என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை சஸ்பெண்டு ஆகுமா?: மத்திய அரசு ஆலோசனை
    X

    தமிழக சட்டசபை சஸ்பெண்டு ஆகுமா?: மத்திய அரசு ஆலோசனை

    தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நடந்து வரும் செயல்கள், ஆட்சி கவிழ்ப்பை நோக்கி செல்வதால் மத்திய அரசு இதில் தலையிட்டு சட்டசபையை முடக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    மாநில அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகும் போது, சில சமயம் சட்டசபையை சஸ்பெண்ட் செய்து முடக்கி வைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்வது உண்டு.

    ஆட்சி கவிழ்க்கப்பட்டு உடனடி தேர்தல் வருவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சூழல் சீரான பிறகு சட்டசபை சஸ்பெண்ட் நீக்கப்பட்டு மீண்டும் ஆட்சி தொடர வழிவகை செய்யப்படும்.

    தமிழ்நாட்டு அரசியலில் தற்போது நடந்து வரும் செயல்கள், ஆட்சி கவிழ்ப்பை நோக்கி செல்வதால் மத்திய அரசு இதில் தலையிட்டு சட்டசபையை முடக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேரில் 21 பேர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக குறைந்துள்ளது. சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தபோது 25 முதல் 30 எம்.எல்.ஏ.க்கள் வரை கலந்து கொள்ளவில்லை.

    அவர்கள் டி.டி.வி.தினகரனின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆட்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து தனது நிலையைத் தெளிவுப்படுத்தி கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழன்) முதல் எம்.எல்.ஏ.க்களை சந்திக்க தொடங்கியுள்ளார். டி.டி.வி. தினகரனுக்கு பதிலடி கொடுப்பதற்காக இதன் மூலம் அவர் தன்னை தயார் படுத்தி வருகிறார்.


    குறிப்பாக தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்களால், மெஜாரிட்டியை இழந்து விட்டதாக சர்ச்சை எழுந்து இருப்பதால் அதற்கு முடிவு கட்ட எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களை சந்திப்பதாக கூறப்படுகிறது.

    முதல்-அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மற்றும் டி.டி.வி.தினகரனின் 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது. அப்போது தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஏற்படும்.

    தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டால் தி.மு.க. கூட்டணியின் 98 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்து பதிலடி கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலை எழும்பட்சத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். இதை மத்திய அரசு விரும்பவில்லை. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும் வரை தமிழக ஆட்சியை நீடிக்க செய்ய பா.ஜ.க. விரும்புகிறது.


    எனவே அதற்கு வசதியாக, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டால் சட்டசபையை சிறிது நாட்களுக்கு முடக்கி வைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதை சூசகமாக ஒத்துக்கொண்டார்.

    எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி தீர்ந்து தமிழக அரசியல் குழப்பம் விலகியதும், மீண்டும் சட்டசபையை இயங்க வைப்பார்கள் என்று தெரிய வந்துள்ளது. இத்தகைய சம்பவம் சில மாநிலங்களில் ஏற்கனவே நடந்துள்ளது. 1990-ம் ஆண்டு ராஜீவ்காந்தி உத்தரவிட்டதை ஏற்க மறுத்த கர்நாடக முதல்-மந்திரி வீரேந்திர பட்டீல் முதல்வர் பதவியில் இருந்து விலக மறுத்தார்.

    இதனால் கர்நாடகா அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது மத்திய அரசு தலையிட்டு சட்டசபையை ஒரு வாரத்துக்கு முடக்கி வைத்தது. கடந்த ஆண்டு கூட அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபை செயல்பாடு சில தினங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டது.

    அருணாசல பிரதேசத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சட்டசபை சில வாரங்களுக்கு செயல்படாமல் முடங்கிக் கிடந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 1½ மாதம் சட்டசபை முடக்கத்தில் இருந்தது. பா.ஜ.க. தனது விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள சட்டசபையை சஸ்பெண்ட் செய்து முடக்கி வைத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.


    தமிழ்நாட்டில் சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டால் அதே மாதிரி விமர்சனத்தை பா.ஜ.க. எதிர்கொள்ள நேரிடும். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி நீட்டிக்க செய்ய வேறு வழி தெரியாத பட்சத்தில் சட்டசபை முடக்கத்தைத்தான் மத்திய அரசு கையில் எடுக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இதற்கு முன்பு 1976, 1980, 1988 மற்றும் 1991-ம் ஆண்டுகளில் அரசியலில் அசாதாரண சூழ்நிலை உருவாகி ஆட்சிகள் கவிழ்ந்தது. அந்த 4 தடவையும் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அப்போது சட்டசபை கலைக்கப்பட்டது.

    ஆனால் இந்த தடவை சட்டசபையை கலைக்காமல் சஸ்பெண்ட் மட்டும் செய்து சில நாட்கள் முடக்கி வைத்து விட்டு, மீண்டும் சட்டசபைக்கு உயிர் கொடுக்கும் திட்டத்துடன் உள்ளனர். இந்த திட்டப்படி சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டால், தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் சட்டசபையின் முதல் சஸ்பெண்ட் நடவடிக்கையாக இருக்கும்.

    சட்டசபை சஸ்பெண்ட் செய்து முடக்கப்பட்டாலும் எம்.எல்.ஏ.க்கள் மாத சம்பளம் மற்றும் அலவன்ஸ் பெறுவதில் எந்த தடையும் இருக்காது.
    Next Story
    ×