search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்
    X

    பிரதமர் பதவியை உதறி தள்ளியவர் கருணாநிதி- ப. சிதம்பரம்

    நாட்டின் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை கிடைத்தும் அதனை கருணாநிதி உதறி தள்ளினார் என்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். #Karunanidhi #PChidambaram
    சென்னை:

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அயனாவரத்தில் நடந்த “கலைஞருக்கு தோழமை வணக்கம்” கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-

    இந்திய வரலாற்றை கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் இருந்து இந்திய அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளார்.

    தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் சிந்தனை மாற்றங்கள் செய்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி. 50 ஆண்டுகளாக தமிழர்களுக்காக எழுதியும், பேசியும் வந்தவர் கருணாநிதிதான். அவருக்கு நிகரான தலைவராக யாரையும் குறிப்பிட முடியாது.

    அம்பேத்கர், டாவின்ஸி போல பன்முக ஆற்றல் மிக்கவர். அவரது “பரா சக்தி” படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜாஜி குரல் கொடுத்தார். ஆனால் அப்போது தடை விதிக்கப்படவில்லை.

    அந்தப் படத்தின் வசனத்தை அனைவரும் மனப்பாடமாகச் சொல்வார்கள். அதே படம் இப்போது வெளிவந்தால் படத்துக்கு தடையே விதித்திருப்பார்கள் என்று சொல்லும் அளவிலான ஆட்சிகள் தான் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருகின்றன.

    நாவல்கள், கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள் என தமிழ் மக்களுக்காக அவருடைய 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 78 ஆண்டுகள் தொடர்ந்து எழுதியுள்ளார்.


    எதிர்காலத்தில் கருணாநிதியின் எழுத்துக்களை ஆய்வு செய்பவர்கள் இதையெல்லாம் ஒரே மனிதரா எழுதினார் என்று வியப்பார்கள். அதுவும் முதல்- அமைச்சராக 5 முறைக்கு மேல் இருந்து கொண்டு எப்படி இதையெல்லாம் எழுதினார் என்று ஆச்சரியப்படுவர்.

    அதே நேரம் எல்லா ஆட்சியையும் விட சிறப்பான ஆட்சியையும் கொடுத்துள்ளார்.

    நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால், என் உயரம் எனக்குத் தெரியும் என்று பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். வேறு யாரும் இது போல் சொல்லியிருக்க மாட்டார்கள்.

    தற்போது தி.மு.க.வின் தலைமைக்கும் ஸ்டாலினைக் கொண்டு வந்து நல்லதொரு முடிவைத் தந்து சென்றுள்ளார். வரும் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறும் என்று எங்களின் அகில இந்திய தலைமையும் உறுதியாகத் தெரிவித்துள்ளது.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    விழாவில் பி.கே.சேகர் பாபு, ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Karunanidhi #PChidambaram #DMK #Congress
    Next Story
    ×