தொழில்நுட்பம்
கோப்பு படம்

ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியீடு?

Published On 2018-06-17 09:45 GMT   |   Update On 2018-06-17 09:45 GMT
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். 

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.

இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News