‌ கூலித் தொழிலாளி இவரது மனைவி சரண்யா.  

    சேகருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுவதுண்டு.

    இந்நிலையில் சேகர் கடந்த 5-ந் தேதி தனது மனைவி சரண்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார், இதில் கோபமடைந்த சேகர் தனது மனைவி சரண்யா பக்கத்து வீட்டுக்கு சென்ற பிறகு தனது மகன்களான பிரம்மதீஷ் (8), முகுந்தன் (6) ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார், 

    பின்னர் சரண்யா வீட்டில் வந்து பார்த்தபோது தனது கணவர் குழந்தைகளை காணாமல் தேட ஆரம்பித்தார். 

    அப்போது வீட்டில் இருந்த ரூ 15 ஆயிரம் பணத்தையும் எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.  

    தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது மனைவி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவர் மற்றும் மகன்களை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தன் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
    அந்தியூர்:

    அந்தியூர் பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

     அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் மழை ெபய்து வருகிறது.

     இந்த நிலையில் நேற்று மாலை 7 மணி முதல் சூறாவளி காற்றுடன் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று அடித்ததில் அந்தியூர், தவிட்டுப்பாளையம், கரட்டுப்பாளையம், தங்கப்பாலையம், அந்தியூர் காலனி, வேதகாரன் குட்டை, மலை கருப்புச்சாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

     இதில் வேதகாரன் குட்டை பகுதியில் மின் கம்பம்உடைந்து கீழே சாய்ந்தது. இதனால் அந்தியூர் காலனி, ஈச்சப்பாரை, வேதகாரன் குட்டை, மலை கருப்புசாமி கோவில் பகுதியில் மின் வினியோகம் இரவு முழுவதும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

    இதனையடுத்து தவிட்டுபாளையம் மின் துறை பணியாளர்கள்துரிதமாக செயல்பட்டு அந்தியூர், தவிட்டுபாளையம், கரட்டுப்பாளையம், தங்கபாளையம் பகுதியில் 2 மணி நேரத்தில் மின்தடையை சரி செய்தனர்.
    கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து  பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி பிரியா. இந்நிலையில் ராமச்சந்திரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    ராமச்சந்திரன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த விவகாரம் மற்றவர்களுக்கும் தெரிய வந்தது. இதனால் ராமச்சந்திரனுடன் பழகிய பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். 

    இதனால் ராமச்சந்திரன் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராமச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு கொண்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் ராமச்சந்திரனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமச்சந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே கடந்த சில நாட்களாக புலி நடமாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே கடந்த சில நாட்களாக புலி நடமாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சிலர் புலி நடமாடுவது வதந்தி என்றும் எனவே யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறி வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மொபட்டில் சென்றனர். அப்போது அவர்களை 2 புலிக்குட்டிகள் துரத்தியுள்ளது. 

    இதனால் அவர்கள் அச்சமடை்நது அங்கிருந்து சென்றனர். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. குட்டிகள் நடமாடுவதால் தாய் புலியும் பதுங்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    இது குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். 

    அந்த பகுதியில் புலியின் கால்தடம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    புலியின் நடமாட்டம் இருப்பது உறுதியானால் இந்த பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.

     
    அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர்அடுத்த பச்சாம்பாளையம் ஆணைக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (43)கூலி தொழிலாளி. இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

    இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிபாளையத்தில் இருந்து அம்மாபேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

    அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

    இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அந்தியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்- இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சென்று விசாரணை செய்து பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதமடைந்துள்ளன
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ததால், சூறாவளி காற்றுக்கு வாழைகள் சேதமடைந்துள்ளன

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    அம்மாபேட்டையில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. அம்மாபேட்டை நெரிஞ்சிபேட்டை, சிங்கம்பட்டி, சித்தார், ஒலகடம், பூணாச்சி, தென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. 

    அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுக்கு மரங்கள் முறிந்து விழுந்தன. அம்மாபேட்டையில் 7 மின்கம்பங்களும், தென்னம்பட்டியில் 3 மின்கம்பங்களும் சூறாவளி காற்றுக்கு சாய்ந்து விழுந்தன.  

    சத்தியமங்கலத்தில் இரவு 9 மணி முதல் 10 மணி வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சத்தியமங்கலம், ஓட்டக்குட்டை, சிக்கரசம்பாளையம், புளியங்கோம்பை, புதுபீர்கடவு, பண்ணாரி, அரியப்பம்பாளையம், கெஞ்சனூர், திம்பம் மலைப்பாதையிலும் பலத்த மழை பெய்தது.

    சத்தியமங்கலத்தை அடுத்த ஓட்டக்குட்டையில் கோபால் சாமி என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாரான 2 ஆயிரம் கதளி வாழைகள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமானது. 

    அந்தியூரில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை பலத்த மழை பெய்தது. அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.  பெருந்துறையில் இரவு 9 மணி முதல் 11.30 பலத்த மழை பெய்தது. பெருந்துறை, காஞ்சிக்கோவில், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    கவுந்தப்பாடியில் இரவு 8 மணி முதல் 11.30 வரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கவுந்தப்பாடி, சலங்கபாளையம், வேலம்பாளையம், அய்யம்பாளையம், நல்லிக்கவுண்டம்பா ளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

    ஆப்பக்கூடலில் நேற்று இரவு 8.15 மணி முதல் 9.30 மணி வரை இடி மற்றும் காற்றுடன் மழை பெய்தபோது, அத்தாணி கரட்டூர்மேடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஆப்பக்கூடல் அடுத்த அத்தாணி கரட்டூர்மேடு பகுதியில் நேற்று வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள சில மரங்களின் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தது.

    சென்னிமலையில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சென்னிமலையை அடுத்த பசுவப்பட்டி ஊராட்சி  கந்தசாமி பாளையத்தில் முத்துக்குமார் என்பவரது தோட்டத்தில் 7 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான நேந்திரன் வாழைகள் சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்து சேதமானது.
      
    ஈரோட்டில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-7, பெருந்துறை-53, கோபி-9.6, தாளவாடி-28, சத்தியமங்கலம்-4, பவானிசாகர்-8.4, பவானி-8.8, கொடுமுடி-4.2, நம்பியூர்-2, சென்னிமலை-51, மொடக்குறிச்சி-13, கவுந்தப்பாடி-31.2, எலந்தக்குட்டை-4.6, அம்மாபேட்டை-41, கொடிவேரி-15, குண்டேரிபள்ளம்-16.8, வரட்டுப்பள்ளம்-16.8.

    கழிவுநீர் பள்ளத்துக்குள் விழுந்த முதியவரை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
    பவானி:

    பவானி அருகே உள்ள காடையாம்பட்டி பவானி ஆற்றின் அருகே கழிவுநீர் பள்ளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் விழுந்து கிடப்பதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

     தகவலின் பேரில் நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவுநீரில் விழுந்து கிடந்த முதியவரை உயிருடன் மீட்டனர். 

    பின்னர் பவானி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூறாவளி காற்றில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.
    அந்தியூர்:

    சூறாவளி காற்றில் பத்ரகாளியம்மன் கோவில் தேர் பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் மற்றும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். 

    பண்டிகை முடிவடைந்தவுடன் அந்த தேர் வெயில், மழையில் நனையாமல் பாதுகாக்க தேரின் முழு உயரத்திற்கு பாதுகாப்பு நிழற்கூடம் அமைக்கப்பட்டு இருந்தது. 

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் அந்த பாதுகாப்பு நிழற்கூடம் விரிசல் ஏற்பட்டு சாய்ந்த நிலையில் இருந்தது.

    இதனை அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பத்திரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணனிடம்  தெரிவித்தனர். 

    இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்தார். 

    அவரது அறிவுறுத்தலின் பேரில் அந்த பாதுகாப்பு நிழற்கூடத்தை பிரித்து மீண்டும் புதிதாக கட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்த தேரினை மாற்று இடத்தில் நிறுத்தி தற்காலிக கூடாரம் அமைத்து வெயில் மழையில் பழுதாகாமல் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இந்த பணிகளும் தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    மொடக்குறிச்சி அருகே நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மொடக்குறிச்சி அருகே நண்பருடன் குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி அடுத்த சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் சித்ரா (37). இவரது மகன் கோபி (20). சித்ரா கணவரை பிரிந்து கடந்த 17 வருடமாக அதே பகுதியில் மகனுடன் வசித்து வருகிறார்.

    சித்ரா தறிபட்டறையில் கூலி வேலைக்கு சென்று வந்தார். கோபி கம்பி வேலி போடும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கோபியும் அவருடன் வேலை பார்க்கும் சூரியன் என்பவரும் நட்டாற்றீஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

    அப்போது கோபி ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். திடீரென கோபி நீரில் மூழ்கத் தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என அலறினார். ஆனால் அதற்குள் கோபி நீரில் மூழ்கி விட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு  மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் வேகமாக வந்தனர். 

    அவர்கள் நீரில் மூழ்கிய கோபியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கோபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை பறிகொடுத்த சித்ரா கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு திண்டல் வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவரது மனைவி பத்மாவதி (31). செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்மாவதி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து செந்தில்குமார் தூக்கு மாட்டுவதுபோல் வீடியோ எடுத்து பத்மாவதிக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து பத்மாவதி அலறி அடித்துக்கொண்டு ஈரோட்டுக்கு வந்தார். 

    இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பத்மாவதி கோபித்துக் கொண்டு சேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மீண்டும் சென்று விட்டார்.

    சம்பவத்தன்று பத்மாவதியின் உறவினர் அவருக்கு போன் செய்தனர். அப்போது செந்தில்குமார் வேலைக்கு செல்லவில்லை என்றும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறக்கவே இல்லை என்றும் கூறி உள்ளார். 

    இதையடுத்து பத்மாவதி ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் அருகில் உள்ள வர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது செந்தில்குமார் தூக்கில் தொங்கி கொண்டிந்தார்.

    உடனடியாக அவரை கீழே இறக்கி பார்த்தனர். அப்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

    அப்போது செந்தில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலியான சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் தவுபிக் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். 

     சம்பவத்தன்று தனது மாமா மற்றும் அத்தையுடன் ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணைக்கு சுற்றுலா வந்துள்ளார். 

    அப்போது கொடிவேரி ஆற்று பாலத்திற்கு கீழ் இறங்கி குளிக்க சென்ற தவுபிக் ஆழமான பகுதிக்கு சென்று  நீச்சல் தெரியாமல் தத்தளித்த நீரில் மூழ்கியுள்ளார்.

     உடனே அருகில் இருந்தவர்கள்  தவுபிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தவுபிக் இறந்து விட்டதாக கூறினர். 

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சித்தோடு அருகே மளிகை கடையை திறக்க சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கங்காபுரம் ஆட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெபதுரை. இவரது மனைவி மங்கள வள்ளி (48). இவர்கள் ஆட்டையம்பாளையம் தெற்கு வீதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை சுமார் 6.15 மணி அளவில் மளிகை கடையை திறக்க மங்கள வள்ளி சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென மங்களவள்ளி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்துக்கொண்ட மங்கள வள்ளி கையில் இறுக்கமாக செயினை பிடித்துக்கொண்டார். இந்நிலையில் அவரை தாக்கி விட்டு 2 பவுன் தங்க நகையுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மங்களவள்ளி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×