search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..?  குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே
    X

    ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்..? குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

    • அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்தார்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

    ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×