தொழில்நுட்பம்

செப்டம்பரில் ஐந்து புதிய சாதனங்களை வெளியிடும் சியோமி

Published On 2018-09-18 07:46 GMT   |   Update On 2018-09-18 07:46 GMT
சியோமி நிறுவனத்தின் ஐந்து புதிய சாதனங்கள் செப்டம்பர் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #Xiaomi #SmarterLiving



சியோமி நிறுவனத்தின் புதிய சாதனங்கள் செப்டம்பர் 27-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி Mi ஏர் பியூரிஃபையர், டிவி, Mi பேன்ட் 3 மற்றும் பாதுகாப்பு கேமரா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்படுகிறது. 

முன்னதாக ஸ்மார்ட்டெர் லிவிங் பிரிவில் ஐந்து சாதனங்கள் அறிமுகம் செய்வதாக டீசர் புகைப்படத்தை வெளியிட்டது. சியோமி வெளியிட இருக்கும் சாதனங்களை முன்கூட்டியே சரியாக கணிப்பவர்களுக்கு வியப்பூட்டும் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்து பேருக்கு எஃப்-கோடுகளும் வழங்கப்பட இருக்கிறது.



சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் இதயம் படம் இடம்பெற்றிருப்பதால் மே மாதம் சியோமி அறிமுகம் செய்த Mi பேன்ட் 3 இம்முறை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டீசரில் உள்ள பாப்கான் படம், புதிய Mi டிவி மாடலையும், Mi ஏர் பியூரிஃபையர் மேக்ஸ் உள்ளிட்டவை அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

இறுதியில் கண் போன்ற படம் டீசரில் இடம்பெற்றிருப்பதால், கேமரா மற்றும் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சியோமி சாதனங்கள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரம் காலம் இருக்கும் நிலையில், சாதனங்கள் குறித்த மேலும் சில விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News