லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
பின்லாந்து மற்றும் ஸ்வீடனை உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்வதில் நேட்டோ அமைப்பு பெருமிதம் கொள்வதாகவும், இது நமது கூட்டு பலத்தை மேம்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சிமாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று உரையாற்றினார். அப்போது, ரஷியாவிற்கு எதிரான போரில் தங்கள் நாட்டைத் தற்காத்துக் கொள்ள இன்னும் மேம்பட்ட ஆயுதங்களும் நிதியும் தேவைப்படுகிறது என நேட்டோ தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன், ரஷியாவின் லட்சியம் உக்ரைனுடன் நின்றுவிடவில்லை என்றும் அவர் எச்சரித்தார். உக்ரைனைப் பாதுகாப்பதற்கு மாதம் சுமார் 5 பில்லியன் டாலர் செலவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக விளங்குகிறது என நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்து உக்ரைன் போராடும்போது அதற்கு அரசியல் ரீதியாகவும் நடைமுறையிலும் ஆதரவை அதிகரிப்பதாக நேட்டோ தலைவர்கள் உறுதியளித்தனர்.
எத்தனைக் காலம் ஆனாலும் ரஷியாவிடமிருந்து உக்ரைனை பாதுகாக்க துணை நிற்போம் என ஜி 7 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ரஷியாவுக்கு கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயைத் தடுத்து நிறுத்தவும் உறுதி எடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் ரஷியாவுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதியைத் தடை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருப்புக் கடல் வழியாக உக்ரைனுக்கு உணவு தானியங்கள் கொண்டு செல்ல உதவவும் ஜி 7 நாடுகள் உறுதியளித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் பயங்கரவாத அரசை வழிநடத்தும் பயங்கரவாதி என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றவும் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ரஷ்யாவின் போர் நிறுத்துவதற்கு எல்லாவற்றையும் செய்ய நாம் அவசரமாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் ரஷ்யாவின் பயங்கரவாத நடவடிக்கை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆசியாவிற்கும் பரவி, பால்டிக் நாடுகள், போலந்து, மால்டோவா மற்றும் கஜகஸ்தான் ஆகியவற்றைத் தனித்துவிடும். புடின் ஒரு பயங்கரவாதியாகிவிட்டார். தினசரி பயங்கரவாத செயல்கள், வார இறுதி நாட்கள் என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்கள் பயங்கரவாதிகளாக வேலை செய்கிறார்கள்" என்றார்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன், துருக்கி முத்தரப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக துருக்கி கூறியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பது, உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வது, பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் நபர்களை நாடு கடத்துதல் அல்லது ஒப்படைத்தல் ஆகியவற்றை இந்த முத்தரப்பு ஒப்பந்தம் உறுதி செய்வதாகவும் துருக்கி கூறியுள்ளது.
ரஷியாவிற்கு எதிரான போரில் உதவும் வகையில் உக்ரைனுக்கு கூடுதலாக ஆறு ஹோவிட்சர் பீரங்கிகளை வழங்க ஜெர்மனியும், நெதர்லாந்தும் முன் வந்துள்ளன. சுயமாக இயக்கப்படும் கவச ஹோவிட்சர்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என்று இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பின்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது எங்கள் கூட்டணியை பலப்படுத்தும், எங்கள் கூட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பொறுப்பில் இருந்து ரஷியாவை நீக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி மூலம் உரையாற்றிய அவர், கடந்த சனிக்கிழமை முதல் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதல்களை பட்டியலிட்டார். ஒரு நாடு, அமைதியான முறையில் வாழும் மக்களைக் கொன்றால், அது நிச்சயமாக பயங்கரவாதமாக அங்கீகரிக்கப்படும் என்றும், அத்தகைய அமைப்பு மனிதகுலம் அனைவருக்கும் எதிரியாக மாறும் என்றும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
உக்ரைனின் கிரெமென்சுக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், கிரெமென்சுக் நகரிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ரஷியாவால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு பயங்கரவாத செயல் என குற்றம்சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலுக்கு ஜி-7 நாடுகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.