search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • பனிக்காலத்தில் சருமம் வறண்டு போகும்.
    • உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும்.

    பெண்களின் சருமம் பனிக்காலத்தில் வறண்டு போகும். உதடுகள் வெடிக்கும். கை, கால்களில் நிறம் மாறும். அதற்கு காரணம்…?

    சருமத்திற்கு தேவையான ஈரத்தன்மை, எண்ணைத் தன்மை போன்றவற்றை வழங்கி, சருமத்தை மினுமினுப்பாக வைத்திருக்கும் சில வகை சுரப்பிகளின் செயல்பாடுகள் பனிக்காலத்தில் மட்டும் படுமந்தமாகிவிடும். மேலும் மயிர்க்கால்களும் அடைத்துக் கொள்ளும்.

    இதனால் சுரப்பிகள் தரும் ஈரத்தன்மையும், எண்ணைய் தன்மையும் சருமத்திற்கு கிடைக்காமல் போய்விடும். இதனால் சருமம் வறண்டு தோலில் சுருக்கங்களும், மாற்றங்களும் ஏற்படுகின்றன.

    பனிக்காலத்தில் குளிர்காற்று அதிகமாக வீசுவதால், சருமத்தின் மென்மை குறையும். இதனால் எளிதாக சருமம் வறண்டு விடும். எண்ணைய் தன்மை உடைய சருமமும் பாதிக்கப்படும்.

     உதடுகளில் சுரபிகள் எதுவும் இல்லாததால், குளிர்காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறது. மனித உடலிலே மென்மையானது உதட்டுப் பகுதி. அதனால் பனிக்காலத்தில் அதிகமாக பாதிப்புகள் ஏற்படும்.

    பனிக்காலத்தில் உடல் அழகை பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. ஆதலால், பனிக்காலத்தில் பெண்கள் உணவு, உடற்பயிற்சி, உடல் பராமரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

    பனிக்காலத்தில் உடல் சூடானது குறையாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக சற்று அதிக உணவு சாப்பிட வேண்டியது வரும். குளிர்காலத்தில் ஆரோக்கியமானவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்க, இதுவே காரணமாகும்.

    உணவு சத்துடனும், சூடாகவும் இருக்க வேண்டியது அவசியம். சூப் குடிப்பது நல்லது. பாதாம் பருப்பு, வேர்க்கடலை, அரிசி, கோதுமை, முந்திரி பருப்பு ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் சூடு பாதுகாக்கபடும்.

     பெண்கள் உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த பின்பு குளிப்பது மிகவும் நல்லது. இதன் முலம் உடல் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை தடுக்கலாம். நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்தது.

    சோப் போடுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்புவை தவிரப்பதும் நல்லது. கடலை மாவு, பாசிபயறு மாவு பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். இரவில் தூங்குவதற்கு முன்பாக உதட்டில் வெண்ணை அல்லது பாலாடைக் கட்டியை தடவலாம்.

    பன்னீர், கிளிசரின் இரண்டையும் கலந்து தூங்கச் செல்லும்போது கால் பாதங்களிலும், கை விரல்களிலும் தேய்த்துக் கொண்டால் சருமம் மிருதுவாகி அழகாகும்.

    பனிக்காலத்தில் பெண்களுக்கு பாதங்களிலும் வெடிப்பு ஏற்படும். வெடித்த பாதத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டி தேய்த்து நன்றாக சுத்தம் செய்தால் வெடிப்பு ஓரளவு கட்டுபடும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பாதங்களை பத்து நிமிடங்களுக்கு உப்பு கலந்த நீரில் மூழ்க வைத்து, பின்னர் `வாஸ்லின்' தேய்க்கலாம். இப்படி செய்தாலும் பாத வெடிப்பு மறையும்.

     தேங்காய் எண்ணெய், பசு நெய், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றை கலந்து காலில் வெடித்த பகுதிகளில் தேய்ப்பதும் ஓரளவு நல்ல பலனைத் தரும். பனிக்காலத்தில் நகங்களிலும், கால் பாதங்களிலும் மருதாணி தேய்ப்பது நல்லது.

    பனிக்காலத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சி முலம் ரத்த ஓட்டம் அதிகமாகும். மேலும் உடலின் தட்பவெப்ப நிலையும் பராமரிக்கபடும்.

    முறையான உடற்பயிற்சிகளை செய்து, உடல் நன்றாக வியர்த்து விட்டால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கிடைக்கும். உடற்பயிற்சி செய்வதன் முலம் சுரப்பிகள் ஓரளவு சுறுசுறுப்படையும். அதன் முலம் சருமத்திற்கு ஈரத்தன்மையும், எண்ணெய்த் தன்மையும் கிடைக்கும். இதனால் அழகும் பாதுகாக்கபடும்.

    • முகத்தின் அழகினை கெடுப்பது கருவளையங்கள்.
    • இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும்.

    கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், கணினி மற்றும் செல்போனை அதிகளவு பயன்படுத்துவதுதான். முகத்தின் அழகினை கெடுக்கும் இந்த கருவளையங்கள் நிறைந்தரமாக நீங்க இந்த ஒரே ஒரு கிரீம் மட்டும் போதும். இந்த நைட் கிரீம் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 1

    பாதம் பொடி - 1 ஸ்பூன்

    கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

    தயாரிக்கும் முறை:

    * முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி இதனை நன்கு துருவி கொள்ள வேண்டும்.

    * பின்னர் துருவிய உருளை கிழங்கை வடிகட்டி கொண்டு அதன் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * உருளைக்கிழங்கு சாறை ஒரு சின்ன பவுலில் சேர்த்து அதில் பாதம் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்தால் கிரீம் ரெடி.

     பயன்படுத்தும் முறை:

    முதலில், தினமும் இரவில் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தயார் செய்து வைத்துள்ள நைட் கிரீமை முகத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் முகத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் முகத்தில் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் மறைந்துவிடும்.

    • தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.
    • வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். இப்போது பின் இருக்கையில் அமருபவரும் ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது. சாலை பயணத்தின்போது உயிர் காக்கும் உன்னத கவசமாக பயன்படும் அதனை அணிவதை இன்றைய இளைஞர்கள் பலரும் அசவுகரியமாக கருதுகிறார்கள்.

    தலைக்கவசம் அணிந்தபடி நீண்ட தூரம் பயணம் செய்தால் முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் வாகனம் ஓட்டும் இளம் பெண்களிடமும் இருக்கிறது. ஆனால் தலைக்கவசத்துக்கும், முடி உதிர்வதற்கும் சம்பந்தமில்லை.

    தலைகவசம் அணியும்போது தலைமுடியின் வேர்க்கால்களுக்கு செல்லும் காற்று தடைபடும். அப்படி ஹெல்மெட் வழியாக காற்று உள்ளே செல்வதற்கு வழி இல்லாமல் போனால் வியர்வை உருவாகி அது முடியில் படிந்துவிடும். அதனால் முடி உதிர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை முன்வைக்கிறார்கள்.

    ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனெனில் வெளிக்காற்றில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தேவைப்படுவதில்லை. அதற்கு தேவையான ஆக்சிஜன் ரத்தத்தின் மூலமே கிடைத்துவிடும்.

    தலைக்கவசம் பயன்படுத்தும் போது முடியை முழுவதுமாக விரித்துவிட்டோ அல்லது Ponytail போட்டுக்கொண்டோ செல்லக்கூடாது. அதற்கு பதிலாக அனைத்து முடிகளையும் ஒன்று சேர்த்து தலையைக் கட்டினால் முடி உதிர்வது குறையும்.

    தலையில் எண்ணெய் அல்லது பொடுகு இருந்தால் அது தலைக்கவசத்தில் ஒட்டாமல் இருப்பதை உறுதி செய்துக்கொள்ளவும். அதற்கு, முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு பின்பு தலைக்கவசம் அணியலாம்.

    காற்றோட்டம் இல்லாதா இடத்தில் தலைக்கவசத்தை வைக்க வேண்டும். அதில் கிருமிகள் மற்றும் அழுக்குகள் சேரும் அதனால் அதைக் காற்றோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் வைப்பது சிறந்த தேர்வாகும்.

    ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கவசத்தை சுத்தம் செய்யவேண்டும்.

    • பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
    • சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது.

    காலாவதி சன்ஸ்கிரீன்:

    சரும அழகை மேம்படுத்துவதற்கு பல்வேறு விதமான அழகு சாதன பொருட்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில பொருட்கள் எல்லாவகையான சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. அப்படி இருக்க சிலர் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் சிலவற்றை சருமத்திற்கு பயன்படுத்துவார்கள். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.

    கோடை காலத்தில் மட்டுமே சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வெயிலின் உக்கிரம் குறையத்தொடங்கியதும் அதனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள். அடுத்த ஆண்டு கோடை காலத்திற்கு பயன்படுத்துவதற்காக பாதுகாத்து வைப்பார்கள். அப்படி சேமித்து வைக்கும்போது காலாவதி தேதியை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதனை கவனிக்காமல் காலாவதியான சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்தினால் சரும ஒவ்வாமை பிரச்சினை ஏற்படும்.

     பற்பசை:

    சிலர் முகத்தில் ஏற்படும் முகப்பரு, கரும்புள்ளிகளை போக்குவதற்கு பல் துலக்க பயன்படும் பற்பசையை பயன்படுத்துவார்கள். அதனை சருமத்தில் உபயோகிப்பது சிலருக்கு சரும ஒவ்வாமை பிரச்சினையை உண்டாக்கும். மெலனின் உற்பத்தி அதிகமாகி சருமத்தில் நிறமாற்றமோ அல்லது கரும்புள்ளிகளோ உருவாகலாம். சரும எரிச்சல் பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். முகப்பருக்கள் மீது பற்பசை பூசினால் விரைவில் பருக்கள் மறைந்துவிடும் என்று சிலர் பரிந்துரைப்பதிலும் உண்மை இல்லை.

     எலுமிச்சை:

    எலுமிச்சை பழத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட சரும பராமரிப்பு பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அதில் உள்ளடங்கி இருக்கும் சிட்ரிக் அமிலத்தின் அளவை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அதிக அளவு சிட்ரிக் அமிலம் கலந்திருந்தால் அது சிலருடைய சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தை சேதப்படுத்திவிடக்கூடும். சரும எரிச்சல், சரும வெடிப்பு போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். எலுமிச்சை சாறை நேரடியாக சருமத்தில் தடவுவதும் நல்லதல்ல.

     தேங்காய் எண்ணெய்:

    தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் என்ற கருத்து நிலவுகிறது. அதேவேளையில் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது கூடாது. உடலின் மற்ற பாகங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் தேங்காய் எண்ணெய்யில் உள்ளடங்கி இருக்கும் லாரிக் அமிலம் நிறைவுற்ற கொழுப்பாகும். அது சரும துளைகளை அடைத்து விடும். அதிலும் எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெய்யை உபயோகிக்கவே கூடாது. சரும துளைகளை அடைப்பதோடு முகப்பரு பிரச்சினையையும் ஏற்படுத்திவிடும்.

     ஷாம்பு:

    கூந்தலுக்கு மட்டுமே ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். அது கூந்தலில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் பிசு பிசுப்பு போன்றவற்றை போக்க உதவும். அதற்காக ஷாம்புவை கொண்டு முகத்தை சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் ஷாம்பு கூந்தலை சுத்தம் செய்வதற்காகவே தயாரிக்கப்படுபவை. அவை மென்மைத் தன்மையுடைய சரும செல்களை கையாள்வதற்கு ஏற்றவையல்ல. ஷாம்புவை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் உலர்வடைந்துவிடும்.

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான்.
    • பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை.

    வெடிப்புகள் இல்லாத வழுவழு பாதம் எல்லோரும் விரும்புவதுதான். ஆனால், பாத வெடிப்பு இங்கு பலரும் சந்திக்கும் பிரச்சினை. கேசம், சருமத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்துக்குக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. இப்படி கவனிக்கப்படாமல் விடுவதாலேயே பாத வெடிப்பு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும்.

    பாதங்களில் ஏற்படும் வெடிப்புக்கு மிக முக்கியக் காரணம், உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதுதான். எனவே, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதங்களில் ஏற்படும் வெடிப்பை வீட்டிலேயே எளிய முறையில் சரிசெய்வதற்கான மூன்று விதமான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்...

     செய்முறை-1

    தேவையான பொருள்கள்

    வெள்ளை வினிகர்

    கருங்கல் அல்லது கடைகளில் விற்கப்படும் பியுமிஸ் கல் (pumice stone)

    ஆலிவ் ஆயில்

    வெந்நீர்

    செயல்முறை

    முதலில், பாதங்களை வைக்கக்கூடிய அளவுக்கு ஓர் அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளை வினிகர் ஊற்றி, அதில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

    கருங்கல் அல்லது பியுமிஸ் ஸ்டோன் கொண்டு வெடிப்பு இருக்கும் பகுதிகளில் நன்றாகத் தேய்க்க வேண்டும். இதன் மூலம் பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.

    அதன்பின் மிதமான சூட்டில் உள்ள வெந்நீரை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி, பாதங்களை அதில் சிறிது நேரம் வைத்திருந்து, கழுவிய பின், நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் ஆயில் அப்ளை செய்து, நடக்காமல் ஓய்வெடுக்க வேண்டும். இதுபோல அடிக்கடி செய்துவர பாத வெடிப்பு குறையும்.

     செய்முறை-2

    தேவையான பொருள்கள்

    அவகடோ - ஒன்று

    வாழைப்பழம் - இரண்டு

    செயல்முறை

    அவகெடோ, வாழைப்பழம் இரண்டிலும் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்கான சத்துகள் நிறைந்துள்ளன. மேலும், வெளிப்பூச்சில் அவை சருமத்தின் ஈரப்பதத்தை மீட்கும். இவை இரண்டையும் தோல்களை நீக்கிவிட்டு சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

    பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை பாதம் முழுவதும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும்.

    இதேபோன்று வாரத்திற்கு ஒருமுறை செய்துவந்தால் மெல்ல மெல்ல பாத வெடிப்பு குறைந்து, முழுமையாக குணமடைந்துவிடும்.

     செய்முறை 3

    தேவையான பொருள்கள்:

    பூசணிக்காய்

    காபி தூள்

    நாட்டுச்சக்கரை

    பாதாம் எண்ணைய்

    எலுமிச்சை சாறு

    செய்முறை:

    பூசணிக்காயை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்து எடுத்த பூசணிக்காயை மிக்சியில் அரைத்து, அந்த பேஸ்ட்டை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். கடைகளில் இது pumpkin pure என்ற பெயரில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

    பூசணி பேஸ்ட்டுடன், பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், நாட்டுச்சர்க்கரை 2 டீஸ்பூன், காபி தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கி ஸ்கிரப் மாதிரி தயாரித்துக்கொண்டு, அதனை பாதம் முழுவதும் அப்ளை செய்த பின்னர், 15 நிமிடங்கள் வைத்திருந்து கால்களை கழுவிக்கொள்ளலாம். இதனை வாரத்தில் ஒருமுறை செய்து வர பாதவெடிப்பு நிச்சயம் குறைந்துவிடும்.

    • சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.
    • பாடிலோஷன் சருமத்தை மிருதுவக்குகிறது.

    பாடி லோஷன் சரும வறட்சிக்காகவும் சரும பாதுகாப்பிற்காகவும் இன்று ஆண், பெண் என இரு தரப்பினரும் அதிகம் பயன்படுத்துகின்றனர். பாடி லோஷனைப் பயன்படுத்துவது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. சருமத்தை மிருதுவக்குகிறது.

    மேலும் சருமத்திற்கு வாசனையைத் தருகிறது. இதனால் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க முடியும். முழங்கை போன்ற கருமையான பகுதிகளில் தடவும்போது கருமை படிப்படியாகக் குறைகிறது. இறுதியாக சருமத்தை பொலிவடையச் செய்கிறது.

    கவனிக்க வேண்டியவை

    * உடல் முழுவதுமே சிலர் பாடிலோஷனை பயன்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். ஆனால் குறிப்பாக, சூரிய ஒளி படும் முகம், கழுத்து, கை, கால்களில் தடவ வேண்டியது அவசியம்.

    * அனைத்து விதமான சருமம் கொண்டவர்களும் பாடிலோஷனைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வறண்ட சருமம் கொண்டவர்கள் அவசியம் பயன்படுத்துங்கள்.

    * மிகவும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தண்ணீர் போன்று இருக்கக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்த வேண்டும்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் க்ரீம் வகை பாடிலோஷன்களை பயன்படுத்தலாம்.

    * அடுத்ததாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை ரசாயனம் கலக்காத தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு செய்யக்கூடிய பாடிலோஷன்களை பயன்படுத்துங்கள்.

    * குளித்தவுடனேயே உடல் முழுவதும் பாடிலோஷனை அப்ளை செய்ய வேண்டும். ஈரப்பதம் இருக்கும்போது போட்டால் நன்றாக உறிஞ்சி உடல் வறண்டு போகாமல் தடுக்கும்.

    * முதலில் கீழிருந்து அதாவது காலில் இருந்து தொடங்கி உடல் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். முழங்கை, கால்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். வட்ட வடிவில் தேய்ப்பதே சரியான முறையாகும்.

    * கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை சரிசெய்ய பாடிலோஷன் அவசியமான ஒன்றுதான். முடிந்தவரை இயற்கை முறையில் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தி சருமத்தை பராமரியுங்கள்.

    பாடிலோஷன் நல்லதா?

    பாடிலோஷன் சருமத்திற்கு பல்வேறு வகையில் நன்மை தருகிறது. சருமப் பராமரிப்பில் முக்கியமானது என்று கூறலாம். எனினும், சிலருக்கு, சில பாடிலோஷன் தயாரிப்புகள் அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறு இருந்தால் தோல் மருத்துவரை அணுகி உங்களுடைய சருமத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை ரசாயனம் அதிகம் கலக்காத தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெயை கூட பயன்படுத்தலாம்.

    • ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
    • வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளரத் தொடங்கும்.

    பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவை சம அளவு சேர்த்து சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையை தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

     ஆவாரம் பூ பொடியை மேனிக்கு பயன்படுத்தினால் மேனி பொன் நிறமாகும். இதனை குளியல் பொடியுடன் சேர்த்து பயன்படுத்தலாம். அல்லது ஆவாரம் பூ தேநீர் குடித்தாலும் ரத்தம் சுத்தமாகி மேனி தங்க நிறம் பெரும்.

    ஆவாரம் பூவுடன் ஊறவைத்த பாசிப்பயறு சேர்த்து அரைத்து குளித்தால் நமைச்சல் துர்நாற்றம் நீங்கும். ஆவாரம் பூவுடன் சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.

    ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளரத் தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.

     ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும். ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

    • எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • இளநீர் கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும்.

    இளநீர் சுவையான பானம் மட்டுமல்ல கூந்தலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்கக்கூடியது. கூந்தல் பராமரிப்பில் இளநீரை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்களை பார்ப்போம்.

    உச்சந்தலையில் நீர்ச்சத்து:

    இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்தும்போது முடிகளுக்கும், உச்சந்தலைக்கும் போதுமான நீர்ச்சத்தை அளிக்கும். இந்த இயற்கை நீரேற்றம், கூந்தல் வறட்சி அடைவதை தடுக்க உதவும். பொடுகு போன்ற பிரச்சினைகளையும் குறைக்கும்.

    முடி உடைதல்:

    இளநீரில் இருக்கும் ஈரப்பதமூட்டும் பண்புகள் முடி நெகிழ்வுத்தன்மை அடைவதற்கு வழிவகுக்கிறது. முடி வெடிப்பு, முடி உடைதல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இளநீரை பயன்படுத்துவதால் நன்கு நீரேற்றமடைந்திருக்கும் கூந்தல், `ஹேர் பிரஷ்' கொண்டு சீவுவதாலோ, சுற்றுப்புற காரணிகளாலோ சேதம் அடைவதற்கான வாய்ப்பும் குறைவு. ஒருவேளை பாதிப்படைந்தாலும் விரைவாகவே இயல்புக்கு திரும்பும் தன்மை கொண்டது.

    முடி உதிர்தல்:

    மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கூந்தல் பராமரிப்பின்மை உள்பட பல்வேறு காரணிகள் முடி உதிர்தலுக்கு காரணமாக அமையலாம். இளநீரில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்து பண்புகள் இந்த பிரச்சினைகளை தீர்க்க உதவும். முடி உதிர்வை குறைக்கும். மயிர்கால்களை வலுவாக்கி முடியையும் பலப்படுத்தும். முடி உதிர்தலை குறைக்கும்.

     பி.எச். சமநிலை:

    இளநீரின் பி.எச் அளவு கூந்தலின் இயற்கையான பி.எச் அளவை ஒத்திருக்கும். அதனால் இளநீரை ஹேர் வாஷாக பயன்படுத்துவது பி.எச். சமநிலையை மீட்டெடுக்க உதவும். கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த சூழலை உருவாக்கும். இந்த சமச்சீரான பி.எச் அளவுகள் மென்மையான, பளபளப்பான கூந்தலுக்கு வித்திடும்.

    இயற்கை கண்டிஷனர்:

    இளநீர், வணிக ரீதியான ஹேர் கண்டிஷனர்களுக்கு சிறந்த இயற்கை மாற்றாகவும் விளங்கக்கூடியது. கூந்தலில் ஏற்படும் முடிச்சுகள் மற்றும் சிக்கல்களை நீக்கி மிருதுவாக்க உதவுகிறது. சீப்பு, ஹேர் பிரஷ் கொண்டு தலைமுடியை சீவுவதையும் எளிதாக்குகிறது. சுருள் முடி, அடர்த்தியான முடி கொண்டவர்கள் கூந்தலை அலசுவதற்கு இளநீரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக அமையும்.

    பிரகாசம்:

    இளநீரில் உள்ளடங்கி இருக்கும் நீரேற்ற பண்புகள் கூந்தல் பிரகாசத்திற்கும் பங்களிக்கின்றன. இளநீரை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பொலிவிழந்த முடியை பளபளப்பானதாக மாற்றலாம். தலைமுடியை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் பராமரிக்கலாம்.

     மென்மை:

    கடுமையான ரசாயனங்கள் கொண்ட சில வணிக ரீதியான முடி தயாரிப்பு பொருட்களுடன் ஒப்பிடும்போது இளநீரை உச்சந்தலையில் பயன்படுத்தினால் கூந்தல் மென்மையாக இருக்கும். ஒவ்வாமை உள்ளிட்ட எளிதில் பாதிப்படையும் கூந்தல் உள்பட அனைத்து வகையான முடிகளுக்கும் இளநீரை பயன்படுத்தலாம். இதனை `ஹேர் வாஷாக' பயன்படுத்துவது இயற்கையாகவே கூந்தலை சுத்திகரிப்பு செய்த திருப்தியை கொடுக்கும்.

    வாசனை:

    கூந்தல் பராமரிப்புக்கு அப்பால், இளநீர் இனிமையான நறுமணத்தை வழங்கும். இயற்கையான நறுமண சிகிச்சையாக செயல்படும். கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், வாசனையையும் ஏற்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தும்.

    முடி வளர்ச்சி:

    இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. மேலும் இந்த ஊட்டச்சத்துக்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான, வலுவான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. இளநீரை `ஹேர் வாஷாக' வழக்கமாக பயன்படுத்துவது அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு வித்திடும்.

    • இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம்.
    • சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம்.

    கொய்யா பழத்தை போலவே அதன் இலைகளும் உடல் நலனை பாதுகாப்பதில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கொய்யா இலைகளை பயன்படுத்தி பல்வேறு விதமான சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதுபற்றி பார்ப்போம்.

    * சருமத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை பயன்படுத்தி பாதிப்பை சரிபடுத்திவிடலாம். சருமத்தில் ஏற்படும் வீக்கத்தையும் கட்டுப்படுத்தலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து சரும பாதிப்புக்குள்ளான இடங்களில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

    * இயற்கையாகவே சருமத்திற்கு அழகிய நிறத்தை கொடுக்கும் தன்மை கொய்யா இலைகளுக்கு உண்டு. கொய்யா இலைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். அவை நன்கு உலர்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.

    * கோடை காலங்களில் சருமம் கருமை நிறத்திற்கு மாறத்தொடங்கும். கொய்யா இலைகளை பயன்படுத்தி கருமை நிற முகத்தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

    * கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சினையும் எட்டிப்பார்க்காது. சரும சுருக்கங்களை போக்கி வயதான தோற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும்.

    * அரைத்த கொய்யா இலையுடன் ரோஸ் வாட்டர், முல்தானி மெட்டி கலந்து முகத்தில் தடவி வரலாம். இவ்வாறு தினமும் செய்துவந்தால் சருமத்தில் அழுக்கு படிவதை தவிர்த்துவிடலாம். சருமத்திற்கு கூடுதல் அழகும் சேர்க்கலாம்.

    * பொடுகு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம். இதன் மூலம் முடி உதிர்வு பிரச்சினைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

    * எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

    • தலைமுடி வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை.
    • முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது.

    தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதற்கு முறையான பராமரிப்பும் ஊட்டச்சத்தும் தேவை. நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களான கடுகு எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தலைக்கு தேய்க்கும் எண்ணெயை எளிதாக தயார் செய்யலாம்.

    தொடர்ந்து 3 முதல் 6 மாதங்களுக்கு ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தி வந்தால் மினாக்சிடிலில் கிடைக்கும் பயன்கள் அனைத்தும் இதிலும் கிடைக்கும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெந்தயம் தலைமுடி வளர்ச்சியை தூண்டி, உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் உள்ள புரதம் முடி உதிர்வை குறைத்து புதிய தலைமுடி வளர உதவுகிறது

    தேவையான பொருட்கள்:

    கடுகு எண்ணெய்

    கறிவேப்பிலை

    ரோஸ்மேரி இலை

    வெந்தயம்

    பாதாம் எண்ணெய்

    விளக்கெண்ணெய்

    செய்முறை:

    முதலில் பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சூடுபடுத்தவும். அதோடு ரோஸ்மேரி, கறிவேப்பிலை, வெந்தயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து எண்ணெய் குளிரானதும் பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் சேர்க்க வேண்டும்.

    கடுகு எண்ணெயில் அதிகளவு ஆல்பா ஃபேட்டி ஆசிட் உள்ளது. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும், முடியின் வேர் முதல் நுனி வரை நல்ல ஊட்டம் கிடைக்கவும் இந்த ஆசிட் உதவுகிறது.

    வெந்தயம் தலைமுடியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள புரதம் மற்றும் வைட்டமின் பி3 முடி உதர்வை தடுத்து பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

    ஆண்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ள கறிவேப்பிலை, முடியின் வேரை பலப்படுத்தவும் முடி உதிர்வை தடுக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பீட்டா கரோடின் உச்சந்தலையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.

    விளக்கெண்ணெயில் ரிசினோலெசிக் ஆசிட் உள்ளது. இதில் உள்ள நுண்ணியிர் எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலைக்கு நன்மை செய்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

    தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதற்கு பல வழிகளில் உதவி செய்கிறது பாதாம் ஆயில். வைட்டமின் ஏ, டி மற்றும் இ போன்ற கொழுப்பு கரையும் வைட்டமின்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்தையும் பளபளப்பையும் தருகிறது. மேலும் இதில் மெக்னீசியம், கால்சியம், ஓமேகா 6 மற்றும் ஓமேகா 9 ஃபேட்டி ஆசிட் உள்ளது.

    இத்தகைய இயற்கை எண்ணெய்கள் பொதுவான தலைமுடி பிரச்சினைகளை சரி செய்வதோடு வறட்சியை போக்கி, வழுக்கையை கட்டுப்படுத்தி, முடியின் அடர்த்தி குறையாமல் பார்த்துக் கொள்வதோடு நரை முடி வராமலும் பார்த்துக் கொள்கிறது.

    எனினும் உங்களுக்கு குறிப்பிட்ட தலைமுடி சார்ந்த பிரச்னைகள் இருந்தால், மருத்துவரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனென்றால் இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படிருக்கும் சில பொருட்கள், ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

    • தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.
    • மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.

    குளிர்ந்த காலநிலையானது அதன் இயற்கையான ஈரப்பதத்தை தோலில் இருந்து அகற்றி, சருமத்தை உலர்ந்ததாகவும் மந்தமானதாகவும் மாற்றும். குளிர்காலத்தின் உறைபனி காற்று, சருமத்தை எளிதில் வறண்டு போக வைக்கின்றன. இருப்பினும், பயப்பட வேண்டாம், சரியான பராமரிப்பு நடைமுறைகள் மூலம், உங்கள் சருமத்தை கடுமையான பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.

    உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை வலுப்படுத்தும் அத்தியாவசிய பேஸ் மாஸ்க்குகளை கண்டறிய வேண்டும் மற்றும் குளிர்கால மாதங்கள் முழுவதும் உங்கள் சருமம் நீரேற்றமாகவும் பிரகாசமாகவும் இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டும். குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

     தேன் மற்றும் தயிர் மாஸ்க்

    தேனின் ஈரப்பதமூட்டும் பண்புகளை தயிரின் ஊட்டமளிக்கும் நன்மையுடன் இணைக்க வேண்டும். இரண்டு தேக்கரண்டி தயிருடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேன் ஈரப்பதத்தை சேர்க்கிறது, அதே நேரத்தில் தயிர் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது மென்மையாகவும் நீரேற்றமாகவும் இருக்கும்.

     அவகேடா மற்றும் ஆலிவ் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்

    அரை அவகேடோ பழத்தை மசித்து, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலக்க வேண்டும். கலவையை உங்கள் முகத்தில் தடவவும், அதை 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவ வேண்டும். அவகேடா பழத்தில் இயற்கை எண்ணெய்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் ஆலிவ் எண்ணெய் தீவிர நீரேற்றத்தை வழங்குகிறது. எனவே இந்த பேஸ் மாஸ்க் வறண்ட சருமத்தை மென்மையாக்க உதவுகிறது.

     வாழைப்பழம் மற்றும் பாதாம் எண்ணெய் ரேடியன்ஸ் மாஸ்க்

    ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதில் ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்க்க வேண்டும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவ வேண்டும். வாழைப்பழங்கள் வைட்டமின்கள் மற்றும் ஈரப்பதத்துடன் நிரம்பியுள்ளன. மேலும் பாதாம் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு கதிரியக்க பிரகாசத்தை சேர்க்கிறது. மந்தமான குளிர்கால சருமத்திற்கு உயிர் சக்தியை மீட்டெடுக்க இந்த மாஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

    ×